Thursday 26 March 2020

மனிதாபிமானம் காத்த வீரப்போர்...!

லெப்டினன்ட் கர்னல் தியாகராஜன்,

ஓய்வு பெற்ற இந்திய ராணுவ உயர் அதிகாரி.

இ ன்று (மார்ச் 26-ந் தேதி) வங்காளதேச சுதந்திர தினம்.

விடுதலைக்குப் பிறகு பல ஆண்டுகளாக பாகிஸ்தான் அரசு, கிழக்கு பாகிஸ்தானுக்கு (இன்றைய வங்காளதேசம்) குறைந்த அளவே நிதி உதவி செய்து வந்தது. இதனால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டது. மேலும் பாகிஸ்தான் அரசு, வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கவில்லை. 1970-ம் ஆண்டில் ஏற்பட்ட ‘போலா’ சூறாவளி வங்காளதேசத்தை தாக்கியது. இதில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இந்த பேரழிவுக்கு போதுமான அளவு நிவாரண உதவியோ, நிதி உதவியோ பாகிஸ்தான் அரசு வழங்கவில்லை. இதனால் கிழக்கு பாகிஸ்தான் மக்கள் வெறுப்படைந்தனர்.

1970-ல் நடைபெற்ற பாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், கிழக்கு பாகிஸ்தானின் முஜிபுர் ரகிமான் தலைமையிலான அவாமி லீக் கட்சி, அரசில் ஆட்சி அமைக்க போதுமான தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளர் யாகியாகானும், மேற்கு பாகிஸ்தான் அரசியல்வாதிகளும் ஷேக் முஜிபுர் ரகிமான் ஆட்சி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுபோன்ற நிகழ்வுகளின் காரணமாக கிழக்கு பாகிஸ்தானில் விடுதலை போராட்டம் தொடங்கியது. இந்த நிலையில் வங்காள தேசத்தில் ‘முக்திபாஹினி’ என்ற எதிர்ப்பு ராணுவம் உருவாக்கப்பட்டது.

1970 மற்றும் 1971-ம் ஆண்டில், பாகிஸ்தான் ராணுவம், கிழக்கு பாகிஸ்தானில் உள்ள அப்பாவி மக்கள் மீது, குறிப்பாக சிறுபான்மை இந்து மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமான இனப்படுகொலை செய்ய தொடங்கியது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தானில் உள்நாட்டுப் போர் வெடித்தது. கிழக்கு பாகிஸ்தானிய மக்கள் சுதந்திரம் கேட்டு போர்க்கொடி தூக்கினர். அரசுடன் ஒத்துழைக்க மறுத்து, ‘ஒத்துழையாமை’ இயக்கத்தை தொடங்கினர். அவற்றை அடக்க பாகிஸ்தான் ராணுவம், “ஆபரேஷன் சர்ச் லைட்” என்ற பெயரில் ராணுவ நடவடிக்கைமேற்கொண்டது.

1971-ம் ஆண்டு மார்ச் 26-ந்தேதி விடுதலை போராட்டத்தை அடக்க பாகிஸ்தான் ராணுவம் பொது மக்கள் மீது கடுமையான தாக்குதலில் ஈடுபட்டது. அன்று அதிகாலை 1.15 மணியளவில், ஷேக் முஜிபுர் ரகிமான், பாகிஸ்தான் கமாண்டோ பிரிவினால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அவர் வங்காளதேசம் சுதந்திரத்தை அறிவிக்க முடிவு செய்தார். அன்று மதியம் 2.30 மணியளவில் வங்காளதேசம் சுதந்திரம் பெற்று விட்டதாக அறிவிக்கப்பட்டது.

இஸ்லாமியர்களின் ஆதரவைபெற்ற பாகிஸ்தான் ராணுவம், உள்ளூர் மக்கள் மீதான சோதனைகளின் போது அவர்களுக்கு உதவி செய்வதற்காக தீவிர மதப் போராளிகளை உருவாக்கியது. அவர்கள் ராணுவத்தினருடன் சேர்ந்து 4 லட்சம் வங்காளதேச பெண்கள் மற்றும் சிறுமிகளை இனப்படுகொலை செய்தும், பாலியல் பலாத்காரத்திலும் ஈடுபட்டனர்.

