Friday 22 June 2018

சுமையாகக் கருதும் தமிழைச்சுவையாகப்படிக்கலாமே...!

சுமையாகக் கருதும் தமிழைச்சுவையாகப்படிக்கலாமே...! பா.பாலசுப்பிரமணியன், நிறுவனத்தலைவர், தமிழ்நாடு முதுகலைப் பட்டதாரி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் இன்றைய தமிழக அரசு கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு, சி.பி.எஸ்.சி.க்கு இணையான புதிய பாடத்திட்டம், மாநிலம் முழுவதும் நீட் பயிற்சி, 1200 மதிப்பெண்ணை 600 ஆக குறைத்தது என்று அறிவிப்புகள் மட்டுமல்ல அமுலுக்கு வந்து வெற்றியுடன் ஓராண்டு முடிந்துவிட்டது. இப்போது புதிய அறிவிப்பு. மொழிப் பாடங்கள் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் முதல் தாள், இரண்டாம் தாள் என்று தனித்தனியாக இனி கிடையாது. ஒரே தாள்தான் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இனி 11-ம் வகுப்பு 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 8 பாடத்தேர்வுகள் கிடையாது. 6 பாடத் தேர்வுகள்தான். இதனால் மாணவர்களின் மனச்சுமையை மட்டுமல்ல உடல் சோர்வையும் அரசு தாயுள்ளத்துடன் சீர்செய்திருக்கிறது. இதனால் மாணவர்களுக்கு மட்டுமல்ல மொழிப்பாடங்கள் நடத்தும் ஆசிரியர்களுக்கும் வேலை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பில் மொத்தம் 300 மாணவர்கள் படித்தால் மொழிப்பாட ஆசிரியர் 600 விடைத்தாள்களை திருத்த வேண்டும். ஆண்டிற்கு பள்ளியில் 7 பருவத் தேர்வுகள். 3 அரசுத் தேர்வுகள் மொத்தம் 10 தேர்வுகள். ஆண்டிற்கு 6ஆயிரம்விடைத்தாள்களை ஆசிரியர்கள் திருத்த வேண்டும். இன்று இரண்டுத் தாள்களையும் சேர்த்து ஒரே தாளாக்கியதால் ஆண்டிற்கு 3 ஆயிரம் விடைத்தாள்கள் திருத்தினால் போதும். இதனால் ஆசிரியர்களின் பணி பாதியாக குறைகிறது. பாட ஆசிரியர்களுக்கு வாரத்திற்கு ஒரு பாடத்திற்கு 7 பாட வேளைகள். ஆனால் மொழிப்பாட ஆசிரியர்களுக்கு வாரத்திற்கு 5 பாட வேளைகள்தான். அரசு இரண்டு தாள்களை ஒரே தாளாக மாற்றிய இந்த நல்ல நேரத்தில் மொழிப்பாட ஆசிரியர்களுக்கும் வாரத்திற்கு 7 பாடப்பிரிவுகளாக ஆக்க வேண்டும். அந்த அதிகப்படுத்தப்படும் பாடவேளைகளை நூலக நேரமாக ஆக்க வேண்டும்.இந்த நேரத்தில் மொழியியல் ஆசிரியர்கள் ,தாய் மொழி தமிழை பாடப்புத்தகங்கள் மூலம் மட்டுமில்லாமல் நாளிதழ்கள் மூலமாகவும் மாணவர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.அப்படி தமிழை எழுதவும் படிக்கவும் நேரடி பயிற்சி கொடுத்தால் மாணவர்கள் தமிழைச் சுமையாக கருதாமல் பிழையின்றி சுவையாக எழுத கற்றுக்கொள்வார்கள். இதனால் அவர்கள் படைப்பிலக்கிய திறனும் வளரும். போட்டி தேர்வுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.ஏனென்றால், அன்று கிராமத்திலிருந்து படித்துவந்த எங்களுக்கு தமிழில் எழுத்துப்பிழை இல்லாமல் இலக்கணப்பிழை இல்லாமல் எத்தனைப் பக்கங்கள் வேண்டுமானாலும் எதையும் எழுதக்கூடிய திறமையை, அறிவை, ஆற்றலை கொடுத்தது ஆசிரியர்களும், வகுப்பறை பெஞ்சுகளும் மட்டுமல்ல நாளிதழ்களும்தான் முக்கிய காரணங்களாகும். இன்று பள்ளிப்படிப்பு முடித்த, பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு ஒரு பக்கம்கூட தாய்மொழி தமிழில் பிழையில்லாமல் எழுதத் தெரியவில்லை. இந்த குறைபாட்டிற்கு காரணம் அவர்களுக்கு நாளிதழ்கள் வாசிக்கும் பழக்கம் இல்லாமல் போய்விட்டது. நாளிதழ்களை வகுப்பறை பெஞ்சுகளுக்கு கொண்டுவர வேண்டும். மாணவர்கள் தாய்மொழி தமிழை எளிதாகப் படிக்க புரிந்துகொள்ள இலக்கணப் பிழையில்லாமல் எழுத, வகுப்பறையில் தினசரி நாளிதழை ஆசிரியர்களும் மாணவர்களும் படித்து விவாதிக்க வேண்டும். தினசரி நாளிதழ்களை வாசிக்கும்பொழுது மாணவர்களுடைய மொழித் திறமை வளர்கிறது. தற்பொழுது மொழிப்பாடங்களுக்கு அகமதிப்பெண்ணாக 10 மதிப்பெண்கள் அரசால் வழங்கப்படுகிறது. அதில் 5 மதிப்பெண்களை தினசரி வகுப்பறைகளில் ஆசிரியர்களும், மாணவர்களும் தினசரி செய்தித்தாள்களில் உள்ள செய்திகளை வாசிப்பதற்கும், புரிந்து கொள்வதற்கும், விவாதிப்பதற்கும் வழங்க வேண்டும்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts