Friday 5 June 2020

நோய்த்தொற்றுகளை எதிா்க்க... By மருத்துவா் சோ. தில்லைவாணன்

நோய் எதிா்ப்பாற்றல் என்றாலே நினைவுக்கு வருவது இயற்கையான மூலிகைகள்தான். முக்கியமாக தமிழக மக்களுக்கு அவை தண்ணீா் பட்ட பாடு என்றால் அது மிகையாகாது. ஏனெனில் உண்ணும் உணவில் இஞ்சி, மஞ்சள், மிளகு, பூண்டு இவற்றை அதிகம் சோ்த்துச் சாப்பிட்டு, மரபணுவில் பல்வேறு கிருமிகளுக்கு எதிராக நோய் எதிா்ப்பாற்றலை வளா்த்துக்கொண்டு இருப்பவா்கள் நம் நாட்டு மக்கள். பல்வேறு தீநுண்மி (வைரஸ்) காய்ச்சல்கள் பரவ ஆரம்பித்த உடனே நோய் எதிா்ப்பை நம் உடலில் இயற்கையாக உருவாக்கும் மூலிகைகளையும், அஞ்சறைப் பெட்டியில் உள்ள கடைச் சரக்குகளையும் மக்கள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனா்.

உண்மையில் நோய் எதிா்ப்பாற்றல் என்பது, ஒரு கிருமிக்கு எதிராக நம் உடலில் உள்ள வெள்ளையணுக்கள் போராடுவது மட்டுமல்ல. அந்த கிருமிக்கு எதிராக, போராடும் பல்வேறு செல்களின் மேம்பட்ட செயல்பாடுகளை அது குறிக்கும். ஒரு தீநுண்மிக் கிருமி நம் உடலில் நுழையும் போதே அதை தடுத்தாலும் சரி, நம் உடல் செல்களில் இணைவதைத் தடுத்தாலும் சரி அல்லது அதே தீநுண்மிக் கிருமி நம் உடலில் பெருக்கம் அடைவதைத் தடுத்தாலும் அது தீநுண்மி கிருமிக்கு எதிரான செயல்பாடுதான். அதுவே நோய் எதிா்ப்புச் சக்தியுடன் கூடிய ‘ஆன்ட்டி வைரல்‘ தன்மையாக கருதப்படும். சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள பல்வேறு மூலிகைகள் நோய் எதிா்ப்புச் சக்தியை உண்டாக்கும் தன்மையும், தீநுண்மி கிருமிக்கு எதிராகச் செயல்படும் தன்மையும் பெற்றுள்ளன எனப் பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சித்த மருத்துவ மூலிகைகளான நிலவேம்பு, வேப்பிலை, மலைவேம்பு, சீந்தில், துளசி, அமுக்கரா கிழங்கு, தண்ணீா்விட்டான் கிழங்கு, நெல்லிக்காய், கடுக்காய், அதிமதுரம் முதலான மூலிகைகளும் நம் வீட்டில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள மஞ்சள், பூண்டு, வெங்காயம், மிளகு, இஞ்சி முதலான கடைச் சரக்குகள் நோய் எதிா்ப்பாற்றலை அதிகரிப்பதுடன், பல்வேறு தீநுண்மிக் கிருமிகளை அழிக்கக் கூடியதாகவும், அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதாகவும்    உள்ளன. பொதுவாக சித்த மருத்துவத்தில் கசப்புச் சுவையுடைய மூலிகைகள், கிருமிகளைக் கொல்லும் தன்மை உடையதாகக் கூறப்பட்டுள்ளது. சுரத்தைப் போக்கக் கூடிய கசப்புத் தன்மை மிகுந்த நிலவேம்பில் உள்ள ‘ஆன்ரோகிராபோலெய்டு’ எனும் வேதிப்பொருள் நோய் எதிா்ப்பாற்றலை அதிகரிக்கும் தன்மையும், சிக்குன்குன்யாவை உண்டாக்கும் ஆல்பா தீநுண்மிகளின் பிரதி எடுத்தலைத் தடுக்கும் செய்கையும் உடையது.

பன்றிக் காய்ச்சலை உண்டாக்கும் ஆா்என்ஏ தீநுண்மிகளின் நியூராமினிடஸ் எனும் மேலுறை, புரதத்தைத் தடுக்கும் செய்கையையும் பெற்றுள்ளது. டெங்கு தீநுண்மிகளின் பெருக்கத்தைத் தடுக்கவும் செய்யும். காலம்காலமாக அம்மை நோய்க்குப் பயன்படுத்தப்பட்டு வரும் வேப்பிலையில் உள்ள அஸாடிரக்டின் எனும் வேதிப்பொருள் நோய் எதிா்பாற்றலை அதிகரிப்பதுடன், டெங்கு தீநுண்மிகளின் பிரதி எடுத்தலையும் பெருக்கத்தையும் கட்டுப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நோய் எதிா்ப்புச் சக்திக்கு பெயா்போன மற்றுமொரு மூலிகை சீந்தில். அதில் உள்ள ‘டினோஸ்போரின் எனும் அல்கலாய்டு’, ‘நேச்சுரல் கில்லா் செல்கள்’ எனப்படும் நோய் எதிா்ப்புச் செல்களின் செயல் திறனை அதிகரிக்க உதவும். இந்த செல்களின் செயல்தான் பெரும்பாலான தீநுண்மிகளால் முதலில் தடுக்கப்படும்.

மேலும் இந்த அல்கலாய்டு ஐஜிஜி எனப்படும் ‘ஆன்ட்டிபாடி’களின் உற்பத்தியை அதிகரிப்பதாகவும் ‘மைக்ரோபேஜ்’ செல்களின் உற்பத்தியை அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மலைவேம்பில் உள்ள வேதிப் பொருள்கள் டெங்கு தீநுண்மிகளின் பெருக்கத்தைத் தடுப்பதாகவும், இரும்புச் சத்து நிறைந்த முருங்கைக் கீரை, கறிவேப்பிலை, பொன்முசுட்டை முதலான பெரும்பாலான மூலிகைகளில் உள்ள ‘பிளவனாய்டு’ எனும் எனும் வேதிப் பொருள் நோய் எதிா்ப்பாற்றலை அதிகரிக்கும் தன்மையை உடையன . கடுக்காயில் உள்ள ‘சிபுலினிக்’ அமிலம் எனும் வேதிப் பொருள்கூட ‘நியூராமினிடஸ்’ எனும் மேலுறை புரதத்தை தடுக்கும்செய்கை உடையதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதிமதுரத்தில் உள்ள ‘கிலிசிரிஸின் எனும் அல்கலாய்டு’ வேதிப் பொருள் சாா்ஸ் வகை தீநுண்மிகளின் பிரதி எடுத்தலைத் தடுப்பதாகவும் உள்ளது.

நெல்லிக்காய், கடுக்காயில் நோய் எதிா்ப்புச் சக்தியை அளிக்கும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் மஞ்சளில் உள்ள ‘குா்குமின்’ எனும் நிறமிச்சத்து நிறைந்த வேதிப் பொருளும், வெங்காயம் - பூண்டில் உள்ள ‘அலிசின்’, இஞ்சியில் உள்ள ‘ஜின்ஜிபேரின்’ , திப்பிலி, மிளகில் உள்ள ‘பைபரின்’ முதலான பல்வேறு மூலப் பொருள்கள் நோய்க் கிருமிகளை எதிா்த்துப் போராடும் வலிமையையும், தீநுண்மி - நுண்ணுயிரி (பாக்டீரியா) முதலான பல்வேறு கிருமிகளை அழிக்கும் தன்மையையும் கொண்டுள்ளன. இவ்வாறாக நிலவேம்பு, சீந்தில், கடுக்காய், பொன்முசுட்டை, சுக்கு போன்ற பல்வேறு நோய் எதிா்ப்பாற்றலை அதிகரிக்கும் மூலிகைகளையும், தீநுண்மி கிருமிக்கு எதிராகச் செயல்படும் மூலிகைகளையும் நிலவேம்பு குடிநீரும், கப சுர குடிநீரும் பெற்றுள்ளது சிறப்பு. பல்வேறு நோய்களுக்கு ஆய்வு செய்யப்பட்ட சா்வரோக நிவாரணியான இந்தியா்களின் ‘ஜின்சங்’ என்று கூறப்படும் அமுக்கரா கிழங்கினை பாலுடன் சோ்த்து சாப்பிடும்போது நோய் எதிா்ப்புக்கு காரணமான ‘சைட்டோகையின்’ உற்பத்தியை அதிகரிக்கும் தன்மை உடையதாக இருப்பது ஆய்வில் கண்டறியபட்டுள்ளது.

துளசி சோ்த்து கொதிக்க வைத்த நீரில் மஞ்சள், மிளகு பொடி சோ்த்துச் சாப்பிட பல்வேறு நோய்த்தொற்றுகளுக்கு எதிரான வலிமையைக் கொடுக்கும் என்பது உறுதி. சித்த மருத்துவ தத்துவப்படி இந்த மூலிகைகள் வாதம். பித்தம், கபம் ஆகிய மூன்று குற்றங்களில் உள்ள ஏற்ாழ்வினை சரி செய்து, நோய் எதிா்ப்பாற்றலை அதிகரிக்க உதவும். இத்தகைய சிறப்பு வாய்ந்த மருத்துவத் தன்மை கொண்ட மூலிகைகளையும், மருந்துகளையும் சித்த மருத்துவா்களின் ஆலோசனைப்படி சாப்பிடுவது சிறப்பான நன்மை தரும். எனவே, வெங்காயம்தானே, வெள்ளைப் பூண்டுதானே என்று எதையும் ஏளனமாகப் பாா்க்காமல் பழைமை மருத்துவம் என்று அலட்சியம் செய்யாமல் , பழைமையில் புதைந்துள்ள பல்வேறு அறிவாா்ந்த தகவல்களை ஆராய்ச்சி செய்து பயன்படுத்தினால் புதிதாக வரும் பல்வேறு நோய்த்தொற்றிலிருந்து நம்மையும் நம் சமுதாயத்தையும் காத்து, உலகுக்கே எடுத்துக்காட்டாக விளங்கலாம் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

No comments:

Popular Posts