1971-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் கிட்டத்தட்ட 1 கோடி அகதிகளை இந்தியாவுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பியது. இது அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்திக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கு பதிலாக, பாகிஸ்தானுக்கு எதிராக போரிடுவதே பொருளாதார ரீதியாக சிறந்தது என்று முடிவு செய்தார்.

இதைத்தொடர்ந்து ஏப்ரல் மாதம் 28,-ந்தேதி, மந்திரிசபை கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில் ராணுவ ஜெனரல் மானேக்சாவை பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும்படி கேட்டுக்கொண்டனர். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான கடந்த கால விரோதம் பாகிஸ்தானின் உள்நாட்டுப் போரில் தலையிடுவதற்கான இந்தியாவின் முடிவை மேலும் அதிகரித்தன. இதன் விளைவாக, கிழக்கு பாகிஸ்தானின் விடுதலை போராளிகளான, முக்தி பஹினியை ஆதரிப்பதன் மூலம் வங்காளிகளுக்கு ஒரு தனி மாநிலத்தை உருவாக்கி அவர்களுக்கு ஆதரவளிக்க இந்திய அரசு முடிவு செய்தது. இந்த கிளர்ச்சியாளர்களை ஒழுங்கமைக்கவும், ஆயுத பயிற்சி அளிக்கவும் இந்திய உளவு அமைப்பினர் உதவினர்.

மார்ச் முதல் ஜூன் மாதம் வரை பல்வேறு வங்காளதேசத் துணைப்படைகள் முக்தி பாஹினியுடன் இணைந்தன. வங்காளதேசத்தில் இருந்த பாகிஸ்தான் கப்பல்கள் மற்றும் பொருளாதார மையங்கள் மீது முக்தி பாஹினி தாக்குதல் நடத்தியது. முக்தி பஹினி அமைப்பினர் கிழக்கு பாகிஸ்தானில் இருந்த பாகிஸ்தான் ராணுவத்தை அதிரடியாக தாக்கி, அதில் வெற்றி பெற்றனர். இதனால் டிசம்பர் மாத தொடக்கத்தில் முழு அளவிலான இந்திய ராணுவ தலையீட்டிற்கு உகந்த நிலைமைகளை உருவாக்கியது.

இந்த போர் நடைபெறும் பொழுது இந்திய ராணுவமும், சோவியத் யூனியனும் முக்தி பாஹினிக்கு நிதி உதவி செய்தார்கள். இதே நேரத்தில் அமெரிக்காவும், சீனாவும் பாகிஸ்தானுக்கு உதவி செய்தன. இந்தநிலையில் 1971-ல் டிசம்பர் மாதம் 3-ந்தேதி, 11 இந்திய விமான நிலையங்களில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதைத்தொடர்ந்து போர் தொடங்கியது.

அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்தது. அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் மேற்கு பாகிஸ்தானில் இந்திய படையெடுப்பு என்பது பிராந்தியத்தின் மொத்த சோவியத் ஆதிக்கத்தை குறிக்கும் என்று கூறினார். பாகிஸ்தானுக்கு அமெரிக்க காங்கிரஸ் விதித்த பொருளாதார தடைகளைத் தாண்டி, நிக்சன் பாகிஸ்தானுக்கு ராணுவ பொருட்களை ஜோர்டான் மற்றும் ஈரான் வழியாக அனுப்பினார்.

மேலும் விமானம் தாங்கி கப்பலான யு.எஸ்.எஸ் எண்டர்பிரைசை வங்காள விரிகுடாவுக்கு அனுப்பினார், இந்த நடவடிக்கை அணுசக்தி அச்சுறுத்தல் என்று கருதப்பட்டது. எண்டர்பிரைஸ், 1971-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி நிலையத்திற்கு வந்தது. இந்தியாவுக்கு ஆதரவாக டிசம்பர் 6 மற்றும் 13-ம் தேதிகளில், சோவியத் கடற்படை அணு ஏவுகணைகளுடன், ஆயுதம் ஏந்திய இரண்டு கப்பல்களையும், ஒரு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலையும் அனுப்பியது. அவர்கள் இந்தியப் பெருங்கடலில், அமெரிக்க கடற்படையை பின் தொடர்ந்தனர்.

அமெரிக்கா அல்லது சீனாவுடன் மோதல் ஏற்பட்டால், சோவியத் ஒன்றியம் எதிர் நடவடிக்கைகளை எடுக்கும் என்று 1971-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கையெழுத்திடப்பட்ட இந்தோ-சோவியத் நட்பு ஒப்பந்தம் இந்தியாவுக்கு உறுதியளித்தது. அன்று முதல் இன்று வரை நமது உண்மை தோழனாக இருந்து வருகிறது.

இந்திய ராணுவம் ஆக்கிரமிப்பு, தற்காப்பு போர் தந்திரத்தை கையாண்டு டாக்காவை அடைந்தன. பாகிஸ்தான் ராணுவத்தின் நகர்வுகளுக்கு இந்தியா விரைவாக பதிலளித்து, சுமார் 15,010 கிலோமீட்டர் பாகிஸ்தான் பிரதேசத்தை கைப்பற்றியது. அதே நேரத்தில் இந்திய விமானப்படை பாகிஸ்தான் இலக்குகளை தாக்கி விரிவான சேதத்தை ஏற்படுத்தியது. மேற்கு கடற்படையின் போர் குழுவினரின் துணிச்சலான செயல்களால் பாகிஸ்தான் கடற்படை சக்தியை இழந்து துறைமுகங்களில் நிறுத்தப்பட்டது.

ஜெனரல் சாம் பகதுர் மானெக்‌ஷா, இந்திய ராணுவ வீரர்களை ஊக்கப்படுத்தி, தன்னம்பிக்கையுடன் போராட வைத்து பாகிஸ்தான் ராணுவத்தை வெறும் 14 நாள்களில் சரணடைய செய்தார்.

இந்த நடவடிக்கையின் போது 93 ஆயிரம் பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் சிவிலியன்களை போர் கைதிகளாக இந்தியா சிறைபிடித்தது. இந்திய ராணுவ வரலாற்றில் மிகப் பெரிய வெற்றியாகவும், மிக வேகமான ராணுவ வெற்றியாகவும் இது போற்றப்படுகிறது. இதையடுத்து வங்காளதேசம் உருவாக்கப்பட்டது.

ஜெனரல் சாம் பகதுர் மானெக்‌ஷா 40 ஆண்டுகால ராணுவ சேவையில் 5 போர்களை சந்தித்தவர். இந்திய ராணுவத்தின் எட்டாவது தலைமை தளபதியாக இருந்து இந்தியா வழிநடத்திய மற்ற போர்களில் கலந்து கொண்டவர். இரண்டாம் உலகப்போரிலும், பாகிஸ்தானுடனான போரிலும் இவரின் தலைமையில் இந்தியா போரை எதிர்கொண்டது. பாகிஸ்தானுடனான போரின்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியுடன் முரண்பட்டபோதும், போர்க்குணத்துடன் போராடி பாகிஸ்தானைத் தோற்கடித்துச் சரணடையச் செய்தார்.

வங்கதேசம் எனும் தனிநாடு உருவாகக் காரணமாகி, இன்றுவரை அந்த நாட்டினரால் தங்களது தேசத்தின் மீட்பராக நினைவுகூரப்படுபவர். இரும்பு மனிதர் என்று போற்றத்தக்க உறுதி படைத்தவர். இந்தியாவின் மிக உயர்ந்த பதவியான பீல்டு மார்ஷல் பதவியை முதலில் பெற்றார்.

பாகிஸ்தானுக்கு எதிராக முழு அளவிலான போரை நடத்தி வெற்றி பெற்ற அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை, பா.ஜ.க-வின் மூத்த தலைவரும், இந்தியாவின் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய், “துர்கா தேவி” என்று வர்ணித்தார். இந்திய ராணுவத்தின் சுமார் 600 அதிகாரிகள் மற்றும் வீரர்கள், வீர விருதுகளால் அலங்கரிக்கப்பட்டனர்.

இந்த போரில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இவர்களில் 2,908 பேர் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தார்கள். இதன் விளைவாக இன்று வங்காளதேசம் தனது 50-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இந்த மிக உயர்ந்த தியாகத்திற்கு நாம் தலைவணங்கி ஒன்றுபட்டு நம் தேசத்தை காப்போம்.

No comments:

Popular Posts