Tuesday 2 October 2018

வெற்றி வாகை சூடிய ஏழை பங்காளர்

வெற்றி வாகை சூடிய ஏழை பங்காளர் காமராஜர் க.சிவகாமிநாதன், முன்னாள் ஆலோசகர், தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் இ ன்று (அக்டோபர் 2-ந்தேதி) காமராஜர் நினைவு தினம். இந்தியா விடுதலை பெற்ற பிறகு முதல் பொதுத் தேர்தல் 1952-ம் ஆண்டு நடைபெற்றது. உலகமே அதனை உன்னிப்பாக கவனித்தது. இந்தியாவின் விடுதலைக்காகப் போராடியவர் கள் காங்கிரஸ். எனவே இந்தியாவை ஆளுவதற்கான உரிமையைப் பெற்றது காங்கிரஸ் என்ற முழக்கத்தை முன் வைத்து காங்கிரஸ் தேர்தல் களத்தில் இறங்கியது. வீடு கட்டியவர் கொத்தனார்தான். ஆனால் அதைக் கட்டி முடித்ததால் அதற்கு சொந்தம் கொண்டாடலாமா? என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.இந்தியா சுதந்திரம் அடைந்தும் காங்கிரஸ் கட்சியைக் கலைத்துவிட காந்தியாரே சொல்லி விட்டாரே! என்றும் எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்தார்கள்.பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு அடி வருடியாக இருந்தவர்கள் எதிர்க்கட்சியினர். இவர்கள் இப்போது எதுவும் பேசுவதற்கு அருகதை அற்றவர்கள் என்று காங்கிரஸ் எதிர்க்கட்சிகளைக் கடுமையாகச் சாடியது. தேர்தல் சூடு பிடித்தது! ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்றத் தேர்தலில் கர்மவீரர் காமராஜர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அன்றைய ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி ஒரு பெரிய பகுதி. ஒரு பக்கம் மேற்கு தொடர்ச்சிமலை. இன்னொரு பக்கம் வங்காள விரிகுடாக்கடல்.எப்படியும் காமராஜரைத் தோற்கடிக்க வேண்டு மென்ற துடிப்புடன் எதிர் அணியினர் நின்றார்கள். காமராஜரை எதிர்க்க வலுவான வேட்பாளரை தேடினார்கள். கோவை விஞ்ஞானி ஜி.டி. நாயுடுவை உசுப்பி விட்டார்கள். இதற்கான காரணங்கள் பல. அதில் ஒன்றிரண்டு, கோவை ஆலை அதிபர்களின் செல்வாக்கு ஜி.டி. நாயுடுவுக்கு அமோகமாய் இருந்தது. அடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் நாயுடு சமுதாயத்தின் வாக்கு கணிசமாக இருந்தது. திராவிட நாடு ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுபவர்களுக்கே தி.மு.க.வின் ஆதரவு! என அறிஞர் அண்ணா சொன்னார். நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட தொழிலதிபர்ஆறுமுகசாமி நாடார் அதற்கு உடன்பட்டார்.அப்போது நான் ஒன்பதாவது வகுப்பு பள்ளி மாணவர் எனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது ஏதோ ஆர்வக்கோளாறு காரணமாக ஜி.டி. நாயுடு அணியில் ஒரு தேர்தல் ஏஜெண்டாக பணியாற்ற வாய்ப்பு பெற்றேன்.கோவையிலிருந்து லாரி லாரியாக “பிர்லா மாளிகையின் மர்மங்கள்!” என்ற நூல் விருதுநகர் வந்தடைந்தது. அவைகளை தினசரி எடுத்துக் கொண்டு மக்களிடம் வினியோகித்து வர வேண்டும். அது காங்கிரசுக்கு உற்ற நண்பராயிருந்த பிர்லா அந்தக்காலத்தில் செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட ஊழல்கள் பற்றிய கட்டுரைகள் அடங்கிய நூல் அது. தேர்தல் நெருங்கியது. கர்மவீரர் காமராஜர் ஒவ்வொரு கிராமமாக இரவு பகல் பாராது சென்று கிட்டத்தட்ட எல்லா வாக்காளர்களையும் சந்தித்து காங்கிரசுக்கு ஆதரவு திரட்டினார். தொண்டர்களை அவர் நன்கு தெரிந்து வைத்திருப்பார். அவரவர் பெயர் சொல்லியே அழைப்பார். எனவே, காங்கிரஸ் தொண்டர்கள் மிக உற்சாகம் அடைந்து பசி, தாகம் பாராமல் காங்கிரஸ் வெற்றிக்கு அரும்பாடு பட்டார்கள்.இப்போது போல் பிரியாணி, சரக்கு என்ற பேச்சுக்கே அன்று இடமில்லை. காங்கிரசில் கோஷ்டிப் பூசல், வேட்டி கிழிப்பு போன்ற கீழ்த்தரமான நடவடிக்கை எதுவும் இல்லை. ஒற்றுமையாகப் பணியாற்றினார்கள். தேர்தலன்று அதிகாலையில் காமராஜர் தொகுதியிலுள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் சென்று காங்கிரஸ் ஏஜெண்டுகள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்திச் சென்றார். பம்பரமாகச் சுழன்று பணி ஆற்றினார். அவருடைய அன்றைய உழைப்பையும் உற்சாகத்தையும் சொல்லி மாளாது! தேர்தல் முடிந்த பிறகு தொகுதியிலிருந்த எல்லா வாக்குச்சாவடி ஏஜெண்டுகளும் ஜி.டி. நாயுடுவின் தலைமை அலுவலகத்தில் கூடினார்கள். அவர்கள் ஒவ்வொருவரிடம் தேர்தல் நிலவரம் குறித்து விசாரித்தார்கள். எல்லோரும் ஜி.டி. நாயுடு எப்படியும் ஜெயித்து விடுவார் என்று நம்பிக்கையுடன் கூறினார்கள்.ஓட்டு எண்ணிக்கை நாளில் நான் நிம்மதியாகத் தூங்கி விட்டேன். நடு இரவில் வெடி சத்தங்கள் கேட்டு விழித்து வீதிக்கு வந்தேன். என்னவென்று விசாரிக்கையில் கர்ம வீரர் காமராஜர் 1 லட்சத்து 70 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என்றார்கள். ஜி.டி. நாயுடுக்கு 70 ஆயிரம் வாக்குகளும் தி.மு.க. ஆதரவுபெற்ற ஆறுமுகசாமி நாடாருக்கு 40 ஆயிரம் வாக்குகளும் பதிவாகின எனச் சொன்னார்கள்.வெற்றி வாகை சூடிய ஏழை பங்காளர் காமராஜர் முதன் முறையாக எம்.பி. ஆனார். பெருந்தலைவர் காமராஜரின் பிற்கால பிரமாண்டமான வளர்ச்சிக்கு 1952- ல் நடந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்றத் தேர்தல் முதற் புள்ளி வைத்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts