Friday 27 April 2018

தொல்காப்பியம் இந்திய மொழிகளின் வழிகாட்டி

தொல்காப்பியம் இந்திய மொழிகளின் வழிகாட்டி பேராசிரியர் இரா. மதிவாணன் மக்களின் வாழ்க்கை முறைகளையும் உரிமைகளையும் கட்டுப்படுத்திக் காப்பதை அரசமைப்புச் சட்டம் என்கிறோம். மொழியின் ஒழுங்கு முறையைக் கட்டுப்படுத்திக் காப்பதை இலக்கணம் என்கிறோம். தமிழுக்கு மிக உயர்ந்த இலக்கணத்தை வகுத்துத் தந்தவர் தொல்காப்பியர். தொல்காப்பியர் காலத்தை வரையறுப்பதற்காகச் செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம் ஒரு குழு அமைத்தது. அக்குழுவினர் தொல்காப்பியர் பிறந்த ஆண்டு கி.மு. 711 என்றும், அவருடைய பிறந்த நாள் மேழ வெள்ளுவா (சித்திரை பவுர்ணமி நாள்) என்றும் வரையறுத்தனர். அதன்படி இந்த ஆண்டு ஏப்ரல் 29-ம் நாள் தொல்காப்பியர் பிறந்த நாளாகக் கருதப்படுகிறது. தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருந்தொண்டாற்றிய சிறந்த தலைவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவது இயல்பான நிகழ்ச்சி. சங்க காலத்தில் மன்னன் பிறந்த நாளைப் பெருமங்கல நாள் என்றும் பொதுவாகப் பிறந்த நாளை வெள்ளணி நாள் என்றும் குறிப்பிட்டனர். தொல்காப்பியர் காலம் என்னும் நூலில் தொல்காப்பியர் பிறந்த ஆண்டு கி.மு. 865 என வரையறுக்கப்பட்டுள்ளது . தொல்காப்பியம் தமிழுக்கு மட்டுமா? தொல்காப்பியருக்கு முன்பே ஐந்திரனார் தமிழுக்கு ஐந்திரம் என்னும் இலக்கண நூல் எழுதினார். பிராகிருத மொழியின் காதந்திர இலக்கணமும் பாலி மொழியின் கச்சாயண இலக்கணமும் திபெத்திய மொழியின் சன்சுப இலக்கணமும் தாம் ஐந்திர இலக்கணத்தைப் பின்பற்றியதாகக் கூறுகின்றன. ஆதலால் ஐந்திர இலக்கணம் இந்திய மொழிகள் அனைத்துக்கும் ஆரியமொழிக் கலப்புக்கு முன்பு பொது இலக்கண நூலாகத் திகழ்ந்தது. என்னும் உண்மை உறுதிப்படுகிறது. அதன் வழிவந்த தொல்காப்பிய இலக்கணக்கூறுகள் திராவிட மொழிகளில் மட்டுமல்லாமல் பிற இந்திய மொழிகளிலும் ஊடாடியுள்ளன. ‘போல’ என்று பொருள்படும் சிவணுதல் என்னும் சொல்லை தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். இச்சொல் குச்சர (குஜராத்தி) மொழியில் ஜேவுண் என்று வழங்கிவருகிறது. செல்லிய, உண்ணிய என்பவை செல்லுங்கள் உண்ணுங்கள் என்னும் பொருளில் சங்க காலத்தில் வழங்கிய செந்தமிழ்ச் சொல்லாட்சிகள், கன்னட மொழியில் உண்ணிய என்றும் இந்தியில் செலிய என்றும் தொல்காப்பியர் வகுத்த இலக்கணப்படியே இன்றும் வழங்கி வருகின்றன. தொல்காப்பியர் காலத்தில் ய, வ, இடையின எழுத்துகளை இடையில் சேர்க்காமல் பேசப்பட்ட நிகழ்வுகளையும் தொல்காப்பியர் சுட்டிக்காட்டுகிறார். அம்மாவைக் குறித்த ‘ஆயி’ என்பதை ‘ஆஇ’ என்றும் ‘நாயி’ என்பதை ‘நாஇ’ என்றும் எழுதும் வழக்கம் இருந்தது. ஆரியர் வருகைக்கு முன் இந்தியா முழுவதும் தமிழ் ஒன்றே பேச்சு மொழியாகவும் எழுத்து மொழியாகவும் இருந்ததால் இந்திய மொழிகள் அனைத்திலும் தமிழிலக்கணக் கூறுகள் ஆணி வேராக ஆழப்பதிந்துவிட்டன. அதனால்தான் வட இந்திய மொழிகள் அனைத்திலும் அம்மாவை ‘ஆஇ’ என்றே எழுதுகின்றனர். வட இந்திய மொழிகள் பிராகிருதத்திலிருந்து தோன்றியவை. பிராகிருதத்துக்கு அக்காலத்தில் வட தமிழ் என்னும் பெயர் இருந்தது. இப்பொழுதுள்ள ‘ஐ’ பல்லவர் காலத்தில் வடிவமைக்கப்பட்ட கிரந்த எழுத்தின் வடிவமாகும். தொல்காப்பியர் காலத்தில் ‘ஐ’ என்பதை ‘அஇ’ என இரண்டு உயிர்க்குறில் எழுத்துகளாக எழுதினர். இதனை தொல்காப்பியர் ‘அகர இகரம் ஐகாரமாகும்’ என எழுத்ததிகாரத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இதனை விளங்கிக்கொள்ளாத நச்சினார்க்கினியர் என்னும் உரையாசிரியர் பல்லவர் காலத்து ஐகார எழுத்தின் போலி என்று தவறாக உரையெழுதி விட்டார். இன்றும் இந்தி மொழியில் அகர இகரம் சேர்த்து ஐகாரம் எழுதப்படுகிறது. சென்னை என்பதை இந்தியில் ‘சென்னஇ’ என்று எழுதுகிறார்கள்.உலக மொழிகளில் உயிரெழுத்துகளை தனியாகவும், மெய்யெழுத்துகளை தனியாகவும் பிரித்து இலக்கணம் சொல்வதில்லை.உயிர் எழுத்துகளில் குறில் எழுத்து,நெடில் எழுத்து என்று பிரித்து பேசுவதும் உலக மொழிகளின் இலக்கணத்தில் இல்லை.தொல்காப்பியர் சொன்ன இந்த வாய்ப்பாடு திராவிட மொழிகளில் மட்டும் அல்லாமல் வட இந்திய மொழிகளிலும் காணப்படுகிறது. சொற்களை பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்று 4 வகையாக பிரித்து இலக்கணம் சொல்வது தொல்காப்பியத்திலும், வட இந்திய மொழிகளிலும் தான் காணலாம். எனவே தொல்காப்பியம் இந்திய மொழிகளின் இலக்கண நூல்களுக்கு முதல் நூலாகவும், வழிகாட்டி நூலாகவும் அமைந்துள்ளது. தொல்காப்பியம் தேசிய ஒருமைப்பாட்டுக்கு வித்தாகும்; விளைச்சலுமாகும். அந்நாள் வரின் அது தமிழர்கள் மட்டுமல்லாமல் இந்திய மக்கள் அனைவரும் கொண்டாடும் நாளாக மலரும் என உறுதியாக நம்பலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday 19 April 2018

மனம் இருந்தால் வழி உண்டு

முனைவர் செ.சைலேந்திரபாபு, ஐ.பி.எஸ்., காவல்துறை கூடுதல் இயக்குனர் பிற மாநிலத்தவர் சென் னை, கோவை, திருப்பூர் போன்ற பெருநகரங்களில் மட்டுமல்ல இப்போதெல்லாம் கிராமங்களில் விவசாய கூலி வேலை கூட செய்வதைப் பார்க்கிறோம். இது சரியா? இந்திய அரசியல் அமைப்பு, ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் பல உரிமைகளையும், சுதந்திரங்களையும் வழங்கியுள்ளது. எந்த மாநிலத்திலும் வேலை செய்யலாம், எங்கு வேண்டுமானாலும் குடியேறலாம் என்று அரசியல் சாசனம் கூறுகிறது. ஆக, பிற மாநிலத்தவர் இங்கு வந்து வேலை செய்வது அவர்களுக்கு இருக்கும் சுதந்திரம் எனலாம். வாழ்ந்தாக வேண்டும் என்ற நிலை இருப்பதாலும், உழைக்க மனம் இருக்கிறது என்பதாலும், ஆயிரம் மைல் தூரம் கடந்து இங்கே வந்து வேலை செய்கிறார்கள். அவர் களைக் குறை சொல்ல முடியாது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கேரளா, பெங்களூரு, மும்பை, டெல்லிக்கு வேலைக்குப் போனார் கள். அதுபோலத்தானே இதுவும். தமிழ்நாட்டில் 85 லட்சம் பேர் வேலை கேட்டு விண்ணப்பித்து இருக்கிறார்கள். படிப்பறிவு இல்லாத இன்னும் பல லட்சம் பேர் இங்கே சும்மாதான் இருக்கிறார்கள். வேலையில்லா திண்டாட்டம் அப்படி இருக்க, இன்று தமிழ்நாட்டு விவசாயிகளை கேளுங்கள். விவசாய வேலை பார்க்க ஆள் கிடைப்பதில்லை என்கிறார்கள். தொழிலதிபர்களை கேளுங்கள், வேலை தெரிந்த ஆள் கிடைப்பதில்லை என்கிறார்கள். தமிழ்நாட்டவர்கள் வேலை செய்ய தயங்குவதற்கு மூன்று காரணங்கள் கூறப்படுகிறது. ஒன்று கூலி வேலை என்பது கவுரவமில்லாத வேலை என்று கற்பிக்கப்பட்டுவிட்டது. இரண்டாவது, சம்பளம் மிகக் குறைவாக இருக்கிறது என்பது. மூன்றாவது காரணம், நம் மாநிலத்தவர்கள் பலர் படித்துவிட்டதால், உடலுழைப்பு வேலை செய்யத் தயங்குகிறார்கள் என்பது. படித்துவிட்டதால் உடலுழைப்பு வேலை செய்ய தயங்குகிறார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அப்படி படித்துவிட்டவர்களுக்கு அறிவுப்பூர்வமான ஒரு வேலை செய்ய தெரிந்திருக்க வேண்டும் அல்லவா! அதாவது அவர்களுக்கு ஒரு மொழியைக் கற்பிக்கத் தெரியுமா? இருசக்கர வாகனத்தை பழுது பார்க்கத் தெரியுமா? அல்லது கணினி மென்பொருள் எழுதத்தான் தெரியுமா, என்றால் இல்லை. இது போன்ற பணிகள் கூட இன்று பிற மாநிலத்தவர் கள் இங்கு வந்து செய்கிறார்கள். புதிதாக வந்துள்ள நீட் என்ற மருத்துவக் கல்லூரி நுழைவுத்தேர்வுக்கு நம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க பிற மாநிலத்தார் இங்கு வந்துள்ளனர். படித்து பட்டம் பெற்ற தமிழ்நாட்டு பட்டதாரிகள் எங்கே போனார்கள்? என்ற கேள்வி எழுகிறது. தங்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைகளை பிற மாநிலத்தார் இன்னும் சிறப்பாகச் செய்வதை உள்ளூர் சோம்பேறிகள் விரும்புவதில்லை. வெளிமாநிலத்தவர் ஒருவர் ஒரு குற்ற செயலில் ஈடுபட்டால் அம்மாநிலத்தவர் அனைவரும் குற்றச் செயல் செய்பவர்கள் என்ற ஒரு பிரசாரத்தை சில விஷமிகள் பரப்பி விடுகிறார்கள். சில உள்ளூர் குற்றவாளிகள் அந்த அப்பாவிகள் மீது வன்முறை தாக்குதல் நடத்திவிடுகிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் கும்பல் கும்பலாக வெளியேறிய சம்பவங்கள் பல உண்டு. இப்படிப்பட்ட தாக்குதலுக்கு ஆளாகியும் வெளி மாநிலத்தவர் தொடர்ந்து வேலை செய்ய முடிகிறது என்றால் அவர்களது உழைப்பு உள்ளூரில் தேவைப்படுகிறது என்பது தெளிவாகிறது. விவசாயம் செய்பவர்களுக்கும், செங்கல் சூளை நடத்துபவர்களுக்கும், தொழிற்சாலை முதலாளிகளுக்கும், கட்டிடம் கட்டும் ஒப்பந்ததாரர்களுக்கும் இவர்களது உழைப்பு கண்டிப்பாக வேண்டும் என்ற நிலை உள்ளது. தமிழ்நாட்டில் உருவாகும் வேலைகளை செய்ய மறுக்கும் தமிழ்நாட்டு மக்கள் தங்கள் கல்வித்தகுதிக்கேற்ப தொழில்நுட்ப செயல் செய்து அதிக பொருள் ஈட்டினால் அவர்கள் வாழ்க்கையும் உயர வாய்ப்பு நிச்சயம் உண்டு. மற்ற மாநிலங்களுக்கு சென்று தொழில்நுட்பம் வாய்ந்த வேலையில் சேரலாம். பிற நாடுகளுக்கு கூடப் போய் வேலையில் சேரலாம். இதில் தயக்கம் காட்டக்கூடாது. அப்படியில்லாமல், கிடைத்த வேலை வாய்ப்புகளை நழுவ விட்டுவிட்டு, அந்த வேலையை வெளி மாநிலத்தார் செய்கிறார்களே என்று வருத்தப்படுவதில் நியாயமில்லை. இந்த உலகம் உழைப்பவர்களுக்கு மட்டுமே சொந்தம். சுறுசுறுப்பான மக்கள், வியர்வை சிந்தி உழைத்து சம்பாதித்த சிறு துளி பணம் பெருந்தொகையாக ஒருநாள் மாறும். அந்த தொகையை வைத்து அவர்கள் நிலம் வாங்குவதையும், தொழிற்சாலை கட்டுவதையும் யாராலும் தடுக்க முடியாது. தமிழ்நாட்டில் விவசாயம், தொழில், சேவை என்று வேலை செய்ய தமிழ்நாட்டவர் முன்வரவில்லை என்பதால் வேறு மாநிலத்தவர்கள் அந்த வேலைகளை செய்கிறார்கள். நமது பொருளாதாரத்தைக் காப்பாற்றுகிறார்கள்; அவர்களது வாழ்க்கையையும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டவர்கள் பலர் வேலை செய்ய விருப்பமில்லாத சோம்பேறிகளாகவும், இலவசமாக கிடைப்பதை வைத்து வாழ்க்கை நடத்தும் சராசரி மனிதர்களாகவும், தொலைக்காட்சிகளில் வேடிக்கைகள் கண்டு மகிழும் பொழுதுபோக்கு ஜீவிகளாகவும், பண்டிகைகளை மட்டும் சரியாக அனுசரிக்க அக்கறை காட்டும் அப்பாவி மனிதர்களாகவும் தொடர்ந்து இருப்பார்களேயானால், இருக்கும் நிலத்தையும் இழந்து அதே நிலத்தில் கூலிக்கு வேலை பார்க்கும் நிலைமை வரக்கூடும். ஏழைகள் இன்னும் பரம ஏழைகளாகவும், பணக்காரர்கள் இன்னும் பெரிய பணக்காரர்களாகவும் மாறிக் கொண்டிருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் உழைக்கத் தயங்கும் மக்கள் 300 ஆண்டுகளுக்கு முன் எப்படி கொத்தடிமைகளாக வாழ்ந்தார்களோ அதுபோல பிற மாநிலத்தவர்களின் பெரிய பண்ணைகளில் கொத்தடிமைகளாக அவர்கள் ஊரிலே வாழ நேரிடும். ஆக, இயற்கை வளங்கள் பெரிய அளவில் இல்லை என்றாலும் “வேலை செய்யத் தயார்” என்ற மனநிலை ஒன்றை மட்டும் மூலதனமாக வைத்து இன்று பொருளாதார வல்லரசாக திகழும் ஜப்பானிடமிருந்து நாம் பாடம் கற்க வேண்டும். இன்று வேலையில்லாத மக்களுக்குத் தேவை “வேலை செய்ய வேண்டும் என்ற மனம்” ஒன்றுதான்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday 17 April 2018

மன்னன் மனதில் நினைத்ததை நடத்திக் காட்டிய சித்தர்

மன்னன் மனதில் நினைத்ததை நடத்திக் காட்டிய சித்தர் ஒரு சமயம் விஜயநகர மன்னராகிய கிருஷ்ணதேவராயர், தனது துணைவியாருடன் காஞ்சீபுரம் வரதராஜ பெருமாளை தரிசிக்க வந்தார். அப்போது அங்கிருந்த நீலகண்ட தீட்சிதரின் முப்பாட்டன் ஆச்சான், பாடல் ஒன்றை இயற்றி தேவராயரிடம் சமர்ப்பணம் செய்தார். அந்த பாடலின் பொருள் இதுதான். அதாவது தனது முன் லட்சுமியை போல் வந்து நிற்கும் அழகிய பெண்மணியை பார்த்து, வரதராஜ பெருமாள் தனது மார்பை தொட்டுப் பார்த்துக்கொண்டாராம். காரணம்.. சாட்சாத் லட்சுமி தேவி தான் தனது மார்பை விட்டு அகன்று தன் எதிரில் நிற்கிறாளோ என அவருக்கு சந்தேகம் ஏற்பட்டதாம். லட்சுமிக்கு உவமையாக தனது மனைவியை ஆச்சான் தீட்சிதர் குறிப்பிட்டதால் ஆனந்தம் அடைந்தார், கிருஷ்ண தேவராயர். அவருக்கு பட்டமளித்து கொண்டாடினார். இந்த சம்பவம் நீலகண்ட தீட்சிதரின் முன்னோர்கள் அந்த காலத்திலேயே கிருஷ்ணதேவராயருடன் நெருக்கம் கொண்டவர்களாக இருந்தனர் என்பதை நினைவுபடுத்தும் ஒன்று. ஆனால் அந்த உறவைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று நீலகண்ட தீட்சிதர் நினைக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்தில் அவர் மதுரைக்கு வந்து சேர்ந்தார். மதுரையில் நாள்தோறும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பொற்றாமரைக் குளக் கரையில் அமர்ந்து, தினமும் தேவி மகாத்மியத்தினை உரைப்பார். இதனால் பூரித்து போன அன்னை மீனாட்சி, தன்னுடைய பரி பூரண அருளை நீலகண்டருக்கு வழங்கினாள். அதே சமயம் அவரது உரையைக் கேட்ட பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. நீலகண்ட தீட்சிதரின் புகழை அறிந்த திருமலை நாயக்கர், நீலகண்ட தீட்சிதரைப் பற்றி விசாரித்தார். அப்போது தன்னுடைய முன்னோர்களுடன் நீலகண்ட தீட்சிதரின் முன்னோர்களுக்கு பழக்கம் இருப்பதை அறிந்தார். இதையடுத்து நீலகண்ட தீட்சிதரை அழைத்த மன்னன், அவருக்கு அரசவை வித்வானாக பணி வழங்கினார். அப்பணியை மிக செவ்வேன செய்தார் நீலகண்டர். தொடர்ந்து இவரது அறிவையும் ஆற்றலையும் உணர்ந்து மந்திரியாக நியமித்தார் அரசன். நீலகண்டர் மந்திரியானவுடனேயே பல பணிகளை செவ்வனே செய்தார். மன்னருக்கு நல்ல பெயர்களை வாங்கி தரும் அருட் பெரும் செயல்களை மக்களிடையே கொண்டு சேர்த்தார். அனைவரும் நீலகண்டரை போற்றி புகழ்ந்தனர். இந்த காலகட்டத்தில் மதுரையில் பல ஆலயங்களில் திருப்பணி நடக்க ஆரம்பித்தது. மதுரையில் புதுமண்டபம் கட்டப்பட்டது. மண்டப நிர்மானத்தின் போது ஏகபாத மூர்த்தியின் சிலையைத் தாங்கிய தூணை அமைக்க ஏற்பாடு நடந்தது. இதற்காக சைவ, வைணவர்களிடையே பூசல் எழுந்தது. அப்போது சைவர்கள் சார்பாக நீலகண்ட தீட்சிதர் வாதாடினார். ஏகபாத மூர்த்தியைத் தாங்கிய தூணை மண்டபத்தில் இடம் பெறச் செய்தார். இப்படிப்பட்ட நீலகண்ட தீட்சிதரின் வாழ்வில் பெரும் துன்பம் ஒன்று வந்து சேர்ந்தது. புதுமண்டபத்தின் தூண்களில் திருமலைநாயக்கர், தன் சிலையையும், தன்னுடைய மனைவியின் சிலையையும் செதுக்க ஏற்பாடு செய்தார். அதற்காக கைதேர்ந்த சிற்பியைத் தேர்வு செய்தார். அந்தச் சிற்பி பட்டத்து ராணியின் சிலையை செதுக்கினார். அப்போது சிலையில் தொடை பகுதியில் சிறு பிசிறு ஏற்பட்டது. இதனால் கவலை அடைந்த சிற்பி, வேறொரு கல்லைத் தேர்ந் தெடுத்து கவனத்தோடு பணியைச் செய்தார். அந்த கல்லை வடித்தபோது, அதே இடத்தில் அதே போன்ற பிசிறு ஏற்பட்டது. சிற்பி துடித்து போய்விட்டார். தன்னை அன்னை மீனாட்சி தான் காப்பாற்ற வேண்டும் என கோவிலுக்கு ஓடினார். செல்லும் வழியில் நீலகண்ட தீட்சிதரைச் சந்தித்தார். அவர் கால்களில் விழுந்து வணங்கி நடந்ததை உரைத்தார். உடனே நீலகண்ட தீட்சிதர், ‘ நீ கலைமகளின் பரிபூரண அருளை பெற்றவன். வடித்த சிலை அப்படியே இருக்கட்டும்' என்று கூறிவிட்டார். சிலை திறப்பு விழா கோலாகலமாக நடந்தது. சிற்பியின் கை வண்ணத்தைக் கண்டு பலரும் வியந்து போற்றினர். ஆனால் மன்னன், சிலையின் தொடை பகுதியில் இருந்த பின்னத்தை கண்டு பிடித்து விட்டார். அவருக்கு ஒரே அதிர்ச்சி.. அந்த அதிர்ச்சிக்கு காரணமும் இருந்தது. உண்மையிலேயே பட்டத்து ராணியின் தொடை பகுதியில் அப்படியொரு காயம் இருந்தது. கணவனான தனக்கு மட்டுமே தெரிந்த ஒரு விஷயம், சிற்பிக்கு எப்படி தெரிந்தது என்பதே மன்னனின் அதிர்ச்சிக்குக் காரணம். சிற்பியால் இதை எப்படிச் செய்ய முடிந்தது. இதை வெளியேயும் சொல்ல முடியாது. எனவே தனியாக கூப்பிட்டு சிற்பியை விசாரித்தார். அந்த சிற்பியும் சிலையை தான் செதுக்கியது முதல், நீலகண்ட தீட்சிதர் சொன்னதுவரையான அனைத்து விஷயங்களையும் மன்னனிடம் தெரிவித்தார். நீலகண்ட தீட்சிதருக்கு, ராணியின் தொடை பகுதியில் தழும்பு இருப்பது தெரிந்த காரணத்தால் தான் அவர் ‘சரி இருக்கட்டும்’ என்று கூறியிருக்கிறார் என்று தவறுதலாக நினைத்தான் மன்னன். மந்திரியின் கண்களை பறித்து தண்டனை வழங்க வேண்டும் என்று நினைத்த மன்னன், மறுநாள் காலையில் காவலர்களை அனுப்பி நீலகண்ட தீட்சிதரை அழைத்து வரச் சொன்னான். அவரை அழைத்துவரச் சென்ற காவலர்கள், நீலகண்டர் நித்திய பூஜையில் ஈடுபட்டிருந்ததை கண்டு அறை வாசலிலேயே காத்திருந்தனர். பூஜை முடிவில் கற்பூர ஆரத்தியின் போது நீலகண்டர் அதிக கற்பூரத்தை வைத்து பெரிய தீ ஜூவாலையை உருவாக்கினார். அந்த ஒளிபொருந்தி ஜூவாலையை, தன் கண்களுக்கு நேராகக் காட்டி, தன்னுடைய கண் களைத் தானே குருடாக்கிக்கொண்டார். காவலர்கள் அதிர்ந்து போனார்கள், ‘மந்திரியாரே என்ன இது கொடுமை. ஏன் இப்படி செய்தீர்கள்?’ என்று கேட்டனர். நீலகண்டர் சிரித்துக்கொண்டே ‘நீங்கள் என்ன நினைத்தீர்களோ.. அதை மந்திரியே செய்து கொண்டார் என மன்னரிடம் போய் சொல்லுங்கள்’ என்று கூறி அனுப்பிவிட்டார். அரண்மனைக்கு ஓடிய காவலர்கள், மன்னரிடம் இதை பற்றி கூறியவுடன் அவர் அதிர்ந்து போனார். ஓடோடி வந்து, நீலகண்ட தீட்சிதரின் காலில் விழுந்து வணங்கினார். ‘அறியாமல் தவறான எண்ணம் கொண்டு விட்டேன் மந்திரியாரே. என்னை மன்னித்து விடுங்கள்’ என்று வேண்டினார். பின்னர், ‘நான் உமது கண்களைப் பறிக்க வேண்டும் என்று, எனது மனதுக்குள்தானே நினைத்தேன். அது எப்படி உங்களுக்குத் தெரிந்தது’ என வினவினார். நீலகண்ட தீட்சிதர் சிரித்தபடியே, ‘அன்னை மீனாட்சியின் அருளால் எப்படி உன் பட்டதரசியின் தொடையிலுள்ள தழும்பை அறிந்தேனோ, அதே அருளால் தான்.. நீ என் கண்களைப் பறிக்கப்போகும் செய்தியையும் அறிந்தேன்' என்றார். ‘நமக்கு மந்திரியாக இருந்தவர் சாதாரணமானவர் அல்ல.. மிகப்பெரிய சித்தர்’ என்பதை மன்னன் உணர்ந்தார். ‘அய்யகோ.. நான் எவ்வளவு பெரிய பாவியாகி விட்டேன்’ என்று கதறித் துடித்தவர் நீலகண்டரின் கால்களில் விழுந்து, ‘மந்திரியாரே.. தாங்கள் மறுபடியும், நீங்கள் இழந்த கண்களை மீட்க அருள்புரியவேண்டும்’ என கண்ணீர் மல்கக் கேட்டார். தவறை உணர்ந்த மன்னனைக் கண்டு நீலகண்டர் மகிழ்ந்தார். பூஜை அறையில் அமர்ந்தார். அன்னை மீனாட்சியை நூற்றியெட்டு சுலோகங்களால் மனமுருகி துதித்தார். அறுபத்தொன்றாம் சுலோகத்தை அவர் பாடும்போதே அவரது கண்களின் ஒளி வந்து விட்டது. ‘அன்னையே! என்மீது அபரிமித கருணை கொண்டு, அளவற்ற அழகுடையதும், ஈடு இணையற்றதும், வர்ணிக்க முடியாததும், பரம மங்களமானதுமான உன் வித்தைகளை காட்டினாலும் எந்த கண்களால் அதனைக் காண்பேன்’ என்பது தான் அந்த சுலோகத்தின் தமிழாக்கம். நீலகண்ட தீட்சிதரை நினைவில் கொண்டு, அன்னை மீனாட்சியை எவரெவர் இந்த சுலோகத்தால் பக்தியுடன் துதிக்கிறார்களோ அவர்களுக்கு கண் நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. அந்த சுலோகத்துக்கு ‘ஆனந்த சாகரஸ் தவம்’ என்று பெயர். நீலகண்டருக்கு கண்பார்வை கிடைத்தவுடனே அரசனும் மனம் தேறினான். அதன்பின் அவரிடம் மன்னிப்பு கேட்டு, ‘அய்யனே.. தாங்கள் மீண்டும் அரசவைக்கு வரவேண்டும்’ என அழைத்தார். ஆனால் தீட்சிதரோ.. ‘மன்னா.. எனக்கு அரசு சேவை அலுப்பு தட்ட ஆரம்பித்து விட்டது. என் மனம் இப்போது அமைதியை நாடுகிறது. தென்னகத்தில் புண்ணிய நதியான தாமிரபரணி ஓடும் இடத்தில் உலக்கை சத்தம் கேட்காத, கோழி கூவாத நிலையில் உள்ள ஒரு கிராமத்தினை உருவாக்கு. அந்த கிராமத்தில் ஒரு சிவலாயத்தை ஏற்படுத்தி தா. அந்த கிராமத்தில் நானும், என்னுடன் பல வேத விற்பனர்கள் குடியமர்ந்து இந்த உலகம் மேம்பட யாகங்கள் பல செய்கிறோம்’ என்று கூறினார். அரசனும் அவ்வாறே செய்து கொடுத்தான். மன்னனின் வேண்டுக்கோளுக்கிணங்க, அவன் மானியமாக அளித்த தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள கிராமத்தில் தம் குடும்பத்தாரோடு குடியேறினார். அந்த இடம் தான் ‘பாலாமடை அக்ரகாரம்’ என அழைக்கப்படுகிறது. அங்கிருந்து தினமும் இறைவனை ஆராதனை செய்தார், நீலகண்ட தீட்சிதர். இந்த உலகம் மேன்மையடைய பல யாகங்களை நடத்தினார். காலங்கள் செல்லச் செல்ல நீலகண்டரின் தனது இறுதி காலம் நெருங்கியதை அறிந்தார். 1664-ல் மார்கழி மாத சுக்ல பட்ச அஷ்டமியன்று சமாதி நிலை அடைந்தார். இவர் அடங்கிய இடத்தில் காசி விசுவநாதரையும், அருகில் தெற்கு நோக்கி விசாலாட்சி அம்மனையும் பிரதிஷ்டை செய்து வணங்கி வருகிறார்கள். பாலாமடையில் நீலகண்ட தீட்சிதரின் இத்தலத்தில் ஆண்டு தோறும் ஆராதனை, ஜெயந்தி உற்சவங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. இன்றைக்கு இங்கே சென்றாலும் தீட்சிதர் வேண்டியபடியே மிக அமைதியாய் இந்த கிராமம் உள்ளது. தற்போதும் இங்கு தீட்சிதர் தவமேற்றுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். எனவே அமைதியுடனே இங்கு வந்து, அவர் அருள் பெற்று செல்லவேண்டும். இவரை வழிபட்டால், கண்நோய், மனநோய் குணமாவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். திருநெல்வேலி சந்திப்பில் இருந்து இவ்விடத்திற்கு ஆட்டோவில் சென்று வர வாய்ப்பு உள்ளது. -சித்தர்களைத் தேடுவோம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

டிஜிட்டல் நூலகம் ஒரு வரப்பிரசாதம்

டிஜிட்டல் நூலகம் ஒரு வரப்பிரசாதம் பேராசிரியை அமிர்த கவுரி, திருச்செந்தூர் உலகளாவிய தக வல்களை நொடிப் பொழுதில் விரல் நுனியில் அறியும் இணைய காலம் இது. டிஜிட்டல் நூலகம் என்ற கருத்து இன்றல்ல 1892-ம் ஆண்டே பால் அவுட்லெட் என்பவர் மனதில் உதயமான ஒன்றாகும். உக்கிரமான போர்களை தவிர்த்து மனிதன் நிம்மதியாகவும், நிதானமாகவும் வாழ்வதற்கு பொதுவான ஒரு தகவல் பரிமாற்றம் தேவை என்பதை அவர் உணர்ந்தார். இந்தக் கருத்தை முன்வைத்து தன்னுடைய ‘தகவல் பரிமாற்ற உலகின் பிறப்பு’ (பர்த் ஆப் இன்பர்மேஷன் ஏஜ்) என்ற நூலில் எப்படி பல கோடி புத்தகங்கள், படங்கள், ஒலி கோப்புகள் மற்றும் காணொலிகளையும் ஒருங்கிணைத்து ஒரு அமைப்பாக அனைவரும் தேடிப் பரிமாரிக்கொள்ளும் வகையில் அமைக்க முடியும் என்பதை தீர்க்க தரிசனமாக எழுதியுள்ளார். இந்தக் கருத்துதான் படிப்படியாக உருப்பெற்று தற்போது “இணைய வழியாக தகவல் பரிமாற்றம்” என உருவாகியுள்ளது. இது கற்பனைக் கெட்டாத ஒரு அதிசயம் தான். இந்த அமைப்பின் மூலம் நாம் நமது அறையிலிருந்து கொண்டு லட்சக் கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள ஒரு நூலகத்தில் உள்ள தகவல்களை ஒரு சில வினாடிகளில் பெறலாம். ஒரு வழக்கமான நூலகத்தில் தேர்ந்தெடுத்து வாங்கிய புத்தகங்களையும் பிற நூலகத் தகவல்களையும் வகைப்படுத்தி, தொகுத்து, அடுக்கி, அதற்கு பட்டியல் தயாரித்து, பராமரித்து வைத்திருப்பார்கள். அங்கு வரும் வாசகர்கள் அந்நூல்களை எடுத்து படித்து பயனடைவார்கள். ஆனால் டிஜிட்டல் நூலகத்தில் மின்னணு சாதனங்கள் மற்றும் இணைய வழித்தகவல்கள் மூலம் நூலகம் உருவாக்கப்படுகிறது. உரைநடை, ஒலிகோப்புகள், காணொலி மற்றும் படங்கள் ஆகியவை வகைப்படுத்தப்பட்டு டிஜிட்டல் நூலகங்களாக மாற்றப்படுகின்றன. தினமும் 24 மணி நேரமும் வாசகர்கள் இந்த நூலகத்தைப் பயன்படுத்தலாம். நூலகத்தின் அனுமதி பெற்று எந்த ஊரிலிருந்தும் இந்த நூலகத்தை பயன்படுத்த முடியும். மேலும் தேவையான ஒரு மென் நூலை (இ-புக்) ஒரே நேரத்தில் பல நூலக பயனாளர்கள் படிக்க முடியும். இந்த வசதி வழக்கமான நூலகத்தில் நடப்பதற்கு சாத்தியங்கள் இல்லை. தாள்களால் ஆன நூல்களைப் போல் மென் நூல்கள் கிழிவதும், வீணாவதும் இல்லை. மேலும் முக்கியமான, அரிதான பழைய நூல்களையும் சிறிதும் பழுதின்றி மென் நூல்களாக மாற்ற முடியும். இதனால் மிக பழைய அரிய நூல்களையும் பாதுகாக்க முடியும். நூலக பயனாளர்களும் பழைய நூல்களை எளிதாக தேடிப்படிக்கவும் முடியும். புத்தகங்கள் எவ்வளவு பெரிய அளவில் அதிக பக்கங்களைக் கொண்டிருந்தாலும் மின்னணு சாதனங்கள் மூலம் குறைந்த செலவில் அவற்றை மென் நூல்களாக மாற்ற முடியும். டிஜிட்டல் நூலகத்தின் இன்னொரு சிறப்பு வசதி என்னவென்றால், ஒரு டிஜிட்டல் நூலகத்தில் இருக்கும் மென்நூல்களையும், பிற தகவல்களையும் மற்ற டிஜிட்டல் நூலகங்களும் மிகக் குறுகிய நேரத்தில் மிக எளிதாக பகிர்ந்து கொள்ள முடியும். அதாவது மிகத் தொலைவில் இருக்கும் டிஜிட்டல் நூலகங்கள் தங்களுக்குள் மிக எளிதாக தங்களிடம் இருக்கும் மென்நூல்கள் மற்றும் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள முடியும். ஒரு டிஜிட்டல் நூலகத்தில் இருக்கும் மென் நூல்களையும், பிற தகவல்களையும் படங்களாகவும், காட்சி அமைப்புகளாகவும் நூலக பயன்பாட்டு மென்பொருள் மூலம் வடிவமைப்பு செய்துவிட்டால் அவைகளை வகுப்பறைகளில் கற்பித்தலுக்காகவும், கருத்தரங்குகளில் உரை நிகழ்த்துவதற்காகவும் பயன்படுத்தலாம். வழக்கமான நூலகங்களில் நூல்கள் பெருக பெருக நூலக இடவசதி அதிகமாக தேவைப்படலாம். ஆனால் மென் நூல்கள், கணினி கோப்புகளிலும், கோப்புரைகளிலும் சேமிக்கப்பட்டு கணினியின் கொள்திறன் அளவிற்கு நூல்களை சேகரிக்க முடிவதால் டிஜிட்டல் நூலகத்திற்கு அதிக இடம் தேவையில்லை. டிஜிட்டல் நூலகத்தில் இணைய வழியாகவும், இணையமில்லா வழியாகவும் தகவல் கோப்புகளை பெறமுடியும். பதிவிறக்கம் செய்யப்பட்ட மின் தகவல் கோப்புகளை வழக்கமான நூலக பட்டியலிடும் முறைப்படி தொகுத்து கணினியின் முகப்பு பக்கத்தில் (ஹோம் பேஜ்) வைத்துக் கொள்ள முடியும். இது டிஜிட்டல் நூலகத்தின் இன்னொரு சிறப்பான பயனாகும். மேலும் டிஜிட்டல் நூலக தகவல்களை மென் தகடுகள் மூலம் நூலக பயனாளர்களுக்கு பரிமாற்றம் செய்யலாம். நூலக பயனாளர்களின் சந்தேகங்களையும், கேள்விகளையும் இ-மெயில் மூலம் தீர்த்து வைக்கவும் முடியும். டிஜிட்டல் நூலகத்தில் மின் தகல்களை சேமித்தல், பட்டியலிடுதல், தகவல்களை பெறுதல், பராமரித்தல் போன்றவற்றிற்கு பல நூலக மென்பொருள்கள் (சாப்ட்வேர்) பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, கிரின் ஸ்டோன் டிஜிட்டல் லைப்ரரி சாப்ட்வேர், அகாடமிக் ரிசர்ச் இன் நெதர்லாண்ட் போன்றவை அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. டிஜிட்டல் நூலகம் என்பது இந்த இணைய காலத்துக்கு ஏற்ற விரைந்து தகவல் பரிமாற்றத்தைப் பெறக்கூடிய மிக அரிய ஒரு அமைப்பாகும். இன்னும் கூடிய விரைவில் இதன் விரிவாக்கமாக நம் செல்போன்களிலும் இந்த மின் தகவல் பரிமாற்ற வசதிகள் பெருகுவதற்கான வாயப்புகள் அதிகமாக உள்ளன. வழக்கமான நூலகங்களுக்கு சென்று நூல்களை வாசிக்கும் பழக்கம் குறைந்து வரும் தற்காலத்தில் இணையதளம் மூலம் இயங்கும் டிஜிட்டல் நூலகப் பயன்பாடு நிச்சயம் அதிகரிக்கும். கல்வி, விஞ்ஞானம், மருத்துவம், வியாபாரம், விளையாட்டு, மென்கலைகள், பொறியியல், கலாசாரம் போன்ற அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் டிஜிட்டல் நூலகம் ஒரு வரப்பிரசாதமாகும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday 16 April 2018

அதிக சம்பளம் தரும் ஐ.டி. பணிகளும், படிப்புகளும்!


தகவல் தொழில்நுட்பத் துறை (ஐ.டி.) பணம் கொழிக்கும் தொழில்துறையாகவே உள்ளது. உங்களுடன் படித்த நண்பனோ, தெரிந்தவர்களோ ஐ.டி. துறையில் பணியாற்றி, அவர் வாங்கும் சம்பளத்தைக் கேட்டிருந்தால் வியந்திருப்பீர்கள். சாதாரணமாக 30 ஆயிரத்தில் இருந்து சில லட்சங்கள் வரை மாத சம்பளம் வாங்குவார்கள். ஆனால் இந்த சம்பளமெல்லாம், அவர்களது நிறுவனம் கிள்ளிக் கொடுக்கும் தொகைதான். நிஜத்தில் அந்த நிறுவனம் அந்தப் பணிக்காக ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனத்திடம் இருந்து, ஊழியரின் சம்பளத்தைப்போல சில மடங்கு தொகையை ஊதியமாகப் பெற்றுவிடும் என்பதே உண்மை. அதிக லாபம் ஈட்டும் நிறுவனங்களின் புள்ளி விவரங்கள் இதற்கு சான்று.அமெரிக்காவின் ஐ.டி. துறையில் அதிக ஊதியம் தரப்படும் சில பணியிடங்ளும், அதற்கான படிப்புகளையும் அறிவோம்...

கிளவுட் ஆர்கிடெக்ட்
கிளவுட் கம்ப்யூட்டர் சார்ந்த படிப்பை படித்தவர்களே இந்த பணிக்குச் செல்ல முடியும். உலகப் பணிகள் யாவும் டேட்டா மயமாகி கணினிக்குள் சேகரமாகிக் கொண்டிருக்கிறது. எனவே டேட்டா சேமிப்பை சுருக்கி, நுட்பமாக்கி ஒரு கட்டுமானம்போல நிர்வகிக்கும் இந்தப் பணிக்கு வாய்ப்பும், சம்பளமும் அதிகம். சராசரியாக ஆண்டுக்கு 75 லட்சம் ரூபாய் ஈட்டுகிறார்கள் கிளவுட் ஆர்கிடெக்ட் பணியாளர்கள்.

டேட்டா மாடலர்
டேட்டா வடிவமைப்புடன், அவற்றுக்கு இடையேயுள்ள ஒற்றுமை, வேற்றுமையின் அடிப்படையில் பகுப்பதும், மொழிமாற்றம் செய்வதும் தொடர்பான பணிகளைச் செய்கிறார்கள் இவர்கள். இப்படி தரம் பிரிப்பது வேலையை எளிமையாக முடிக்க உதவும் என்பதால் ஒவ்வொரு கம்பெனிக்கும் இவர்கள் தேவைப்படுகிறார்கள். கணிதம், கணினி அறிவியல், ஐ.டி. பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணிக்குச் செல்லலாம். இவர்களின் சம்பளமும் ஆண்டுக்கு சராசரி 70 லட்சம் ரூபாய்.

ஐ.டி. கன்சல்டன்ட்
ஊதிய அடிப்படையில் கொஞ்சம் பின்தங்கிய பணியானாலும், அதிகமான வாய்ப்புகளையும், அனைவரும் விரும்பும் பணியாக முன்னிலை பெறுகிறது ஐ.டி. கன்சல்டன்ட். கணினிகள் வேகமாக இயங்கத் தேவையான மாற்றங்களை ஆராய்வதும், உருவாக்குவதும், கணினியின் பயனை மலிவாக்கிப் பெருக்குவதும் இவர்களின் பணியாக இருக்கிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டப்படிப்பு படித்திருந்தால் இந்த பணிக்கு செல்ல முடியும். திறமையை வெளிப்படுத்தி பணியைப் பெற்றுவிட்டால் கை நிறைய சம்பாதிக்கலாம். இந்தப் பணி செய்யும் அமெரிக்கர்களின் சராசரி ஆண்டு வருமானம் 60 லட்சம் ரூபாய்.

வெப் டெவலப்பர்
இணையதளத்தை வடிவமைக்கும் இந்த பணி அதிகமான வாய்ப்புகளைக் கொண்டது. தங்கள் அனுபவத்தாலும், திறமையாலும் எளிமையும், கவர்ச்சியும், வேகமும் நிறைந்த இணைய பக்கத்தை உருவாக்குபவர்கள் ஐ.டி. துறையின் உச்சத்திற்கே செல்வது சுலபம். எச்.டி.எம்.எல்., ஜாவா ஸ்கிரிப்ட் போன்ற இணைய கணினி மொழிகளை நன்கு அறிந்தவர்களுக்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. மற்ற படிப்புகளைப் படித்து சரியான வேலைவாய்ப்பு அமையாத பலர், இந்த கணினி மொழிகளைக் கற்றுக் கொண்டு பிரகாசமான வாய்ப்பைப் பெற்றது உண்டு. இந்த பணிக்கு கிடைக்கும் ஆண்டு வருமானம் 55 லட்சம் ரூபாய்.

மென்பொருள் என்ஜினீயர்
வீடியோ விளையாட்டு உருவாக்குவது, பேஸ்புக் போல புதுமையான ஒரு தளத்தை சொந்தமாக வடிவமைப்பது, நண்பனின் பணியை சுலபமாக முடிப்பதற்காக சிறு அப்ளிகேசன் உருவாக்கிக் கொடுப்பது எல்லாமே மென்பொருள் பணியாளரின் வேலை. இவர்களின் பணியின் பின்னணியில்தான் நமது செல்போன்கள், கணினிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்றால் மிகையில்லை. அதிகமான வாய்ப்புகளைக் கொண்ட இந்தப் பணிக்கு சாப்ட்வேர் என்ஜினீயரிங் மற்றும் அது தொடர்பான பட்டப்படிப்புகளை படித்திருந்தால் போதும். இந்த பணிக்கு ஆண்டுக்கு சராசரியாக 55 லட்சம் ரூபாய் சாம்பாதிக்கலாம்.

மொபைல் அப்ளிகேசன் டெவலப்பர்
ஸ்மார்ட்போன்களின் அபரிமித பெருக்கத்தால் அதற்கான அப்ளிகேசன் உருவாக்குபவர்களின் தேவை பெருகிக் கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் இருந்த இடத்திலிருந்தே புதுமையான அப்ளிகேசன் உருவாக்குபவர்களும் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். எனவே திறமை இருந்தால் யாரும் இந்தப் பணியில் சம்பாதிக்க முடியும். மென்பொருள், கம்ப்யூட்டர் அப்ளிகேசன் படித்தவர்கள், கணினி மொழி கற்றவர்களுக்கு இந்தப் பணி கைவரப் பெறும். இவர்களும் சராசரியாக 50 லட்சத்திற்குமேல் சம்பாதிக்கிறார்கள்.

இதில் குறிப்பிட்டுள்ள ஊதியம், அமெரிக்காவில் இதே பணியைச் செய்பவர்களுக்கு வழங்கப்படுவதாகும். இந்தியாவில் இந்த பணியைச் செய்பவர்கள் அனுபவத்திற்கேற்ப இந்த ஊதியத்தில் மூன்றில் 2 பங்கு வரை ஊதியம் பெறலாம்.ஐ.டி. துறையில் திடீர் வேலை இழப்பு சிலருக்கு அச்சத்தைத் தருகிறது. திறமையானவர்கள், ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறுவதும், பதவி உயர்வு பெறுவதும் எல்லாத் துறைகளிலுமே இருப்பதுதான். எனவே திறமையை வளர்த்துக் கொண்டால் நீங்கள் எந்த சூழலிலும் அச்சப்படாமல் உயரஉயரச் செல்ல முடியும். நம்பிக்கையுடன் ஐ.டி. துறையை தேர்வு செய்து படித்து திறமையை வளர்த்துக் கொண்டால் வாய்ப்புகள் வளம் சேர்க்கும்!
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday 3 April 2018

களைப்பையும் சலிப்பையும் வெல்வது எப்படி?

களைப்பையும் சலிப்பையும் வெல்வது எப்படி? முகமது ஹுசைன் எவ்வளவுதான் பிடித்த விளையாட்டாக இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் அது களைப்பையும் சலிப்பையும் ஏற்படுத்தும். விளையாட்டுக்கே இந்த நிலை என்றால், படிப்பையும் தேர்வுக்கான தயாரிப்பையும் பற்றிக் கேட்கவா வேண்டும்? அதற்காக, விளையாட்டை நிறுத்துவதுபோல் தேர்வு நேரத்தில் படிப்பைப் பாதியில் நிறுத்த முடியாதே! அதற்கு பதிலாக உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வூட்டக்கூடிய சில எளிய வழிகளைப் பின்பற்றலாம். படிப்பை ஓரங்கட்டி வையுங்கள் தேர்வுகளுக்கு இடையில் ஒரு நாளுக்கு மேல் விடுமுறை கிடைத்தால், பரீட்சை முடிந்த நாளின் மீதிப் பொழுதை ஓய்வுக்காக ஒதுக்குங்கள். அந்த மாலையில் தேர்வை, படிப்பை மறந்து, உங்களுக்கு விருப்பமான முறையில் அதைச் செலவிடுங்கள். அப்போது கூடுமானவரை மூளைக்கு வேலை கொடுக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம். நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, குழுவாக விளையாடுவது, பூங்காவில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பது, நல்ல இசையைக் கேட்டவாறு படுத்து இளைப்பாறுவது போன்ற செயல்களில் ஈடுபடலாம். விடுமுறையை எண்ணி மகிழ்வது படிப்புக்கு அவ்வப்போது சிறிது இடைவெளி கொடுத்து, விடுமுறையை எப்படிக் கொண்டாடலாம் என்று விரிவாகத் திட்டமிட்டு மகிழுங்கள். ஒவ்வொரு தேர்வு முடியும்போதும் விடுமுறைக்கு இன்னும் எத்தனை நாட்கள் மிச்சமுள்ளன என்று எண்ணி மகிழுங்கள். ஆனால், படிக்கும் நேரத்தில் முழுக் கவனத்துடன் படியுங்கள். படிக்கும் அறையை மாற்றுங்கள் உங்களுடைய மனதை ஏமாற்றுவது மிகவும் எளிது. எனவே, ஒவ்வொரு தேர்வின்போதும் நீங்கள் படிக்கும் இடத்தையோ அறையையோ மாற்றிக்கொள்ளுங்கள். இந்த மாற்றத்தில் உங்களுடைய மனம் மயங்கிச் சலிப்பு நீங்கிப் புத்துணர்ச்சி பெறும். சிறிது தூங்கலாமா? தேர்வு எழுதி வீடு திரும்பியவுடன், சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் தூங்குங்கள். ஆனால், இந்த நேரம் முப்பது நிமிடத்தைத் தாண்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் முதலாளி முதல் தொழிலாளிவரை இவ்வழக்கத்தை இன்றும் கடைப்பிடிக்கிறார்கள். சிறு துயில் அளிக்கும் ஆற்றல் காரணமாகத்தான் அது 'power nap' என்று அழைக்கப்படுகிறது. குஷியாகக் குளியுங்கள் தேர்வு நாட்களில் காலையும் மாலையும் குளியுங்கள். காலைக் குளியல் தேர்வு எழுதுவதற்கும் மாலைக் குளியல் அடுத்த நாள் தேர்வு எழுதுவதற்கும் புத்துணர்ச்சி அளிக்கும். நீண்ட தலைமுடி கொண்டவர்கள் மாலையில் தலைக்குக் குளிப்பதைத் தவிர்க்கலாம். கதை கேளுங்கள் வீட்டில் தாத்தா - பாட்டியிடமோ அப்பா – அம்மாவிடமோ அவர்களின் சிறுவயது கதையைச் சொல்லச் சொல்லிச் சிறிது நேரம் தூங்கும்முன் கேளுங்கள். அது அவர்களின் படிப்பு சம்பந்தமான கதையாக இருந்தால் அங்கிருந்து ஓடிவிடுங்கள். சாதிப்போம் கொண்டாடுவோம் வீடியோ கேம்களிலும் கார்ட்டூன் தொடர்களிலும்தான் அவற்றின் கதாபாத்திரங்கள் சலிப்பும் களைப்புமின்றி ஓடிக்கொண்டே இருக்கும். நிஜ வாழ்வில் நம்மால் அப்படி இருக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்டு புத்துணர்ச்சியை உணர்வதற்கு மனதைப் பழக்கித் தேர்வில் சாதனை படையுங்கள். விடுமுறைக்கு இன்னும் சில நாட்கள்தான் உள்ளன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Popular Posts