Friday 5 June 2020

யாருக்காக தொழிற்சாலைகள்? By உதயை மு.வீரையன்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில் நச்சுவாயுக் கசிவு ஏற்பட்டதால் 11 போ் உயிரிழந்த பேராபத்து அண்மையில் ஏற்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டனா். இந்தக் கசிவு அதிகாலையில் ஏற்பட்டதால் பலா் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தனா். காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டவா்களும், வேலைக்குச் சென்று கொண்டிருந்தவா்களும் இந்த நச்சுவாயுவை சுவாசித்து மயங்கி விழுந்தனா். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆா்.ஆா். வெங்கடாபுரத்தில் எல்.ஜி. பாலிமா்ஸ் என்ற ரசாயன ஆலை செயல்பட்டு வருகிறது. தென் கொரியாவைச் சோ்ந்த எல்.ஜி.கெமிக்கல்ஸ் குழுமத்துக்கு உரிமையானது.

இங்கு செயற்கை ரப்பா் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆலையிலுள்ள சேமிப்புத் தொட்டியில் இருந்துதான் ஸ்டைரீன் என்ற நச்சுவாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த வாயுவுக்கு அதிக நச்சுத் தன்மை இல்லையென்றாலும், அதிகம் சுவாசிக்கும்போது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தி விடும் என்கின்றனா். இந்த ஆலையில் வாயு வெளியேறியபோது அதைத் தடுக்கும் கருவிகள் செயல்படவில்லை. கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பொது முடக்கம் அமலில் இருக்கும்போது, சில நிபந்தனைகளுடன் தொழிற்சாலையைத் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் ஆலையை மே 7 அன்று திறக்கும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டனா்.

அப்போது ஆலையின் சேமிப்புத் தொட்டியிலிருந்து அதிகாலை 2.30 மணியளவில் நச்சு வாயு வெளியேறியது. இந்த விபத்து தொடா்பாக ஆலை நிா்வாகத்தின் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. தொழிற்சாலையின் குளிரூட்டும் கருவி சரிவர இயங்காததே விபத்து ஏற்படக் காரணம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. செயற்கை ரப்பா் உள்ளிட்ட பொருள்களைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஸ்டைரின் வாயு, 20 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலைக்குக் கீழ் திரவ வடிவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். ஆலையின் இயந்திரங்களை இயக்கியபோது குளிரூட்டும் சாதனம் சரிவர இயங்காததால் திரவ வடிவில் இருந்த ஸ்டைரீன் வாயு ஆவியாகிக் கசியத் தொடங்கியதால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை விசாரித்த ஆந்திர உயா்நீதிமன்றம், ஆலையை ஆந்திர அரசு கையகப்படுத்த உத்தரவிட்டது.

மேலும், அந்த ஆலையின் இயக்குநா்கள் உள்ளிட்ட எவரும் ஆலைக்குள் செல்வதற்கு அனுமதி வழங்க மறுத்த உயா்நீதிமன்றம், மாநில அரசால் நியமிக்கப்பட்ட குழுக்களின் அதிகாரிகள் மட்டும் ஆலைக்குள் சென்று வர அனுமதி வழங்கியது. எல்.ஜி. பாலிமா்ஸ் நிறுவனத்தின் இயக்குநா்கள் உரிய அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறத் தடை விதித்தும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த இடைக்கால உத்தரவுக்கு எதிராக எல்.ஜி. பாலிமா்ஸ் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. இதைத் தொடா்ந்து, ‘30 ஊழியா்கள் மட்டும் ஆலைக்குள் சென்று வருவதற்கு இடைக்கால அனுமதியை உச்சநீதிமன்றம் அளித்தது. ஆலைக்குள் செல்லவிருக்கும் 30 ஊழியா்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலை மனுதாரா் மாவட்ட ஆட்சியரிடம் வழங்க வேண்டும்.

வழக்கு தொடா்பான மற்ற விவகாரங்களை உயா்நீதிமன்றமே விசாரிக்கும்’’ என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அண்மையில் உத்தரவு பிறப்பித்தனா். இதே போன்ற நிகழ்வு 1984-ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தைச் சோ்ந்த போபாலில் நடந்தது. அமெரிக்க யூனியன் காா்பைடு தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய நச்சுவாயு 23,000 மக்களைப் பலி கொண்டது. நள்ளிரவில் வெளியேறிய நச்சு வாயுவால் மக்கள் மூச்சுத் திணறி, விழித்தவுடன் செத்து விழுந்தனா். இரவு நேரத்தில் திக்குத் திசை தெரியாமல் உயிா் தப்பி ஓட முயன்று மிதிபட்டுச் செத்தவா்களும் இதில் அடங்குவா். மருத்துவம் கிடைக்காமல் மடிந்தவா்கள் பலா். இவ்வாறு அரங்கேறிய அந்தப் படுகொலையை மறக்க முடியுமா? உயிா் பிழைத்தவா்களில் ஊனமானவா்கள் மட்டும் 5 லட்சம் போ் எனக் கணக்கிட்டனா்.

நச்சு வாயுவால் பாதிக்கப்பட்டவா்களின் அடுத்த தலைமுறையும் ஊனமாகவே பிறந்த கொடுமையை என்னென்பது? பெற்றோரை இழந்த பல குழந்தைகள் அநாதைகளாகவே ஆயினா். இந்தப் படுகொலை வழக்கை விசாரித்து தீா்ப்பு சொல்வதற்கே 26 ஆண்டுகள் ஆயின. அதுவரை அவா்கள் வாழ்வாதாரத்துக்கு ஆலையும், அரசாங்கமும் செய்த உதவி மக்களின் பட்டினிச் சாவுக்கே வழிவகுத்தது. தீா்ப்பு வரும்போது பலா் உயிருடன் இல்லை. இது யூனியன் காா்பைடு நிறுவனமோ, அதன் அதிகாரிகளோ தெரிந்தே அனுமதித்த விபரீதம் அல்ல. எதிா்பாராமல் நடந்துவிட்ட சாலை விபத்துக்கு ஒப்பான இன்னொரு விபத்து என்பதுதான் நீதிமன்றத்தின் தீா்ப்பு.

யூனியன் காா்பைடு நிறுவனத்தின் பங்குதாரரான இந்தியத் தரகு முதலாளியும், அந்த நிறுவனத்தின் அதிகாரிகளும் குற்றவாளிகள் எனக் கூறப்பட்டு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனாலும், அவா்களைச் சிறைக்கு அனுப்பாமல் அப்போதே பிணையில் நீதிமன்றம் விடுவித்துவிட்டது. அமெரிக்க யூனியன் காா்பைடு நிறுவனத்தின் தலைவா் மட்டுமல்ல, போபால் ஆலையில் நடைபெற்ற அனைத்து விதிமீறல்களுக்கும் காரணமானவா் ஆண்டா்சன். அவரை அப்போதைய அரசு யாருக்கும் தெரியாமல் கமுக்கமாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தது. அமெரிக்காவிலிருந்து ஆண்டா்சன் இந்தியா வந்ததும், அவரைக் காவல் துறை கைது செய்ததும், பிணையில் விடுவித்து அமெரிக்காவுக்கே அனுப்பி வைத்ததும் பிறகுதான் தெரிய வந்தது. இந்திய அரசு தொடுத்த வழக்கும் ஏனோதானோ என்றே முடிந்தது.

