Friday 31 August 2018

நினைவில் வாழும் டயானா

நினைவில் வாழும் டயானா முனைவர் ரா.ராஜேஸ்வரி சுப்பையா இன்று (ஆகஸ்டு 31-ந்தேதி) வேல்ஸ் இளவரசி டயானாவின் நினைவு நாள். வரலாற்றில் எழுதி முடிக்கப்படாத முற்றற்ற கதையின் ஒப்பற்ற நாயகி டயானா பிரான்செஸ் ஸ்பென்சர். இவர், 1960-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ந்தேதி, நோர்ப்போர்க் எனும் இடத்தில் பிறந்தார். இவரது ஸ்பென்சர்ஸ் குடும்பம் பல தலைமுறைகளாக அரசக் குடும்பத்துடன் நெருக்கமாக நட்பு கொண்டிருந்தனர். இவருடன் பிறந்தவர்கள் சாரா, ஜேன் மற்றும் சார்லஸ் ஆகியோர். இவரது எட்டு வயதில் பெற்றோர் பெற்ற திருமணத்தடையால் தாய் மற்றும் தந்தையிடம் மாற்றி மாற்றி அலைக்கழிக்கப்பட்டார். இசையிலும் நடனத்திலும் அளவு கடந்த ஆர்வம் கொண்டிருந்தார் டயானா. அரசக் குடும்பத்துடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்த ஸ்பென்சர்ஸ் குடும்பத்தின் வழித்தோன்றலான டயானா, பிறப்பு முதல் அன்பிற்காக உருகியதை அவர் வாழ்க்கைப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கங்களும் பறைசாற்றுகின்றன. அழகு, புன்னகை, புதுமை என்று தன்னை எப்போதும் புறத்தில் புதுப்பித்துக் கொண்டே இருந்தவர், அகத்தில் அழுது கொண்டிருந்தது எத்தனை பேருக்குத் தெரியும்? எலிசபெத் மகாராணியின் செயலரையே இவரது அக்கா திருமணம் செய்திருந்தார். தன் அக்காவை பார்க்கச்செல்லும் இவர், அவ்வப்போது அரசவிழாக்களிலும் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றார். இளவரசர் சார்லசை இவர் பார்த்தது இப்படிப்பட்ட ஒரு நிகழ்வில் தான். தனது திருமணத்தை வெகுநாட்களாகத் தள்ளிப்போட்டுக் கொண்டிருந்த இளவரசர், டயானாவை பார்த்ததும் மனம் மாறினார். இளமைக் காலங்களில் மெய்யான அன்பிற்காக ஏங்கிய டயானா, சார்லசின் காதலை ஏற்று, இங்கிலாந்து அரசக் குடும்பத்தில் நடந்த முதல் காதல் திருமணத்திற்குக் காரணி ஆனார். 1981-ம் ஆண்டு ஜூலை 29-ம் நாள் டயானாவுக்கும் வேல்ஸ் இளவரசர் சார்லசுக்கும் புனித பால் தேவாலயத்தில் திருமணம் நடந்தேறியது. அரசக் குடும்பத்தின் அங்கமானார் இந்த அழகுச்சுரங்கம். இளவரசர் சார்லசுடன் டயானா திருமண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து, டயானா பொது வாழ்வில் ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார். டயானாவின் புகழும் உயரத் தொடங்கியது. இவரது புன்னகையும் தினசரிகளுக்குத் தீனியானது. இவரது அசைவுகள் ஒவ்வொன்றும் ஊடகங்களில் தலைப்புச்செய்தியானது. இவர் புகைப்படங்கள் நாளிதழ்களை நாள்தோறும் நிரப்பின. பொதுவாக அரசக் குடும்பத்தினர் வெளியுலகத்தினருடன் தொடர்பின்றி இருப்பர். ஏதாவது முதன்மை விழாக்களில் மட்டுமே அவர்களது முகங்கள் தெரியும். ஆனால் டயானா, குடிசை முதல் கோபுரம் வரை சுற்றி வந்தார். தனக்கு பிறந்த இரண்டு குழந்தைகளையும் குட்டியரசர்கள் எனக் கூண்டுக்குள் ஒடுக்காமல் (அரசக் குடும்பத்தினர் வீட்டிலேயே கற்பதே மரபு) மரபை மாற்றினார். பள்ளிக்குச்சென்று படித்தலே பக்குவம் தருமெனக் கருதினார். இந்நிலையில், தன் கணவரின் மற்றொரு பெண்ணுடனான தொடர்பையறிந்து மனமுடைந்து போனார். தற்கொலைக்கும் முயன்றார். தனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை சகிக்க முடியாமல், சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். எய்ட்ஸ் நோயாளியிடம் கை குலுக்குதல், தொழுநோயாளியிடம் நலம் விசாரித்தல் எனப் பிணியுடையோரிடமும் பிணக்கின்றிப் பழகினார். அந்த சமயத்தில் நேர்காணல் ஒன்றில், ‘நான் ராணியாக விரும்புகிறேன். ஆனால் சிம்மாசனத்தில் அமரும் ராணி அல்ல. மக்கள் மனங்களில் என்றென்றும் ராணியாக இருக்கவே விரும்புகிறேன்’ என்று டயானா கூறியது வையம் முழுவதும் வைரலாகப் பரவியது. கருத்து வேறுபாடுகள் மிகுதியான சூழலில், பல வினாக்களுக்கு விவாகரத்து ஒன்றே, ஒரே விடையாகப்பட்டது; தம்பதியர் விடைபெற்றனர். இந்நிலையில் டோடி என்பவருடன் டயானாவுக்கு ஏற்பட்ட காதல் சர்ச்சைகளை சம்பாதித்தது. டயானாவின் இறுதிக்காலம் இயல்பாய் வராமல், இடையில் வர இக்காதலும் காரணியானது. பாரீசில் 1997-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ம் நாள், மாலை உணவுக்குப் பின் காரில் டயானா, டோடி, ஒரு பாதுகாப்பாளர் மற்றும் ஓட்டுநர் போய்க் கொண்டிருந்தார்கள். விடாமல் அவர் வாகனத்தைத் துரத்திய மற்றொரு வாகனத்தில் இருந்தவர்கள் புகைப்படக்காரர்கள் அவர்களிடமிருந்து தப்பியே ஆகவேண்டும் என்ற வேகத்தில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் சொர்க்கத்திற்கே பறந்தது டயானாவின் கார். டோடியும் பாதுகாவலரும் சம்பவ இடத்திலேயே மரணித்துவிட, மருத்துவமனையில் மன்றாடி மறைந்தார், டயானா. மதம், இனம், வயது, பாலினம், தேசம் என அனைத்து எல்லைகளையும் தாண்டிய உலக உள்ளங்களை சோகம் கவ்விக்கொண்டது. ‘நான் பிறந்தபோது வெறுக்கப்பட்டேன், திருமணத்தின்போது வெறுக்கப்பட்டேன். அரசக் குடும்பத்தில் நுழைந்தபோதும் வெறுக்கப்பட்டேன். ஆனால் அனைவராலும் விரும்பப்படவேண்டும் என்பதே என் விருப்பமாக இருக்கிறது’ என்பதை அடிக்கடி சொன்ன இளவரசி டயானாவின் இறப்பு இரும்பு உள்ளங்களையும் இளகச்செய்தது. அரசப் பாரம்பரியச்சுவர்களைத் தகர்த்து, ஜொலிக்கும் மாளிகையில் வெளிச்சத்தைத் தேடியவர், கருப்புக் காலனால் களவாடப்பட்டு விட்டார். காலங்கள் கடந்தாலும் காவியத் தலைவியாய் நம் நினைவலைகளில் என்றும் நீந்துவார் டயானா.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts