Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ஓரினசேர்க்கை: அறிவியல் ரீதியில் குறையாக கருத முடியாது

ஓரினசேர்க்கை: அறிவியல் ரீதியில் குறையாக கருத முடியாது மருத்துவர் வெண்ணிலா இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க தீர்ப்பு ஒன்றினை உச்சநீதிமன்றம் வெளியிட்டு உள்ளது. இணக்கத்தின் பேரில் ஏற்படும் ஓரின சேர்க்கை குற்றமில்லை என அறிவித்துள்ளது. இதுவரை, இந்திய தண்டனை சட்டத்தின் 377-வது பிரிவின்படி, முறையற்ற, இயற்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஆண்-ஆண் மற்றும் பெண்-பெண் உறவுகள் தண்டனைக்குரிய குற்றங்களாக கருதப்பட்டு வந்தன. பழமையான இச்சட்டத்தை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் பல ஆண்டுகளாக போராடி வந்தன. வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வந்தது. கடந்த ஜூலை மாதம் இவ்வழக்கு முடிவுக்கு வந்து தீர்ப்புக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. 2009-ல் டெல்லி உயர்நீதிமன்றம் 377-வது சட்டம் பாலியல் சிறுபான்மையினருக்கு எதிரானது என்று தீர்ப்பளித்தது. ஆனால் பல்வேறு மதத்தினை சார்ந்தவர்கள் இத்தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தினை நாடினர். உச்சநீதிமன்றம், இச்சட்டத்தை மாற்றுவது நீதிமன்றத்தின் வேலை அல்ல; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் செய்யவேண்டிய வேலையென்றுக் கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. இந்நிலையில் இச்சட்ட பிரிவுக்கு எதிராக மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இதில் மனுதாரர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர். மத்திய அரசாங்கமும், தாங்கள் இவ்விஷயத்தில் இறுதி முடிவினை எடுப்பதற்கு உச்சநீதிமன்றத்திடமே விட்டுவிடுவதாக அறிவித்து விட்டது. இச்சூழலில் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகளும் ஒரேமனதாக இச்சட்டம் செல்லாது என்று தீர்ப்பளித்தனர். சர்ச்சைக்குரிய 377-வது பிரிவையும் நீக்கினர். இயற்கைக்கு எதிரான அத்தகைய உறவுகளில் ஈடுபடுவது தவறான ஒன்றுதானே என்று சாமானிய மக்களிடம் கேள்வி எழுவது இயல்பு. ஆனால், அறிவியலின் துணைக்கொண்டு அணுகினால் நமக்கு உண்மை புலப்படும். ஓரினசேர்க்கைக்கு அடிப்படை ஒத்த பாலினத்தவரிடம் ஏற்படும் ஈர்ப்பு. மனிதர் களிடம், மட்டுமின்றி 1,500 வகையான உயிரினங்களிடம் அத்தகைய குணமுண்டு. மனிதர்களில் இரண்டிலிருந்து 11 சதவீதம் வரை இத்தகையவர்கள் இருக்கலாம் என்று உறுதி செய்யப்படாத ஆய்வு ஒன்று சொல்கிறது. ஏன் இவ்வாறு, தனது பாலினத்தின் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது என்கிற ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன. இதுதான் காரணம் என்று அறுதியிட்டுக் எதையும் கூறமுடியவில்லை என்றாலும், மரபணுக்கள், குரோமோசோம் மற்றும் பிற சமூக காரணங்கள் தீர்மானிக்கின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதுவரை கண்ட முடிவுகளில் இன்றியமையாதது, அத்தகையவர்களின் உடல் அமைப்பில், குறிப்பாக, மரபணுக்களில் உள்ள மாறுதல்களாகும். இதற்கு ஒரு முக்கியக் காரணம், அதிக அளவில் சகோதரர்களுடன் பிறப்பவர்களுக்கு ஏற்படும் விளைவு என்று கூறப்படுகிறது. இன்னொரு முக்கியக் காரணம், தாயின் கருவில் உருவாகும் ஆண் குழந்தை பிற பாலினத்தினரை ஈர்க்கும் தன்மைக்கொண்ட வேதிப்பொருட்களை சுரக்கும்போது, சிலவேளைகளில், தாயின் உடலிலுள்ள தடுப்புசக்தி அதனை அழித்துவிடுகிறது. குழந்தை வெளிவந்து இவ்வுலகத்தில் மனிதனாக வளரும்போது, கருவில் உண்டான அச்சிதைவு அவனுக்கு பிற பாலினத்தவரிடம் ஏற்படும் ஈர்ப்பினை தடுத்து, ஒத்த பாலினத்தவரோடு கூடுவதற்கு வழிவகுக்கிறது. இது அவனாக விரும்பி ஏற்படுத்திக் கொண்ட முடிவு அல்ல. அவன் கருவிலிருக்கும் போது அவன் விரும்பாமலேயே திணிக்கப்பட்ட ஒன்று. எப்படி சிலருக்கு இடது கைப்பழக்கம் உள்ளதோ அதுபோலத்தான் இதுவும். இதனை குறையாக கருதமுடியாது. எது எவ்வாறு இருப்பினும், பிறக்கும்போது தங்களது உடல் அமைப்பில் உண்டான மாற்றத்திற்கு பாலியல் சிறுபான்மையினர் பொறுப்பேற்க முடியாது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்ட ஜெர்மனிய பழமொழி போல, ‘நான் என்னவாக இருக்கிறேனோ, அதுவே நான். என்னை இப்படியே ஏற்றுக் கொள்’ என்பதற்கு ஏற்ப நாமும் இச்சமூகமும் அவர்களை கேலிப் பொருளாகப் பார்க்கக்கூடாது. அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான். அவர்களுக்கும் வாழ்வதற்கு இச்சமூகத்தில் உரிமையுள்ளது என்று செயல்பட்டால், அது உள்ளபடியே சரியான சமூக நீதியாகும். ‘கடந்த காலத்தில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு வரலாறு மன்னிப்பு கேட்க வேண்டிய நிலையில் உள்ளது’ என்று ஐந்து நீதிபதிகளின் ஒருவரான இந்து மால்கோத்ரா என்கிற பெண் நீதிபதியின் கருத்து குறிப்பிடத்தக்கது. உலகெங்கும் ஓரின சேர்க்கைக்கு காலங் காலமாக எதிர்ப்பு இருந்து வருகிறது. மதம், சமூக அமைப்புகள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அத்தகையவர்கள் தண்டிக்கப்பட்டனர், கொடூரமாக கொல்லப்பட்டனர். மனிதனின் அறிவு வளர, அறிவியலில் வளர்ச்சிகள், குறிப்பாக, உடலியல் குறித்த புதிய பார்வைகளும், கண்டுபிடிப்புகளும் பெருகும்போது, இதுகாறும் மக்கள் தங்களுக்குள் கட்டமைத்திருந்த மூடக் கருத்துகள் உடைய தொடங்குகின்றன. உலகின் வல்லரசு நாடான, அமெரிக்காவில் பல்வேறு போராட்டங்கள், விவாதங்களை தொடர்ந்து ஒபாமா அதிபராக இருந்தபோது ஒரே பாலினத்தவர் திருமணம் செய்துகொள்வதில் தவறில்லை என்கிற சட்டத்தை இயற்றினார். பல்வேறு வளர்ந்த நாடுகளில் இன்றைக்கு ஓரின சேர்க்கை மற்றும் ஒத்த பாலினத்தவர் திருமணம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகிவிட்டது. பெரும்பான்மை ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் குற்றமாகவும், இதைக்குறித்து பேசவும், விவாதிக்கவும் தயங்கி வந்த சூழலில், இந்தியாவில் இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்ற இத்தகைய மாறுதல், அதற்கு காரணமாக விளங்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எல்லா வகையிலும் சிறப்புமிக்க ஒன்று.

கல்விச்சோலை - kalvisolai Articles

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement