Saturday 29 September 2018

காது கொடுத்துக் கேட்போம்

காது கொடுத்துக் கேட்போம் முனைவர் லதா ராஜேந்திரன், இயக்குனர், டாக்டர் எம்.ஜி.ஆர். சிறப்பு கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நாளை (செப்டம்பர் 30-ந் தேதி) உலக காதுகேளாதோர் தினம். ஒலியை உணர்வதற்கு செவி மிக அவசியம். செவியில் குறைபாடு ஏற்படும் போதே காது கேளாமை உருவாகிறது. இப்பிரச்சினையால் தவிப் போரின் எண்ணிக்கை உலக அளவில் 36 கோடியை கடந்துவிட்டது.சமூகத்தில் இவர்களுக்கு உரிய வசதிகள் செய்து தர வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று அன்று உலக காது கேளாதோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இத்தினத்தை உலக காது கேளாதோர் அமைப்பு 1958-ல் உருவாக்கியது.இயல்பாக காது கேட்கும் திறன் 10 டெசிபல் முதல் 15 டெசிபல்’ வரை ஆகும். இதில் குறைபாடு ஏற்படும் போது காது கேட்க இயலாமை உருவாகிறது என உலக சுகாதார அமைப்பு வரையறுக்கிறது.உறவு முறைத் திருமணம் தாய் வழித் தொற்றுகளான ரூபெல்லா மேக நோய் அல்லது கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிற தொற்று நோய்கள், பயன்படுத்தப்படும் நச்சு மருந்துகள், கடும் மஞ்சள் காமாலை போன்றவை பிறந்த குழந்தையின் காது நரம்பை பாதிக்கின்றன. இதனால் பிறப்பின் போதே குழந்தை காது கேளாத் தன்மையை பெறுகிறது. மூளைக் காய்ச்சல், தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி போன்ற தொற்று நோய்களாலும் காதில் நீர்க் கோர்த்தல், நச்சு மருந்துகளை பயன்படுத்துதல், தலை அல்லது காதுகளில் காயம் ஏற்படுதல், அதிக ஒலி உள்ள இடங்களில் பணி செய்தல், உணர்ச்சி உயிரணுக்கள் சிதைதல், மெழுகு அல்லது அயல் பொருட்கள் காது பாதையை அடைத்தல் போன்ற காரணங்களால் எந்த வயதிலும் காது கேளாத் தன்மை ஏற்படலாம்.தற்போது அறிவியல் வளர்ச்சியால் குழந்தையின் கேட்கும் திறனை முதல் நாளிலேயே கண்டறிந்து விடலாம். இதற்காக இரண்டு விதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.செவித்திறனை இழந்து அவதிப்படுகிறவர்களுக்காக காதில் பொருத்திக் கொள்ளக் கூடிய சிறிய உபகரணங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இந்த கருவிகளைக் காட்டிலும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தில் அதிநவீன சாதனம் ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். முப்பரிமாணம் என்கிற ‘3டி பிரின்டட்’முறையில் அது வடிவமைக்கப்பட்டு உள்ளது. கேட்கும் திறன் மனித வாழ்க்கைக்கு எத்தனை முக்கியமானது என்பதை நாம் அறிவோம். ஆனால் நம்முடைய அஜாக்கிரதையான போக்கு எப்போது வேண்டுமானாலும் செவித்திறனை பாதிக்கும். எனவே, செவித்திறன் விஷயத்தில் நாம் எப்போதும் அக்கறையோடும், விழிப்போடும் இருக்க வேண்டியது அவசியம்.இதற்கு கேட்கும் திறன் இழப்பை தடுக்க வழிமுறைகளை தெரிந்துகொள்ளலாம். ‘ஆர்.எச். நெகட்டிவ்’ குருதி முறை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி கருவுற்றிருக்கும் போது தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். கூரிய பொருட்களை காதில் இடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இயர்போனில் பாடல்கள் கேட்கும் போது இசை சத்தமாக இருந்தாலோ நீண்ட நேரம் கேட்டாலோ, காது கேட்கும் திறனை இழக்கும் ஆபத்து ஏற்படுகிறது. எனவே இதை தவிர்க்க வேண்டும். சத்தமான இடங்களை தவிர்க்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனை இன்றி எண்ணெய் அல்லது திரவங்களை காதில் இடக்கூடாது. கேட்கும் திறனில் குறைபாடு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இவற்றை கடைபிடித்தால் நாம் கேட்கும் திறன் இழப்பை தடுக்க முடியும். காது கேட்கும் திறனை இழந்தால், அது நமக்கு பெரும் இழப்பாக அமையும். பிறரோடு உரையாட இயலாமல் போவதே காது கேளாமையின் முக்கிய பாதிப்பாகும். இதனால் குழந்தைகளால் பேச்சு மொழியை வளர்க்க முடியாமல் போகிறது. காது கேளாமையும், இடைச்செவியழற்சி போன்ற காது நோய்களும் குழந்தைகளின் கல்வி பயிலும் முறையை அதிகமாக பாதிக்கிறது.எனினும் காது கேளாமை குறைபாடு உள்ளவர்களுக்கு தகவல் தொடர்புக்கான வாய்ப்பை கொடுத்தால் அவர்களும் பிறரைப் போல செயலாற்ற முடியும். தகவல் தொடர்பு தடைபடும் போது அது அன்றாட வாழ்க்கையை பாதிக்கிறது.தனிமை, பிரிவு, அதிருப்தி போன்ற உணர்வுகளை உண்டாக்குகிறது. காது கேளாத பெரியவர்களில் பலர் வேலை வாய்ப்பின்றி துன்பப்படுகிறார்கள். வேலையில் இருப்போரும் பொதுவாக உழைப்பவரோடு கீழ்மட்ட வேலைகளிலேயே உள்ளனர்.காது கேளாத குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களைப் போக்க வேண்டிய முக்கிய பொறுப்பு பெற்றோரிடம் உள்ளது. குழந்தைகளின் செவித்திறனை பிறந்தது முதல் 3 வயதுக்குள் கண்டறிவது மிகவும் அவசியம். மொழி வளர்ச்சிக்கும், பேச்சு வளர்ச்சிக்கும் உகந்த கால கட்டம் இதுவே ஆகும்.இக்கால கட்டத்தில் கண்டறிந்து தகுந்த பயிற்சி அளித்தால் சாதாரண குழந்தைகள் போல் அனைத்து அறிவு சார் திறனும் பெற்று குழந்தைகள் ஒளிர்விடுவார்கள். வீட்டில் காது கேளாத குழந்தை இருந்தால் தனித்து விடாது தினமும் பேசவேண்டும். இது அவர்களின் பேச்சுத்திறனை வளர்க்க நன்கு உதவும்.சைகை மொழியில் அவர்களுடன் பேசுவதை கூடுமான வரை தவிர்க்க வேண்டும். செவித்துணைக் கருவிகள் நன்முறையில் உள்ளதா? என்பதை அவ்வப்போது கண்டறிய வேண்டும். பெற்றோருக்கு அடுத்த பங்கு ஆசிரியர்களிடம் உள்ளது. ‘வாய் வழிக் கல்வி’ முறையே காது கேளாத குழந்தைகளின் எதிர்காலத்துக்கு நல்ல ஏற்றத்தைக் கொடுக்கும். கல்வி கற்றுக் கொடுக்கும்போது கண்டிப்போடு இருப்பதை விட அன்போடு இருப்பது மிக முக்கியம். பிற மாணவர்களுடன் பேசிப் பழகும் வாய்ப்பை இவர்களுக்கு கண்டிப்பாக தர வேண்டும்.அவர்கள் சொல்வதை காது கொடுத்துக்கேட்போம். காது கேளாதோரை நம்மோடு இணைப்போம்! நாம் அவர்களோடு இணைவோம்!

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts