Tuesday 15 January 2019

சமூக புரட்சியாளர் மார்ட்டின் லூதர்கிங்

சமூக புரட்சியாளர் மார்ட்டின் லூதர்கிங் நல்லினி, வழக்கறிஞர். இன்று (ஜனவரி 15-ந் தேதி) மார்ட்டின் லூதர்கிங் பிறந்த தினம் சென்ற நூற்றாண்டில், அமெரிக்க மக்களை பிளவுபடுத்தும் நிற வேற்றுமை கொள்கையினை எதிர்த்தும் கறுப்பின மக்களை விலங்கினும் இழிவாக நடத்தும் வெள்ளையின மக்களின் போக் கினை கண்டித்தும் பல்வேறு காலக்கட்டத்தில் பலர் போராடியிருந்தாலும் மார்ட்டின் லூதர்கிங் பணி மகத்தானது. காந்தியடிகளின் வன்முறையற்ற அறவழிப் போராட்டத்தில் பெரிதும் நம்பிக்கைக் கொண்டிருந்தார். காந்தியின் கொள்கைகளை உள்வாங்கிய இவர் கறுப்பின மக்களின் சமூக (சிவில்) உரிமைக்காக, வன்முறையற்ற, ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தினார். வேதனை என்னவென்றால், காந்தியைப் போன்றே கொடியவன் ஒருவனின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானார். ஆனால், தம்மின மக்களின் சுதந்திரத்திற்கும் உரிமைகளுக்கும் அவர் போராடியது வீண் போகவில்லை. 2009-ம் ஆண்டு கறுப்பினத்தினை சேர்ந்த பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் அதிபராய் பதவியேற்றது மார்ட்டின் லூதர் கிங் அன்று கண்ட கனவு, விதைத்த விதை.. மார்ட்டின் லூதர்கிங் (இளையவர்) 1929-ம் ஆண்டு ஜனவரி 15-ந் தேதி ஆல்பெர்ட்டா மற்றும் மார்ட்டின்லூதர்கிங் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். முதலில் இவருக்கு மைக்கேல் லூதர்கிங் என்று பெயர் வைக்கப்பட்டிருந்தாலும், பிறகு, தந்தையின் பெயரையே தனதாக்கிக் கொண்டார். இளையவர் மார்ட்டின் லூதர்கிங்குக்கு ஆல்ப்ரெட் வில்லியம் ஸ்கிங் என்ற சகோதரரும், வில்லிகிறிஸ்டின்கிங் என்ற சகோதரியும் உடன்பிறந்தவர்கள். தந்தை மார்ட்டின் லூதர்கிங் எபினேஸிர் பாப்டிஸ்ட் சர்ச்சில் தலைமை பாதிரியாராக பணியாற்றினாலும், கறுப்பின மக்களின் பொது உரிமைக்காக இயக்கமொன்றின் தலைவராகவும் செயல்பட்டார். மார்ட்டின் லூதர்கிங்க்கு, அவரது தந்தை முன்மாதிரியாகவும், வாழ்வில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தினார். ‘இவ்வுலகத்தில் தீயவர்களால் இழைக்கப்படும் தீங்குகளைவிட அதை பார்த்துக் கொண்டு அமைதியாக கடந்து போகும் நல்லவர்களின் மவுனமே அதிக தீங்கானது’ என்று கருதினார். கறுப்பின மக்களின் சிவில் உரிமைக்காக அமெரிக்காவின் மூலைமுடுக்கெல்லாம் பல லட்சம் மைல்கள் பயணித்து பல்லாயிரம் கூட்டங்களில் லட்சக்கணக்கானோரிடம் பேசி பெரும் எழுச்சியை ஏற்படுத்தினார். 1962-ம் ஆண்டு ஆல்பெனி இயக்கத்தில் கைது செய்யப்பட்ட போது தண்டனையாக பணம் கட்டவேண்டும் அல்லது சிறைசெல்லவேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டபோது, புரட்சி கவிஞரின் வரிகளுக்கு ஏற்ப ‘மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எம்மை மாட்டிட நினைக்கும் சிறைச்சாலை’ என்று சிறைக்கு சென்றார். வாழ்வில் 25 முறைக்கு மேல் சிறைக்கு சென்றவர். நான்கு முறை வன்முறையாளரால் தாக்கப்பட்டவர். 1963-ல் வாஷிங்டன் நகரில் 2 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் முன்பு மார்ட்டின் லூதர்கிங் ‘எனக்கொரு கனவு உண்டு’ என்கிற வரலாற்று சிறப்பு மிக்க உரை மனிதகுல வரலாற்றில் உன்னதமான ஒன்றாக கருதப்படுகிறது. இப்போராட்டத்தின் வெற்றியாக அரசு பணிந்து, 1965-ல் கறுப்பின மக்களுக்கும் வாக்குரிமை அளித்தது. 1964-ம் ஆண்டு தன்னுடைய 35-வது வயதில் உலக அமைதிக்கான நோபல் பரிசுபெற்றார். பரிசு பணமான, 45 ஆயிரம் அமெரிக்க டாலரை தனக்கென வேண்டாம் என்று கறுப்பின மக்களின் விடுதலை போராட்டத்திற்கு அளித்துவிட்டார். 1968-ம் ஆண்டு டென்னஸி மாநிலத்தில் மெம்பிஸ் என்ற ஊரில் கறுப்பின துப்புரவு தொழிலாளர்களுக்கான போராட்டத்தில் கலந்துகொண்டு அன்று மாலை தனது விடுதியில் உப்பரிகையில் நின்றுக் கொண்டிருக்கும் போது வெள்ளைக்காரன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது மார்ட்டின் லூதர்கிங்குக்கு 39 வயது. உலகம் ஒரு மாபெரும் போராளியை இழந்தது.

No comments:

Popular Posts