Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

உலக ஒழுங்கின் நெருக்கடி-'அமைதிக் குழு'


டொனால்ட் டிரம்ப் முன்முயற்சியால் உருவாக்கப்பட்ட "அமைதிக் குழு" - உலகளாவிய மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் முயற்சி: ஒரு விமர்சனம்


பலதரப்புவாதத்தின் மீதான தாக்குதல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் தொடங்கப்பட்டுள்ள சர்வதேச அமைப்பான "அமைதிக் குழு" (Board of Peace) சமகால உலக அரசியலில் ஓர் ஆபத்தான திருப்பத்தைக் குறிக்கிறது. போருக்குப் பிந்தைய காஸாவை நிர்வகித்தல் மற்றும் உலகளாவிய மோதல்களுக்குத் தீர்வு காண்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டிருப்பதாகக் கூறப்பட்டாலும், இந்த அமைப்பு, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பெரும் சிரமத்துடன் கட்டியெழுப்பப்பட்ட பலதரப்புவாதக் கொள்கைகளின் மீதான நேரடித் தாக்குதலாகும். "செயல்திறன்" மற்றும் "அமைதியைக் கட்டியெழுப்புதல்" என்ற சொல்லாடல்களுக்குப் பின்னால், உலகளாவிய முடிவெடுக்கும் அதிகாரத்தை மீண்டும் அமெரிக்காவின் ஏகபோக ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவருவதற்கான ஓர் அப்பட்டமான முயற்சி மறைந்துள்ளது. பனிப்போருக்குப் பிந்தைய பலதுருவ உலக ஒழுங்கின் எழுச்சியால் சிதைந்த அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்தை மீட்டெடுப்பதற்கும் நிலைநிறுத்துவதற்குமான ஒரு தெளிவான முயற்சியாகவே இந்தக் குழுவின் உருவாக்கம் பார்க்கப்பட வேண்டும்.

பாலஸ்தீனப் பிரச்சினையின் புறக்கணிப்பு

இந்த அமைதிக் குழு வேண்டுமென்றே பாலஸ்தீன சுயநிர்ணயத்தின் மையப் பிரச்சினையை விலக்குகிறது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு, நிறவெறி மற்றும் சர்வதேச சட்ட மீறல்களை நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக, பிரச்சினையை வெறும் "நிர்வாகம்" மற்றும் "ஸ்திரத்தன்மை" என்று மட்டுமே மறுவடிவமைக்கிறது. இத்தகைய தொழில்நுட்ப மொழி, பாலஸ்தீனப் போராட்டத்தை அதன் அரசியல் மற்றும் வரலாற்று உள்ளடக்கத்திலிருந்து அகற்றி, விடுதலை குறித்த கேள்வியை வெளிப்புறக் கட்டுப்பாட்டின் ஒன்றாக மாற்றுகிறது.

தனிநபர் சாம்ராஜ்யமாகச் செயல்படும் அமைப்பு

அமைதிக் குழுவின் நிறுவனக் கட்டமைப்பு மிகுந்த கவலை அளிக்கிறது. டிரம்ப் "வாழ்நாள் தலைவராக" நியமிக்கப்பட்டு, உறுப்பினர்களை நியமிக்கவும், நிகழ்ச்சிநிரல்களைத் தீர்மானிக்கவும், தீர்மானங்களை வெளியிடவும் பரந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டிருப்பதால், இது ஒரு சர்வதேச அமைப்பைப்போல இல்லாமல், ஒரு தனிநபரின் சாம்ராஜ்யம் போலவே காட்சியளிக்கிறது. மார்கோ ரூபியோ, ஜாரெட் குஷ்னர் மற்றும் டோனி பிளேர் போன்ற மேற்கத்திய ஏகாதிபத்திய ஆட்சி மற்றும் ராணுவவாதத்தின் மரபுகளுடன் தொடர்புடையவர்கள் இதில் சேர்க்கப்பட்டிருப்பது, இது ஒரு கூட்டுத் தலைமை அல்ல, மாறாக ராஜதந்திரம் என்ற போர்வையில் செயல்படும் ஒரு மையப்படுத்தப்பட்ட கட்டளை அமைப்பு என்பதையே உணர்த்துகிறது.

உலகளாவிய சமத்துவமின்மையை நிறுவனமயமாக்குதல்

அமைதிக் குழுவுக்கு உறுப்பினர்கள் பில்லியன் டாலர் பங்களிக்க வேண்டும் என்ற நிபந்தனை உலகளாவிய சமத்துவமின்மையை ஆழப்படுத்துகிறது. இதன்மூலம், ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியாவின் சில ஏழை நாடுகள் திறம்பட விலக்கப்படுகின்றன. அதே நேரத்தில், அமெரிக்க மூலோபாய நலன்களுடன் இணையும் மூலதனம் நிறைந்த நாடுகள் மற்றும் உயரடுக்கினர் மட்டுமே அதிகாரம் பெறுகின்றனர். இது, மக்கள் அல்லது நாடுகளுக்காக அன்றி, பில்லியனர்கள் மற்றும் இணக்கமான ஆட்சிகளுக்காக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட உலகளாவிய நிர்வாகமாக உள்ளது.

ஐ.நா.வுக்குப் போட்டியாளராகவும் சவாலாகவும்

ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒரு போட்டியாளராகவோ அல்லது மாற்று அமைப்பாகவோ தன்னை நிலைநிறுத்திக்கொள்வதன் மூலம், அமைதிக் குழு அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு என்ற கருத்துக்கே சவால் விடுகிறது. ஐ.நா.வின் குறைபாடுகள் இருந்தபோதிலும், சிறிய நாடுகள் குறைந்தபட்சம் பெயரளவிலாவது குரல் கொடுக்கும் ஒரே உலகளாவிய மன்றமாக அதுவே நீடிக்கிறது. அமைதிக் குழு இந்த வரையறுக்கப்பட்ட பன்மைத்துவத்தையும் நிராகரிக்கிறது. ஐ.நா. "செயலற்றது" என்று டிரம்ப் குற்றம் சாட்டுவது, அமெரிக்காவின் வீட்டோ அதிகாரங்கள், பொருளாதாரத் தடைகள் மற்றும் ராணுவத் தலையீடுகள்தான் ஐ.நா. அமைப்பை முடக்குவதில் முக்கியப் பங்கு வகித்தன என்ற உண்மையை வசதியாகப் புறக்கணிக்கிறது.

ஒற்றைத் துருவ உலகத்தின் மீதான ஆர்வம்

ஆழமான சித்தாந்த மட்டத்தில், அமைதிக் குழு ஒற்றை துருவ உலக உருவாக்கத்துக்குத் திரும்புவதைக் குறிக்கிறது. 1991-இல் சோவியத் ஒன்றியத்தின் சரிவுக்குப் பிந்தைய, இராக், யூகோஸ்லோவியா, ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியாவில் போர்களால் வகைப்படுத்தப்பட்ட கட்டுப்படுத்தப்படாத அமெரிக்க ஆதிக்கத்தின் குறுகிய, ஆனால் அழிவுகரமான காலம், நிரந்தர உறுதியற்ற தன்மையையும், லட்சக்கணக்கான இறப்புகளையும், சர்வதேச சட்டத்தின் செயல்படாதன்மையைமே உருவாக்கியது. கடந்த இரண்டு தசாப்தங்களாக, மாற்று அதிகார மையங்களின் எழுச்சியால் சவால் விடுக்கப்பட்ட இந்த ஏகபோகத்தை, அமைதிக் குழுவின் ஆதரவாளர்களால் பயன்படுத்தப்படும் "குறுநிலை ஒத்துழைப்பு" என்ற பெயரில், மீண்டும் நிலைநிறுத்த அமெரிக்கா முயல்கிறது. இது பலதரப்பு முடிவெடுப்பின் ஜனநாயகத் தன்மையை நிராகரித்து, சிறிய, உயரடுக்குக் கட்டுப்பாட்டில் உள்ள கட்டமைப்புகளுக்கு ஆதரவளிக்கிறது.

பொருளாதார வற்புறுத்தலின் பங்கு

வரி அச்சுறுத்தல்கள் மற்றும் நிதி அழுத்தம் போன்ற பொருளாதார வற்புறுத்தல் முறைகள், நாடுகளை அமைதிக் குழுவில் சேர கட்டாயப்படுத்தும் ஏகாதிபத்திய கருவித் தொகுப்புக்குள் சரியாகப் பொருந்துகின்றன. சந்தை அணுகலுக்காகவோ அல்லது பொருளாதாரத் தடையிலிருந்து விடுபடுவதற்காகவோ இறையாண்மை வர்த்தகம் செய்யப்படுகிறது. வர்த்தகம் மற்றும் நிதியை ஆயுதமாக்குவது, அமைதிக் குழு தன்னார்வமாகவோ அல்லது கருணையுடனோ செயல்படுகிறது என்ற எந்தவொரு கூற்றையும் குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது.

உலக நாடுகளுக்கான அபாயங்கள்

அமெரிக்காவின் பாரம்பரிய கூட்டாளிகளான ஐரோப்பிய நாடுகளே இந்தக் குழுவை சந்தேகத்துடன் பார்க்கின்றன. ஒரு தனிப்பட்ட தலைவரின் விருப்பங்களை மையமாகக் கொண்ட ஓர் அமைப்பு இயல்பாகவே நிலையற்றது. உலகின் தெற்குப் பகுதி நாடுகளுக்கு இந்த அபாயங்கள் இன்னும் தீவிரமானவை. இத்தகைய அமைப்பில் பங்கேற்பது, கொள்கை சுதந்திரத்தை இழப்பதற்கும், "அமைதி" என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் தலையீடுகளை சட்டபூர்வமாக்குவதற்கும் வழிவகுக்கும். இந்தியாவைப் பொருத்தவரை, பாலஸ்தீன உரிமைகளைப் புறக்கணித்து, ஐ.நா. சபையைத் தவிர்த்துச் செயல்படும் ஓர் அமைப்புடன் தொடர்பு வைத்துக்கொள்வது, இந்தியாவின் காலனித்துவ எதிர்ப்புப் பாரம்பரியத்துக்குச் செய்யப்படும் ஒரு வரலாற்றுத் துரோகமாக அமையும்.

முடிவு: சர்வதேச ஒழுங்கின் எதிர்காலத்திற்கான போராட்டம்

அமைதிக் குழு, அமெரிக்காவின் உலகளாவிய தலைமைத்துவம் எதிர்கொள்ளும் ஆழமான சட்டபூர்வ நெருக்கடியை வெளிப்படுத்துகிறது. பலதுருவ உலகுக்கு ஏற்ப மாறுவதற்குப் பதிலாக, இதுபோன்ற அமைப்பு மூலம் தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்த அமெரிக்கா முயல்கிறது. ஒருமித்த கருத்து இல்லாமல் திணிக்கப்படும் போட்டி அதிகார அமைப்புகள், மோதல்களின் சாத்தியக்கூறுகளை அதிகரிக்கின்றன. அரசியல், ராணுவ அல்லது பொருளாதாரம் என எந்த வகை ஏகபோகங்களாலும் ஆளப்படும் ஓர் உலகம் இயல்பாகவே நிலையற்றது.

அமைதிக் குழு மீதான போராட்டம் என்பது சர்வதேச அமைப்பின் எதிர்காலத்துக்கான போராட்டமே ஆகும். உலகம் உண்மையான பன்முகத்தன்மை, இறையாண்மைக்கான மரியாதை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை நோக்கி நகருமா அல்லது ஒரே ஒரு சக்தியால் ஆதிக்கம் செலுத்தப்படும் ஒரு படிநிலை ஒழுங்குக்குள் மீண்டும் சரிந்து, வற்புறுத்தல் மற்றும் புறக்கணிப்பின் மூலம் "அமைதியை" திணிக்குமா என்ற கேள்வி எழுகிறது. ஒற்றை வல்லரசின் ஆணவம் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவருவதில்லை, அது எதிர்ப்பையும், குழப்பத்தையும், முடிவற்ற போர்களையும் உருவாக்குகிறது என்ற பனிப்போருக்குப் பிந்தைய காலத்தின் அனுபவத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, உலக சமூகம் அமைதிக் குழுவை ஒரு குறைபாடுள்ள அமைப்பு என்ற முறையில் மட்டுமல்லாமல், ஓர் ஆபத்தான யோசனை என்ற முறையிலும் நிராகரிக்க வேண்டும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement