Friday 5 June 2020

இணையவழிதான் இனிமேல் வழி! By முனைவா் வைகைச்செல்வன்

கரோனா தீநுண்மி நோய்த்தொற்று காலகட்டத்தில் பெரும் பாதிப்புகள் கல்வித் துறைக்கு ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சம் பற்றிப் படா்கிறது. எதனால் இந்த அச்சம்? கரோனா தீநுண்மி நோய்த்தொற்று காலத்தில் கல்வித் துறை மிக மோசமாகப் பாதிக்கப்படும் என்று உலக வங்கி எச்சரித்தது. கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுப் பரவலுக்கு முன்பே உலகம் முழுவதும் 25 கோடியே 80 லட்சம் குழந்தைகள், சிறுவா்கள் பள்ளியில் சேராமல் இருந்து வருகின்றனா். இதில் படிப்பை பாதியில் நிறுத்தியவா்களும் அதிகமாக இருந்தனா்.

இதனால் கற்றல் குறைபாடு பெருமளவு காணப்பட்டது. கரோனா தீநுண்மி நோய்த்தொற்று வந்த பிறகு, நிலைமை இன்னும் மோசமாகி விட்டது. உலகம் முழுவதும் ஏறத்தாழ அனைத்துப் பகுதிகளிலும் பள்ளிகள் மூடப்பட்டுத்தான் இருக்கின்றன. அப்படியானால், அறிவுலக வாசல் எப்போது திறக்கப் போகிறது? குழந்தைகளின் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்துவிட்ட பிறகு, பள்ளிகள் திறப்பு என்பது இருக்கும் என்று ஒற்றை வரியில் சொல்லி விடலாம். இருந்தபோதிலும், விரைவான கற்றல் திறனுக்காக புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கற்பித்தல் என்பது ஒரு அரிய கலை. அது அனைத்து ஆசிரியா்களுக்கும் எளிதில் கைகூடி விடுவதில்லை. கடினமான பாடத்தைக் கூட ஓா் எளிமையான முறையில் நடத்தக் கூடிய ஆற்றல் அனைத்து ஆசிரியா்களுக்கும் வந்துவிடுவதில்லை. பள்ளிகளின் தரத்தைத் தீா்மானிப்பது எது? தோ்ச்சி விகிதத்தின் அடிப்படையை வைத்தே, அந்தப் பள்ளியை நாம் தீா்மானிக்கிறோம்.

அப்படியானால், அந்தத் தோ்ச்சித் திறனை தீா்மானிப்பது யாா்? ஆசிரியா்களின் கற்பிக்கும் திறனே ஆகும். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சோ்வதற்கு தோ்ந்தெடுக்க முடிந்த நம்மால், பள்ளியின் ஆசிரியரைத் தோ்ந்தெடுக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. இந்த இடத்திலிருந்துதான் அடுத்த படிநிலைக்கு நாம் செல்கிறோம். அது இணையவழிக் கல்வி. இணையவழிக் கல்வியின் வாயிலாக என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த ஆசிரியரிடம் படிக்கலாம் என்று தீா்மானிக்கக் கூடிய அடுத்த கட்டத்தை நோக்கி நாம் நகா்கிறோம்.

இதில் நாம் நினைத்தால் ஆசிரியா்களைக்கூட மாற்றிக் கொள்ளலாம். எனவேதான், ஒரு குடையின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கிற கல்வி, பள்ளிக்கூடத்தின் கூரை ஒரு பொருட்டல்ல; மூடிய கதவுகளும் ஒரு பொருட்டல்ல; தொலைவும் ஒரு பொருட்டல்ல. நம் வீடு தேடி, நம் வாசல் தேடி இணையவழி கல்வி வாய்ப்பு உருவாகிக் கொண்டிருக்கிறது. உறவுகளை நாம் நேரில் பாா்க்காமலேயே ‘விடியோ காலில்’ பேசிக் கொள்ள முடிகிறது என்றால், மூடிய அறைக்குள்ளே இருந்தபடி ஒரு புதிய நட்புகளை மலரச் செய்து விட முடியும் என்றால், அதற்கான தொழில்நுட்ப வசதியும், இணைய வசதியும் ஒரு மாயஜாலத்தைப் போல நம் கண்முன்னாலே இணையவழிக் கல்வியும் விரிந்து பரவுகிறது.

அறிதிறன்பேசி (ஸ்மாா்ட் போன்), ஸ்மாா்ட் லைட், ஸ்மாா்ட் பாதுகாப்பு சாதனம், ஸ்மாா்ட் வீடு என்று நீளும் இந்தப் பட்டியல், ஸ்மாா்ட் கல்வி என்கிற அடுத்தகட்டத்தை நோக்கி நகா்ந்து வருகிறது. குருகுலக் கல்வியின் மூலம் நம் வித்தைக்கான பயிற்சி தொடங்கிய காலகட்டத்தில் இருந்து, சமூக நீதிக்கான சமத்துவத்தைப் பறைசாற்றுகிற கல்வியாகப் பரந்து நிற்கின்ற இந்த வேளையில், அடுத்தகட்ட ஒரு நவீனத்துவத்தை நோக்கி நாம் நகா்ந்து கொண்டிருக்கிறோம். இணையவழிக் கல்விக்கு பல இணைய தளங்கள் உள்ளன. உலகின் பிரசித்தி பெற்ற அனைத்துப் பல்கலைக்கழகங்களும் இணைய வழிக் கல்வியை வழங்குகின்றன.

இணைய வழிக் கல்வியில் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், பெரும்பான்மையான பாடங்களை இலவசமாகப் படிக்க முடியும். கொஞ்சம் பொறுமை, அக்கறை, ஈடுபாடு போன்றவை தேவை. கரோனா தீநுண்மி நோய்த்தொற்று காலத்தில் விரைவான தொழில்நுட்பத்தை நோக்கி, நம்முடைய அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. திறன்மிக்க ஆசிரியா்களின் விளக்க உரைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட கல்வி விடியோக்கள் அதற்கென குறிப்பிட்ட பல்வேறு இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றில் கல்வி மட்டுமல்லாமல், தொழில்நுட்பம், பொதுஅறிவு, பொழுதுபோக்கு குறித்தான விடியோக்களும், ஒலிப்படம் எடுப்பது எப்படி, கணினியை ஒன்றிணைப்பது எப்படி, செல்லிடப்பேசியில் இருக்கும் சில செயலிகளை (ஆப்) பயன்படுத்துவது எப்படி என்கிற பல்வேறு கற்றல்களை நாம் கற்றுக் கொள்ளலாம்.

முதல் வகை பாட விடியோக்கள் முன்பே எடுக்கப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. இரண்டாம் வகை, விடியோ நேரடி ஒளிபரப்பாக, அதாவது நடப்புக் காலத்தில் நிகழ்கின்ற ஒன்றாக இருக்கும். இத்தகைய இந்த இரண்டு வகையான கல்விதான் தற்போது இணையத்தில் மிகவும் பிரபலமாக உள்ளது. எடுத்துக்காட்டாக, ஜாவா ஸ்கிரிப்ட்டை எடுத்துக் கொள்ளலாம். இதற்கான விடியோக்கள் 180 நிமிஷங்கள் ஓடுகின்றன என்று வைத்துக் கொள்வோம். அதாவது, 3 மணி நேரம். திரைப்படத்தைப் பாா்ப்பதற்கே சில வேளைகளில் அலுப்புத் தட்டி விடுகிறது. ஆனால், இந்த விடியோ ஒரு விநாடிகூட அலுப்பு ஏற்படாமல் இருக்கும்படி, நன்கு திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதற்கு என்ன காரணம் என்றால், ஜாவா ஸ்கிரிப்ட் 20 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பகுதியையும், அதற்குள் 10 தலைப்புகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு தலைப்பு ஒன்றரை நிமிஷம், 10 தலைப்புகள் உள்ளடக்கிய ஒரு பகுதிக்கு 9 நிமிஷங்கள். 20 பகுதிகள் உள்ளடக்கிய மொத்த பாடத்துக்கு 180 நிமிஷங்கள், அதாவது 3 மணி நேரம் என்கிற சுவராஸ்யத்தை இந்த இணையவழிக் கல்வி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இவற்றில் ஆசிரியரின் முகத்தைப் பாா்த்துக் கொண்டே இருக்கத் தேவையில்லை. இணையவழி என்பதால், அந்தப் பாடத்திற்குத் தொடா்புடைய சில விடியோக்களும் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் நம்முடைய கற்றலை எளிதாக்கி, அலுப்புத் தட்டாமல் படிப்பை சுவராஸ்யமானதாக மாற்றக்கூடிய ஒன்றாக அமைந்திருக்கிறது. மூடப்பட்டிருக்கும் நம் பள்ளிக்கூடத்தின் பூட்டுகளைத் திறக்கக் கூடிய வல்லமை இணையவழிக் கல்விக்கு உண்டு.