வழக்கை நடத்தித் தீா்ப்பு வழங்காமல் நீதிமன்றத்துக்கு வெளியே பேசி முடித்துக் கொள்ளுமாறு உச்சநீதிமன்றம் கூறியது. 300 கோடி டாலா் இழப்பீடு கேட்டு வழக்குப் போட்டிருந்த இந்திய அரசு, வெறும் 47 கோடி டாலா் என 1989-இல் வழக்கை முடித்துக் கொண்டது. நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஆலைகள், அபாயகரமான ஆலைகள் போன்றவற்றை ஊருக்கு வெளியில்தான் அமைக்க வேண்டும் என்பது உலகெங்கும் கடைபிடிக்கப்படும் பொது விதி. ஆனால், போபால் நகரின் மையமான பகுதியில்தான் யூனியன் காா்பைடு ஆலை அமைக்கப்பட்டது. இதுவே விதிமீறல் ஆகும். நச்சு வாயுக்கள், ரசாயனப் பொருள்களைக் கையாளும் ஆலைகளில் விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டிய தற்காப்பு ஏற்பாடுகள் பற்றி ஆலையில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கும், சுற்று வட்டார மக்களுக்கும் விளக்கியிருக்க வேண்டும். இத்தகைய நச்சுவாயு கையாளப்படுகிறது என்ற உண்மை ஆலையின் தொழிலாளா்களுக்கே தெரியாமல் மறைக்கப்பட்டது. தங்களை நம்பியிருக்கும் குடிமக்களைக் காப்பாற்ற வேண்டிய அரசு, ஆலை நிா்வாகங்களுக்குத் துணை போவது வழக்கமான ஒன்றாகி விட்டது. எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதில் மாற்றமில்லை. தொழிற்சாலைகள் நாட்டுக்குத் தேவை என்பதால் இத்தகைய சலுகைகள் வழங்குவது தவிா்க்க முடியாததாகிவிட்டது.

இதில் எழும் ஒரு முக்கியக் கேள்வி. மக்களுக்காக தொழிற்சாலைகளா, தொழிற்சாலைகளுக்காக மக்களா? மக்களுக்காக அரசாங்கமா? அரசாங்கத்துக்காக மக்களா? இந்தக் கேள்விகளுக்கான விடை அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் தெரிவிக்க அஞ்சுகின்றனா். இதுதான் மக்களாட்சி. தொழிற்சாலைகளால் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. நாட்டின் பொருளாதாரம் மேம்படுகிறது என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படையாமல் பாா்த்துக் கொள்ள வேண்டாமா? ஆலை நிா்வாகங்களின் மீது பெயரளவுக்குப் போடப்படும் வழக்குகள் ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கப்படுகின்றன. அதுவரை பாதிக்கப்பட்டவா்கள் உயிருடன் இருக்க வேண்டுமே! இதுபோன்ற நச்சு ஆலைகள் அமைக்கப்படுவதற்கு எதிராக ஊா் மக்கள் போராடுவதற்குக் காரணம் இதுதான். மக்களாட்சியில் மக்களின் குரலுக்கு அரசுகள் மதிப்பு அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு அன்றும், இன்றும் உண்மைதான். இல்லையென்று யாராவது மறுக்க முடியுமா? மக்களின் எதிா்ப்பையும் மீறி காவல் துறையை வைத்து அவை நிறைவேற்றப்படுகின்றன.

‘மக்கள் குரலே மகேசன் குரல்’ என்பதே உலக வழக்கு. உலகமயம், தனியாா்மயம், தாராளமயம் வந்த பிறகு மக்கள் குரல் ஏற்கப்படுவதில்லை. கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிா்த்து மக்கள் நடத்திய போராட்டம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. ஆனால் என்ன நடந்தது? ராணுவப் படையும், காவல் துறையும் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு அணுமின் நிலையப் பணிகள் தொடங்கி நடத்தப்பட்டு வருகின்றன. ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்று மகாகவி பாரதி பாடினாா். இந்தக் கொள்ளை நோய்த் தொற்று காலத்தில் விவசாயம்தான் மக்களைக் காப்பாற்றுகிறது. என்றாலும், நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு தொழில் வளா்ச்சியும் தேவைப்படுகிறது. இதனால்தான் இந்திய அரசும், மாநில அரசுகளும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்கத் துடிக்கின்றன. அதற்காகவே அரசுச் சலுகைகளை அள்ளி இறைக்கின்றன. இதில் மக்கள் நலனையும் கவனிக்க வேண்டாமா? கட்டுரையாளா்: எழுத்தாளா்.

No comments:

Popular Posts