Thursday 30 August 2018

அருள் வடிவான அன்னை அன்னை தெரசா

அருள் வடிவான அன்னை அன்னை தெரசா எழுத்தாளர் எஸ்.பழனிதுரை இன்று (ஆகஸ்டு 26-ந்தேதி) அன்னை தெரசா பிறந்த நாள். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பது பழமொழி. தனது அயராத சேவைகளால், ஒவ்வொரு ஏழையின் முகத்திலும் கடவுளை கண்டவர் அன்னை தெரசா. தொழுநோயாளிகளுக்கு அவர் செய்த சேவையை கண்டு உலகமே போற்றிப் புகழ்ந்தது. 26-8-1910 அன்று யூகோஸ்லேவியா நாட்டில் உள்ள ஸ்கோப்ஜி நகரில் பிறந்தார். அன்னை தெரசாவின் இயற்பெயர் ஆக்னஸ் கோஞ்செ பொயாஜியூ. கோன்ஸா என்ற செல்லப்பெயரும் இவருக்கு உண்டு. 12 வயதிலேயே சமூகச் சேவை செய்வது பற்றி சிந்திக்க தொடங்கினார். குறிப்பாக இந்தியா சென்று சமூக சேவையில் ஈடுபட அவர் விரும்பினார். தனது 18-வது வயதில் அயர்லாந்தில் உள்ள சிஸ்டர்ஸ் ஆப் லொரேட்டோ என்கிற கன்னியாஸ்திரிகள் இல்லத்தில் சேர்ந்து, குழந்தைகள், நோயாளிகள், முதியவர்கள், ஏழைகள் என அனைவருக்கும் சேவை புரிவதற்கான நுணுக்கங்களை கற்றுக்கொண்டார். பிறகு அவரின் விருப்ப படி, கொல்கத்தாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். 1929-ம் ஆண்டு கொல்கத்தா திருச்சபையை வந்தடைந்தார். அங்குதான் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சகோதரி தெரசா மார்டின் நினைவாக தனது பெயரை தெரசா என்று மாற்றிக்கொண்டார். டார்ஜிலிங்கில் உள்ள லொரேட்டா இல்லத்தின் பள்ளியில் அன்னை தெரசாவுக்கு ஆசிரியர் பணி வழங்கப்பட்டது. அவர் இந்தியாவை தன் தாய்நாடாக ஏற்க தொடங்கினார். இந்தியையும் மேலோட்டமாக கற்றுக்கொண்டார். இதற்கிடையே மீண்டும் கொல்கத்தாவுக்கு பணிமாறுதல் கிடைத்தது. அங்கு கல்வியோடு சமூக சேவையும் செய்தார். பள்ளியில் பணியாற்றுவதுடன் நின்றுவிடாமல், பிள்ளைகளை குளிப்பாட்டுவது, கழிவுநீர் ஓடை சுத்தம் செய்வது என பல சேவைகளை மற்ற ஆசிரியர்களோடு இணைந்து செய்ய தொடங்கினார். குறுகிய காலத்தில் பள்ளி முதல்வர் பொறுப்பை ஏற்றார். வெள்ளை ஆடையுடன் அழுக்கான குடிசைப் பகுதிகளுக்குச் சென்று அங்கிருந்த மக்களைப் பார்த்து பேசினார். அவர்களுடைய நல்வாழ்வுக்காகத் தன்னால் முடிந்ததைச் செய்து தருவதாக கூறினார். 1950-ம் ஆண்டு மிஷனரிஸ் ஆப் சாரிட்டிஸ் என்ற அறக்கட்டளையை தொடங்கினார். இதன் மூலம் பசியால் வாடியவர்கள், வீடின்றி தவித்தவர்கள், பார்வை இழந்தவர்கள், சமூகத்தால் புறந்தள்ளப்பட்டவர்களை அடையாளம் கண்டு உதவிகளை செய்து வந்தார். புறக்கணிக்கப்பட்ட முதியவர்களுக்கு கருணை இல்லம் உருவாக்க விரும்பினார். அரசாங்க உதவியுடன் ஹூக்ளி நதிக்கரையின் அருகில் கிடைக்கப்பெற்ற ‘நிர்மல் ஹ்ருதய்’ என்ற கட்டிடத்தை முதியோர் காப்பகமாக மாற்றினார். ‘சிசுபவன்’ தொடங்கி ஊனமுற்ற குழந்தைகள், மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள், குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட குழந்தைகளை மீட்டு காப்பகத்துக்கு கொண்டு வந்து பராமரித்தார். 1957-ம் ஆண்டு முதல் முறையாக தொழுநோயாளிகளுக்கான நடமாடும் மருத்துவமனையைத் தொடங்கினார். பிறகு அதே ஆண்டில் தொழுநோய் மருத்துவமனை ஒன்றையும் ஆரம்பித்தார். அங்கு இலவசமாக உணவு, மருந்து வழங்கப்பட்டன. அந்த மருத்துவ மனைக்கு ‘காந்தி பிரேம் நிவாஸ்’ என்று பெயரிடப்பட்டது. தொழுநோயாளிகளின் தினத்தை அறிவித்து, அந்நாளில் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரசாரக் கூட்டங்களை நடத்தினார். அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, தெரு தெருவாகப் போய் யாசகம் கேட்டு தனது சேவை மையங்களுக்கு நிதி திரட்டுவதை தெரசா வழக்கத்தில் வைத்திருந்தார். ஒருமுறை ஒரு கடைக்கு முன் நின்று யாசகம் கேட்டுக் கொண்டு இருந்தார். வெற்றிலைப் போட்டுக்கொண்டு இருந்த அந்த கடைக்காரர், இதை பார்த்தும் பார்க்காதது போல இருந்தார். கடைக்காரரிடம் இருந்து எதையாவது வாங்கிவிட வேண்டும் என்பதில் தெரசா உறுதியாக இருந்தார். தெரசாவை கோபமாக பார்த்த கடைக்காரர், அவர் யாசகம் கேட்டு நீட்டிய கையில் எச்சிலைத் துப்பினார். சற்றும் மனம் தளராத அன்னை தெரசா, ‘மிக்க நன்றி. நீங்கள் கொடுத்தது எனக்கு. இனி என் விடுதியில் இருக்கும் அனாதை குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள்’ என்று கேட்டார். இதை கேட்டு மனம் உடைந்த கடைக்காரார், கல்லாப்பெட்டியில் இருந்த மொத்த பணத்தையும் எடுத்து தெரசா நீட்டிய இரு கைகளிலும் வைத்து விட்டார். இப்படி தெரசாவின் ஒவ்வொரு வெற்றியின் பின்னணியிலும் பல்வேறு அவமானங்கள் இருந்தன. ஒருமுறை போப் ஆண்டவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, தனது சுற்றுப்பயணத்திற்காக பயன்படுத்திய விலையுயர்ந்த காரை அன்னை தெரசாவுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். சொகுசு காரில் பயணம் செய்வதற்கு சிறிதளவும் விருப்பமில்லை ஆனாலும், அதனை மறுக்கவும் விருப்பமில்லை. எனவே புன்னகையோடு ஏற்றுக்கொண்டார். அடுத்த நிமிடமே அந்தக் காரை ஏலம் விடுமாறு கோரிக்கை விடுத்தார். அந்தப் பணத்தை அறக்கட்டளை நிதியில் சேர்த்துக் கொண்டார். இது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த சம்பவம். இதைப் போன்று தாம் பெறும் அனைத்து பரிசுகளையும் ஏலம்விட்டு அந்தப் பணத்தை அறக்கட்டளை நிதியில் சேர்த்தார். தனது முழுநேரமும் ஏழைகளுக்காகவும், ஏழைக் குழந்தைகளின் கல்விக்காகவும், குடிசை வாசிகளின் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துக்காவும் செலவழித்தார். இதனால் அனைவரும் அன்னை தெரசாவை ‘குடிசை சகோதரி’ என்று அழைக்க ஆரம்பித்தனர். உலகம் முழுவதும் மொத்தம் 123 நாடுகளில் 4 ஆயிரம் தன்னார்வ தொண்டர்களோடு கூடிய 600 சேவை மையங்கள் உருவாக்கப்பட்டன. 5-9-1997 அன்று இரவு தெரசாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவருடைய உயிர் பிரிந்தது. அன்னை தெரசாவின் சேவையை பாராட்டி ஏராளமான விருதுகள் வழங்கப்பட்டன. அமைதிக்கான நோபல் பரிசு, பத்ம ஸ்ரீ, 23-வது போப் ஜானின் அமைதி விருது, குட் சமரிட்டன் விருது, கென்னடி விருது, சர்வதேச புரிந்துணர்வுக்கான ஜவஹர்லால் நேரு விருது, டெம்பிள்டன் விருது உள்பட பல விருதுகள் தெரசாவுக்கு வழங்கப்பட்டன. தன் சேவையால் உலக மக்களின் மனதில் இன்றும் அன்னை தெரசா வாழ்ந்துகொண்டு இருக்கிறார்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts