Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

வாரிசு அரசியல்: கருத்து முரண்கள்!

வாரிசு அரசியல்: கருத்து முரண்கள்! By பெ. சிதம்பரநாதன் | ஜவாஹர்லால் நேருவின் குடும்பம் பாரதத்தின் புகழ் மிக்க குடும்பம். அந்த ஒரே குடும்பத்தில் இருந்து நேரு, விஜயலட்சுமி பண்டிட், இந்திரா, ராஜீவ், சோனியா, ராகுல், பிரியங்கா, சஞ்சய், மேனகா, வருண் என பிரபலமான அரசியல் தலைவர்கள் பலர் உருவாகியுள்ளனர். ஆனால், தொழில் அதிபர்களோ, விஞ்ஞானிகளோ ஏனோ உருவாகவில்லை. நேருஜியை இப்படித்தான் உருவாக்க வேண்டுமென்று அவருடைய தந்தை மோதிலால் நேரு திட்டமிட்டே உருவாக்கினார். நேருவின் சம காலத்தவர்களான நேதாஜியையோ, வல்லபபாய் படேலையோ, ஜெயப்பிரகாஷ் நாராயணனையோ அவர்களுடைய குடும்பங்கள் இப்படித் திட்டமிட்டு உருவாக்கியதாகத் தெரியவில்லை. சுதந்திர இந்தியாவில் சுமார் 17 ஆண்டுகள் நேருஜி தொடர்ந்து பிரதமராக இருந்தவர். ஜனநாயக ஆட்சியில் இப்படி நேர்ந்தது ஒரு நகைமுரண். மூன்றாவது முறை பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை நேருஜியே நிராகரித்திருந்தால், மக்களாட்சி முறைக்கு மகத்தான மரியாதையை அது ஏற்படுத்தியிருக்கும். அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகளில் இரண்டு முறைக்கு மேல் ஒருவர் பதவியில் தொடர்வது அனுமதிக்கப்படுவதில்லை. நேருவைத் தனது அரசியல் வாரிசு என்று கூறிய காந்திஜி, சுதந்திர இந்தியாவில் எப்பதவியையும் ஏற்க விரும்பவில்லை. தனது நான்கு பிள்ளைகளில் எவரையும் அரசியல்வாதியாக்கவும் அவர் விரும்பவில்லை. நேருஜிக்கு இப்படிப்பட்ட முன்மாதிரி இருந்தும்கூட நான்கு முறை அவரே பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். இதை தட்டிக் கேட்க தைரியமுள்ள தலைவர்கள் அப்போது இல்லை. நேருஜிக்குப் பிறகு அக்குடும்பத்தின் இந்திரா காந்தி 11 ஆண்டுகள் பிரதமராக இருந்தார். அவருடைய பதவிக்குச் சட்டச்சிக்கல் நேர்ந்தபோது உடனடியாக நெருக்கடி நிலை என்ற எமர்ஜென்சியைப் பிரகடனப்படுத்தி, ஜனநாயகத்தின் எதிர்த்திசையில் பயணிக்கத் தொடங்கினாரே தவிர, தான் பதவி விலகி இன்னொருவரை அந்தப் பதவியில் அமர்த்த அவர் தயாராக இல்லை. இந்திரா காந்தியின் அகால மரணம் காரணமாக அவருடைய மூத்த மகன் ராஜீவ் பிரதமரானார். ராஜீவின் அகால மரணம் காரணமாக அவருடைய மனைவி சோனியா காந்தி, பிரதமர் பதவிக்கும் மேலான கட்சித் தலைவர் பதவியில் அமர்ந்தார். 2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் சோனியாவின் ஆட்சி, பிரதமர் மன்மோகன் சிங் பெயரில் நீடித்தது. அப்போது சோனியா விருப்பத்தின்படிதான் மக்களவை சபாநாயகராக மீரா குமாரும், குடியரசுத் தலைவராக பிரதிபா பாட்டீலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நேருஜியின் தந்தை மோதிலால் நேரு, காங்கிரசிலிருந்தபோதே சுயராஜ்யக் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவர். காங்கிரஸ் கட்சியின் விடுதலைக் கோரிக்கையை அது பலவீனப்படுத்தியது. ஏனெனில், காந்திஜியின் அன்றைய காங்கிரஸ், விடுதலைக்கு முன்பு நடைபெறும் தேர்தலில் போட்டியிடக்கூடாதென்ற கொள்கையை வகுத்திருந்தது. மோதிலால் நேருவோ, தேர்தலில் போட்டியிடுவதை ஆதரித்தவர். மகாத்மா காந்தியின் படுகொலைக்குப் பிறகு இந்திரா, ராஜீவ் ஆகிய இருவரின் படுகொலைகள் தேசத்தையே உலுக்கின. இதற்கு முன்பு மகாத்மாவின் படுகொலையும் தேசத்தை உலுக்கிய கொலைதான். காந்திஜியினுடைய குடும்பத்தார் எவரும் அதனால் பலன் பெறவில்லை என்பது எல்லாருக்கும் தெரியும். இந்திரா மற்றும் ராஜீவ் படுகொலைகள் எதிர்பாராத விதமாக நடந்தவை. மகாத்மாவின் படுகொலையோ, அவரே எதிர்பார்த்ததுதான். நேருஜி குடும்பத்தாரின் ஆட்சி, நேருவுக்குச் சமமான வல்லபபாய் படேலுடைய புகழையோ, நேதாஜி, அம்பேத்கார் போன்றோரின் புகழையோ பரப்பவில்லை. நேருவின் வம்சத்தில் பிறந்த காரணத்தாலேயே ஒருவரை இளவரசராக ஏற்கும் அளவுக்குப் பாமர மக்கள் மூளைச்சலவைக்கு உள்ளாகினர். 2014 நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சித் தகுதிக்கான எம்.பி.களைக்கூடப் பெற முடியாது தத்தளித்தது. சென்ற நான்கு ஆண்டுகளில் அக்கட்சி தனது சரிவை ஜீரணித்துக்கொள்ள முடியாமல் பல சபலங்களுக்கும் பலியாகியுள்ளது. ராகுல் காந்தி தன்னை ஒரு ஹிந்து எனக் காட்டிக் கொள்ளுமாறு குஜராத் மற்றும் கர்நாடக மாநிலத் தேர்தல் சமயத்தில் ஹிந்துக் கோவில்களுக்குச் சென்றார். அங்கு போய் பூஜைகள் செய்தார். குஜராத்தில் அவர் பூணூல் அணிந்துகொண்டு தன்னை ஒரு பிராமணராக அடையாளப் படுத்திக்கொள்ள முற்பட்டது, கடும் கண்டனத்துக்கும், கேலிக்கும் ஆளானது. ராகுல், குஜராத்தில் படேல் சாதியினருக்கு பகிரங்க ஆதரவு தந்தார். கர்நாடகத்தில் லிங்காயத்து ஜாதியைச் சிறுபான்மை மதமாக்கினார். நேரு குடும்பத்தினர் இப்படி ஜாதி, மத அரசியலில் ஈடுபடுவது புதிதல்ல. அயோத்தியில், பாபர் மசூதியில் ராமர் வழிபாடு நடத்த அனுமதித்ததும், முதலாவது கரசேவை நடந்ததும் ராஜீவ் காந்தியின் அனுமதியுடன்தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் அழைப்பின்பேரில் 11.9.2017-இல் அங்கு சென்ற ராகுல் காந்தி, இந்திய அரசியலில் வாரிசு அரசியல் பற்றிய அமெரிக்க மாணவர்களின் கேள்விக்குப் பதில் கூறுகையில், இந்திய அரசியல் கட்சிகளில் வாரிசு முறை இருக்கத்தான் செய்கிறது என்றும், அரசியலில் மட்டுமல்லாமல், தொழில் துறையில் அம்பானிகள் வாரிசுகளாக வந்தவர்கள் என்றும், திரைப்படத் துறையில் அமிதாப்பச்சனின் வாரிசுகள் இருப்பதையும் சுட்டிக்காட்டி, தன்னையும் காங்கிரஸ் கட்சியின் ஒரு வாரிசுதான் என்பதை ஒப்புக்கொண்டு பேசினார். அதனை வலுப்படுத்தும் வகையில் அகிலேஷ் யாதவையும், மு.க. ஸ்டாலினையும் உதாரணமாகக் காட்டினார். இந்தியாவில் நடப்பது மன்னர் ஆட்சியல்ல. மக்கள் ஆட்சி. இதில் காந்தியும் காமராஜரும், கக்கனும், அப்துல் கலாமும், படேலும், பட்நாயக்கும் இடம்பெறலாமே தவிர, திருவாங்கூர் மகாராஜாவோ, பைக்னர் மன்னரோ இடம் பெறவே முடியாது. அப்படி இடம்பெற விரும்பினால், தேர்தலில் போட்டியிட்டு இடம்பெற வேண்டுமே தவிர, வாரிசு அடிப்படையில் இடம்பெற முடியாது. 2017-இல் வாரிசு அரசியலைத் துடிப்புமிக்க வாலிபரான ராகுல்காந்தி வரவேற்றுப் பேசியது அவருடைய மனப்போக்கு எத்தகையது என்பதையே காட்டியது. அவருடைய தாயார் சோனியா, காங்கிரஸ் கட்சியின் தலைவராக, தனக்குப் பிறகு தனது மகன்தான் என்று முடிவெடுத்து அவரைத் தலைவராக நியமிக்கவும் செய்தார். மன்மோகன் சிங், கபில் சிபல், குலாம்நபி ஆசாத், ஏ.கே. அந்தோணி, ப. சிதம்பரம் ஆகியோர் அதனை வரவேற்குமாறும் செய்தார். காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் முன்மொழிந்து வழிமொழிந்து ராகுல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால்கூட அப்பதவிக்கு ஒரு மரியாதை அமைந்திருக்கும். சக தலைவர்களின்மீது சோனியாவுக்கு அப்படிப்பட்ட நம்பிக்கை வரவில்லை என்பதால்தான், அவரே தனது மகனை நியமிக்க நேர்ந்தது. ஒரு கட்சிக்குள் ஏற்பட்ட இந்த நம்பிக்கை வீழ்ச்சி, அக்கட்சி தேர்தலில் அடைந்த தோல்வியைவிடத் துயரமானது. நேருஜி தொடங்கி ராகுல்வரை இது நேர்ந்துவிட்டது. இதே நேருஜி குடும்பத்தின் இன்னொரு சகோதரர் சஞ்சய் காந்தியின் மகன் வருண், ராகுலுக்குத் தம்பி முறையாவார். அவருடைய தாயார் மேனகா காந்தி, பிரதமர் மோடியின் அமைச்சரவையில் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராகப் பதவி வகிக்கிறார். மேனகாவுக்குப் பதவியளித்து அவரைச் சிறப்பித்த பி.ஜே.பி. ஆட்சி, மேனகாவின் மகன் வருண் காந்திக்கு எம்.பி.யாக மட்டுமே போட்டியிட அனுமதித்தது. பி.ஜே.பி. கட்சிக்குள் பிரகாசமான பதவிகளுக்குள் அவரும் பிரவேசிக்க முடியவில்லை. பி.ஜே.பி. வருண் காந்தியை வாரிசாகப் பார்க்காமல் நேருஜி குடும்பத்திற்குத் தரப்பட்ட மரியாதையாக மட்டுமே பார்த்தது. பி.ஜே.பி. வருணைக் கையாண்டதுபோல, காங்கிரஸ் ராகுலைக் கையாண்டிருந்தால், இந்தியாவின் தார்மிக நெறியை உலகமே போற்றியிருக்கும். அப்படிக் கையாளப்படுவதை ராகுல் காந்தியும் ரசித்து வரவேற்க முன்வந்திருக்க வேண்டும். தன்னைவிடக் கட்சி பெரிதென்றும் கட்சியைவிட தேசம் பெரிதென்றும் கருதும் மனோபாவம் உள்ளவர்களுக்கே அது சாத்தியமாகும். இந்தப் பின்புலத்தில், பெங்களூரில் சென்ற 19.6.2018-இல் தொழில்துறைக் கூட்டமைப்பில் பேசிய வருண் காந்தி, வாரிசு அரசியலைக் கடுமையாக விமர்சித்துள்ளார். சாமானிய மக்கள் மத்தியில் உருவாகியுள்ள திறமைசாலிகளுக்கான வாய்ப்புகள் வாரிசுகளால் தடைபட்டுப் போகின்றன' என்று பொதுத் தளத்தில் நின்று முழங்கியுள்ளார். ராகுல் காந்தியின் அணுகுமுறைக்கு நேர் முரண்பட்ட எதிர்த்திசையில் வருண்காந்தியின் பேச்சு எதிரொலித்திருப்பது, அவருடைய சுயமரியாதையைச் சுடர்விடச் செய்துள்ளது. அதைவிட, அவர் சார்ந்த கட்சியை மேன்மைப் படுத்தியுள்ளது. மதச்சார்புள்ள கட்சியென மலினப்படுத்தப்படுகிற கட்சியிலிருந்து வாரிசு முறைக்கு எதிரான கருத்தைச் சம்பந்தப்பட்டவரே வாக்குமூலமாக அளித்துள்ளது சிந்திக்கத்தக்கது. மதச்சார்பற்ற சக்திகள் என மார்தட்டிக் கொள்கிற அரசியல் கட்சிகள் வருண் காந்தியின் வாக்குமூலத்தை வரவேற்க முன்வரவில்லை. வாரிசு அரசியலை வருண் ஆட்சேபிக்கிறார்; ராகுலோ ஆமோதிக்கிறார். கட்டுரையாளர்: பத்திரிகையாளர்.

கல்விச்சோலை - kalvisolai Articles

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement