Monday, 24 February 2020

10 நிமிடத்தில் PAN அட்டை பெற ஒரு எளிய வழி? எப்படி பெறுவது?

புதிய PAN அட்டையைப் பெற, நீங்கள் இனி இரண்டு பக்க விண்ணப்பப்  படிவத்தை நிரப்ப வேண்டிய அவசியமில்லை. புதிய அட்டைக்காக சில நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

ஆம்., PAN அட்டையினை எளிதில் பெறும் வகையிலும், வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், உங்களிடம் ஆதார் அட்டை இருந்தால், எந்தவித தாமதமும் இன்றி உடனடியாக ஆன்லைனில் PAN அட்டையை வழங்கலாம். மேலும், இதற்காக எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடனடி மின்-பான் அட்டை விண்ணப்ப படிவம்.
உங்கள் ஆதார் அட்டை எண்ணை மட்டும் கொண்டு, இந்த மின் பான் அட்டையினை நீங்கள் எளிதில் பெறலாம். இதற்கு குறித்த இணைய பக்கத்தில் உங்கள் ஆதார் எண் அட்டையினை உள்ளிடவேண்டும். பின்னர் உங்கள் இணைக்கப்பட்ட மொபைல் தொலைபேசி எண்ணுக்கு E-KYC செயல்முறைக்கு ஒரு OTP அனுப்பப்படலாம். இதற்குப் பிறகு, 10 நிமிடங்களில் உங்களுக்கு PDF வடிவத்தில் நிரந்தர கணக்கு எண் (பான்) வழங்கப்படலாம். இயற்பியல் நகலை விட e-PAN அட்டை மிகச் சிறந்தது, ஆனால் நீங்கள் விரும்பினால், வெறும் ரூ.50-க்கு மறுபதிப்புக்கு ஆர்டர் செய்வதன் மூலம் லேமினேட் PAN அட்டையைப் பெறலாம்.

ஆன்லைன் உடனடி PAN அட்டைக்கு இந்த வழியைப் பயன்படுத்துங்கள்.

1. முதலில், வருமான வரித் துறையின் e-filing போர்ட்டலுக்குச் சென்று, இடதுபுறத்தில் உள்ள "Quick Links" பிரிவில் "Instant PAN through Aadhaar" என்பதைக் கிளிக் செய்க.

2. இப்போது புதிய பக்கத்தில் "Get New PAN" என்பதைக் கிளிக் செய்க.

3. இப்போது புதிய PAN அட்டை பெற உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடவும். இதற்குப் பிறகு கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும். இப்போது உங்கள் இணைக்கப்பட்ட மொபைல் தொலைபேசி எண்ணில் OTP உருவாக்கப்படும்.


4. OTP-ஐ உள்ளிட்டு ஆதார் தகவலை சரிபார்க்கவும்.

5. பேனா அட்டை பயன்பாட்டிற்கான உங்கள் மின்னஞ்சல் ஐடியை சரிபார்க்க உங்களுக்கு விருப்பமும் இருக்கும்.

6. இப்போது உங்கள் ஆதார் எண்ணின் e-KYC தரவு UIDAI உடன் பரிமாறிக்கொள்ளப்படும், அதன் பிறகு உங்களுக்கு உடனடி e-PAN வழங்கப்படும். இந்த முழு செயல்முறையும் 10 நிமிடங்களுக்கு மேல் ஆகாது.

7. இப்போது ஆதார் எண்ணை "Check Status / Download PAN"-ல் சமர்ப்பிப்பதன் மூலம் உங்கள் PAN அட்டையினை PDF வடிவத்தில் பதிவிறக்கம் செய்யலாம். உங்கள் மின்னஞ்சல் ஐடி ஆதார் தரவுத்தளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தால், உங்கள் மின்னஞ்சலுக்கு ஒரு PAN அட்டையினை PDF வடிவத்தில் அனுப்பலாம்.

ஆன்லைன் உடனடி பேனா அட்டையைப் பெறுவதற்கான செயல்முறை முற்றிலும் இலவசம், எளிதானது மற்றும் காகிதமற்றது. நீங்கள் எந்த வகையான ஆவணங்களையும் போர்ட்டலில் பதிவேற்ற வேண்டியதில்லை.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கொரோனா வைரஸ் தடுப்பூசி: சவால்களும், சாதனைகளும்

பல்லாயிர வருட வரலாற்றில், மனிதர்களை தாக்கிக் கொல்லும் வைரஸ் அடிப்படையிலான உயிர்கொல்லி நோய்கள் தோன்றுவது ஒன்றும் புதிதல்ல, ஆனால் தோன்றும் ஒவ்வொரு முறையும் அவை புதிர்தான்.

இயற்கையின் இந்த விதிக்கு, தற்போது இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் பரவி மக்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் புதிய கொரோனா வைரசான சார்ஸ் கொ-வை-2 (SARS-CoV-2) ஒன்றும் விதிவிலக்கல்ல.

சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சார்ஸ் கொ-வை-2 வைரஸ்க்கு எதிரான தடுப்பூசி இன்னும் 18 மாதங்களுக்குள் உருவாக்கப்படும் என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. தடுப்பூசி தயாரிக்க ஏன் இவ்வளவு நாட்கள் பிடிக்கின்றன என்பதற்கான காரணங்களை, ஆஸ்திரேலியாவின் தேசிய ஆய்வு மையங்களில் ஒன்றான Commonwealth Scientific and Industrial Research Organisation (CSIRO)-வைச் சேர்ந்த விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர்.

முதலில் சார்ஸ் கொ-வை-2-வின் மரபியல் தகவலான ஆர்.என்.ஏ இழையின் (full RNA sequence of the virus) தகவல்களை கடந்த ஜனவரி மாதத்தின் மத்தியில், சீனா வெளியிட்டது.

பொதுவாக, எந்தவொரு வைரஸ் தடுப்பூசி உற்பத்திக்கும் சுமார் 2 முதல் 5 வருடங்கள் வரை பிடிக்கும். ஆனால் அதிர்ஷ்டவசமாக, சார்ஸ் கொ-வை-2 சார்ந்த உலகளாவிய ஆய்வு முயற்சிகளின் உதவியுடன் அதற்கான தடுப்பூசியை குறுகிய காலத்தில் உருவாக்கிவிடலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆனால் அதற்கு, முதலில் சார்ஸ் கொ-வை-2-வின் குணாதிசியங்கள் மற்றும் அது தாக்கும் உயிர்களின் (மனிதர்களின்) உடலில் அது எப்படி செயல்படும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு, அவற்றைக் கண்டறிய உதவும் ஒரு ‘மாதிரி ஆய்வு விலங்கினை (animal model) உருவாக்க வேண்டும்.

அடுத்து, சார்ஸ் கொ-வை-2-வுக்கு எதிரான தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்றும், அவை மனித உடலின் எதிர்ப்பு சக்தியின் சரியான பகுதிகளை, மனிதர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தூண்டிவிடும் என்பதை நிரூபிக்க வேண்டும். அதற்குப்பிறகுதான் தடுப்பூசி சார்ந்த மனித ஆய்வுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்படும் (pre-clinical animal testing) விலங்கு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அத்தகைய ஆய்வுகளில் வெற்றியடையும் தடுப்பூசிகளைப் பயன்படுத்தி மனித ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த ஆய்வுகள் அனைத்திலும் வெற்றிபெறும் தடுப்பூசிகளுக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுக் கழகம் போன்ற நிறுவனங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்புதல் மற்றும் தரக்கட்டுப்பாட்டு சான்றிதழ் அளிக்க வேண்டும். இறுதியாக, அந்த தடுப்பூசிகளை பாதுகாப்பான முறையில் உற்பத்தி செய்து உலகுக்கு விநியோகம் செய்யும் தொழிற்சாலைகளை அடையாளம் கண்டு உற்பத்தியைத் தொடங்கினால் மட்டுமே சார்ஸ் கொ-வை-2 தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ஸ் கொ-வை-2 தடுப்பூசி தயாரிப்பில் உள்ள சவால்கள்: முதல் சவால் என்னவெனில், சார்ஸ் கொ-வை-2 வைரஸை மிகவும் அதிக அளவில் தயாரித்தால் மட்டுமே அதன்மீதான பல ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். முக்கியமாக, வைரஸ்களை மிகவும் பாதுகாப்பாகவும், பிற உயிர்கொல்லிகளின் கலப்படமில்லாமல் சுத்தமான முறையிலும் உற்பத்தி செய்ய வேண்டும்.

இரண்டாவது சவால்: சார்ஸ் கொ-வை-2 மீதான ஆய்வுகளை மேற்கொள்ள அவசியமான மாதிரி ஆய்வு விலங்குகளை உருவாக்குதல். அதிர்ஷ்டவசமாக, சார்ஸ் கொ-வை-2 வைரஸானது, கடந்த 2002-2003 ஆண்டுகளில் உலகில் பரவிய சார்ஸ் வைரஸ் குடும்பத்தின் மற்றொரு உறுப்பினர் என்பதாலும், இவ்விரு வைரஸ் களுக்கும் சுமார் 80-90 சதவீதம் மரபணு ஒற்றுமை இருப்பதாலும், சார்ஸ் ஆய்வுகளுக்கு உதவிய மரநாய்கள் (ferrets) புதிய சார்ஸ் கொ-வை-2 தடுப்பூசி ஆய்வுகளுக்கான ஒரு சிறந்த தொடக்கப்புள்ளியாக இருக்குமென்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இவை அனைத்தையும் விட, மிகவும் மோசமான சவால் ஒன்று உள்ளது. அதுதான் சார்ஸ் கொ-வை-2 வைரஸின் மரபணு மாற்றம் (mutation).

அடிப்படையில் ஒரு விலங்கு வைரஸான சார்ஸ் கொ-வை-2, முதலில் ஒரு விலங்கின் உடலில் இருந்து மற்றொரு விலங்குக்கு தாவும்போதே மரபணு மாற்றம் அடைந்திருக்கும். அதன்பிறகு, விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு தாவும்போதும், பின்னர் அதனைத் தொடர்ந்து தற்போது மனிதர்களில் இருந்து பிற மனிதர்களுக்குத் தாவும்போது என சார்ஸ் கொ-வை-2 தற்போது பல மடங்கு மரபணு மாற்றம் அடைந் திருக்கும்.

ஆக, சார்ஸ் கொ-வை-2 வைரஸின், பல சிக்கல்கள்/மாற்றங்கள் நிறைந்த மற்றும் புரிந்துகொள்ள மிகவும் கடினமான தற்போதைய மரபணு மாற்றத்தை குறிப்பாகத் தாக்கி தகர்க்கும் ஒரு தடுப்பூசியைக் கண்டுபிடித்தால்தான் சார்ஸ் கொ-வை-2-வை அழிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ஸ் கொ-வை-2 வைரஸ் மனிதர்களுக்கு முன்பே பரிச்சயமான சார்ஸ் வைரஸ்களின் நெருங்கிய உறவினர் என்பதால், அதற்கு எதிரான தடுப்பூசியை விரைவில் கண்டுபிடித்துவிடலாம் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வங்கி டெபாசிட்டுகள் பாதுகாப்பானதா?

எஸ்.ஹரிகிருஷ்ணன், முன்னாள் பொது மேலாளர், இந்திய ரிசர்வ் வங்கி

நமது நாட்டில் பலதரப்பட்ட வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. 1969-ம் ஆண்டு 14 தனியார் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. அதன் பின்னர் 1980-ம் ஆண்டு மேலும் 6 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. இந்த வகையில் இப்போது பாரத ஸ்டேட் வங்கியையும் சேர்த்து 20 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஆகும். இதுபோக 1968-க்கு முன்பிருந்தே செயல்பட்டு வரும் தனியார் வங்கிகள் மற்றும் 1993-க்கு பிறகு ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வரும் 8 தனியார் வங்கிகள், லோக்கல் ஏரியா வங்கிகள் என்ற பெயருடன் ஆரம்பிக்கப்பட்ட வங்கிகள், கிராமப்புற வங்கிகள், இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு வங்கிகளின் கிளைகள், 2015-ம் ஆண்டுக்கு பின்னர் தொடங்கப்பட்ட ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள் மற்றும் பேமென்ட் வங்கிகள் இவை அனைத்தும் வணிக வங்கிகள் ஆகும். மேலும் மாநில, மத்திய கூட்டுறவு வங்கிகள், பிரைமரி கூட்டுறவு வங்கிகள் இவை அனைத்தும் கூட்டுறவு வங்கிகள் ஆகும். மேலே சொல்லப்பட்ட அனைத்து வங்கிகளிலும் பொதுமக்கள் தங்கள் சேமிப்பை டெபாசிட் தொகையாக வைத்துள்ளார்கள்.

வங்கிகள், பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களின் பணத்தை டெபாசிட்டாக வாங்கி அதையே பலவித கடன்களாக தருகின்றன. இந்த கடன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள கால அளவுக்குள் திரும்ப செலுத்தப்பட வேண்டும். ஆனால் வங்கிகளின் வாராக்கடன்களின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ரிசர்வ் வங்கியின், வங்கிகளுக்கான ஆண்டறிக்கை 2018-19-ன் படி, அனைத்து வங்கிகளின் நிகர வாராக்கடன் அளவு ரூ.3,55,076 கோடிகள் ஆகும். இது கடந்த 2017-18-ம் ஆண்டின் அளவான 6 சதவீதத்திலிருந்து 2018-19-ம் ஆண்டு 3.7 சதவீதமாக குறைந்துள்ளது என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. ரிசர்வ் வங்கியும், வங்கிகள் தங்கள் முதலீட்டை ஒரு குறிப்பிட்ட அளவில் வைக்குமாறு அறிவுறுத்துகிறது. இருந்தாலும், பொதுமக்களுக்கு தங்கள் வங்கிகளில் வைத்துள்ள சேமிப்புகள் பாதுகாப்பாக உள்ளதா, உரிய நேரத்தில் திரும்ப பெற முடியுமா என்ற சந்தேகம் வருகிறது.

பல வருடங்களுக்கு முன்னால் கேரளாவில் செயல்பட்டு வந்த பாலை சென்ட்ரல் பேங்க் என்னும் தனியார் வங்கி 1960-ம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் அறிவுரைப்படி மூடப்பட்டது. இது பொதுமக்களின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் தங்கள் வங்கி சேமிப்புக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என்பதை உணர்ந்தார்கள். இதன் பின்னணியில்தான் டெபாசிட் இன்சூரன்ஸ் சட்டம் 1961 இயற்றப்பட்டது. டெபாசிட் இன்சூரன்ஸ் கார்பரேசன் என்ற நிறுவனமும் ஆரம்பிக்கப்பட்டது. இது ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனம் ஆகும். இதன் மூலம் வங்கி டெபாசிட்டுகளுக்கு காப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டது. மேலே சொல்லப்பட்ட அனைத்து வங்கிகளும் டெபாசிட் இன்சூரன்ஸ் கார் கார்பரேசன் கீழ் கொண்டுவரப்பட்டு அனைத்து வகையான டெபாசிட்டுகளுக்கும் காப்பீடு வழங்கப்படுகிறது. இந்த காப்பீட்டுக்கான ஆண்டு பிரீமியம் தொகையை அந்தந்த வங்கிகளே செலுத்துகின்றன. இந்த தொகை தற்போது ரூ.100 ரூபாய் தொகைக்கு 12 காசு ஆகும்.

டெபாசிட் இன்சூரன்ஸ் கார்பரேசன் வழங்கும் ஒரு தனி நபருக்கான அதிகபட்ச காப்பீடு ரூ.1,00,000 ஆக இருந்தது. 2020-ம் வருடம் பிப்ரவரி 4 முதல் இந்த அதிகபட்ச காப்பீட்டு தொகை ரூ.5,00,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதை நாம் எப்படி புரிந்துகொள்ள வேண்டும்? நீங்கள் உங்கள் வங்கியில் ஒரு சேமிப்பு கணக்கு, தொடர் சேமிப்பு கணக்கு மற்றும் வைப்பு கணக்கு(எப்.டி) வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதன் மொத்த தொகை ரூ.7,00,000 என்றால் உங்களுக்கான அதிகபட்ச காப்பீடு ரூ.5,00,000 ஆகும். இது உங்கள் பெயரில் உள்ள தனிப்பட்ட கணக்குகளுக்கான காப்பீடு ஆகும். நீங்கள் உங்கள் மனைவி பெயரையும் இணைத்து கூட்டு கணக்கு (ஜாயிண்ட் அக்கவுண்ட்) வைத்திருந்தால், அதற்கான காப்பீடு தனியாக ரூ.5,00,000 ஆகும்.

டெபாசிட் இன்சூரன்ஸ் என்பது ஒரு பாதுகாப்புதான் என்பதை உணர வேண்டும். இது எப்போது அமலுக்கு வரும்? ஒருவேளை நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி மூடப்பட்டால் அப்போது உங்கள் அதிகபட்ச காப்பீட்டு தொகை அமலுக்கு வரும். ஆனால் வங்கிகள் மூடப்படுமா என்ற பயம் உங்கள் மனதிலிருந்து அகல வேண்டும். பாலை சென்ட்ரல் பேங்க் லிமிடெட் 1960-ம் ஆண்டு மூடப்பட்ட பிறகு, வங்கிகளின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது. வங்கிகளுக்கு நேரடியாக சென்று அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்கிறது. மேலும் பலதரப்பட்ட விவரங்களை தொடர்ந்து வங்கிகளிடம் பெற்று அவற்றின் மூலம் வங்கிகளின் ஸ்திர தன்மையை உறுதி செய்கிறது. வங்கிகளின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவோடு நேரடி கூட்டம் நடத்தி செயல்பாடுகளின் முன்னேற்றங்கள் குறித்து அறிவுரை வழங்குகிறது.

இந்த விதமான நடவடிக்கைகளினால்தான் 1960-ல் ஏற்பட்ட நிலைமை இன்று இல்லை. ஒரு வங்கியின் செயல்பாடு ஆரோக்கியமாக இல்லை என்றால் அந்த வங்கியை வேறொரு வங்கியுடன் இணைத்து, பொதுமக்களின் டெபாசிட்டுகளின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. இந்த வகையில்தான் க்ளோபல் டிரஸ்ட் பேங்க் என்ற தனியார் வங்கியை ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் என்ற பொதுத்துறை வங்கியுடன் இணைத்ததும் மற்றும் இதுபோன்ற சில வங்கிகளை மற்ற வங்கிகளோடு இணைத்ததும் ஆகும். ஆனால் சில நிர்வாக காரணங்களுக்காக இணைக்கப்பட்ட வங்கிகள் இந்த நோக்கத்தில் நடந்த இணைப்பு ஆகாது. உதாரணமாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் துணை வங்கிகளை ஸ்டேட் பேங்க் உடன் இணைத்ததும் தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள பொதுத்துறை வங்கிகள் இணைப்பும் நிர்வாக காரணங்களுக்கு மட்டுமே ஆகும்.

எனவே, வங்கிகளின் செயல்பாடுகள் ரிசர்வ் வங்கியால் கண்காணிக்கப்படுகிறது. இதன் நோக்கமே வங்கிகளில் வடிக்கையாளர்களின் டெபாசிட்டுகள் பாதுகாப்பாக உள்ளதா என்பதை உறுதி செய்வதற்கே ஆகும். எனவே டெபாசிட்டுகளின் காப்பீடு என்பது நாம் வெளிநாடுகள் செல்லும் போது எடுக்கும் டிராவல் இன்சூரன்ஸ் போன்றதுதான். இதை ஒரு பாதுகாப்பிற்கு தான் எடுக்கிறோம். இதை எடுப்பதன் காரணம் நமது பயணம் பாதுகாப்பானது அல்ல என்று நாம் நினைக்க மாட்டோம். தற்போது உள்ள விமான பயணங்கள், விமான நிலைய பாதுகாப்பு நடவடிக்கைகள் பயணிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்கின்றன. அது போலவே ரிசர்வ் வங்கியும் பொதுமக்களின் வங்கி டெபாசிட்டுகளின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. டெபாசிட் இன்சூரன்ஸ் கார்பரேசன் மூலம் செய்யப்படும் காப்பீடு ஒரு பாதுகாப்பே என்பதை நாம் உணர்வோம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சங்கத் தமிழ் போற்றும் தங்கத்தலைவி

எடப்பாடி பழனிசாமி, முதல்-அமைச்சர்

இன்று(பிப்ரவரி 24-ந்தேதி) தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள்.

தமிழர்களின் நல்வாழ்வுக்கும், தமிழ் மண்ணின் உயர்வுக்கும் விடியல் தந்த ஓர் வீரத்தலைவியின் விலாசம் இந்த மண்ணிற்கு கிடைத்த நாள்! இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா காலம் நமக்கு அளித்த கருணைப் புதையல்! காணக் கிடைக்காத கற்பூரப் பெட்டகம்! அற்புதங்களின் உறைவிடம்! ஆற்றலின் ஊற்றுக்கண்! சிந்தனை திறனும், செயலாற்றலும், சீரிய நோக்கும், சீர்மிகு பேச்சும், நேரிய போக்கும் நிறைந்தவர்.