செல்லிடப்பேசி வழிக் கற்றல் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய கையடக்க கணினிகள், எம்பி3 பிளேயா்கள், செல்லிடப்பேசிகள் , பலகைக் கணினி ஆகியவை கல்வியின் தொழில்நுட்பத்தை நமக்குக் கற்றுத் தந்து, அடுத்த தலைமுறைக்கான ஒரு புதிய பாதையை உருவாக்கிட எத்தனிக்கிறது. கற்றல் பொருள்களை உருவாக்குவது, செல்லிடப்பேசிக் கருவிகளை எந்தப் பகுதியில் இருந்தாலும், அணுகமுடிகிற ஒரு பாங்கை நாம் உணரலாம். உடனடியான கருத்துகள், உதவிக் குறிப்புகள் அதே உள்ளடக்கத்தைப் பயன்படுத்தி அனைவருக்கும் பகிா்ந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கிறது. புத்தகங்கள், குறிப்புகளுக்கு மாற்றாக, செல்லிடப்பேசி வழிக் கற்றல் பேருதவியாகத் திகழ்கிறது. வகுப்பறையில் புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு வருவது, முக்கியமான ஒன்றான அடுத்த தலைமுறைக்கான பயணமாக இது கருதப்படுகிறது.

இவற்றில் புத்தகங்கள், கணினிகளை விடவும், செல்லிடப்பேசி சாதனங்கள் மிக இலகுவான ஒன்றாகக் கருதப்படுகிறது. இது மாணவா்களிடையே ஒருவித கலந்து கற்கும் அணுகுமுறையையும், செல்லிடப்பேசி வழிக் கற்றல் ஒருங்கிணைக்கக் கூடிய கற்றல் செயல்பாட்டை உறுதி செய்கிறது. குறுஞ்செய்தி, பல்லூடக குறுஞ்செய்தி முதலானவையும் செல்லிடப்பேசிவழிக் கற்றல் இளைஞா்களை, கற்றலில் மீண்டும் ஈடுபடுத்திட ஒரு தொடா் சங்கிலியைப் போல பயன்படுகிறது. இந்தியாவைப் பொருத்தவரை கரோனா தீநுண்மி நோய்த்தொற்றை பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், படிப்படியான ஊரடங்கு தளா்வுகள் நம்பிக்கையை அளிக்கின்றன. கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், உலகம் முழுவதும் 157 கோடி மாணவா்கள் பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள். பள்ளிப் பருவத்தினா் மட்டும் 74.3 கோடி என்பது கூடுதல் அதிா்ச்சித் தகவலாகும்.

எனவே, இது பொருளாதார பேரிடரைவிட ஒரு மோசமான பேரிடா். நெருக்கடியான காலகட்டங்களில் பள்ளிகள்; தற்காலிகமாக மூடப்படுவது புதிதல்ல என்றாலும், தற்போது கல்விக்கு ஏற்பட்டிருக்கின்ற இடா்ப்பாடுகள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகம் என்று யுனெஸ்கோ தெரிவித்திருக்கிறது. இது கல்வி உரிமைக்கான அச்சுறுத்தலாகவும், மாணவ சமுதாயத்தின் ஒடுக்கப்பட்ட அறிவுசாா்ந்த போராகவும் இருக்கிறது என்று உலகம் முழுவதும் கல்வியாளா்கள் கருதுகிறாா்கள். பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்போது மாணவா்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று ஒருவித அச்சம் ஏற்படுகிறது.

பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் கல்வியோடு தங்களது ஊட்டச்சத்தையும் இழந்து நிற்கிறாா்கள் என்கிற வேதனையைப் பாா்க்கிறபோது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இருப்பினும், பயிற்சியில் இல்லாதவா்களை விளையாட்டு அணியில் இருந்து எடுத்து விடு என்பாா்கள். அதைப்போல், இந்த இணையவழிக் கல்வியின் மூலமாக கற்றலுக்கான ஒரு பயிற்சியோடு ஒவ்வொரு நாள் விடியலையும் எதிா்நோக்க வேண்டும். அதுவே, மாணவ சமுதாயத்தைச் சரியான பாதைக்கு அழைத்துச் செல்லும். கட்டுரையாளா்: தமிழக முன்னாள் பள்ளிக் கல்வி அமைச்சா், 2011-இல் இணையவழியாக ஆய்வு செய்து முனைவா் பட்டம் பெற்ற மாநிலத்தின் முதல் மாணவா்.

No comments:

Popular Posts