எதற்கும் அஞ்சா நெஞ்சுரம் கொண்டவர். தமிழக அரசியலிலே பல அற்புதங்களை நிகழ்த்தியவர். எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாய் எங்களுக்கெல்லாம் கருணைத் தாயாக திகழ்ந்த நாங்கள் நித்தம் போற்றி வணங்கும் எங்கள் குல தெய்வம். தமிழ்மொழியும், தமிழர்களும், தமிழகமும் தலைநிமிரவே தன்னை அர்ப்பணித்திட்ட தியாக தீபம். “மக்களால் நான், மக்களுக்காக நான்” என வாழ்ந்திட்ட எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், என எந்நாளும் அல்லும் பகலும் அயராது உழைத்திட்ட அன்பு தெய்வம் நம் அம்மா!

திராவிட லட்சியத் தலைவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் பெருந்தகை அண்ணா, பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆகிய தலைவர்கள் வழியில், திராவிட தீபத்தை அணையாமல் காத்துவந்த ஆற்றலாளர். அஞ்சாமை, குடும்ப சிறப்பு, காக்கும் தன்மை, பல நூல்களை கற்று அதன்மூலம் பெற்ற அறிவு, நன்முயற்சி ஆகிய இந்த ஐந்து சிறப்புகளையும் பெற்றவரே சிறந்த அமைச்சர் என்று உலகப் பொதுமறையாம் திருக்குறள் சொல்கிறது. இவை அனைத்தையும் ஒருங்கே பெற்ற ஒப்பற்ற தலைவர்தான் நம் அம்மா!

புரட்சித்தலைவியின் ஆட்சி காலம் தமிழக வரலாற்றின் தன்னிகரற்ற, தனிப்பெரும் சகாப்தம் என்பதை உலகறியும். அம்மாவின் ஆட்சி காலம் தான் கழகத்தின் அரசாட்சி காலங்கள் தான் தமிழகத்தின் பொற்காலம் என்பதை மக்கள் உணர்வார்கள்.

சரித்திரம் தனிமனித சரித்திரம் இல்லை. இந்த சமுதாயத்தின் சரித்திரம் இதை வருங்காலம் பேசும். இனிவரும் தலைமுறையும் வாழ்த்தும். கழகத்தையும், தமிழகத்தையும் எந்நாளும் கட்டிக் காத்திட்ட நம் புரட்சித்தலைவி அம்மா பிரம்மன் படைத்த பொன்னோவியம், வெற்றி தேவதையால் தத்தெடுக்கப்பட்ட தெய்வீகத் தாரகை, அரசியலில் பொய்யர்களை புரட்டி எடுத்திட்ட போர்க்குணச் சூறாவளி!

எட்டுத் திக்கும் வெற்றி சுற்றி நின்றபோதும், நிதானம் தவறாமல் நியாயத்தை நிலைநிறுத்திட நேர்மைக்கு சொந்தக்காரர். கொடை, அணி, செங்கோல், குடிஓம்பல் நான்கும் “உடையானாம் வேந்தர்க்கு ஒளி” என்று வள்ளுவப் பெருந்தகை வகுத்தளித்த ஆள்வோருக்கான அந்த இலக்கணத்திற்கு இலக்கியமாய் திகழ்ந்தவர் நம் இதய தெய்வம். இத்தகைய ஐம்பெரும் குணங்களும் நம் அம்மாவிடம் நிறைந்திருந்ததால்தான், பிளவுபட்ட கழகத்தை ஒன்றிணைத்து, கருத்து வேறுபாடு கொண்டிருந்தவர்களையும், தம்மைத் தவறாக, அவதூறாக விமர்சித்தவர்களையும், பேரறிஞர் அண்ணா சொன்ன “மறப்போம், மன்னிப்போம்” என்ற கருத்துப்படி எல்லாவற்றையும், மறந்து, மன்னித்து அவர்களையும் அரவணைத்து சுமார் 28 ஆண்டுகளுக்கும் மேலாக கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்று, லட்சங்களில் இருந்த கழக உறுப்பினர்களை கோடிகளுக்கு உயர்த்தி, எந்நாளும், எவராலும் வெல்ல முடியாத எக்கு கோட்டையாக கழகத்தை உருவாக்கி சென்றிருப்பவர் நம் இதய தெய்வம் அம்மா. அதைக் காக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு உண்டு என்பதை அனைவரும் உணர்வோம்!

1991, 2001, 2011, 2016 என கழக ஆட்சியை நிறுவி, மாநிலத்தின் முதல்-அமைச்சர் பொறுப்பேற்று, இந்த மக்களுக்காக வழங்கிய வளர்ச்சித் திட்டங்கள், நலத் திட்டங்கள் ஏராளம்! ஏராளம்!!

பெண் சிசுக் கொலை எனும் பேராபத்தை தடுத்திட தொட்டில் குழந்தை திட்டம், எட்டுத்திக்கும் தமிழனின் வெற்றிக் கொடி பறந்திட தஞ்சாவூரில் எட்டாம் உலகத் தமிழ் மாநாடு அங்கே நான்காம் தமிழாக அறிவியில் தமிழ் அறிமுகம். சர்வதேச தரத்தில் நேரு விளையாட்டு அரங்கம், சொர்க்கலோகம் போல திரைப்பட நகரம், பெண் இனம் பாதுகாக்க அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், முடிவெடுக்கும் அதிகாரம் மிக்க தலைமைச் செயலாளர் பொறுப்பில் பெண் அதிகாரி, பெண் கமாண்டோ படை, தாலிக்கு தங்கம், திருமண உதவித் தொகை ரூ.50 ஆயிரம் வரை உயர்வு

ஏழை-எளிய பெண்களின் வாழ்வாதாரம் உயர “மகளிர் சுய உதவிக் குழுக்கள்” கிராமங்கள் தோறும் கழிவறை வசதிகளுடன் கூடிய சுகாதார வளாகம், கர்ப்பிணி பெண்களுக்கு உதவித் தொகை, குழந்தைகளுக்கு அம்மா பரிசுப் பெட்டகம், மாணவச் செல்வங்களுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, வகையிலான கல்வி உபகரணங்கள், வீடுதோறும் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்திட விலையில்லா கறவை பசுக்கள், ஆடுகள், அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம், அம்மா சிமெண்ட் என ஏராளமான “அம்மா திட்டங்கள்”. முதியோர், விதவை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை உயர்வு, நிலத்தடி நீரை அதிகரிக்க மாபெரும் மழைநீர் சேகரிப்புத் திட்டம்

அனைத்து குடும்ப அட்டைதாரருக்கும் விலையில்லா அரிசி வினியோகம், காவிரி நதி நீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு, முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியது, பசுமை வீடுகள் திட்டம்.

உலமாக்களுக்கு ஓய்வூதியம், முஸ்லிம்களுக்கு ஹஜ் யாத்திரைக்கு உதவி, கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலேம் செல்ல உதவி, இந்துக்கள் மானசரோவர் செல்ல உதவி இப்படி எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி மக்கள் உள்ளங்களில் நிரந்தர இடம் பிடித்த மாதரசி நம் இதய தெய்வம் அம்மா.

மகத்தில் பிறந்து ஜெகத்தை ஆண்ட, “தமிழகமே எனது குடும்பம், தமிழ்நாட்டு மக்களே என் பிள்ளைகள், தமிழக மக்களின் நலனே என் நலன்” என வாழ்ந்திட்ட இந்திய அரசியல் வானில் துருவ நட்சத்திரமாய் தென்னக அரசியல் வானில் விடிவெள்ளியாய் தமிழக அரசியல் வானில் முழுநிலவாய் உலவிட்ட சாதனைகளின் சகாப்தம், சங்கத் தமிழ் போற்றும் எங்கள் தங்கத்தலைவி பிறந்த இந்த நன்நாளில் அம்மா வழியில் அயராது உழைப்போம்! அம்மாவின் லட்சியங்களை, கனவுகளை நிறைவேற்றுவோம்! அனைவரும் ஒற்றுமையாக, ஓரணியில் நின்று, கழகத்தையும், தமிழகத்தையும் காத்திடுவோம் என சூளுரைத்து செயல்படுவோம்!

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் குறிக்கோளை தற்போது நடைபெறும் அம்மாவின் அரசு நிறைவேற்றி, இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மையான மாநிலம் என்ற பெருமை பெற்று இருக்கிறது. புரட்சித்தலைவி தமிழ்நாட்டு மக்களுக்காக அளித்த தொலைநோக்குத் திட்டங்களும், அத்திட்டங்களைச் செயல்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அம்மாவின் வழியில் மக்களுக்கான புதிய திட்டங்களை என் தலைமையிலான அம்மாவின் அரசு செயல்படுத்துவது தான் இத்தகைய மகத்தான வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. ஏழை, எளியோர், ஆதரவற்றோர், முதியோர், விதவைகள், நலிவுற்ற பிரிவினர் ஆகிய சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுக்கு கை கொடுத்து அவர்களை உயர்த்த வேண்டுமென்பதில் நான் அளவற்ற அக்கறை கொண்டுள்ளேன் என்று அம்மா குறிப்பிட்டார்கள். அம்மாவின் அரசால் அறிவிக்கப்படும் திட்டங்களில் பெரும்பாலானவை அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களாகவே செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதனால் தான், இன்னும் 100 ஆண்டுகளானாலும் அம்மாவின் அரசு தமிழ்நாட்டில் நிலை கொண்டிருக்கும் என்ற பொது நோக்கர்களால் கருதப்படுகிறது. மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தந்த அரசாக அம்மாவின் அரசு நடந்ததைப் போலவே, அம்மாவின் வழியில் நடைபெறும் அம்மாவின் அரசும் மக்களை மகிழ்ச்சியோடு வைத்திருப்பதில் உறுதியாக இருக்கிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 22 February 2020

மனித நேயம் மலரட்டும்

நா.பெருமாள், முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலர்.

உ லகம் அழியாமல் உயிரோடும், உயிர்ப்போடும் இருக்க வேண்டுமானால், அறிவாற்றல், ஆளுமை, அதிகாரம் கொண்ட மனிதர்களைவிட அன்பு, கருணை, இரக்கம் கொண்ட மனிதர்களே தேவை. ஒரு மனிதன் அறிவாளியாக இருக்கலாம். ஆளுமை உடையவனாக இருக்கலாம். அதிகாரம் படைத்தவனாக இருக்கலாம். எல்லாம் இருந்தும் அவனிடம் மனித நேயம் இல்லாவிட்டால் தான் நினைத்த எதையும் அவனால் சாதிக்க இயலாது.

மனித நேயத்தின் மூலமே இறைவனை காண முடியும். பல ஆயிரம் ஆண்டுகளாக மனித நேய மாண்புடன் வாழ்ந்த புனிதர்கள் நிறைந்த பூமி நமது பூமி. உயர்வான ஒழுக்கம், உன்னதமான பண்பாடு, அவலக்குரல் கேட்டால் துடித்து எழும் மனித நேயம், ஆன்ம நேயம், அத்தனை நற்பண்புகளோடும் உலகம் வியக்கும் வாழ்க்கை வாழ்ந்து மனித குலம் செழிக்க வழிகாட்டினார்கள் நம் முன்னோர்கள். ஈ, எறும்பு, புழு, பூச்சி, வண்டு, பறவை, விலங்குகள் கூட துன்பப்படக் கூடாது என்ற எண்ணம் அவர்களது மனதில் மேலோங்கி இருந்தது.

சங்க காலத்து கடையெழு வள்ளல்கள் தங்களது கொடைமடைச் செயல்களால், மனித நேயத்தின் சிகரங்களாக புகழப்பட்டார்கள். குளிரால் நடுங்கிய காட்டு மயிலுக்கு இரக்கமுற்று தனது போர்வையைக் கொடுத்தான் பேகன். வாடிய முல்லைக்கொடி படர தனது தேரினை ஈந்தான் பாரி. வலிமைமிக்க குதிரைகளை இரவலர்களுக்கு கொடையாக வழங்கினான் காரி. ஒளி மிக்க நீலமணியையும், நாகம் தந்த கலிங்கத்தையும் இரவலர்களுக்கு கொடுத்தான் ஆய். நீண்ட நாட்கள் உயிர் வாழ வைக்கும் அமிர்தமான நெல்லிக்கனியை தான் உண்ணாமல் தனது புலவர் நீண்ட நாள் வாழ்ந்தால் தமிழ் சிறப்புறும் என சிந்தித்து, அதை அவ்வையாருக்கு கொடுத்தான் அதியமான். பசியோடு வாடி வந்த இரவலர்களுக்கு வேண்டிய பொருள் வழங்கி, மன நிறைவு கண்டு மகிழ்ந்தான் நள்ளி. கூத்தாடுபவர்களுக்கு வளமான நாடுகளை வழங்கி மகிழ்ந்தான் ஓரி. இந்திரர் அமிர்தம் கிடைத்தாலும் அது இனிமையானது என தனித்து உண்ணாத தகைமையாளர்களாலும், தமக்கென வாழாமல் பிறருக்கென வாழ்கின்ற சான்றோர்களாலும்தான் இந்த உலகம் அழியாமல் இருக்கிறது என நமது முன்னோர் களின் மனித நேயம் குறித்துக் கூறுகிறது புறநானூறு.

“யாதும் ஊரே, யாவரும் கேளிர்” கனியன் பூங்குன்றனாரின் மனித நேயம் எல்லைகள் தாண்டிய மனித நேயம். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினார் வள்ளலார். சமநிலை சமுதாயத்தை வலியுறுத்திய பாரதியார், “மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ” என பாடுகிறார். தன்னைத்தாக்கும் பகைவர்களுக்கு கூட இம்சை செய்யாதிருப்பதை தனது போராட்ட வழியாக நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டார் மாமனிதர் மகாத்மா காந்தி. இந்த உலகில் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால், கண்களுக்கு தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பு செலுத்த இயலும் என்கிறார் தனது வாழ்நாள் முழு அர்ப்பணித்த அன்னை தெரசா. மனிதநேயத்தின் அவசியத்தை நமது மதங்களும் வலியுறுத்துகின்றன.

இன்றைய மனிதனின் மனித நேயத்தின் நிலை என்ன. மனிதனை மனிதன் மதிப்பதுமில்லை. அரவணைப்பதுமில்லை. மனிதனுக்கு மனிதன் அன்பு காட்டுவதுமில்லை. மனித நேயம் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் புதைந்து கொண்டிருக்கிறது. சாதி, மதம், இனம், மொழி, நாடு கடந்து, உயர்ந்தவன், தாழ்ந்தவன் பாகுபாடு மறந்து, விருப்பு வெறுப்பற்று, ஒன்றே குலம் ஒருவனே தேவன், எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்ற மனித நேய சிந்தனையோடு பவனிக்கும் மனிதர்களை இன்று தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.

விபத்தில் ஒருவன் சாலையில் அடிபட்டு கிடந்தாலும், பசியால் ஒருவர் வீதியில் பரிதவித்துக் கொண்டிருந்தாலும், உதவி கேட்டு ஒருவர் கதறிக் கொண்டிருந்தாலும், கண் முன்னால் என்ன அநீதிகள் நடந்துகொண்டிருந்தாலும் காணாமல் போவதுதான் இன்றைய மனித நேயம். மனித நேயத்தின் ஊற்றுக்கண் அன்பைத் தொலைத்துவிட்டான் மனிதன் பொன்னைத் தேடுவதிலும், பொருளைத் தேடுவதிலும், மண்ணைத் தேடுவதிலும் உள்ள அவனது நாட்டம் மனிதம் காக்கும் மனித நேயத்தை தேடுவதில்லை. சக மனிதனின் வேதனை கண்டு ரசிக்கிறான். புகழ், போதை மயக்கத்தில் அவன் ஆட்டம் போடுகின்றான். பண வெறி, பதவி வெறி, மத வெறி, இன வெறி கொண்டு உயிர்களை வேட்டையாடுகிறான்.

நாம், நமது என்ற பரந்த வட்டத்தில் வாழ வேண்டிய மனிதன், நான், எனது என்ற குறுகிய வட்டத்தில் சுருங்கிக் கொண்டிருக்கிறான். சொந்தம், பந்தம், சுற்றம் மறந்து சுயநலவாதியாக சுற்றித்திரிகிறான். தன்னிடம் இல்லாத அனைவரும் அவனுக்கு எதிரிகள். இன்றைக்கு குடும்பம் தொடங்கி உலகம் வரை சாவு மணி அடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பெற்றோர், பிள்ளைகள் உறவில் விரிசல். ஒன்று சேர்ந்து கூச்சல் போட்டால் எதையும் சாதித்துவிடலாம் என்ற இளைஞர்களின் தவறான சிந்தனை, மக்களை பகடைக்காய்களாக்கி தவறான வழி நடத்தி, காரியங்களை சாதிக்கும் நேர்மையற்ற அரசியல்வாதிகள், எதையும் கண்டுகொள்ளாமல் ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? என்ற மனநிலையில் இருக்கும் சுயநல மக்கள், காசுக்காக மனசாட்சியை விற்று வாக்களிக்கும் சிந்தனையற்ற வாக்காளர்கள், எல்லாவற்றிற்கும் லாபம் கேட்கும் இரக்கமற்ற அரசு அலுவலர்கள் போன்ற மனித நேயமற்ற மனிதர்கள் சமுதாயத்தை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வணிக நோக்கோடும், சுயநல நோக்கோடும் செயல்படும் கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், அரசாங்கம் போன்ற அத்தனையும் சமுதாயத்தை சீரழிப்பதில் போட்டி போட்டுக்கொண்டு களத்தில் இறங்கியுள்ளன. உலகில் மனிதநேயம் குறைய குறைய மனித நேயமற்ற மனிதர்கள் வளர வளர, உலகம் விரைவில் அழிந்து விடும். உலகை அழிவிலிருந்து காப்பாற்றுவது, மனிதனாகப் பிறந்த நமது ஒவ்வொருவரது கடமையாகும். அதில் முக்கியமான, அவசியமான கடமை பிறர் நலம் பேணும் சமுதாய கடமை.

நாம் உலகில் வாழ்வது ஒரு முறை. அவ்வாழ்வு பிறருக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும். சக மனிதனிடம் அன்பு காட்டுவது, அவனைத் தன்னைப்போல மதிப்பது, எல்லைகள் கடந்து ஏழைகளுக்கு இரங்குவது, பசிப்பிணி நீக்கி அவர்களை வாழ வைப்பது போன்ற சமுதாய கடமைகளில் நாம் ஒவ்வொருவரும் நம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை இன்று உருவாகியுள்ளது. “உதவுவதற்காக அன்புடன் ஓடுங்கள், அமைதி உங்களை பின் தொடரும்”.

சந்திர மண்டலத்தில் முதன் முதலில் கால் வைத்தவுடன் என்ன நினைத்தீர்கள் என, முதன் முதலில் சந்திர மண்டலத்தில் இறங்கிய ஆம்ஸ்டிராங்கிடம் கேட்டபோது “பூமியில் இருந்து லட்சக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள சந்திர மண்டலத்தில் இடம் பிடித்த மனிதனால், பக்கத்து நாட்டில், பக்கத்து வீட்டில் உள்ள மனிதர்கள் மனதில் இடம் பிடிக்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டேன்” என்று கூறியது மனித நேயம் குறைந்து கொண்டே வருகிறது என்பதை எடுத்துக் காட்டுவதாகவே உள்ளது. உலகில் வன்முறைகளும், கலவரங்களும் அழிந்து அனேக அன்பும், அமைதியும், ஆனந்தமும் நிலைத்து நீடித்திருக்க மனித நேயத்தை விதைத்துக் கொண்டே இருப்போம்! உலகெங்கும் அன்பும், அமைதியும் மலரட்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழர் வரலாற்றை பாதுகாக்கும் ஜவ்வாதுமலை பழங்குடி மக்கள்

முனைவர் க.மோகன்காந்தி, உதவி பேராசிரியர், தனியார் கல்லூரி, திருப்பத்தூர்.

ஓரினத்தின் வரலாற்றுத்தளம் என்பது அந்த இனத்தில் ஆழ்ந்து கிடக்கும் அடி வேராகும். பல பண்பாட்டு மாற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தாலும், தம்முடைய பழமையான கட்டமைப்பை ஒரு சில இன மக்கள் மாற்றிக்கொள்வதில்லை. தமிழரின் வரலாறு தமிழகம் நெடுகிலும் பரந்து கிடக்கிறது. இதன் ஒரு தொடர்ச்சியாக ஜவ்வாது மலையில் காண கிடைக்கும் வரலாற்றுக் கூறுகள் ஆழ்ந்து நோக்கத்தக்கன.

வடக்கே அமிர்தி (வேலூர்), தெற்கே சிங்காரப்பேட்டை, கிழக்கே தும்பக்காடு (போளூர்), மேற்கே ஆலங்காயம் ஆகிய ஊர்களை எல்லைகளாக கொண்டு 250 சதுர கிலோ மீட்டரில் பரந்து கிடக்கும் ஒரு இயற்கை வளம் கொண்ட மலையே ஜவ்வாது மலை. இங்கு வாழும் மக்கள் வேட்டைதொழிலையும், வேளாண் தொழிலையும் தம் இரு கண்களாக கொண்டவர்கள்.

ஜவ்வாது மலை நிலத்திலுள்ள ஒவ்வொரு ஊரும், ஒவ்வொரு காட்டுப்பகுதியும் தமிழரின் பண்டைய வரலாற்றை எடுத்துரைத்துக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு மலை ஊர்களிலும் பஞ்ச பாண்டவர் வீடு, வாளியர் கூடாரம், வேடியப்பன், பிள்ளையாரப்பன், நாச்சியம்மன், திக்கியம்மன், காளியம்மன், வேடன்கல், சின்னான்கல் என்னும் பெயர்களில் வரலாற்றுத் தடயங்கள் இருப்பதை கள ஆய்வுகளின் வழி அறிய முடிகிறது. வரலாற்றுக்கு முந்தைய பெருங்கற்கால மனிதர்களின் புதைவிடங்கள் பல இம்மலையில் உள்ளன. இப்புதைவிடங்களை கற்திட்டை, கல்வட்டம், கற்குவியல், கற்பதுக்கை போன்ற பல பெயர்களில் அறிய முடியும். போளூருக்கு மேலுள்ள ஜவ்வாதுமலைப் பகுதியில் கீழ்ச்சேப்பிளி என்னும் ஊரில் 100-க்கும் மேற்பட்ட கற்திட்டைகள் கட்டுமானம் தளராமல் உள்ளன. 150-க்கும் மேற்பட்ட சிதை நிலைக் கற்திட்டைகளும் உள்ளன.

இவை ஏறத்தாழ 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பழந்தமிழரின் புதைவிடங்கள் ஆகும். இது போன்ற கற்திட்டைகள் வீரப்பனூரில் உள்ள கள்ளிப்பாறையிலும், திருப்பத்தூரை அடுத்துள்ள கல்லாவூர், கோம்பை ஆகிய ஊர்களிலும் இன்றும் காணலாம். இத்தகைய பழமையான நினைவுச் சின்னங்களை இம்மக்கள் சிதைக்காமல் பாதுகாத்து வருவது சிறப்புக்குரிய ஒன்றாகும். இக்கற்திட்டைகளை மலை மக்கள் வாளியர் கூடாரம், வாளியர் வீடு, குள்ளர் வீடு, பஞ்சபாண்டவர் குகை போன்ற பெயர்களில் அழைத்து வருகின்றனர்.

ஜவ்வாது மலையில் உள்ள ஊர்களில் பரவலாக பிள்ளையார் வழிபாடு உள்ளது. பிள்ளையார் என்பது இங்கு பெரும்பாலும் கற்கோடரிகளாகவே உள்ளன. இவைப் புதிய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கல்லாயுதங்கள் ஆகும். இவை 4 ஆயிரம்ஆண்டுகள் பழமையான பண்பாட்டை உடையன. கோடரியைப் போன்ற வடிவத்தில், கல்லை வடிவமைத்துப் பழைய மனிதர்கள் (பழந்தமிழர்) வேட்டையாடிய வேட்டைக் கருவிகள் இவை. இக்கருவிகள் சிறிதும் பெரிதுமாக ஏராளமான வடிவங்களில் மலைக் கிராமங்களில் பரவலாக உள்ளன.

தங்கள் இல்லங்களிலும், நீரோடைகளிலும், நிலங்களிலும் கிடைக்கும் கல்லாயுதங்களை சேகரித்து ஊர் மன்றத்தில் உள்ள கோவில்களின் ஓரிடத்தில் இக்கற்களை நட்டு வைத்துப் பிள்ளையார் என்னும் கடவுளாக இம்மலை மக்கள் வணங்குகின்றனர். சமுனாமரத்தூர் அருகேயுள்ள பழங்கோட்டை, புதூரில் உள்ள சித்தூர், வழுதலம்பட்டு, கீழுர், புலியூர், கம்புக்குடி, மலைத் திருப்பத்தூர், நெல்லிவாசல் உள்ளிட்ட ஏராளமான ஊர்களில் இக்கல்லாயுதங்கள் காணப்படுகின்றன. பெரிய கற்பாறையில் இருந்து கற்கோடரிகள் செய்யப்பட்டுள்ளன. இப்பாறைகளைக் கற்கோடரி கூடாரங்கள் எனலாம். இதுபோன்ற தொழிற் கூடாரங்கள் ஜவ்வாது மலையிலுள்ள கீழானூர் (கிளானூர்), ஜவ்வாதுமலையின் ஒரு கூறான தென்மலைப் பகுதிகளிலும் கண்டறியப்பட்டுள்ளன.

கற்காலத்தைத் தொடர்ந்து சங்ககாலம் தொட்டு நாயக்கர் காலம் வரையிலான நடுகற்களும், கல்வெட்டுகளும் தொடர்ச்சியாக கிடைப்பது இம்மலை மக்கள் வரலாற்று பாதுகாப்பில் செய்துள்ள பெரிய பணியை உணரமுடிகிறது. ஜவ்வாதுமலையில் பல இடங்களில் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இவற்றில் “நவிரமலை” என்னும் பெயர் பொறிப்பு உடைய இரண்டு கல்வெட்டுகளும், ஒரு நடுகல் கல்வெட்டும் சிறப்புக்குரியன. சங்க இலக்கிய நூல்களைப் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்று நம் முன்னோர் வகைப்படுத்தியுள்ளனர். இதில் பத்துப்பாட்டில் பத்தாவதாக போற்றப்படும் நூல் மலைபடுகடாம். இந்நூல் 583 அடிகளைக் கொண்டது. ஏறத்தாழ 250 அடிகளுக்கும் மேலாக மலை வளத்தைப் பற்றி விரிவாக பேசுகிறது.

மலைபடுகடாமின் பாட்டுடைத் தலைவன் செங்கண்மாத்துவேள் நன்னன் சேய் நன்னன் ஆவான். இவன் செங்கண்மாவைத் (செங்கம்) தலைநகரமாக கொண்டு ஆட்சி புரிந்துள்ளான். இவன் மலை நவிரமலை, இவன் ஆறு சேயாறு. இன்றைக்கு சேயாறு செய்யாறு என மருவியுள்ளது. நவிரமலை என்பது திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கத்திற்கும், போளூருக்கும் இடைப்பட்ட இடத்தில் இருக்கும் ஜவ்வாதுமலையின் ஒரு கூறான “பருவதமலை” என்ற கருத்து ஆய்வாளர்கள் மத்தியில் பரவலாக இருந்தன. ஆனால் ஜவ்வாதுமலையே தான் “நவிரமலை” என்பதை சான்று கூறும் விதத்தில் 2 கல்வெட்டுகளும் 1 நடுகல் கல்வெட்டும் ஜவ்வாது மலையில் கிடைத்துள்ளன. இச்சான்றுகள் அனைத்தும் செங்கத்திற்கு மேற்காகவும், திருப்பத்தூருக்கு கிழக்காகவும் இருக்கும் மலைத்தொடர் ஊர்களான புதூர் நாடு, சேம்பரை, கீழுர் ஆகிய பகுதிகளிலேயே கிடைக்கின்றன. இதன் மூலம் மலைபடுகடாம் உரைக்கும்,

“பேரிசை நவிரமேஎ உறையும்

காரியுண்டிக் கடவுளது இயற்கையும்”

என்ற நவிரமலை என்னும் இலக்கிய சொல்லுக்கு கல்வெட்டுச் சான்றுகள் இம்மூன்று ஊர்களில் கிடைத்திருப்பது சங்ககால வாழ்வியலை உறுதிபடுத்துவதாக அமைந்துள்ளது. இக்கல்வெட்டுகளில் இரண்டு கல்வெட்டுகள் சோழர் (ராஜாதிராஜன், குலோத்துங்க சோழன்) காலத்தவை. ஒரு கல்வெட்டு நாயக்கர் காலத்தது. நவிரமலை என்னும் சங்க காலச் சொல் சோழர் மற்றும் நாயக்கர் காலம் வரை தொடர்ந்து வந்துள்ளது.

பல்லவர் காலம் என்பது கி.பி 6-ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 8-ம் நூற்றாண்டு வரையிலான கால கட்டம் என்று கணக்கிடும் போது, ஜவ்வாதுமலை மக்களின் அன்றைய கல்விப் போக்கும், கலைப் போக்கும், அரசியல் போக்கும் வெளிப்படுகின்றன. ஏறத்தாழ 1,400 ஆண்டுகளுக்கு முன்பே இம்மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதற்கு இக்கல்வெட்டுக்களே சான்று.

சங்கநூலான மலைபடுகடாம் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இம்மலையில் வேளாண் தொழில் சிறப்புற்றிருந்ததை வெளிப்படுத்துகிறது. இதனை உறுதி செய்யும் விதத்தில் கி.பி. 12-ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் காலத்து சித்திரமேழிக் கல்வெட்டு மேல்பட்டு என்னும் மலைக் கிராமத்தில் கிடைத்துள்ளது. வணிகம் செய்யும் சித்திரமேழி பெரிய நாட்டார் வணிகக்குழுவைப் பற்றிய செய்தி, இம்மலை மக்களின் உழவுத்தொழில் வரலாற்றை வெளிப்படுத்துகிறது. நாவகரும சோமந்திதன் என்பவர் சித்திரமேழிக் கொல்லன் என்பவருக்கு தரும காணிக்கையாகக் கொடை அளித்துள்ளதை இக்கல்வெட்டு வெளிப்படுத்துகிறது.

சிம்மவிஷ்ணு என்னும் பல்லவ மன்னன், குலோத்துங்கன், ராஜாதிராஜன் ஆகிய சோழ மன்னர்கள், பெயர் கிடைக்காத சம்புவராயர், நாயக்க மன்னர்களின் காலத்தை சேர்ந்த கல்வெட்டுகள் இம்மலையில் கிடைத்திருப்பதால் பல்லவர் காலம் தொட்டே இம்மக்கள் எழுத்து அறிவில் சிறந்திருந்ததை அறியலாம். இம்மலையிலுள்ள பழங்கற்கால தடயங்களை அகழாய்வு நடத்தினால் கீழடி, கொடுமணல், ஆதிச்சநல்லூர், பொருந்தல், அழகன் குளம் போன்ற ஊர்களுக்கு இணையான பழைய தமிழ் பண்பாட்டை அறிய முடியும். மேலும் இவ்வரலாற்று தடயங்களைப் போற்றி பாதுகாக்கும் ஜவ்வாது மலை வாழ்ப்பழங்குடிகள் போற்றுதலுக்கு உரியவர்கள் ஆவார்கள்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 21 February 2020

‘இண்டர்வியூ’ இல்லாமலேயே வேலை!

சேவியர், எழுத்தாளர்

நீங்கள் எந்த வேலைக்கும் விண்ணப்பிக்கவில்லை. எந்த இண்டர்வியூவிலும் கலந்து கொள்ளவில்லை. ஆனால் ஒரு நாள் திடீரென உங்கள் செல்போன் சிணுங்குகிறது. எடுத்தால்,

“சார், நாளைக்கு வேலையில வந்து ஜாயின் பண்றீங்களா? உங்களை எங்க கம்பெனியில வேலைக்கு தேர்வு செய்திருக்கோம்” என்றால் என்ன நினைப்பீர்கள்?

“இண்டர்வியூவே அட்டன் பண்ணல, காமெடி பண்றீங்களா?” என்று தானே நினைப்பீர்கள்? அல்லது இது ஏதோ நண்பர்கள் செய்யும் காமெடி கலாட்டா என்று தானே சந்தேகப்படுவீர்கள். ஆனால், அப்படி ஒரு காலம் மிக விரைவிலேயே வரலாம் என்பது தான் தொழில்நுட்பம் சொல்லும் சேதி.

ஒரு நபர் திறமைசாலியா? அவரை வேலையில் சேர்த்துக்கொள்ளலாமா என்பதை கண்டுபிடிக்க அவரோடு நேர்முகத் தேர்வோ, எழுத்துத் தேர்வோ நடத்த தேவையில்லை எனும் சூழலை நோக்கி தொழில்நுட்ப உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் டிஜிட்டல் தளம்.

நம்மைப் பற்றி சமூக வலைத்தளங்களில் நாமே பகிர்ந்துகொள்கின்ற விஷயங்களும், பிற நண்பர்கள் பகிர்ந்து கொள்கின்ற விஷயங்களும் நமக்கு கிடைக்க இருக்கின்ற வேலை வாய்ப்புகளில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என்பது தான் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம்.

குறிப்பாக பேஸ்புக், லிங்க்ட் இன், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் நாம் பகிர்கின்ற விஷயங்கள் நம்மைப் பற்றிய ஒரு பிம்பத்தை கட்டமைக்கின்றன. நமது குணாதிசயம் என்ன? ஒவ்வொரு விஷயத்திலும் நாம் காட்டும் ஈடுபாடு என்ன? நமது தொழில்நுட்ப அறிவு என்ன? நமது கம்யூனிகேஷன் நிலை என்ன? நமது இன்டர்பர்சனல் ரிலேஷன்ஷிப் எனப்படும் அடுத்தவரோடான பழகும் திறமை என்ன? நமது பொறுமை என்ன? போன்றவற்றையெல்லாம் புட்டுப் புட்டுவைக்கின்றன.

அந்த கட்டமைப்பை பொறுத்து நமக்கு வேலை தரலாமா? வேண்டாமா? எனும் முடிவை கிட்டத்தட்ட எடுத்து விடுகின்றன நிறுவனங்கள். இன்றைக்கு 62 சதவீதம் நிறுவனங்கள் ஒரு நபரை வேலைக்கு எடுப்பதற்கு முன் அவருடைய சமூக வலைத்தள ஈடுபாட்டை ஆராய்கின்றன. 50 சதவீத நிறுவனங்கள் ஒரு நபரை வேலைக்கு எடுக்கலாமா? வேண்டாமா? எனும் கடைசி முடிவை சமூக வலைத் தளங்களை வைத்தே எடுக்கின்றன.

இண்டர்வியூக்களும் வருங் காலங்களில் இப்போது இருப்பதைப் போல இருக்கப்போவதில்லை. நேருக்கு நேர் அழைத்து நமது கதைகளை கேட்க இப்போது யாருக்கும் நேரம் இல்லை. தொழில்நுட்பத்தின் கைகள் தான் இண்டர்வியூவை நடத்தப்போகின்றன.

ஸ்மார்ட் வாட்சுகள் மூலமாக வீடியோ இண்டர்வியூக்களை நடத்தும் முறை இப்போது தொடங்கியிருக்கிறது. இதன் மூலம் நாம் எங்கே இருந்தாலும் நமது வாட்ச் மூலமாக வேலைக்கான இண்டர்வியூவை சந்திக்கலாம்.

டெலிபோனிக் இண்டர்வியூ நமக்கெல்லாம் தெரியும். இப்போது புதுமையாக டெலிபோனிக் இண்டர்வியூவில் வாய்ஸ் அனாலிசிஸ் டெக்னாலஜி புகுத்தப்படுகிறது. இதன் மூலம் ஒருவர் பேசும் விஷயத்தில் உண்மையாகவே அவர் திறமைசாலியாய் இருக்கிறாரா? பெயரளவுக்கு ஒப்பிக்கிறாரா? அவரது குரலில் இருக்கின்ற பதற்றம் என்ன போன்ற அனைத்தையும் கண்டுபிடித்து அந்த நபரைப் பற்றி புட்டுப் புட்டு வைக்கும். இதன் மூலம், அந்த நபரை தேர்வு செய்யலாமா? வேண்டாமா? என்பதை தொழில்நுட்பமே முடிவு செய்யும்.

வெளிநாடுகளில் இருந்து நடக்கின்ற இண்டர்வியூக்களை 3டி ஹோலோ கிராம் தொழில்நுட்பம் மூலமாக பக்கத்தில் இருந்தே பேசுவது போல அமைக்கும் முறையும் இப்போது பரவலாகி வருகிறது. எதிரே இருக்கின்ற இருக்கையில் அமெரிக்க நபருடைய 3டி மாயத் தோற்றம் உட்கார்ந்து உங்களிடம் இண்டர்வியூ நடத்தும். வீடியோ கால் போலவோ, தொலைபேசி அழைப்பு போலவோ இல்லாமல் மிகவும் இயல்பாகவும், யதார்த்தமாகவும் இண்டர்வியூ நடக்கும். விர்சுவல் ரியாலிட்டி (மெய்நிகர் உண்மை), ஆகுமென்டர் ரியாலிடி போன்றவை இண்டர்வியூக்களின் முகத்தையே மாற்றியிருக்கின்றன.

ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் இண்டர்வியூ செய்யும் முறை இப்போது மிகப் பிரபலம். சாதாரண வீடியோ கால் போல தோற்றமளிக்கும் இந்த வீடியோ இண்டர்வியூவை நடத்துவது ரோபோக்கள். அவை மென்பொருள் ரோபோக்களாகவும் இருக்கலாம், மனிதரை போன்ற ரோபோவாகவும் இருக்கலாம். அவை உங்களுடைய பதில்களை மட்டுமல்லாமல், உங்களுடைய உடல் மொழி, உங்களுடைய பார்வை, உங்களுடைய பதற்றம் எல்லாவற்றையும் டேட்டா சயின்ஸ் மூலம் அலசி ஆராய்ந்து உங்களுக்கு மதிப்பெண் போடும். மனித இண்டர்வியூவில் நடக்கின்ற ‘ஆள் பார்த்து செயல்படுகின்ற’ பாரபட்சம் இதில் இருக்கவே இருக்காது.

ஸ்னாப்சேட் போன்ற சமூக வலைத்தளங்களில் மூலமாக புது இண்டர்வியூ முறை வந்திருக்கிறது. வேலை தேடுவோர் தங்களுடைய திறமைகளை குட்டி வீடியோக்கள் மூலமாக பதிவேற்ற வேண்டும். அதைப் பார்த்து நிறுவனங்கள் தங்களுக்கு பிடித்த நபரை தேர்வு செய்யும். இதில் ஒரு சுவாரஸ்யமான கண்டிஷன் என்னவெனில் உங்களுடைய வீடியோ பத்து வினாடி அல்லது அதை விட குறைவானதாய் இருக்க வேண்டும் என்பது தான். இதனால் மக்கள் தங்களுடைய திறமைகளை மிகத் தெளிவாக, சுருக்கமாக, வேகமாக பதிவு செய்கிறார்கள். இதுவும் ஒரு வகையான திறமையே.

முக்கியமாக, இனிமேல் உங்களுக்கென இரண்டு வாழ்க்கை இருக்கப்போவதில்லை என்பதே இந்த மாற்றங்கள் சொல்கின்ற முக்கியமான செய்தி. உதாரணமாக, நீங்கள் பேஸ்புக், கூகுள், டுவிட்டர் போன்றவற்றில் போடுகின்ற “லைக்ஸ்” உங்களுடைய ஆளுமைப் பண்பை வெளிக்காட்டும். அதை டேட்டா அனலிட்டிக்ஸ் தொழில்நுட்பம் கண்டுபிடித்து நிறுவனங்களுக்கு சொல்லும். அதற்கென உருவாக்கப்பட்டுள்ள மென்பொருட்கள் உங்களுடைய சமூக வலைத்தள பயன்பாட்டை அலசி ஆராய்ந்து உங்களுக்கு ஒரு மதிப்பெண் கொடுக்கும். இண்டர்வியூவே செல்லாமல் நீங்கள் நிராகரிக்கப்படலாம் அல்லது கவனிக்கப்படலாம் !

நிறுவனங்கள் ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு மதிப்பெண் என நிர்ணயம் செய்திருக்கும். உங்களுடைய சமூக வலைத்தள மதிப்பு அதை விட குறைவானதாக இருந்தால் உங்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பும் குறையும். எனவே தான் உங்களுடைய ஒரு லைக், ஒரு கமென்ட், ஒரு கட்டுரை, ஒரு படம் எல்லாமே இனிமேல் முக்கியமானதாகிறது!

சமூக வலைத்தளங்களை மிகச் சரியாக பயன்படுத்தி உங்களுடைய வேலை வாய்ப்பை அதிகரிக்க முடியும் என்பது தான் ஒரு ஆறுதல் செய்தி. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். எந்த ஒரு நெகடிவ் விஷயத்தையும் பாசிடிவ்வாக மாற்றுபவன் தான் வெற்றிபெறுவான். எனவே, உங்களுடைய சமூக வலைத்தள பயன்பாட்டை சிறப்பாக? அமைத்துக் கொள்ளுங்கள். அதிலும் குறிப்பாக லிங்க்ட் இன் போன்ற வலைத்தளங்களில் நாம் பதிவு செய்கின்ற விஷயங்கள், நேரடியாகவே நமக்கு பயன்கொடுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு முறை சமூக வலைத்தளத்தில் நுழையும் போதும் கவனமாய் இருங்கள். தேவையற்ற வெறுப்பு பேச்சுகள், விவாதங்கள், நெகடிவ் சிந்தனைகள் அனைத்தையும் விலக்குங்கள். இது நமக்கான இண்டர்வியூ எனும் மனநிலையில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துங்கள். பயனடைவீர்கள்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழைப்பயன்படுத்துவோம், தலைநிமிர்ந்து வாழ்வோம்...!

மறைமலை இலக்குவனார் (துணைத் தலைவர், தமிழகப் புலவர் குழு,சென்னை.)

இன்று (பிப்ரவரி 21-ந் தேதி) உலக தாய்மொழி தினம்.

இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் பிரிந்த பின் பாகிஸ்தானின் அரசு மொழியாக உருது இருந்தது. 1952-ம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய வங்கதேசம்) மக்கள் வங்கமொழியை அரசு மொழியாக அங்கீகரிக்க கோரிக்கை விடுத்தனர். கோரிக்கை போராட்டமாக வெடித்த நிலையில் 1952, பிப்ரவரி 21 அன்று டாக்காவில் ஊரடங்கு உத்தரவு இடப்பட்டது. உத்தரவையும் மீறி டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் நான்கு மாணவர்கள் உயிர் நீத்தனர். இந்தத் துயர நிகழ்வின் நினைவாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்க்கோ நிறுவனம்) பிப்ரவரி 21-ம் நாளை உலக தாய்மொழி நாளாக அறிவித்தது.

2000 ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ம் நாள் உலக தாய்மொழி நாளாக உலகெங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது. அமைதியை நிலைநாட்டுவதற்காகவும், பன்மொழிப் பயன்பாட்டை முன்னேற்றுவதற்காகவும், பன்முகப் பண்பாடுகளை போற்றுவதற்காகவும், உலகில் உள்ள அனைத்து தாய்மொழிகளைப் பாதுகாப்பதற்காகவும், இந்த நாள் கொண்டாடப்படுகின்றது.

ஒவ்வொரு குழந்தைக்கும் தாய் வழங்குவது தாய்ப்பால் மட்டுமல்ல; தாய்மொழியும் தான். தாய் வழங்கும் தாய்ப்பால் உடல்நலத்தை வலிமைப்படுத்துகிறது. தாய்மொழி அறிவு வளர்ச்சிக்கு அடிப்படை அமைக்கிறது. நாம் பிறந்து வளர்ந்து பேசத் தொடங்கியபின்தான் நாம் வாழும் சமுதாயத்தில் ஓர் அடையாளத்தைப் பெறுகிறோம். ஒவ்வொரு மனிதனுக்கும் சமூக அங்கீகாரமும், அடையாளமும் பெற்றுத் தரும் தாய்மொழிதான், நம் சிந்தனைக்கும் அடித்தளமாக அமைகிறது. உலகில் பல்லாயிரம் மொழிகள் பேசப்பட்டாலும் அவரவருக்கு அவரவர் தாய்மொழியே உயர்வானது.

தாய்மொழியே தங்கள் சிந்தனையை இயக்கும் ஆற்றலையுடையது என்பதை அறியாத பலர் பெருமைக்காகவும், போலி விளம்பரத்துக்காகவும் பிறமொழிகளில் நாட்டம் செலுத்தி பயனின்றிக் காலம் கழித்துவிடுகின்றனர். ஒருவன் தன் தாய்மொழியைத் தவிர எத்தனை மொழிகள் கற்றாலும் அவன் சிந்திப்பது அவனது தாய்மொழியில்தான் எனவும் அதனையே பின்னர் தான் கற்றறிந்த ஏனைய மொழிகளுக்கு மடைமாற்றம் செய்துகொள்கிறான் என்றும் மொழியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

ஒருவன் தன் தாய்மொழியில் கல்வி பெறாமல் வேறுமொழி மூலம் கல்வி பெறுவது அவன் தன் மனைவியிடம் வக்கீல் வைத்துப் பேசுவதைப் போன்ற அறியாமை என்கிறார் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர்.

தாய்மொழியைப் புறக்கணித்து பிறமொழி படிப்பவரை “வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ! வீட்டுவார்த்தை கற்கிலாய் போ! போ! போ!” என்று பாரதியார் வெறுத்தொதுக்கினார்.

பிரதமர் மோடி, “இந்திய மொழிகளுள் காலத்தால் மிகவும் மூத்தமொழி தமிழே” என பலமுறை பேசியுள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் அவையில் தமிழ்ப்புலவர் கணியன் பூங்குன்றனார் இயற்றிய புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டியுள்ளார். நம் நாட்டு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நிதிநிலையறிக்கை வழங்கும்போது புறநானூற்றிலிருந்தும், ஆத்திசூடியிலிருந்தும் மேற்கோள் காட்டிப் பேசியுள்ளார். தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆதிச்சநல்லூர், கீழடி அகழ்வாய்வுகள் மூலம் தமிழுக்கு 3600 ஆண்டுகளுக்கு முன்னரே எழுத்துவடிவம் இருந்தது தெளிவாகியுள்ளது. ஆனால் இந்தப் பெருமையால் என்ன பயன்? ஐந்து நிமிடம் தமிழில் பேசினால் நூறு சொற்கள் ஆங்கிலத்திலிருந்து பயன்படுத்துகின்றோமே? ஏன்? நம் தாய்மொழியை மறந்து வருகிறோமா?

இசையரங்குகளில் தெலுங்கு கீர்த்தனைகள் முழக்கம்! பாட்டுக்குப் பொருள் புரியாமல் தலையை ஆட்டுகிறோம். உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் பேசுவது வாதிக்கும் பிரதிவாதிக்கும் புரியாத ஆங்கிலத்தில்! மழலை வகுப்பிலிருந்து கல்லூரி வரை ஆங்கிலத்தின் வழியாகக் கல்வி! மனநிம்மதிக்காக கோவிலுக்கு சென்றால் அங்கேயும் புரியாத மொழியில் வழிபாடு! இத்தனைக்கும் பிறகு “தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என முழங்குவது பொருந்துமா?

ஒவ்வொரு கூட்டம் தொடங்கும்முன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடித்தான் தொடங்குகிறோம். இந்த வாழ்த்து பாடிவிட்டாலே தமிழ்த்தாய்க்குப் பெருமையும் சிறப்பும் சேர்ந்துவிடுமா?

“தொண்டுசெய்வாய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும், துடித்தெழுந்தே” என்று பாரதிதாசன் முழங்கியது ஏன்? காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும்வரை எத்தனை சேவைகளைப் பயன்படுத்துகிறோம்? மளிகைக்கடையில் விலைப் பட்டியல், வங்கியில் கணக்குப் பதிவு, அஞ்சலகத்தில் பணவிடை(மணியார்டர்) அனுப்புதல், மருந்துக்கடையில் மருந்துச்சீட்டு(பிரஸ்கிரிப்ஷன்), பேருந்து, தொடர்வண்டி ஆகியவற்றில் பயணச்சீட்டு, பதிவுப்படிவங்கள் என்று எத்தனை எத்தனை சேவைகள்! ஒன்றிலாவது தமிழ் உண்டா? அத்தனைத் துறைகளிலும் தமிழ் இடம்பெறவேண்டும் என்பதைத்தான் பாரதிதாசன் நமக்கு அறிவுறுத்துகிறார்.

நம் தாய்மொழியை எல்லா இடங்களிலும் பயன்படுத்தவேண்டியது நம் அடிப்படை கடமை. நம் கடமையை செய்யாமல் உயிர் என்றும் அமுதம் என்றும் போற்றிப் பாடுவதால் எந்தப் பயனும் இல்லை என்பதனை நாம் உணரவேண்டும்.

அனைத்து துறைகளிலும் தமிழைப் பயன்படுத்துவோம்.தலைமுறைகளை தலைநிமிர செய்வோம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 20 February 2020

என்று தணியும் தங்கத்தின் மோகம்?

என்று தணியும் தங்கத்தின் மோகம்? By முனைவர் என். பத்ரி  |   அன்றாடத் தேவைகள் ஆயிரம் இருந்தாலும்   தங்கத்தின் மீது மக்கள் காட்டும் அக்கறையே தனிதான். ஒரு பொருளின் தேவை அதிகரிக்கும்போது அதன் மீதான விலையும் அதிகரிக்கும் என்கிறது பொருளாதாரக் கல்வி. தேவை குறையும்போது அதன் விலையும் குறைகிறது.

அண்மைக்காலமாக வரலாறு காணாத அளவுக்கு தங்கத்தின் விலை உயர்ந்து வருவது, பின்னர் சிறிதளவே குறைவதும் அனைவருக்கும் கவலை அளிப்பதாக இருக்கிறது.  திருமணம் போன்ற விசேஷ நாள்கள் இல்லாத காலங்களில் தங்கத்துக்கான தேவை குறையலாம். அதன் காரணமாக தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு உண்டு.

எனவே, தங்கத்தை நகையாகவோ, முதலீடாகவோ செய்ய, வாங்க விரும்புபவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அறிய வேண்டிய அற்புதம் என்னவென்றால், உலகச் சந்தையில் தங்கத்தின் விலையை கணிசமாக இந்தியச் சந்தைதான் தீர்மானிக்கிறது என்பதுதான்.
நமது பண்பாட்டில் தங்கம் என்பது வளமையின் அடையாளமாகவும் ஆடம்பரத்தின் சின்னமாகவும் விளங்குவதே தங்கத்தின் மேல் நமக்கு மோகம் அதிகரிக்கக் காரணமாக அமைகிறது என்பதை மறுப்பதற்கில்லை. மேலும், திருமணம் போன்ற சிறப்பு நிகழ்வுகளில் பணமாகக் கொடுத்தால் செலவாகிவிடும்.

நகையாகக் கொடுத்தால் சேமிப்பாகவும் இருக்கும். அவசரச் செலவுக்கும் குடும்பத்திற்கு உதவும். சுற்றத்தினரிடையே மதிப்பும் கூடும். மணமக்களின் வாழ்வு சிறக்க சிக்கலான  காலங்களில் இருக்கின்ற தங்க நகைகள் உதவிக்கரம் நீட்டும் என்னும் எதிர்பார்ப்புகளுடன்தான் நமது முன்னோர் இத்தகைய பழக்கங்களை ஏற்படுத்தினர்.

ஆனால், தற்காலத்தில் ஆணுக்கு நிகராக பெண்களும் படித்து தம்மை ஒரு நல்ல பணிக்கு தகுதியுடையவர்களாக உருவாக்கிக்கொண்டு வருகின்றனர். பல்வேறு தருணங்களில் இருவரும் பணிக்குச் சென்று குடும்பத்தைச் செம்மையாக நடத்தி வருவதை நாம் பார்க்க முடிகிறது.சில சமயங்களில் கணவனைவிட மனைவி நல்ல பதவியில் இருப்பதையும் நம்மால் காண முடிகிறது. எனவே, தங்கம் ஒரு பாதுகாப்புக்கான வாழ்வியல் சாதனம் என்று நாம் இனியும் கருதத் தேவையில்லை. மேலும், தங்கத்தைப் பாதுகாக்க நாம் எடுத்துக்கொள்ளும் பிரத்யேக முயற்சிகள் நமது பொன்னான காலத்தையும் உழைப்பையும் வீணாக்குகின்றன என்பதே உண்மை.

வங்கிகளில் பாதுகாப்புப் பெட்டகங்கள் பெற்று பாதுகாத்தாலும் அதற்கான கட்டணங்களும், அதைச் செயல்படுத்துவதற்கான செயல்களும் அசாதாரணமானவை. அண்மைக்கால ஊடகச் செய்திகள் அங்கும் பாதுகாப்பு இல்லை என்பதையே உறுதிப்படுத்துகின்றன.வங்கிப் பணியாக  ஒரு நாள் சென்றால் அன்று முழுவதும் வேறு பணியைச் செய்ய முடியாது. வீட்டில் தங்கத்தை வைத்திருந்தாலும் நிம்மதி இருக்காது. தங்க நகைகள் மீது கடன் வாங்கி நிம்மதியாக இருக்கலாம் என்றால், அது சார்ந்த ஊடகச் செய்திகள் அதற்கான உத்தரவாதத்தை நமக்குத் தருவதாக அமைவதில்லை.

பெயர் போன நகைக் கடைகளிலேயே கைவரிசை காட்டும் திருடர்கள் நிறைந்த சமுதாயத்தில் நம் நம்பிக்கைக்குரிய இடங்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குள் நமது ஆயுள்காலமே முடிவுக்கு வந்து விடும்போல இருக்கிறது. இதற்கான ஒரே தீர்வு தங்கத்தின் மீது நமக்கு இருக்கும் மோகத்தைக் குறைத்துக் கொள்வதுதான்.மேலும், தங்கம் வாங்கும்போது ஏற்படும் செய்கூலி சேதாரக் கணக்கு இன்னும் பல பேருக்குச் சரியாக விளங்காத புதிராகவே இருக்கிறது. தங்கம் வாங்கினால்தானே இவற்றையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

முதலீடு என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால்கூட மண்ணின் மீது போடலாம். பின்னர், சொந்தப் பணத்திலோ, வங்கிகள் தரும் கடன் வசதிகளையோ முறையாகப் பெற்று வீட்டு வாடகையை மிச்சப்படுத்தலாம். சொந்த வீடு ஏற்கெனவெ இருப்பின் வீட்டு வாடகை என்னும் கூடுதல் வருமானத்தைப் பெறலாம்; நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழலாம்.

தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை குறையும்போது, தங்கத்திற்கான தேவை கணிசமாகக் குறையத் தொடங்கும். தேவையெனில் அப்போது வாங்கிக் குவிக்கலாம். எப்படியும் தங்கத்தை வாங்கி வைத்துக்கொண்டு அதைப் பாதுகாக்க நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய முயற்சிகள், வேலியில் ஓடும் ஓணானை தோளில் தூக்கி போட்டுக் கொள்வதற்குச் சமமாகும்.  கழுத்தில் அணிந்து கொண்டு நடந்தாலும் நாம் குறைந்தது நான்கு மெய்காப்பாளர்களுடன் நடைபோட வேண்டும். அதுவும் கண்காணிப்புக் கேமராக்கள் உள்ள வீதிகளில், கூடுமானவரை வெளிச்சத்தில் நடைபோடுவதுதான் புத்திசாலி பெண்கள் செய்யும் வேலையாக இருக்கும்.தற்போதைய சமுதாயத்தில் மக்களிடையே காணப்படும் வறுமை,வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவை பாதுகாப்பான வாழ்வுக்குச் சவாலாக அமைந்துள்ளன. இவற்றை எல்லாம் கண்டு உணர்ந்தவர்கள் பல்வேறு சாத்தியமான ஆபத்துகளிலிருந்து தம்மையும், தம்மைச் சார்ந்தவர்களையும் தற்காத்துக் கொள்வதுதான் அறிவார்ந்த செயலாக இருக்க முடியும்.

பாதுகாப்பான முதலீட்டுக்கான வழிகள் நம் கண் முன்னே ஏராளமாக இருக்கும்போது,  சிக்கலைத் தராத ஒன்றை நாம் தேர்ந்தெடுப்பதே நலம் பயக்கும் செயலாகும். அப்போதுதான் குழந்தைகளைக்கூட தங்கமே, வைரமே என்று நாம் நிம்மதியாகக் கொஞ்ச முடியும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வாழ்வியல் பாடல்களுக்கு வழி பிறக்குமா?

வாழ்வியல் பாடல்களுக்கு வழி பிறக்குமா? By ஜெயபாஸ்கரன்  |   ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு நேர்காணல் அளித்த திரைப்படப் பாடகி எஸ்.ஜானகி, "திரைப்படப் பாடல்கள் அந்தந்தக் கதைகளின் தேவைகளுக்கு ஏற்றவாறு எழுதப்படுகின்றன. எனவே, அதைக் கடந்து நமது வாழ்வின் தேவைகளுக்காக பல்வேறு வகையான கருப்பொருள்களில் ஏராளமான பாடல்கள் எழுதப்பட்டு, அவை பொது வெளிகளில் மக்களிடம் பாடப்பட வேண்டும் என்கிற விருப்பம் எனக்கு உண்டு. ஆனால், அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லையே என்கிற மனக்குறையும் எனக்கு உண்டு' என்று தனது  ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

90 ஆண்டுகளின் வரலாற்றையும், சற்றேறக் குறைய 14,000 திரைப்படங்களையும், 45,000 பாடல்களையும் கொண்டது நமது தமிழ்த் திரையுலகம். தமிழ்த் திரைப்படங்களுக்கான உயிர்க் காற்றாக இன்று வரை விளங்கி வருபவை அவற்றில் இடம்பெறுகின்ற பாடல்கள்தான். 1932-ஆம் ஆண்டில் வெளிவந்த "காளிதாஸ்' என்னும் திரைப்படத்தில் தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளில் மொத்தம் 32 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. பின்னர், காலப்போக்கில் பாடல்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து 1960-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு படத்திற்குச் சராசரியாக 6 பாடல்கள் என்ற நிலை ஏற்பட்டு அந்நிலை இன்றுவரை நீடித்து வருகிறது.

தொன்மையான நமது தமிழ் மரபில் அகம், புறம், அறம், இறை, இயற்கை என்னும் ஐந்து கோட்பாடுகளுக்குள் பல நூற்றுக்கணக்கான இலக்கியங்கள் படைத்தளிக்கப்பட்டுள்ளன. இவ்வைந்து வகையான இலக்கியங்களிலும் உலக மானுட வாழ்வியலுக்குத் தேவையான அனைத்துக் கூறுகளும் அடங்கியிருந்தன.இந்த நிலையில், கடந்த 90 ஆண்டுகளுக்கு முன்னர் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் எடுத்துத் தனக்குள் அடக்கிக் கொண்டு, பெருந்திரள் மக்களின் வியப்புக்குரிய பொழுதுபோக்குப் பேரறிவியலாக தமிழ்த் திரைப்படங்கள் விளங்கின. மரங்களையெல்லாம் மறைத்துக் கொண்டு நிற்கின்ற மாமதயானை போல மற்ற அனைத்துக் கலைகளையும் தமிழ்த் திரையுலகம் மறைத்தது.

அதன் முகம் மட்டுமே அவசியமான முகம் என்று கருதப்பட்டதால், ஏனைய முகங்கள் எதுவும் எவருக்கும் தெரியாமல் போயிற்று. அதன் பிளிறல்கள் மட்டுமே பாடல்கள் என்றாகிப் போனதால் ஏனைய பாடல்கள் எதுவும் எவருக்கும் கேட்காமல் போயின. இவ்வாறாக தமிழ்ச் சமூகம் தனது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதைப் பெருமையானதொரு பேறாக உணர்ந்த தமிழ்த் திரையுலகம்,  "இது தனக்கு நேர்ந்திருக்கின்ற பெரும் பொறுப்பு' என்பதைப் போதுமான அளவுக்கு உணரவில்லை. அது மட்டுமல்ல, திரைப்படங்களின் தரம் எப்படியாவது இருக்கட்டும், பதிவு செய்து வெளியிட்டவுடன் எட்டுத் திசைகளுக்கும் இறக்கை கட்டிக் கொண்டு பறந்து சென்று வெகுமக்களிடம் போய்ச் சேருகின்ற பாடல்களின் மீதாவது அதீத சமூக அக்கறையுடன் கவனம் செலுத்தவேண்டும் என்றும் அது முனையவில்லை.

தொடக்க காலத்தில் அதிக அளவில் இறையுணர்வுகளாக வெளிப்பட்ட அதன் பாடல்கள், இரண்டாம் கட்டத்தில் இந்திய விடுதலையின் குரல்களாகவும், தீவிரமான சமூகச் சீர்த்திருத்தங்களின் குரல்களாகவும் ஒலித்தன. மூன்றாம் கட்டத்தில் அதிகார அடக்குமுறைகளுக்கு எதிரானவையாகவும், ஏழை மக்களுக்கான தோழமையாகவும் அவை வெடித்தபோது, அவற்றுடன் காதலும் வீரமும் கலந்து பெருகியிருந்தன. நான்காம் கட்டமான கடந்த 45 ஆண்டுகளில், விதம் விதமான காதல் களங்களிலேயே அவை காலூன்றி நின்று நிலைபெற்று விட்டன.இந்த நான்காம் காலகட்டமானது, ஒலிப்பதிவுத் தொழில் நுட்ப வளர்ச்சி, இசையமைப்பில் இனிமை, பாடகர்களின் பாடும் திறன் ஆகியவற்றில் வியக்கத்தக்க பல பெருந்தேர்ச்சிகளைப் பெற்றிருக்கின்ற காலகட்டமாக இருந்தாலும், பாடல்களின் உள்ளடக்கங்களில் சமூக நோக்கில் மனம் மகிழும்படியான எத்தகைய மாற்றமும் நிகழ்த்தப்படவில்லை. விருப்பு - வெறுப்பின்றிக் கூர்ந்து கவனிப்பவர்கள் இது ஒரு அரை நூற்றாண்டுத் தேக்க நிலைதான் என்பதைத் தயக்கமின்றி உறுதி செய்வர். அதே வேளையில் இந்த நான்காம் கட்டப் பாடல்களில்கூட, கருத்துகளின் உள்ளடக்கங்களிலும், இசையும், குரலும் அவற்றுடன் சேர்ந்த உருவாக்க நேர்த்தியிலும், சிறந்து விளங்குகின்ற சில ஆயிரம் பாடல்கள் உள்ளன என்பதையும் மறுக்க முடியாது.

உடுமலை நாராயணகவி, மருதகாசி, தஞ்சை ராமையாதாஸ், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கண்ணதாசன் முதலிய பாடலாசிரியர்கள் சிலரின் பெரும்பாலான பாடல்கள், திரைகளில் அந்தந்த கதைகளுக்கு உரியனவாகி ஒலித்தன. அதே வேளையில், தெருக்களில் தமிழ்ச்  சமூக மக்களுக்கான வாழ்வியல் விழிப்புணர்வுப் பாடல்களாகவும் அவை ஒலித்தன. அப்படிப்பட்ட பாடல்களின் தொடர்ச்சியாகவும், நீட்சியாகவும் இன்றைய நான்காம் காலகட்டத்தின் திரையிசைப் பாடல்கள் முன்னெடுக்கப்படவில்லை.

தற்போதைய தமிழ்த் திரையுலகின் கிடங்கில் மொத்தமுள்ள 45,000 பாடல்களில் ஏறக்குறைய 35,000 பாடல்கள் காதல் பாடல்கள்தான். காதல் கோரிக்கை, காதல் ஏக்கம், காதல் தோல்வி, காதல் வெற்றி, காதல் வர்ணனை போன்ற காதலின் பல்வேறு உட்பிரிவுகளில் இப்பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 10,000 பாடல்களைத்தான் சமூகம், தத்துவம், தன்னம்பிக்கை, இறை பக்தி, அறநெறி, ஆதிக்க எதிர்ப்பு முதலிய பிற வாழ்வியல் கூறுகளில் நாம் வகைப்படுத்த முடியும்.

காதல் பாடல்களாகக் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த 35,000 பாடல்கள், எத்தனைமுறை கேட்டாலும் பல்லவிகளைத் தாண்டி எவராலும் முழுமையாகப் பாட முடியாத சரணங்களைக் கொண்ட பாடல்களாகவே உள்ளன. "ஆறு மனமே ஆறு' என்று தொடங்கி ஆண்டவனின் ஆறு கட்டளைகளையும் சரசரவென்று தெளிவாக பாடி முடிக்கின்ற வசதி தற்காலத் திரைப்பாடல் ரசிகர்களுக்கு வழங்கப்படவில்லை. மெட்டுக்கு இட்டு நிரப்புகின்ற கலாசாரம் மேலோங்கியதன் விளைவாக, பாடல் வரிகள் ஒன்றுக்கொன்று தொடர்பற்றும் தொடர்ச்சியற்றும் போனதால் மனப்பாட வசதிக்குப் பெரும் இடையூறு எற்பட்டிருக்கிறது.

கேட்கும்போது மட்டுமே இதுபோன்ற பாடல்களின் இனிய இசைக்குத் தலையாட்ட முடியும் என்றாலும்கூட, எத்தனைமுறை கேட்டாலும் எடுத்துச் செல்லவோ, எடுத்துச் சொல்லவோ, ஏற்றுக் கொள்ளவோ முடியாத பாடல்களை எவ்வகை இலக்கியத்தில் சேர்க்க முடியும்? மிகவும் சாதாரணமான, வினா-விடை பாணியில் அமைந்த, இருபொருள் ஆபாசங்களைக் கூச்சமின்றி முன் வைக்கின்ற, வரிந்து கட்டிக் கொண்டு பெண்ணுடலின் அங்க அழகுகளையும், அசைவுகளையும் வர்ணித்துக் குவிக்கின்ற பாடல் வரிகளை, இசையமைப்பாளரின் இனிய இசையும், பாடகர்களின் பேரழகான குரலும், ஒலிப்பதிவு தொழில்நுட்ப வளர்ச்சிகளும் சேர்ந்து தூக்கிக் கொண்டு போவதை, பாடல் இலக்கியங்களுக்குக் கிடைக்கின்ற வெற்றியாகக் கருத முடியுமா? முடியாது. என்றாலும்கூட, பெருமளவில் இதுபோன்ற பாடல்களைத்தான் கடந்த 45 ஆண்டு காலமாக நமது தமிழ்த் திரையுலகம் பெரும் பொருட் செலவில் ஒலிப்பதிவு செய்து உலவ விட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலை மாற வேண்டும், மாற்று வழி தேட வேண்டும் எனில் பாடகி எஸ்.ஜானகி குறிப்பிட்டதைப்போல, திரையுலகிற்கு வெளியே சமூகத்தின் பல நூற்றுக்கணக்கான தேவைகளையும், சிக்கல்களையும், வழிகாட்டு நெறிமுறைகளையும், அறவுணர்வுகளையும் கருப்பொருளாகக் கொண்டு மொழிச்  செறிவும், இலக்கியத் தரமும் நிறைந்த ஆயிரக்கணக்கான வாழ்வியல் பாடல்கள் எழுதி இசையமைக்கப்பட்டு அவற்றை மக்களின் கலாசார, பண்பாட்டுக் குரல் ஒலிகளாக மாற்ற வேண்டும்.அவ்வகையில் நமது தமிழ்ச் சூழலில் ஏற்கெனவே மகாகவி பாரதி உள்ளிட்ட பல்வேறு கவிஞர்களால் நூற்றுக்கணக்கான வாழ்வியல் பாடல்கள் எழுதப்பட்டு அவை இசை வடிவில் ஓரளவுதான் மக்களைச் சென்றடைந்து கொண்டிருக்கின்றன. அத்தகைய பாடல்கள் ஒரு பெரும் கலாசாரமாகவோ, பெரும் இயக்கங்களாகவோ பரவலாக முனைப்புடன் முன்னெடுக்கப்படவில்லை.

தங்கள் நாட்டின் திரைப்படங்களில் கதைகளுக்கு வேண்டிய பாடல்களைச் சேர்க்கின்ற வழக்கமில்லாத பல நாடுகள், தங்களுக்குத் தேவையான வாழ்வியல் பாடல்களை முறையாக எழுதி, இசையமைத்து, பாடிப் பயன்படுத்துவதிலும், பின்பற்றுவதிலும் பெருமளவில் முனைப்புக் காட்டுகின்றன.போர் எதிர்ப்பு, மனித உரிமைகள் பாதுகாப்பு, அரசியல் அதிகார அடக்குமுறைகள் போன்றவற்றை எல்லாம் வாழ்வியல் பாடல்களாக எழுதி மக்களிடையே எழுச்சிகரமாகப் பாடி விழிப்புணர்வூட்டியதால்தான், நோபல் பரிசு வரலாற்றில் பாடலுக்கென்று முதல்முறையாக அமெரிக்கப் பாடகர் பாப் டிலனுக்கு 2016-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.இந்திய நாட்டின் மிகப் பெரிய துணை ராணுவப் படையான மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சி.ஆர்.பி.எஃப்.) வீரதீரத் தியாகங்களைப் போற்றி பாடல் ஒன்றை எழுத விரும்புவதாக தானே வலிய சென்று அந்த ராணுவத்தின் உயரதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார் புகழ்பெற்ற ஹிந்தி கவிஞர் ஜாவெத் அக்தர். அவரின் விருப்பம் நிறைவேற்றப்பட்டு, அந்தப் பாடல் 5 நிமிஷ இசையில் பதிவாகி, சிஆர்பிஎஃப் ராணுவப் படையின் கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. மற்றொரு துணை ராணுவப் படையான மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்கும் (சிஐஎஸ்எஃப்) ஜாவெத் அக்தர் ஏற்கெனவே ஒரு பாடலை எழுதி அளித்து அப்பாடல் அப்படையின் பயன்பாட்டில் இருக்கிறது என்பதும்தான்.

தமிழ்ச் சூழலில் இதுபோன்ற வேறுபட்ட முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால், அவ்வகையில் எழுதுவதற்கு நம்மிடையே ஏராளமான வரலாற்றுச் சான்றுகளும், பல்வேறு வகையான தியாக வரலாறுகளும் நிறையவே உள்ளன. இனிவரும் காலங்களிலாவது நமது புதிய இளம் கவிஞர்களின் கவனம் மானுட வாழ்வியல் பாடல்களை நோக்கித் திரும்பும் என்று மட்டும் உறுதியாக நம்புவோம். ஒன்றை மட்டுமல்ல, ஒவ்வொன்றையும் எழுதியாக வேண்டும்!

கட்டுரையாளர்:
கவிஞர்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 19 February 2020

அரசர் ஆண்டியாகிறார்!

அரசர் ஆண்டியாகிறார்! By டி.எஸ். தியாகராசன்  |   நம் நாடு விடுதலை பெறுவதற்கு 15 ஆண்டுகளுக்கு முன்பே நம் நாட்டில் விமான சேவை வந்துவிட்டது. ஆம். 1932-இல் ஜே.ஆர்.டி. டாடாதான் ஏர் இந்தியா என்ற விமான நிறுவனத்தைத் தொடங்கினார். இவர் ஒரு விமான ஓட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாரசீகத்திலிருந்து வெளியேறிய பார்சி மக்கள் பலர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். இவர்கள் தாங்கள் குடியேறிய நாட்டை வளப்படுத்துவதில் முன்னணியில் நின்றார்கள். இரும்பு, எஃகு தொழிலில் இவர்கள்தான் முன்னோடிகள்.  ஜே.ஆர்.டி. டாடா தனது பழுத்த அனுபவத்தால் இந்தியாவில் போக்குவரத்துத் துறையில் மற்றொரு சாதனை படைத்தார்.  1953-இல் பொதுவுடைமை தத்துவத்தில் ஆர்வம் கொண்ட காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான பண்டித நேரு, "ஏர் இந்தியா' என்ற அந்தத் தனியார் நிறுவனத்தை நாட்டுடைமையாக்கினார்.

ஜே.ஆர்.டி. டாடா இதை எதிர்த்து முணுமுணுக்கக்கூடச் செய்யாது, தான் அருமையாகத் தொடங்கி வளர்த்த 15ஆண்டுகால நல்ல விமானப் போக்குவரத்துத் துறை நிறுவனத்தை அரசிடம் ஒப்படைத்தார். அப்போது அவர் சொன்னார்: "மக்கள் நலனுக்காக விமான சேவை நாட்டுடைமையாக்கப்படுவதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இந்தியாவில் புதிய அரசுக்கு விமான நிறுவனத்தை நடத்துவதில் எந்த அனுபவமுமில்லை. அதனால் பிரச்னைகளைச் சந்திப்பார்கள்.'  அவரின் தீர்க்கதரிசனக் கூற்று இப்போது உண்மையாகியுள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஹர்தீப் சிங் புரி எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், 2012 நிதியாண்டில் இருந்து இதுவரை ரூ.30,520 கோடி ஏர் இந்தியா நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.  2007-08 காலகட்டத்தில் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஏர் இந்தியா கடன் பிரச்னையால் தவித்து வருகிறது.  2018-19-ஆம் நிதியாண்டில் நிதிப் பலன்களின்படி ஏர் இந்தியாவுக்கு ரூ.3,975 கோடி ரொக்கப் பலன் வழங்கப்பட்டதுடன்,  ரூ.1,630 கோடிக்கு முதலீடும் செலுத்தப்பட்டுள்ளது.  மேலும் ரூ.7,600 கோடிக்கான உத்தரவாதம் வழங்கப்படுகிறது.

இதில் நீண்ட கால கடன்களைச் செலுத்துவதற்காக புதிய கடன்களை உருவாக்கிக்கொள்ள ஏர் இந்தியாவிற்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ.3,000 கோடியும் அடங்கும் என்று பல புள்ளிவிவரங்களை தனது எழுத்துபூர்வமான பதிலில் குறிப்பிட்டுள்ளார். 2018-19-ஆம் நிதியாண்டில் மட்டும் ரூ.8,556  கோடி நிகர நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.நாட்டின் மிகப் பெரிய விமான நிறுவனமாக இருந்த ஏர் இந்தியா, தற்போது உள்நாட்டுச் சந்தை மதிப்பின்படி 13 சதவீதமாகச் சுருங்கி விட்டது. ஆனால், அண்மைக்காலத்தில் இந்த விமானத் துறையில் கால் பதித்த தனியார் நிறுவனங்களான இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ் ஆகியவை வளர்ச்சி பெற்று வருகின்றன. இந்திய விமானத் துறையில் ஏர் இந்தியாவுக்கு உள்ளது போன்ற உள் கட்டமைப்பு வசதிகள், அரசின் ஆதரவு வேறு நிறுவனங்களுக்கு இல்லை. பின் ஏன் இந்த அவல நிலை? புதிய விமானங்கள் வாங்குவதில் அரசியல் குறுக்கீடு.  யு.பி.ஏ.  ஆட்சியில் முதல் ஐந்தாண்டு காலத்தில் ரூ.70,000 கோடி செலவில் 111 விமானங்களை வாங்க முடிவு செய்தனர்.  ஏர் இந்தியா ரூ.33,197 கோடியில் போயிங் நிறுவனத்திலிருந்து 50 விமானங்கள்  வாங்க ஒப்பந்தம் இறுதியானது.

கடனில் விமானங்களை வாங்கி, வருவாய் ஈட்டி, பின்னர் கடனை அடைப்பது என்ற திட்டம். ஆனால், வருவாய் வரவில்லை;  மாறாக அசலுடன் வட்டி இமயமாக வளர்ந்தது. 2002-03-இல் நஷ்டம் ரூ.63 கோடி, 2010-11-ல் ரூ.7,000 கோடியாக உயர்ந்தது.  பின்னர் ரூ.20,000  கோடியைத் தொட்டது. லாபம் இன்றி இருந்த வழித்தடங்களில் அதிகப்படியான விமான சேவையை அதிகரிக்க 16 விமானங்களை குத்தகைக்கு எடுத்து இயக்கினர். இதனால் 2005-2010-க்கும் இடையில் உள்ள காலத்தில் ரூ.4,234 கோடியை  இழக்கவேண்டி இருந்தது. தேவைக்கு அதிகமாக விமானங்கள் வாங்க ஒப்பந்தம் போட்டதால் ரூ.68,000 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்திருக்கிறது என்கிறது சி.ஏ.ஜி. அறிக்கை.

மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனம் ஆண்டுதோறும் நஷ்டத்தைச் சந்தித்து வருவது எதனால்? ஆட்சியாளர்களின் தவறான கொள்கை முடிவுகள், ஜே.ஆ.ர்.டி. டாடா குறிப்பிட்டதுபோல முன்அனுபவம் இல்லாத நபர்களால் நிறுவனம் நிர்வகிக்கப்படுவது, சுய லாபத்துக்காக நேர்மையின்றிச் செயல்படுவது ஆகியவைதான் காரணமாக இருக்க முடியும்.  ஏற்படுகின்ற இழப்புக்கு பொறுப்பு ஏற்கும் நேர்மை யாரிடத்திலும் இருப்பதில்லை.  தவறு நேர்ந்தால் அதிகாரிகளை  ஊழியர்கள் காரணம் காட்டுவதும், அதிகாரிகள் ஆட்சியாளர்களைச் சுட்டிக் காட்டுவதும் வாடிக்கையாகிவிட்டது.  ஒரு முறை பிரெஞ்சு நாட்டில் புரட்சி தோன்றுவதற்கு சற்று முன்னர் மன்னன் பதினான்காம் லூயி தன் அமைச்சரைப் பார்த்துக் கேட்டான் - ஏன் மக்கள் அடிக்கடி போராட்டம் நடத்துகிறார்கள்? நாம்தான் எல்லா வசதிகளையும், சலுகைகளையும் அளிக்கிறோமே?' அதற்கு அமைச்சர், "ஆம். நாம் ஐஸ் பாறைகளாக அனுப்புகிறோம். ஆனால், மக்களுக்கு ஓரிரு சொட்டு நீரே போய்ச் சேருகிறது'என்றார். அதுபோல மத்திய அரசு அவ்வப்போது அதிக நிதி தந்தாலும் பயனாளிகளுக்கு முழுமையாகப் போய்ச் சேருவதில்லை.

இதனால்தான் 2001-ஆம் ஆண்டே ஏர் இந்தியாவின் 60 சதவீதப் பங்குகளையும் இந்தியன் ஏர்லைன்ஸின்  51 சதவீதப் பங்குகளையும் விற்க அப்போதைய பா.ஜ.க கூட்டணி அரசு முடிவெடுத்தது; நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தியதன் விளைவாக தனது முடிவை அரசு கைவிட்டது.  இப்போது ஏர் இந்தியா நிறுவனத்தை முழுமையாக விற்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளது.  மிகுந்த நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியாவை தனியார்மயமாக்கும் முடிவுக்கு மத்திய அமைச்சரவைக் குழு  ஒப்புதல் அளித்துவிட்டது.  இப்போதே நாட்டில் தனியார் விமானங்கள் 80 சதவீதத்துக்கும் அதிகமான சேவையை வழங்கி வருகின்றன. ஆனால், இப்படி நஷ்டத்தில் இயங்கும் விமான நிறுவனத்தை யார் வாங்க முன்வருவார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்தியாவில் முதலில் விமான சேவையைத் தொடங்கிய டாடா நிறுவனமே முன்வரக்கூடும் என்று பேச்சு எழுந்துள்ளது.

வளைகுடா நாட்டு விமான நிறுவனம் ஒன்றும் முன்வரக் கூடும் என்று தொழில் முறை நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு பல்லாயிரம் கோடி மதிப்பிலான கட்டமைப்பு வசதிகள் இருப்பதால் வாங்குவோருக்குப் பெரிய சாதகமாக அமையக் கூடும்.  நமது நாட்டுக்கு அண்மையில் உள்ள சின்னஞ்சிறு நாடான சிங்கப்பூரில் "சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்' சில காலத்திற்கு முன்னர்தான் தொடங்கப்பட்டது. விமானப் பயணக் கட்டணங்கள் சற்று கூடுதலாக இருந்த போதும், உலகின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றாக இருப்பதற்குக் காரணம், அதன் ஊழியர்கள், அதிகாரிகள், ஆட்சியாளர்கள் அனைவரும்தான். எல்லோரிடத்தும் பணியில் அர்ப்பணிப்பு உணர்வு, நாட்டுப்பற்று இவற்றோடு, நேர்மை, காலம் தவறாமை, மிகச் சிறந்த உபசரிப்பு எல்லாம் அவர்களின் நிறுவனத்தை உயர்த்திப் பிடிக்கிறது.

உலகில் எந்த ஒரு வணிக நிறுவனமும் கடன் பெறாமல் செயல்பட முடியாது.  ஆனால், நன்றாகத் திட்டமிட்டு தொலைநோக்குச் சிந்தனையோடு, பொருளாதார சந்தையின் தொழில் ஏற்ற இறக்கங்களை சரியாகக் கணித்து கடன் பெற்றால் தவறில்லை.  எடுத்துக்காட்டாக, ஜெட் ஏர்வேஸுக்கு இருக்கும் கடன் தொகை ரூ.7,223 கோடி என்கிறார்கள். இண்டிகோவின் கடன் தொகையோ ரூ.3,201 கோடி என வணிகச் செய்தி குறிப்பிடுகிறது.  ஆனால், நமது ஏர் இந்தியாவின் கடன் சுமை இதன் வருவாயாக மதிப்பிட்டிருக்கும் தொகை அளவைவிட பல மடங்கு அதிகம்.  பல ஆண்டுகளுக்கு முன்னர்  பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திலும் நஷ்டம் ஏற்பட்டது.  ஆனால், பிரிட்டன் அரசு துணிந்து தனியார் வசம் ஒப்படைத்து 1987-லேயே லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றியதை தொழில் துறை வல்லுநர்கள் இன்றும் நினைவுகூர்கிறார்கள்.

தற்போது இருக்கும் மக்கள்தொகைப் பெருக்கத்தில், வான்வழி போக்குவரத்து வசதியை விரும்பும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேதான் போகிறது. அதனால், பயணிகளின் வருகை குறைவு என்று சொல்ல முடியாது. இன்னும் புதிய வழித்தடங்களில் விமான சேவையை எதிர்நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்.  நாளுக்கு நாள் விமானப் பயணிகள் கூடி வருகின்ற, நல்ல வருவாய் ஈட்டக்கூடிய துறை தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருவதற்கு அனைத்து நிலையிலும் நிர்வாகச் சீர்கேடுகள்தான் காரணம்.ஏர் இந்தியாவை நம்பி பயணிக்க முடியாது என்ற கருத்து பரவலாக இருப்பதை மறுப்பதற்கில்லை. குறித்த காலத்தில் விமானம் பறக்குமா, இறங்குமா என்ற சந்தேகங்கள் பயணிகள் மத்தியில் வரவே கூடாது.  இன்று ஒரு விதிசெய்து அனைவரும் பணி ஒழுங்கு, காலக் கட்டுப்பாடு, நேர்மையான நிர்வாகம், சுயநல மறுப்போடு, அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற முனைந்தால் மீண்டும் அரசர் மேலெழும்புவார். இல்லையெனில் அரசர் ஆண்டியானார் என்பது உண்மையாகி விடும்.

கட்டுரையாளர்:
தலைவர்,
திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

குழந்தைகளுடன் செலவிடும் நேரம், குடும்பத்தின் மூலதனம்.

குழந்தைகளுடன் செலவிடும் நேரம், குடும்பத்தின் மூலதனம். முனைவர் ஜெ.லோகநாதன், ஐ.பி.எஸ். போலீஸ் டி.ஐ.ஜி. தஞ்சாவூர் சரகம். ஒரு பெற்றோர், போலீஸ் நிலையம் வந்து 9-ம் வகுப்பு படிக்கும் தங்கள் மகளை அந்த தெருவில் வசிக்கும் ஒரு பையன் ஏமாற்றி கூட்டி சென்றுவிட்டான். மகளை மீட்டு தரவேண்டும் என்று கூறி கண்ணீர் மல்க புகார் கொடுத்தனர். வேறு ஒரு தம்பதி தினமும் அருகில் இருக்கும் ஒரு மளிகை கடைக்கு சென்று வந்த தன் பத்து வயது மகளிடம் அந்த கடைக்காரர் தவறுதலாக நடந்து கொண்டார். அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இப்படி நடைபெறும் பல சம்பவங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு குறைபாட்டை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி காட்டுகின்றன.

இப்படி குழந்தைகளை பாலியல் கொடுமைக்கு ஆளாக்குபவர்கள் நம்மை சுற்றியிருப்பவர்கள், நம்மிடம் தினமும் பார்த்து பேசி பழகி கொண்டு இருப்பவர்கள் என்ற உண்மை அதிர்ச்சியை அளிக்கிறது. தேசிய குற்ற ஆவண காப்பகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் கடந்த 2018-ம் ஆண்டில் இந்தியாவில் தினமும் 109 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 22 சதவீதம் அதிகம். இன்றைய சூழ்நிலையில் பெற்றோர்கள் வேலைக்கு செல்வது, வியாபாரத்தை கவனிப்பது என்று குழந்தைகளுடன் பேசுவதற்கு கூட நேரமின்றி எந்திரக்கதியில் பரபரப்புடன் இயங்கி கொண்டு இருக்கிறார்கள்.

குழந்தைகளிடம் அன்பு காட்டி, அரவணைத்து அவர்கள் எந்த சூழ்நிலையில், என்ன தேவையில் உள்ளார்கள் என்பதை அறிந்து அதற்கான நேரம் ஒதுக்கி அறிவு வளர்ச்சியுடன், சுற்றி நடப்பவைகள் பற்றியும், ஒழுக்கத்தையும் கற்று தரவேண்டிய கடமையும், பொறுப்புணர்வும் பெற்றோர்களுக்கு உண்டு.

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கணினி மயம், இணைய வசதி, ஆண்ட்ராய்டு தொலைபேசி என எல்லாவற்றிலும் குழந்தைகளும் இணைந்திருப்பதால் அவர்கள் பார்க்கக்கூடாத இணையதளங்களை பார்க்க நேரிடுகிறது. இதனால் நல்லது எது? கெட்டது எது? என்று அவர்களால் தீர்மானிக்க முடியாத நிலையில் மனசஞ்சலத்துக்கு ஆளாகிறார்கள். இதன்காரணமாக சிறு வயதிலேயே அவர்கள் கவனம் படிப்பு தவிர மற்ற விஷயங்களில் திசை மாறிச்செல்ல வாய்ப்பாக மாறிவிடுகிறது. இந்த விபரீத நிலையை தடுக்கும் விதத்தில் பெற்றோர்கள் குழந்தைகளின் சிறுவயதிலேயே அவர்களுடன் உட்கார்ந்து பேசி, கொஞ்சி விளையாடி மகிழ்ந்து அன்புகாட்டி அரவணைத்து செல்ல வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளரும் குழந்தைகள் வாலிப பருவத்தில் வேறு நபர்களால் சொல்லும் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறமாட்டார்கள். வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் வீட்டை தங்கும் விடுதிபோல பயன்படுத்தாமல் குழந்தைகளின் சரியான வளர்ச்சிக்கு நேரம் ஒதுக்க வேண்டும்.

நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்பது போல் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வீட்டில் நல்ல பண்புகளை குறிப்பாக பொய் கூறாமை, உண்மையாக நடத்தல், விட்டுக்கொடுத்து பழகுதல், கடின உழைப்பின் அவசியம், உடற்பயிற்சி, விளையாட்டின் அவசியம், பாடப்புத்தகம் தவிர மற்ற புத்தகங்கள் படித்தல் போன்றவற்றை சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும். தேவையற்ற செயல்களில் நேரம் செலவிடுவதை தவிர்த்து முக்கிய வேலைகளில் நேரத்தை செலவிடச் செய்ய உடன் இருந்து சொல்லி கொடுக்க வேண்டும். ஆண் குழந்தைகளுக்கு பெண் குழந்தைகளை, பள்ளியில் படிக்கும் தோழிகளை மதித்து நடந்துகொள்ளுதல், ஒழுக்கத்துடன் பழகுதல், பேசுதல் போன்றவற்றை வீட்டிலும், பள்ளியிலும் கற்றுத்தர வேண்டும்.

சிறுவயதிலேயே மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி வாழ்கையை பாழாக்கிக்கொண்டு பெற்றோர்களையும் நிம்மதியின்றி வாழும் நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்படுவதை தடுக்க சரியான வழிகாட்டல் அவசியம். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது பழமொழி. சிறு வயது முதலே நற்குணங்களுடன் வளரும் சூழ்நிலையை குழந்தைக்கு ஏற்படுத்துங்கள்.

இக்கால பெற்றோர்கள் தான்பட்ட துன்பம் குழந்தைகள் படக்கூடாது என அவர்களின் தேவைக்கு அதிகமாகவே தேவையில்லாத வசதிகளை கேட்டவுடன் செய்வதால், குழந்தைகளுக்கு கஷ்டம் தெரிவதில்லை. கஷ்டப்பட்டு வாங்கும் எந்த பொருளுக்கும் விலை அதிகம். எந்த ஒரு பொருள் கொடுக்கும்போதும் அதன் மதிப்பு, கிடைப்பதில் உள்ள கஷ்டம் சொல்லி வளர்த்தால் அப்பொருளின் மதிப்பு உயர்ந்து நிற்கும். பள்ளிகளிலும் நீதிபோதனை வகுப்புகள் நடத்துவதன் மூலம் ஒழுக்கத்தை அவர்கள் படிக்கும் ஒரு பாடமாகவே ஒரு குறிப்பிட்ட வகுப்பு வரை சொல்லி கொடுத்தல் அவசியம்.

மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் அளிப்பதைக் காட்டிலும், மனித மாண்புகளுக்கு முக்கியத்துவத்தை அளித்து அவர்கள் வாழ்க்கையில் முன்னேற கற்றுக்கொடுக்க வேண்டும். நன்கு பள்ளியில் படித்து மதிப்பெண் பெற்றவர்கள் எல்லாம் வாழ்கையில் வென்றுவிடவும் இல்லை, நன்றாக படித்து மதிப்பெண் எடுக்காதவர்கள் எல்லாம் வாழ்க்கையில் தோற்று விடவும் இல்லை. இது எல்லாவற்றையும் தாண்டி ஆண் பிள்ளையானாலும், பெண் பிள்ளையானாலும் சரியான முறையில் வளர்க்கப்படுகிறார்களா? என்பதை உறுதி செய்யும் பொறுப்பு பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அதிகம் உள்ளது என்பதே நிதர்சன உண்மை.

குழந்தைகள் என்ன படிக்கிறார்கள், எப்படி படிக்கிறார்கள், எவ்வாறு வளர்கிறார்கள் என்று கூடத்தெரியாமல் பெற்றோர்கள் வீட்டில் நடந்து கொள்ளுதல் மன நிம்மதியற்ற வாழ்க்கை போராட்டத்திற்கு உங்கள் குடும்பம் போய்க்கொண்டிருக்கிறது என்று அர்த்தம். இதை உணர்ந்து குழந்தைகளுடன் நேரத்தை செலவு செய்யுங்கள், அவர்களின் வாழ்க்கைக்கு வலுவான அடித்தளமாக இருங்கள். மீன்பிடிக்க கற்றுக்கொடுங்கள், நீங்கள் பிடித்த மீன்களை எவ்வளவு தொழில் நுட்பத்துடன் சேமித்தாலும், அதிக நாட்களுக்கு அவை உதவாது. சொத்தை சேமிப்பதை விட்டுவிட்டு உங்கள் குடும்ப சொத்தான உங்கள் குழந்தைகளை ஒழுக்கமான முறையில் வளர்த்து வார்ப்பு எடுத்தால் குடும்ப வாழ்க்கை இனிமையாக, மகிழ்ச்சியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழைக் காத்த தமிழ் தாத்தா

தமிழைக் காத்த தமிழ் தாத்தா | உ.வே.சாமிநாதன் | ச.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் தொல்லியல் அதிகாரி (தமிழக அரசின் உ.வே.சா. விருது பெற்றவர்) இன்று (பிப்ரவரி 19-ந் தேதி) தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதன் பிறந்த நாள்.

தமிழின் சிறப்பை உலகறியச் செய்து தொன்மையான தமிழ் இலக்கியங்கள் பலவற்றை மீட்டுக் கொடுத்தவர் உ.வே.சா. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏட்டுச்சுவடிகளைச் சேகரித்தார். 90-க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சில் கொண்டு வந்தார். பிற்காலத்தில் தமிழின் தூதுவராக இருந்து சங்க இலக்கியங்களை ஓலைச்சுவடிகளில் இருந்து பதிப்பித்து ‘தமிழ் தாத்தா’ என்று பட்டப் பெயர் பெற்றார்.

உ.வே.சா. 19.2.1855-ல் வேங்கடசுப்பு-சரஸ்வதி தம்பதியருக்கு மகனாக பிறந்தார். அவருக்கு பதினான்காம் வயதில் திருமணம் நடந்தது. பெற்றோர் வேங்கட ரமணன் என்று பெயர் வைத்தனர். திருவாவடுதுறை ஆதீன வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையே அவருக்கு சாமிநாதன் என்ற பெயர் சூட்டி தமிழ் கற்பித்தார். ஓலைச்சுவடிகளில் இருந்த சங்க இலக்கியங்களையும், சிலம்பு உள்ளிட்ட காவியங்களையும் பல்வேறு சிற்றிலக்கியங்களையும், புராணங்களையும் பதிப்பித்து புகழின் உச்சிக்குச் சென்ற அவருக்கு முன்பும் சரி, பின்பும் சரி அவரளவுக்கு ஓலைச்சுவடிகளை சேகரித்து ஒருவரும் பதிப்பிக்கவில்லை.

தன் வித்யாகுரு மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் கல்வி பயின்ற காலம் தொடங்கி 87-ம் வயதில் இறக்கும் வரை அவரை உ.வே.சா. மறக்கவில்லை. தம்முடைய சுயசரிதையைக் காட்டிலும் குருவின் வாழ்க்கை வரலாற்றையே முதலில் எழுதினார். நூலில் குருவின் பெயரை எழுத அஞ்சி, பிள்ளை என்றே குறிப்பிட்டுள்ளார். பலரின் வற்புறுத்தலால் தம் 80-வது வயதுக்கு மேல் “என் சரித்திரம்” என்ற பெயரில் தன் வாழ்க்கையை எழுதினார்.

தியாகராச செட்டியாரின் பரிந்துரையில் கும்பகோணம் கல்லூரியில் வேலை கிடைத்த போதும் அதை மறுத்து தன் விசுவாசத்தையும், நன்றியையும் வெளிப்படுத்தினார். பின்பு தியாகராச செட்டியாரின் வற்புறுத்தலால் ஆதீனம் சுப்பிரமணிய தேசிகர், உ.வே.சா.வை வழியனுப்பி வைத்தார். தியாகராச செட்டியாரை மறக்காமல் தன் வீட்டிற்குத் ‘தியாகராசர் விலாசம்’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். உ.வே.சா. அந்த காலத்தில் சுவடி படிக்கத் தெரிந்தவர் சுவடியை நகல் செய்து புத்தகமாகப் போடும்போது சுவடியில் இருப்பது போன்றே அச்சிட்டனர். ஆனால் உ.வே.சா முன்னுரை, ஆய்வுரை, மேற்கோள் நூல்களின் பட்டியல், எடுத்தாண்ட சுவடிகளின் பட்டியல், நூலாசிரியர் மற்றும் உரையாசிரியர் வரலாறு போன்ற தகவல்களையும் பதிப்பித்து புது புரட்சி ஏற்படுத்தினார். தமிழ் செம்மொழி தகுதி பெற உ.வே.சா. போன்றோரும் காரணமாவர்.

எவ்வளவுதான் கவனம் எடுத்து வாசித்து ஓலைச்சுவடியை அச்சு நூலாக பதிப்பித்தாலும் ஓரிரண்டு பிழைகள் வரவே செய்யும். சிலப்பதிகார முதல் பதிப்பில் கானல்வரியில் ‘சேரல் மட வன்னம் சேரல் நடை ஒவ்வாய்’ என்ற வரி ‘சொல் மடவன்னம் சொல் நடை ஒவ்வாய்’ என்றே உள்ளது. மறுபதிப்பில் இதனைத் திருத்தி வெளியிட்டார். சிறந்த பதிப்பாசிரியராக மட்டுமின்றி உரையாசிரியராக, பேச்சாளராக இவர் விளங்கினார். தமக்கு தெரியாத துறையில் உ.வே.சா. ஈடுபட்டதில்லை. சான்றாக அன்பில் நகரில் கிடைத்த செப்பேட்டை படித்து வெளியிட ஒருவர் அவருக்கு கொடுக்க, அந்த பணியை அவர் ஏற்றுக்கொள்ளாமல் கல்வெட்டுத்துறைக்கு அனுப்பிவைத்தார்.

உ.வே.சா. தாரமங்கலத்தில் சுவடி கிடைக்காத நிலையில் அங்கிருந்த கோவிலுக்குச் சென்றார். வழியில் முள் காலைத் தைத்தது. இதுபற்றி அவர் கூறும்போது, ‘முள் காலைத் தைத்தது சிற்பம் என் உள்ளத்தை தைத்தது’ என்று உணர்ச்சிகரமாக குறிப்பிட்டுள்ளார். சுவடி சேகரிக்கச் சென்றபோது நேரிட்ட அவமானங்களைத் தமிழுக்காக தாங்கிக் கொண்டார். மாட்டுவண்டியில் சென்றும், நடந்து சென்றும் பல சுவடிகளைச் சேகரித்துள்ளார்.

ஓலைச்சுவடிகளைப் புதிதாக ஏடுகளில் நகல் செய்து கொண்டு பழையவற்றை நீரில் விடுவர் அல்லது தீயில் எரிக்கச் செய்வர். அவர் காலத்தில் அச்சு நூல்கள் வழக்கிற்கு வந்துவிட்டதால் சுவடி படிப்பவர் குறைய, ஆடிப்பெருக்கு போன்ற நாட்களில் ஓலையை நகல் செய்யாமலேயே நீரில் அல்லது தீயில் இட முற்பட்டனர். இது சாஸ்திரம் என்றும் சிலர் தவறாக கூற உ.வே.சா. மிகுந்த சினம் கொண்டு தீயில் இடுவதாக சொன்ன சாஸ்திரத்தையே முதலில் தீயில் இட வேண்டும் என்றார்.

பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்தலே தம் வாழ்வின் குறிக்கோளாக கொண்டிருந்த உ.வே.சா. தம்மை ஆதரித்த திருவாவடுதுறை ஆதீனத்தைக் கோவிலாகவே கருதினார். அவருடைய இறப்பு நிகழ்ந்த இடமும் திருக்கழுக்குன்றத்தில் உள்ள திருவாவடுதுறை ஆதீனக் கிளை மடமேயாகும்.

இவர் பலருக்கும், பல நிறுவனங்களுக்கும் தமிழ் தொடர்பாக கடிதங்களை எழுதியுள்ளார். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்கள் பலரிடமிருந்து இவருக்கு வந்துள்ளன. உடனுக்குடன் பதில் எழுதி அனுப்பிவிட்டு வந்த கடிதங்களையும் அவர் பாதுகாத்து வைத்துள்ளார். சமீபத்தில் ‘உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம்’ முதல் தொகுதி வெளி வந்துள்ளது.

தமிழ்த்தொண்டில் மதம் குறுக்கிடுவதை அவர் விரும்பவில்லை. சமண தாத்பரியங்களைத் தெரிந்துகொண்டு சீவக சிந்தாமணியையும், பவுத்த மதத் தத்துவங்களை அறிந்துகொண்டு மணிமேகலையையும் பதிப்பித்துள்ளார்.

பத்துப்பாட்டு ஓலைச்சுவடிகள் முழுமையாக கிடைக்காத நிலையில் நெல்லை மாவட்டம் களக்காட்டில் உள்ள தெற்கு சைவ மடத்தில் பத்துப்பாட்டு மூலம் முழுவதும் அடங்கிய சுவடி கிடைத்தது. ‘ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினேன் முன்பே கிடைத்திருந்தால் எவ்வளவு அனுகூலமாக இருந்திருக்கும்’ என மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இவர் ஸ்ரீவைகுண்டத்தில் கிடைத்த முல்லைப்பாட்டு சுவடியையொட்டி ‘இரவில் மலர்ந்த முல்லை’ என்ற அரிய கட்டுரை எழுதியுள்ளார். மிதிலைப்பட்டி கவிராயர் வீட்டில் ஓர் ஏட்டின் மேல் ‘புறநானூறு உரை சிலப்பதிகார உரை’ என்ற குறிப்பு இருந்ததை கண்ட உ.வே.சா. ‘குருடனுக்கு கண் கிடைத்தது போல ஆனந்தம் உண்டாயிற்று’ என்று எழுதுகிறார். என்னே! உ.வே.சா. வின் தமிழ்ப்பற்று.

பாரதியாரால் “கும்பமுனி எனத்தோன்றும் சாமிநாதப் புலவன்” என்று பாராட்டப்பட்டார். உ.வே.சாவை ரவீந்திரநாத் தாகூரும், காந்தியடிகளும் சென்னையில் சந்தித்து பேசினார்கள் என்றால் எத்தகு புகழுடன் வாழ்ந்து வந்தார் என்பதை நாம் யூகிக்கலாம். அவரைத் தேடி பல விருதுகள் வந்தடைந்தன. ஆண்டுதோறும் அரசு விழா எடுக்க, தமிழன்பர்களும் கருத்தரங்குகள் நடத்தி மகிழ்கின்றனர். உ.வே.சா. வழி நின்று நாம் தமிழை வளர்ப்போமாக.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 18 February 2020

நாவன்மைத் திலகம் நானி பல்கிவாலா!

நாவன்மைத் திலகம்  நானி பல்கிவாலா! By முனைவர் ந. அருள்  |   நானி ஆர்த்தீர்ஸ் பல்கிவாலா, ஜனவரி 16, 1920 - இல் மும்பையில் ஓர் எளிய பார்சி குடும்பத்தில் பிறந்தார்.  பல்கி என்றால் பல்லக்கு என்ற பொருள்படும், வண்ணமயமான பெட்டிகளைக் குதிரைகள் இழுத்துச் செல்லும் வகையில் அமைக்கும் தொழில் சார்ந்தவர்கள் என்ற வகையில் பல்கிவாலா எனப்பட்டார். அவரின் பெற்றோர்  "நானாபாய் ' என்று அவரை அழைத்தனர். மற்றவர்கள் அவரை "நானி பல்கிவாலா' என அழைத்தனர்.

ஆங்கிலப் பெரும் பேராசிரியராகத் திகழ வேண்டிய பல்கிவாலா, பின்னர் அரசியல் சட்ட நீதிக் கோமானாக நிகரற்று விளங்கினார். பள்ளியில் படிக்கும்போது, திக்குவாய்க் குறைபாடு இருந்தும், தனது விடாமுயற்சியால் நாடு புகழும் நாவேந்தராக மாறினார். கையால் விரல் பிடித்து எழுதுவதற்கு முடக்கம் இருந்தாலும் வாயுரையாகக் கூறியவை சீரிய நூல்களாக வெளிவந்தன.

வாய் திறந்து பேசினால், முத்துப் போலச் சொற்றொடர்களை - வைர வார்த்தைகளை - மாணிக்க மேற்கோள்களைக் கொட்டியவர் பல்கிவாலா. ஒருமுறை அவர் சொன்ன மேற்கோள், நாடு போற்றும் அளவுக்கு மின்னியது. "அழகின்பால் நான் கொண்ட அளப்பரிய ஆவலை, உண்மையின்பால் எனக்குரிய வேட்கையை, எளியோரை வலியோர்  புரட்டிப் போடும் விதியின் விளையாட்டோ, இளமைக் களிப்புகளை திசைதிருப்பித் தண்டிக்கும் கால மாறாட்டமோ என்னைத் தொடுவதற்கு நான் எப்போதும் இடம் தந்ததில்லை'  என்று குறிப்பிட்டது பல்கிவாலாவின் உயரிய நோக்கத்தைப் புலப்படுத்துவதாகும்.

நாடறிந்த சட்ட மேதையாகத் திகழ்ந்து அரசியலமைப்புச் சட்டத்தின் நிபுணராக விளங்கியதுடன், அரசியலமைப்புச் சட்டத்தைத் தொடுகிறபோதே புனித நூலைத் தொடுகிற மனம் அமையவேண்டும், அரசியலமைப்பை எழுத்துக்கு எழுத்து எண்ணிப் படித்து உள்வாங்கியவர்களாக நம் நாட்டு மக்கள் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும். அரசியல் என்பது, பண்பாளர்களின் கரங்களை அலங்கரிக்கும் கங்கணமாகும்; கை விலங்காக மாறிவிடக்கூடாது. தனி மனித உரிமைதான் இந்திய நாட்டுக்குப் பெருமை தருவது.

நெருக்கடி நிலை வந்தபோது நெருப்புப் பொறிகளைக் கக்கி வாதிட்டார். வெப்பமும் - விவேகமும் கலந்த அந்த வழக்குரைகள் ஒப்பற்றவை. பல்கிவாலாவை எங்கே, எப்போது பார்க்கலாம் என்று மக்கள் விரும்பினால் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை வெளிவந்த பிறகு மும்பையிலும் - தில்லியிலும் - சென்னையிலும் தேன்மழையாக அவர் பேசும் ஆய்வுரைக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள்  காத்திருந்தனர்.

தாம் தொடங்கிய சுதந்திரா கட்சிக்கு பல்கிவாலா தலைமை தாங்க வேண்டும் என்று மூதறிஞர் ராஜாஜி விரும்பினார். கட்சி சார்ந்த பதவிகள் எனக்கு வேண்டாம் என்ற பக்கச் சார்பில்லாத மனத்தை அவர் வளர்த்திருந்தார்.  எனினும், பிரதமர் மொரார்ஜி தேசாய் அவருடைய பன்முகப் புலமையைப் பாராட்டும் விதத்தில், அமெரிக்க நாட்டின் தூதுவராக நியமித்தார். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் அவர் ஆற்றிய உரைகள் அவருடைய மேதைமையை வெளிப்படுத்தின.

வங்கிகள் தேசியமயமாக்கல், கல்வி நிறுவனங்களை நடத்த சிறுபான்மையினர் உரிமைகள், மன்னர் மானிய ஒழிப்பு, ஊடகங்களின் உரிமை , மண்டல்குழு ஆகிய சிக்கல்கள் தொடர்பான வழக்குகளில் தம் சட்ட அறிவு, வாதத் திறமையை நிலைநாட்டியவர் பல்கிவாலா.தனது 82-ஆம் வயதில் 2002 டிசம்பர் 11 அன்று மும்பையில் நானி பல்கிவாலா மறைந்தார்.  இந்தியா ஒரு சிறந்த சட்ட அமைச்சரை, நிதியமைச்சரைப் பெறத் தவறி விட்டது. நாடறிந்த நாவேந்தராகவும், நல்லறிஞராகவும் திகழ்ந்த பல்கிவாலாவின் பன்முக ஆளுமையும் அவர் படைப்புகளில் ஒளிவீசிய ஆங்கில மேற்கோள்களும் எவராலும் என்றும் மறக்க முடியாதவை.சங்கர நேத்ராலயாவுக்கு அளித்த மிகப் பெரிய நன்கொடையின் காரணமாக அவரை இன்றும் அந்த நிறுவனம் வணங்குகிறது. "பாரதிய வித்யா பவன்' அவரை முன்னாள் துணைத் தலைவராகப் போற்றி வருகிறது. அமெரிக்க நாட்டிலுள்ள பிரின்ஸ்டன், லாரன்ஸ்  பல்கலைக்கழகங்களும் பல்வேறு இந்தியப் பல்கலைக்கழகங்களும் அவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் அளித்து தலைசிறந்த அறிஞராக மதித்தன.

இந்திய அரசியலமைப்பைச் சிதைவுறாமல் பேணிக் காத்ததில் இவருக்குப் பெரும் பங்குண்டு.  "இந்தியாவுக்கு இறைவன் அளித்த அருட்கொடை' என மூதறிஞர் ராஜாஜியால் போற்றப்பட்ட இந்த மாமேதையை இன்றும் தமிழகப் பட்டிமன்ற மேடைகளில் சிறப்பாகப் பேசும் உரையாளர்களைப் " பட்டிமன்றப் பல்கிவாலா'  என்று தமிழறிஞர் ஒளவை நடராசன் பரிவோடு விளிப்பதை பலர் நினைவுகூரலாம்."நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தை ஒருமணியாரம்'  என்று மகாகவி பாரதியார் பாடினார். மணியாரம் பல்வேறு மணிகளைக் கொண்டது. நான்மணிமாலை, நவரத்தினமாலை என்று குறிப்பிடுவதுபோல  நானி பல்கிவாலாவின் நல்லுரைகளையெல்லாம் "மணிமாலைகள்' என்று குறிக்கலாம்.

சென்னையில் அந்நாளைய ஆபட்ஸ்பரி அரங்கில் பேசுவது அவருக்குப் பிடித்தமான நிகழ்வென்றும், சென்னை மாநகரமே சிந்தனையாளர்களைக் கொண்ட அறிவுத் தலைநகரம் என்றும் புகழ்ந்து குறிப்பிட்டார். பல்கிவாலாவின் மீது மாறாத பரிவு கொண்ட உயரிய நண்பர்கள், உருக்கமான  சீடர் பலர் நாடெங்கும் உள்ளனர். புகழ் பெற்ற தணிக்கையாளர் ஸ்ரீவத்சன், ஸ்ரீ ஹரி இருவருமாக அமைத்த குழுவினர் நானியின் வாழ்வை "தரணியின்  பெருமை' என்ற பெயரில் நாடகமாக நடித்து அவர் வரலாற்றுக்கு மேலும் பெருமை சேர்த்தனர்.


(நானி பல்கிவாலா நூற்றாண்டு)
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பாலினத்தில் பாகுபாடு வேண்டாமே!

பாலினத்தில் பாகுபாடு வேண்டாமே! By ரமாமணி சுந்தர்  |   பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின் அறிமுகப்படுத்தப்பட்ட  சமூகநலத் திட்டங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று, பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக சுமார் ஐந்தாண்டுகளாக அமலில் இருக்கும் "பெண் குழந்தைகளைக் காப்போம், கற்பிப்போம்' எனும் திட்டம்.

நாட்டின் மக்கள்தொகையில் ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என்ற புள்ளிவிவரம் பலரும் அறிந்ததே. ஆனால், 2011-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 0 - 6 வயதுடைய குழந்தைகளின் எண்ணிக்கையில், பெண் குழந்தைகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.1961-ஆம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்போது 1,000 ஆண் குழந்தைகளுக்கு 976 பெண் குழந்தைகள் என்றிருந்த பாலின விகிதம், 1991-ஆம் ஆண்டில் 945, 2001-இல் 927 என்று படிப்படியாகக் குறைந்து, 2011-ஆம் ஆண்டில் 918 என்ற குறைந்தபட்ச விகிதத்தைத் தொட்டது.

அது மட்டுமல்லாமல் ஹரியாணா (834), பஞ்சாப் (846), தில்லி (871), சண்டீகர் (880) போன்ற வட மாநிலங்களின் / யூனியன் பிரதேசங்களின் மிக மோசமான பாலின விகிதம் அரசை அதிர்ச்சியடைய வைத்தது. இப்படிக் குறைந்துவரும் பாலின விகிதம் மிகப் பெரிய சமூகப் பிரச்னையாக உருவெடுப்பதற்குள் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது அரசு.
குழந்தைகளிடையே உள்ள பாலின விகிதம் இப்படிக் குறைந்துகொண்டே போவதற்கு நம் மக்களிடையே உள்ள ஆண் குழந்தை மோகம்தான் முக்கியக் காரணம். ஆண் குழந்தை பிறந்தால் கொண்டாடுவதும், பெண் குழந்தை பிறந்தால் துக்கம் அனுசரிக்கப்படுவதும் பல குடும்பங்களில் இயல்பாக நடைபெறும் நிகழ்வுகள்.

கருவிலிருந்து கல்லறை வரையில் உதாசீனப்படுத்தப்படுகிறாள் பெண். பிறக்கப் போவது பெண் குழந்தை என்று ஸ்கேன் மூலம் அறிந்து கருவிலேயே அழிக்கும் நிலை உள்ளது. அதுவும் ஏற்கெனவே ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள், அடுத்தும்  பெண் குழந்தை என்று தெரிந்தால் அதை அழிக்கத் தயங்குவதில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன. பெண் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் வழங்கப்படுவதில்லை. உடல் நலம் பாதிக்கப்பட்டால் சரியான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை.  ஏன் இந்தப் பாரபட்சம்?
ஆண் குழந்தைதான் குடும்பத்தின் வாரிசு, முதுமையில் ஆண்தான் தங்களுக்குப் பாதுகாப்பு, தங்களுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்ய ஓர் ஆண்  வேண்டும் என்று பெற்றோர் பலர் நினைப்பதே ஆண் குழந்தைகளுக்காக அவர்கள் ஏங்குவதற்கான காரணங்கள்.

பெண் குழந்தை பிறந்தால், மகளின் திருமணத்துக்குச் செலவு செய்ய வேண்டும், மிகுந்த பாதுகாப்புடன் வளர்க்க வேண்டும் போன்ற காரணிகளும், என்னதான் இருந்தாலும் தன் மகள் அடுத்த வீட்டிற்குச் செல்லப்  போகிறவள்தானே என்ற அலட்சியப் போக்கும் பெண் குழந்தை வேண்டாம் என்று பெற்றோர்களைக் கருத வைக்கின்றன. இத்தகைய மனப்பான்மை தென் மாநிலங்களைவிட பஞ்சாப், ஹரியாணா, தில்லி, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் மிக அதிகமாக உள்ளது.பிறப்பதற்கு முன்பிலிருந்தே பெண் குழந்தைகளுக்கு தக்க பாதுகாப்பு அளித்து, அவர்களைக் கல்வி கற்க வைத்து, சமூகத்தில் அவர்களது அந்தஸ்து மேம்பட வழி செய்யும் எண்ணத்துடன் "பெண் குழந்தைகளைக் காப்போம், கற்பிப்போம்' என்ற திட்டத்தை பிரதமர்  மோடி 2015-இல் ஹரியாணாவில் தொடங்கி வைத்தார்.

குழந்தைகளின் பாலின விகிதம் மிகவும் குறைவாக இருக்கும் 100 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட இந்தத்  திட்டம்,  ஓர் ஆண்டு காலத்தில் இன்னும் 61 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. 2018-19- ஆம் ஆண்டிலிருந்து இந்தத் திட்டம் நாடு முழுவதிலும் உள்ள 640 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.இந்தத் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அரசு முடிவெடுத்ததற்கான முக்கியக் காரணம், பல மாநிலங்களில் மாநில அளவில் குழந்தைகளின் பாலின விகிதம்  ஓரளவு சரியாக இருந்தாலும், மாவட்ட அளவில் இந்த விகிதம் பெண்களுக்குப் பாதகமாக இருக்கிறது என்பதே. எடுத்துக்காட்டாக, தமிழகத்தைப் பொருத்தவரை  பாலின விகிதம் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 1,000 ஆண் குழந்தைகளுக்கு 943 பெண் குழந்தைகள் என்று இருந்தாலும், அரியலூர் (892), கூடலூர் (895), தர்மபுரி (911), பெரம்பலூர் (913), நாமக்கல் (913) ஆகிய மாவட்டங்களில் பாலின விகிதம் நாட்டின் சராசரிக்குக் கீழே இருந்தது. 

"பெண் குழந்தைகளைக் காப்போம், கற்பிப்போம்' திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கல்வித் துறை மற்றும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் போன்ற துறைகளின் ஒருங்கிணைப்புடன் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் செயல்படுத்துகிறது.  இந்தத் திட்டத்தின் முக்கியக் குறிக்கோள் பெண் குழந்தைகளின் முக்கியத்துவம், அவர்களின் உடல் நலம், சுகாதாரம், கல்வி குறித்து நாடு தழுவிய அளவில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது.
வானொலி, தொலைக்காட்சி, நாளிதழ்கள், போன்ற ஊடகங்களும் முக்கியமான இடங்களில் வைக்கப்படும் விளம்பரப் பலகைகள் போன்றவையும் இந்தத் திட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

சுகாதாரத் துறையின் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் முதலானோரும் கிராமங்களில் உள்ளவர்களுக்கு பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்கின்றனர்.  கர்ப்பிணிப் பெண்களை ஆரம்ப நிலையிலிருந்தே கண்காணித்து, அவர்கள் மருத்துவமனையில் அல்லது மருத்துவ வசதியுடன் பிரசவிக்க ஊக்குவித்து பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அளிக்க உதவுகிறார்கள் இந்த ஊழியர்கள்.
பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை ஸ்கேன் மூலம் அறிந்து, குழந்தையைக் கருவிலேயே அழிக்கும் கொடுமையைத் தடுக்கும் வகையில், கரு நிலையில்  ஆணா, பெண்ணா என்று கண்டறியும் தொழில்நுட்பத்துக்குத் தடை விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு 1994 ஆம் ஆண்டு பிறப்பித்தது. ஆனால், இந்தச் சட்டம் நடைமுறையில் இருந்தும் ஹரியாணா, பஞ்சாப், தில்லி போன்ற மாநிலங்களில் திருட்டுத்தனமாக இந்தச் "சேவையை' மக்களுக்கு மருத்துவர்கள் வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

"பெண்குழந்தைகளைக் காப்போம், கற்பிப்போம்' திட்டத்தின் கீழ் இந்தச் சட்டத்தை அமல்படுத்துவது  தீவிரப்படுத்தப்பட்டு, திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தவறிழைப்பவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்குவதற்கான முயற்சிகள்  மேற்கொள்ளப்படுகின்றன.ஒவ்வொரு கிராமத்திலும் கல்வித் துறையின் உதவியுடன் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திய பெண் குழந்தைகளை அடையாளம் கண்டு, அவர்கள் மீண்டும் கல்வியைத் தொடர்வதற்கான முயற்சியும் இந்தத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது. 

இந்தத் திட்டத்தின் கீழ் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன , எத்தனை கர்ப்பிணிப் பெண்கள் சுகாதார வசதிகளில் பதிவு செய்துள்ளனர், பள்ளி இறுதி வரையில் படிப்பைத் தொடராமல் இடைநிற்றல் மாணவிகளின் விவரங்கள், அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் போன்ற புள்ளிவிவரங்கள் மாவட்ட ரீதியாகச் சேகரிக்கப்படுகின்றன.

இந்தத் திட்டத்தின் கீழ் எடுக்கப்படும் முயற்சிகளையும்  அவற்றின் பலன்களையும் அமைச்சகத்தின் கண்காணிப்பு - மதிப்பீடு பிரிவு தொடர்ந்து கண்காணித்து  சிறப்பாகச் செயலாற்றிய மாநிலங்கள், மாவட்டங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தில்லியில் நடந்த விழாவில் இந்தத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக  நாமக்கல், திருவள்ளூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களுக்கும், ஐந்து மாநிலங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

இந்தத் திட்டம் அமலுக்கு வந்தபின் பல மாவட்டங்களில் பாலின விகிதத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று குழந்தைகளின் பிறப்பு பதிவேட்டின் அடிப்படையில் வெளியிடப்படும் அரசுத் தரப்பு புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. எடுத்துக்காட்டாக, ஹரியாணா மாநிலத்தில் 2018-ஆம் ஆண்டில் பாலின விகிதம் 924-ஆக அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆனால், ஒருசில மாவட்டங்களில் முன்னேற்றம் கண்டிருந்தாலும், சிர்சா (884), பிவானி (895), ஜஜ்ஜார் (897), தில்லிக்கு மிக அருகில் உள்ள குருகிராம் (897) போன்ற மாவட்டங்களில் இந்த விகிதம் இப்போதும் குறைவாகவே உள்ளது.

இந்தத் திட்டம் குறித்த விழிப்புணர்வு ஓரளவுக்கு மக்களிடையே இருந்தாலும், திட்டத்தின் நோக்கம் குறித்த தெளிவான புரிதல் மக்களிடையே இல்லை என்று அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. அது மட்டுமல்ல, ஹரியாணா  மாநிலத்தின் குர்கிராமின் நவ நாகரிகமான "சைபர் ஹப்'பிலிருந்து  11.5 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் ஒன்றில், எந்தெந்த வீடுகளில் ஆண் குழந்தை உள்ளார்களோ, அந்த வீடுகளின் முகப்பில் சிவப்பு - மஞ்சள் நிறங்களில் கைகளின் முத்திரையைப் பதித்துக் கொண்டாடுகிறார்கள் என வெளிவரும் செய்திகள் நம்மை விரக்தி அடையச் செய்கின்றன.

இப்படிப்பட்ட கொண்டாட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் வரை, பெண் குழந்தைகளின் நிலைமையில் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. இந்தத் திட்டத்தின் முக்கிய குறிக்கோள், பெண் குழந்தைகள் குறித்த மக்களின்  மனப்போக்கை மாற்றுவது. ஆனால், அது அவ்வளவு எளிதான காரியமாகத்  தோன்றவில்லை. 
 
 கட்டுரையாளர்:
சமூக ஆர்வலர்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தாழ்வு மனப்பான்மையை ஒழிப்பதே வெற்றிக்கு வழி...!

தாழ்வு மனப்பான்மையை ஒழிப்பதே வெற்றிக்கு வழி...! முத்துமீனா, எழுத்தாளர், நாமக்கல். பே தம் என்ற தமிழ் சொல்லுக்கு வேற்றுமை என்பது பொருளாகும். உண்மையில் இதற்கான பொருளை நாம் தேடவே தேவையில்லை. அன்றாட வாழ்க்கையில் காலம் காலமாக நம் நாட்டில் நிலவிக்கொண்டிருக்கும் சூழலே இதற்கான விளக்கத்தை அளிக்கிறது. நிறைய பேர் சாதியினாலோ, மதத்தினாலோ ஏற்பட்டிருப்பது தான் பேதம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக சாதியும், மதமுமே நமது நாட்டில் உள்ள மிகப்பெரிய பேதமாகும். ஆனால், அதையும் தாண்டி நிறைய பேதங்கள் உள்ளன.

ஆண், பெண் என்ற பேதம், முதலாளி, தொழிலாளி என்ற பேதம், பணக்காரன், ஏழை என்ற பேதம், படித்தவன், படிக்காதவன் என்ற பேதம், மொழிகளுக்குள் பேதம், மண்ணுக்குள் பேதம் என்று கூறிக்கொண்டே போகலாம். வித்தியாசம் என்று பொருள் கொண்ட பேதமானது, நம் மக்களால் ஒருவித வெறுப்பு தன்மையை ஏற்படுத்துகிறது. காலம் காலமாக எந்த ஒரு பேதமாக இருந்தாலும், அதை ஒழிக்க வேண்டும், அதை உருவாக்கிக்கொண்டிருப்பவர்களின் கருத்தை மாற்றி அவர்களை திருத்த வேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கிறோம். இது மிகவும் சரியான கருத்து என்று வைத்துக்கொள்வோம். இம்மாதிரியான முற்போக்கு கருத்துக்களை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறிவிட முடியாது. இன்று ஒரு கூட்டம் திருந்துகிறது என்றால் நாளை வேறு ஒரு கூட்டம் உருவாகும். சாதியை ஒழிப்போம், மதத்தை ஒழிப்போம், முதலாளித்துவத்தை ஒழிப்போம் என்று போராடிக்கொண்டும், கூப்பாடு போட்டுக்கொண்டும் இன்னும் எத்தனை நாளைக்கு செய்து கொண்டிருக்கப்போகிறோம்.

இவை அனைத்தும் மற்றவர்களை திருத்தும் செயல் என்று பார்த்தால், பேதத்திற்கு உள்ளாகும் மக்கள் என்ன செய்ய வேண்டும்? என்னைவிட நீ தாழ்ந்தவன் என்று ஒருவன் கூறினால், உடனே மனம் நொந்து தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாதலை நிறுத்த வேண்டும். பார்க்கும் வேலையில் என்னை விட நீ தாழ்ந்தவன் என்றாலும், இனத்தில் நீ என்னைவிட தாழ்ந்தவன் என்றாலும், பணத்தில் நீ என்னை விட தாழ்ந்தவன் என்றாலும், செருக்கோடு எண்ணுங்கள், “நீ யார் என்னை தாழ்ந்தவன் என்று கூறுவதற்கு?” என்று. அவர்கள் உயர்ந்தவர்கள், நாங்கள் தாழ்ந்தவர்கள். அதனால் நாங்கள் போராடுகிறோம் என்று கூறி பல வருடங்களாக பேதத்தில் சிக்கித்தவித்துக்கொண்டிருக்கிறோம். உயர்ந்தவர்கள் என்று கூறுவதில் தான் பெருமை, கவுரவம் என்று மார்தட்டிக் கொண்டிருப்பவர்களை ஒரு பொருட்டாகவே எண்ணக்கூடாது.

தான் இருக்கும் இடமும், பார்க்கும் வேலையும், பேசும் மொழியும், முன்னோர்கள் வழி வந்த பரம்பரையும் மிகச் சிறந்தது என்று ஒவ்வொருவரும் மனதில் நினைக்கத் தொடங்கவேண்டும். அதை விடுத்து கொஞ்சமும் தேவையற்ற பேதத்தினால் உருவான தாழ்வு மனப்பான்மையை மனதிற்குள் வளர்க்கக்கூடாது. இதற்கான எடுத்துக்காட்டாக மேலை நாட்டு மக்களை நாம் எடுத்துக்கொள்ளலாம். அங்கே மத பேதமும், தொழில் பேதமும், இதர பேதங்களும் இல்லை என்று கூறவில்லை. அங்கேயும் இதுபோன்ற வேற்றுமை உணர்வுகள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அங்கு வாழும் மக்கள் அதை எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதை நாம் பார்க்கவேண்டும். அங்கு முதலாளியானாலும், தொழிலாளியானாலும், ஆணானாலும், பெண்ணானாலும், யாராக இருந்தாலும் சக மனிதர்கள்தான். ஒருவரை விட ஒருவர் பெரியவர் இல்லை என்ற எண்ணம் பெரும்பான்மையான மக்களிடத்தில் காணப்படும்.

ஆக, என்று நாம் நம்மை தாழ்வாக நினைக்கத்தொடங்கினால் அந்த எண்ணமானது நம் குடும்பத்திற்கும், வருங்கால சந்ததியினருக்கும் தொடர்ந்து கொண்டே போகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வேற்றுமை உணர்வினால் தன்னை இழிவுபடுத்துபவர்களுக்காக முக்கியத்துவம் அளிக்காமல், அவர்கள் முன்பு வாழ்க்கையில் முன்னேறி வாழ்ந்து காட்டுதலே பெருமை சேர்க்கும் செயலாகும். முன்னேறுவதற்கான பாதையை உருவாக்க வேண்டுமே தவிர, ஏற்கனவே முட்கள் நிறைந்து காணப்படும் சகதியான பாதைக்கு, தான் போவது மட்டுமில்லாமல் உடன் இருப்பவர்களையும் சேர்த்துக்கொண்டு வீணாதலை நிறுத்த வேண்டும். நான் முட்களை நீக்கி அந்த பாதையில் பூக்களை நிரப்புவேன் என்று போர்க்கொடி தூக்கிக்கொண்டு இருந்தால், தன்னுடைய நேரமும், உழைப்பும் வீணாகுமே தவிர முன்னேற்றத்தை பார்ப்பது மிகவும் கடினமானது.

உனக்கான தனித்துவ பாதையை உருவாக்கி உன்னைச் சேர்ந்த மக்களிடத்தில் நீ கொடுத்தாயானால், அந்த நல்வழியை பின்பற்றி ஒரு பெரும் அமைதியான சமூகமே உருவாதலை கட்டாயம் பார்க்க முடியும். நான் பெரியவன் என்று ஒருவன் கூறினால், நான் உனக்கு எந்த விதத்திலும் சிறியவன் இல்லை என்பதை வாயால் கூறுவதை காட்டிலும், செயலால் காட்டுவதே தனக்குத்தானே உற்சாகமூட்டும் வழியாகும். வேற்றுமையை உடைத்து முன்னேறி வாழ்ந்து காட்டும் கதையம்சமுள்ள திரைப்படங்களைப் பார்த்து விசில் அடித்து கொண்டாடி மகிழும் மக்களால், தங்களுடைய வாழ்வில் அதுபோன்று வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற எண்ணம் ஏனோ எழுவதில்லை.

தான் முன்னேறுவதை வேறு ஒருவன் எவ்வித பேதத்தினாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. இக்காலகட்டத்தில் முன்பைவிட சூழலும், வாய்ப்புகளும் நிறைய உள்ளன. அதை நல்ல முறையில் பயன்படுத்தி தனக்கென தனியான ஒரு அடையாளத்தை அனைவரும் மேற்கொள்ள தொடங்க வேண்டும். கூட்டத்தினரோடு இருக்கும்பொழுது எவருக்கும், நீ தாழ்ந்தவன் என்று பிறர் சொல்லும் சொல்லைக் கேட்டு தாழ்வு மனப்பான்மை ஏற்படுவதில்லை. ஏனென்றால் என்னைப் போன்று இங்கு ஒரு பெரிய கூட்டமே உள்ளது. நான் தனி ஆள் அல்ல என்ற எண்ணமும், பலமும் தானாக உருவாகிறது. ஆனால் இதே சூழ்நிலை தனிப்பட்ட முறையில் நிகழும் பொழுது பலவீனமாகி மனம் நொந்து துவண்டு போகும் நிலை ஏற்படுகிறது.

அங்கு தான் நிலை தடுமாறாமல், சூழ்நிலைகளால் இழுக்கப்பட்டு தைரியம் இழக்காமல் திமிரோடு நிற்கவேண்டும். முன்னேற்றம் ஒன்றே நான் பெரியவன் என்று காட்டும் என்ற வைராக்கியத்தை மனதில் கொள்ள வேண்டும். இதையே வேதமாக ஏற்று பின்பற்ற தொடங்க வேண்டும். எந்த இடத்தில் கூனிக்குறுகி மனம் புண்பட்டதோ, அதே இடத்தில் தலைநிமிர்ந்து என்னுடைய நிலை இதுதான் என்று மிடுக்கோடு கூற வேண்டும். பிறருடைய பேதச் செருக்கை அடக்க வேண்டும் என்ற எண்ணத்தை காட்டிலும், தன்னுடைய தாழ்வு மனப்பான்மையை அறவே ஒழித்து சமூகத்தில் நிற்பதே மாபெரும் வெற்றியாக கருதப்படும். பேதம் தீக்குச்சி என்றால், உரசியவுடன் பற்றிக்கொள்ளும் காய்ந்த சருகல்ல நாம். முளைத்து, துளிர்த்து, செழித்து, வளர்ந்து, மரமாகும் விதை நாம். வளர்வோம். நிமிர்வோம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர்

சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர் | பி.ஜி.ஆனந்தன், தேசிய தலைவர், அகில இந்திய சிங்காரவேலர் முன்னேற்ற கழகம். இன்று (பிப்ரவரி 18-ந் தேதி) சிங்காரவேலர் பிறந்த நாள்.அடிமை இருள் சூழ்ந்து கிடந்த இந்திய மண்ணில் ‘விடுதலைச் சுடர்’ ஒளிவிட வேண்டும் என்ற வேட்கையுடன் சுதந்திரக் கனலை மூண்டெழச்செய்தவர் சிங்காரவேலர். இவர் 1860-ம் ஆண்டு பிப்ரவரி 18-ந் தேதி சென்னையில் பிறந்தார். மீனவர் சமூகத்தைச் சேர்ந்த அவர் மாநில கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர், சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று வக்கீல் ஆனார். ஆங்கிலம், தமிழ் மொழிகளைத்தவிர இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளையும் அவர் கற்று இருந்தார். தனது வீட்டில் 20 ஆயிரத்துக்கும் மேல் நூல்களை சேகரித்து வைத்து இருந்தார். பொதுவுடைமைச் சிந்தனைகளை நாட்டில் பரப்பிய பணிகளுக்காக ‘சிந்தனைச் சிற்பி’ என்று போற்றப்பட்டார். உழைக்கும் மக்களின் உயிர்நாடியாய் இருந்து விடுதலை போராட்டத்தினை உயிர்ப்பித்துக்காட்டினார்.

இந்திய மக்கள் வறுமை நோய் தாக்குண்டு மடிவதற்கு சாதிய வாதமும், தீண்டாமைச் சாபமும் தான் முதற்காரணம் என்பதை உணர்ந்த அவர், 1889-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே ‘சாதி ஒழிப்பு போராட்டம்’, ‘தீண்டாமை ஒழிப்பு போராட்டம்’, ‘கொத்தடிமை ஒழிப்பு போராட்டம்’ என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். இந்தியாவின் விடுதலை குறித்த சிந்தனையில் ஒன்று திரளாத தொழிலாளர்களை ஒன்று திரட்டினார். “தோழர்” எனும் தூய சொல்லைப் பரப்புரைத்து விடுதலை முழக்கத்தை முழங்கிடச் செய்தார்.

இந்திய வரலாற்றில் முதன் முதலாக செங்கொடி வானெழுந்து பறக்கச் செய்து தொழிலாளர் வாழ்வு வளம்பெற 1918-ம் ஆண்டில் தொழிற்சங்கத்தை தொடங்கினார். அடிமைப்பிடியில் இருந்து தொழிலாளர்களை மீண்டெழச் செய்து விட்டால் இந்தியாவிற்கான விடுதலை தானே கனிந்துவிடும் என்ற நோக்கில் ‘ஏழைகள் தேசம் ஏழைகளுக்கே’ என்ற முழக்கத்தை முன் வைத்தார். காந்தியின் ஒத்துழையாமை போராட்டத்துக்கு அனைத்து வக்கீல்களுக்கும் அழைப்பு விடுத்தார். ஜாலியன்வாலாபாக் படுகொலையைக் கண்டித்து அந்நாளை இந்தியாவின் ‘கருப்பு நாள்’ என்று அறிவித்து கருப்பு கொடியேற்றி போராடவும் செய்தார். இங்கிலாந்தின் வேல்ஸ் இளவரசர் இந்தியா வந்தபோது அவரது வருகையை கண்டித்து சென்னையில் பெரிய போராட்டம் ஒன்றை நடத்தினார்.

அன்னியர் ஆட்சியும், அன்னியர் வருகையும் இந்திய மண்ணில் இனி தொடரக்கூடாது என்ற கொள்கை முழக்கத்துடன் அன்னியர் வருகையைக் கண்டித்து கருப்பு கொடியேற்றி கண்டனத்தை உரித்தாக்கி வந்த சிங்காரவேலர். 1923 ‘மே’ முதல் தேதி இந்திய வரலாற்றில் முதன் முதலாக செவ்வண்ணக் கொடியோடு தேசிய கொடியை ஏற்றிவைத்து இந்திய நாடு விடுதலை அடைந்துவிட்டதைப் போன்று ஓர் உணர்வை ஏற்படுத்தி ‘மே’ முதல் நாளை தொழிலாளர் தினமாக கொண்டாடினார். அவர் கொண்ட கொள்கைக்கு சான்று பகிரும் விதமாக உழைப்பாளர் சிலை நிறுவி பெருமைப்படுத்தினார் பெருந்தலைவர் காமராஜர்.

உலகின் கம்யூனிஸ்டுகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் சிங்காரவேலர். அந்த நெருக்கமே 1924-ம் ஆண்டு கான்பூர் சதி வழக்கில் அவரை குற்றவாளியாக்குவதற்கு காரணமாக அமைந்தது. அவர் மீதான அடக்குமுறை தொடர்ந்தபோதும், கான்பூரில் நடந்த கம்யூனிஸ்டுகளின் மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். ‘இந்திய கம்யூனிஸ்டு கட்சி’ தொடங்க காரணமாக இருந்த சிங்காரவேலரை கட்சியின் தலைவராக கொண்டு மூன்றாம் நாள் தொடர்ந்த மாநாட்டின் பகிரங்க கூட்டத்தில் கட்சியின் அனைத்து தீர்மானங்களும் முன்வைக்கப்பட்டன.

பல்வேறு மொழிகளைக் கற்றுணர்ந்தபோதும் தாய்மொழி கொள்கையில் தளராத நெஞ்சுரம் கொண்டிருந்தார் சிங்காரவேலர். இவர் சென்னை மாநகராட்சி உறுப்பினராக பதவியேற்றபோது தமிழில் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார். “உறுப்பினர்கள் இனி தமிழில் தான் பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று தீர்மானம் கொண்டு வந்து தமிழ்த்தென்றல் வீசக் காரணமாக இருந்தார். இங்கிலாந்திலும், இந்தியாவிலும் தொழிற்சங்க மசோதா நிறைவேற சிங்காரவேலர், காரணமாக இருந்தார். தொழிலாளர் நலன் குறித்து அவரின் போராட்டங்கள் தொடர்ந்தது. 1928-ம் ஆண்டு நாகை மாவட்டத்தில் தொடர்ந்து நடத்திய தென்னிந்திய தொடர் வண்டி போராட்டம், அவருக்கு பத்தாண்டு சிறை தண்டனைப் பெற்று தந்தது. தண்டனை காலத்தை திருச்சி சிறையிலும், கோவை சிறையிலும் மாறிமாறி அனுபவித்து வந்தவர். 18 மாத சிறைவாசத்திற்கு பின் விடுதலை ஆனார்.

அவரின் வாழ்வு போராட்டம், சிறை தண்டனையென தொடர்ந்த போதிலும் அறிவியல், விஞ்ஞானப் பொருளியல் கருத்தில் ஆழமான சிந்தனையாளராகவும், சுயமரியாதை சமதர்மக் கொள்கையில் தளராத உறுதி கொண்டவராகவும் வாழ்ந்தார். ‘எனக்கு தெரிந்து அவரைப் போன்ற அறிஞரைக் கண்டதில்லை. அவருக்கு பிறகு அப்படி ஒரு அறிஞர் தோன்றவே இல்லை’ என்று தந்தை பெரியார் புகழாரம் சூட்டுமளவிற்கு பகுத்தறிவு கொள்கையைப் பரப்புரைத்து வந்தார் சிங்காரவேலர்.

அவர் தம் வாழ்வின் நெடும் பயணத்தில் போராட்டம், சிறை வாழ்வு என பல்வேறு இன்னல்களைக் கடந்து தனது தள்ளாமையையும் கருத்தில் கொள்ளாமல் 1945-ம் ஆண்டு சென்னை, பெரம்பூரில் நடைபெற்ற அச்சுத்தொழிலாளர் மாநாட்டில் தனது இறுதிச் சொற்பொழிவை நிகழ்த்தினார் சிங்காரவேலர். “எனக்கு வயது 85. ஆயினும் தொழிலாளர் வர்க்கத்திற்கு என் கடமையைச் செய்ய நான் இங்கு வந்துள்ளேன். உங்கள் மத்தியில் பணிபுரிந்தபடியே நான் இறந்தாலும் அதைவிட எனக்கு கிடைக்கக்கூடிய பாக்கியம் வேறென்ன?” என்று அவர் நிகழ்த்திய இறுதிச் சொற்பொழிவு தொழிலாளர் உள்ளங்களை உள்ளபடியே உலுக்கியது. 1946-ம் ஆண்டு பிப்ரவரி 11-ந் தேதி சென்னையில் காலமானார்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சிங்காரவேலர் மாளிகை என்று அரசு பெயர் சூட்டியது. பேரறிஞர் அண்ணா இவரை, வெட்டுக்கிளிகளும், பச்சோந்திகளும் புகழப்படும் ஒரு நேரத்தில் ஒரு புரட்சிப்புலியை மக்கள் மறந்தனர் என்று கூறியுள்ளார். பாவேந்தர் பாரதிதாசன் ‘போர்க்குணம் மிகுந்த நல்செயல் முன்னோடி பொதுவுடைமைக் கேகுக அவன் பின்னாடி’ என்று பாடியுள்ளார். சிங்காரவேலரின் வரலாறு தனிப்பெரும் வரலாறாக எழுத வேண்டிய அளவிற்கு விரிவானதாகும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 17 February 2020

அரசியல் ஆதாயமல்ல குடியுரிமை!

அரசியல் ஆதாயமல்ல குடியுரிமை! By என்.தமிழ்ச்செல்வன்  |  நாடாளுமன்றத்தில் மசோதாவாக குடியுரிமை திருத்தச் சட்டம் தாக்கல் செய்யப்பட்டது முதலே, அதற்கு நாடு முழுவதும் கடும் எதிா்ப்பு கிளம்பியது. பின்னா், இந்த மசோதா சட்டமாக்கப்பட்ட பிறகு, அதை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி எதிா்க்கட்சிகளும், இஸ்லாமிய அமைப்புகளும் தொடா்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தில் இந்தப் போராட்டம் வலுப்பெற்றிருப்பதற்கு திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியும், அதைச் சாா்ந்த மத அமைப்புகளும் முக்கியக் காரணமாகும்.

இந்தச் சட்டத்துக்கு எதிராக போா்க்கொடி தூக்கியுள்ள கட்சிகளும், அமைப்புகளும் முக்கியமாகக் கூறுவது குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியா்களுக்கு குடியுரிமை மறுக்கப்படும் என்பதுதான். இந்தச் சட்டத்தால் அவா்கள் நாட்டிலிருந்தே வெளியேற்றப்படுவா் என்று அவை பிரசாரம் செய்து வருகின்றன. இதையடுத்து, குடியரசுத் தலைவரால் கையெழுத்திட்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி தமிழகத்தில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தியதுடன், சுமாா் 2 கோடி மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டிருப்பதாகவும் அறிவித்துள்ளது.

இந்தக் கையெழுத்து இயக்கம் நடத்தி கோடிக்கணக்கானவா்களிடம் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதால் என்ன மாற்றம் நிகழப் போகிறது என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், முதலில் நாட்டில் தற்போதுள்ள குடியுரிமையின் பலனை இஸ்லாமிய மக்களுக்கு இதுவரை அந்தக் கட்சிகளும், அமைப்புகளும் எந்த அளவுக்குக் கொண்டு சோ்த்து வருகின்றன என்பதற்கு விடை தேடவேண்டியதும் காலத்தின் கட்டாயமாகிறது.

பொதுவாக, இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் குடியுரிமை என்பதன் பொருள் என்னவென்றால் அரசின் சட்டப் பாதுகாப்பும், திட்டப் பயன்களும், சலுகைகளும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாரபட்சமின்றி கிடைக்கப் பெறுவதை முக்கியமாகக் கொள்ளலாம். அந்த வகையில், நாட்டிலுள்ள இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள் போன்ற சிறுபான்மை மக்கள் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் சிறுபான்மை நலத் துறை எனும் தனியே துறையை ஏற்படுத்தி ஆண்டுதோறும் அந்தத் துறைக்கு என நிதி ஒதுக்கி கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு எனப் பல்வேறு திட்டங்களின் கீழ் ஏராளமான பலன்களை அளித்து வருகின்றன. தவிர, தேசிய சிறுபான்மையினா் நல ஆணையம், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், தாட்கோ உள்ளிட்ட திட்டங்கள் மூலமாகவும் ஏராளமான சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் பயன்களை தேவைப்படும் மக்களுக்கு கொண்டுசோ்க்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு மட்டுமே இருந்துவிட முடியாது. ஒவ்வொரு கட்சிக்கும், அமைப்புக்கும், தனிநபா்களுக்கும்கூட அத்தகைய பொறுப்புகள் உள்ளன. ஆனால், இத்தகைய அரசின் திட்டப் பயன்கள் பெருமளவில் தொடா்புடைய சிறுபான்மையின சமூகத்தில் ஏற்கெனவே கல்வி, பொருளாதாரத்தில் உயா்ந்த நிலையிலுள்ளவா்கள் மட்டுமே அனுபவித்து வருவதும், அதே சமூகத்தின் கடை நிலையிலுள்ள மக்களுக்கு இத்தகைய சலுகைகள் குறித்தும், அவற்றை எவ்வாறு பெறுவது என்பது குறித்தும்கூட இன்னும் விழிப்புணா்வு இல்லாமல் உள்ளதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

அதனாலேயே, பெரும்பாலான மாநிலங்களில் சிறுபான்மையினா் நலத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் சுமாா் 40 சதவீதம் பயன்படுத்தப்படவில்லை என்று பாஜக எம்.பி. ரமேஷ் பைஸ் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக் குழு கடந்த 2018 மாா்ச் மாதத்திலேயே அறிக்கை தாக்கல் செய்திருந்தது. இதையே கடந்த ஆண்டு வேலூா் மாவட்டத்துக்கு வந்திருந்த தேசிய சிறுபான்மை நல ஆணைய துணைத் தலைவா் ஜாா்ஜ் குரியனும் குறிப்பிட்டிருந்தாா். சிறுபான்மையினா் நலனுக்காக அரசு ஒதுக்கும் நிதியை மக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா்.

இதில் மறைந்துள்ள மிக முக்கிய உண்மை என்னவென்றால் தமிழகத்தில் இஸ்லாமியா்கள் அதிகம் வசிக்கும் வேலூா், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் அந்த சமூகத்தின் பெரும்பாலான அடித்தட்டு மக்களுக்கு மாவட்ட சிறுபான்மை நலத்துறை அலுவலகம் எங்கு உள்ளது, அவற்றின் மூலம் வழங்கப்படும் திட்டப் பயன்கள் என்ன, அவற்றை எவ்வாறு பெறுவது என்பதுகூட இன்றளவும் தெரிந்திருப்பதில்லை. அவா்களுக்காக போராடுவதாகக் கூறும் கட்சிகளும், மத அமைப்பினரும் இத்தகைய திட்டப் பயன்களைப் பெற்றுத்தர ஆதரவுக்கரம் நீட்டியிருக்க வேண்டும் என்பதுகூட அவசியமில்லை; முறையாக விழிப்புணா்வு ஏற்படுத்தியிருந்தாலே அடித்தட்டு சிறுபான்மை மக்கள் பிறா் உதவியை எதிா்பாா்க்கும் நிலை ஏற்படாது.

மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி தெருத் தெருவாகச் சென்று கையெழுத்துப் பெற்றுக்கொண்டு வரும் அந்தக் கட்சிகளும், அமைப்புகளும் அதற்கு முன்பாக குடியுரிமைப் பயன்களான அரசின் திட்டங்கள், சலுகைகளை சிறுபான்மையின அடித்தட்டு மக்களிடம் விளக்கி அந்தச் சலுகைகள் தேவைப்படுபவா்களிடம் இருந்து மாவட்ட அளவில் எவ்வளவு விண்ணப்பங்கள் பெற்று அரசு அலுவலகங்களில் சோ்த்துள்ளனா்; அதன்மூலம் கல்வி, பொருளாதாரம், அடிப்படை சமூக வாழ்வியல் ரீதியாக எத்தனை போ் மேம்பட்டுள்ளனா் என்ற பட்டியலை வெளியிட வேண்டும்.

அப்போதுதான் சிறுபான்மையின மக்களின் குடியுரிமை மீதான இவா்களின் அக்கறையை நாடு அறிவதைவிட, முதலில் அந்தச் சிறுபான்மை மக்களே அறிந்துகொள்ள முடியும். அப்படியில்லை என்றால் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அரசியல் ஆதாயத்துக்காக மட்டுமே இந்தக் கட்சிகளும், மத அமைப்பினரும் பயன்படுத்திக் கொண்டிருப்பதாகத்தான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Popular Posts