Saturday 7 July 2018

கலங்கடிக்கும் கள்ள நோட்டுகள்!

கலங்கடிக்கும் கள்ள நோட்டுகள்! By பா. ராஜா | rupees அண்மையில் கோவையில் ரூ.1.18 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வண்ண நகல் எடுத்து புழக்கத்தில் விட்டபோது, சிலர் சிக்கிக் கொண்டுள்ளனர். நாடு முழுவதும் போலி ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது அதிகரித்து வருகிறது. போலி ரூபாய் நோட்டுகளை அதிகம் மாற்றும் இடங்களாக சந்தைகள் விளங்குகின்றன. காவல் துறையினர் அவ்வப்போது போலி ரூபாய் நோட்டுக் கும்பலைக் கைது செய்தாலும், புதிது புதிதாக முளைத்து வருகின்றனர். சாதாரண மக்களையே இதற்குக் கருவியாக இக்கும்பல் பயன்படுத்தி வருகிறது. இந்தியாவில் புழக்கத்தில் விடப்பட்டுள்ள இந்திய போலி கரன்ஸி ரூபாய் நோட்டுகளின் மதிப்பு சுமார் ரூ.400 கோடி என 2016 நவம்பரில் வெளியிடப்பட்ட ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதற்கு முந்தைய நான்கு ஆண்டுகளிலும் இதே தொகையே தொடர்ந்து இருந்து வந்துள்ளது என தேசிய குற்றவியல் ஆவண நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை, போலி ரூபாய் நோட்டுகள் சமூக விரோதச் செயல்களுக்கே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது, ஆயுதங்கள் கடத்தல், போதைப் பொருள்கள் கடத்தல் உள்ளிட்ட செயல்களுக்குப் பயன்படுத்தி வருகின்றனர். போலி ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்து வருவது, நாட்டின் பணவீக்க விகிதம் அதிகரிக்கக் காரணமாகிறது. இதனால், அரசுகளின் வருவாய் இனங்களில் பாதிப்பு ஏற்படுகிறது என்று பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். போலி ரூபாய் நோட்டுகள் உள்நாட்டில் அச்சிடுவதைவிட அதிகமாக, அண்டை நாடுகளான நேபாளம், வங்க தேசம், தாய்லாந்து, மலேசியா, இலங்கை, ஐக்கிய அரபு குடியரசு ஆகிய நாடுகளின் மூலம் இந்தியாவுக்கு வருகின்றன. குறிப்பாக, இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் வகையில், சமூக விரோத நடவடிக்கைகளை மேற்கொள்ள இவை அனுப்பப்படுகின்றன. தற்போது சீனாவிலிருந்து நேபாளம் வழியாகவும் போலி ரூபாய் நோட்டுகள் இந்தியாவுக்கு வருகின்றனவாம். 2016, நவம்பர் 8-ஆம் தேதி ரூ.500, ரூ.1,000 மதிப்பிலான நோட்டுகள் மதிப்பிழக்கச் செய்தது, போலி ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை ஒழிப்பதற்குத்தான் எனத் தெரிவிக்கப்பட்டது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், ஒருவரிடம் 1,000 ரூபாய் நோட்டுகள் இருக்கிறது என்றால், அவற்றில் 4 நோட்டுகள் போலியானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், 2016-ஆம் ஆண்டின் ஆய்வின்படி, 250 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தால், அவற்றில் 16 நோட்டுகள் மட்டுமே போலியானவை எனக் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது. ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தபோது, சுமார் 86 சதவிகித அளவுக்கு இவை ஆக்கிரமித்திருந்தன. 2015-ஆம் ஆண்டில் ரூ.43.8 கோடி மதிப்பிலான 8 லட்சத்து 80 ஆயிரம் போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தேசிய குற்றவியல் ஆவண நிறுவனத்தின் குறிப்பு தெரிவிக்கிறது. அதாவது, ஒவ்வோர் ஆண்டும் ரூ.70 கோடி மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுகின்றன. இவற்றில் மூன்றில் ஒரு பங்கு தொகையையே புலனாய்வு உள்ளிட்ட பல்வேறு துறையினர் கண்டறிகின்றனர். போலி ரூபாய் நோட்டுகளைக் கண்டறிவதில் வர்த்தக வங்கிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. (வங்கிக் காசாளர் எந்த கண்ணோட்டத்தில் ஒரு ரூபாய் நோட்டைப் பார்ப்பார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்). போலி ரூபாய் நோட்டுகள் பல்வேறு வகைகளில் தயாரிக்கப்படுகின்றன. புகைப்பட முறை, கையால் வடிவமைக்கப்பட்ட பிளாக்குகள், லித்தோகிராபிக் முறை, கணினி, ஸ்கேனிங் முறை ஆகிய பல்வேறு முறைகளின் மூலம் போலி ரூபாய் நோட்டுகளைத் தயாரிக்கின்றனர். அசல் ரூபாய் நோட்டில் உள்ள ஓரிரு அம்சங்கள் வேறுபடும்போது அவை போலி ரூபாய் நோட்டுகள் எனக் கண்டறியப்படுகின்றன. இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க பயங்கரவாதிகள் போலி ருபாய் நோட்டுகளை முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். உயர் மதிப்பு ருபாய் நோட்டுகள் மதிப்பிழக்கச் செய்யப்பட்ட சமயத்தில், பணப்புழக்கம் இன்றி பயங்கரவாதிகள் மிகவும் சிரமப்பட்டனர் என்பது அனைவரும் அறிந்ததே. மால்டா, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள எல்லையோர மாவட்டம். இப் பகுதியானது, போலி ரூபாய் நோட்டுப் புழக்கத்தின் கேந்திரமாக விளங்குகிறது. வங்க தேசத்தில் அச்சிடப்பட்டு, போலி இந்திய ரூபாய் நோட்டுகள் இந்த எல்லைப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் நுழைகின்றன. இப் பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோரின் வாழ்வாதாரம் போலி ரூபாய் நோட்டுகளை மாற்றுவதன் மூலம்தான். இப் பகுதி மக்கள் தூதஞ்சலர்களாக (கூரியர்) செயல்பட்டு வருகின்றனராம். இப்படி அரசுக்கே சவால் விடும் அளவுக்கு, போலி ரூபாய் நோட்டுப் புழக்கம் அதிகரித்து வருகிறது இந்தியப் பொருளாதாரத்துக்கு சவால் விடுவதைப் போல உள்ளது. போலி ரூபாய் நோட்டுகளை அச்சிடுபவர்களுக்கும், புழக்கத்தில் விடுபவர்களுக்கும் கடும் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். மேலும், வங்கி ஏ.டி.எம்.கள் மூலம் பெறப்படும் பணத்திலேயே போலி ரூபாய் நோட்டுகள் கலந்துள்ளன. இதைத் தடுக்க, வங்கி ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். போலி ரூபாய் நோட்டுகளைக் கண்டறிவது எப்படி என்பதை சிறு வியாபாரியும், பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். கால தாமதம் வேண்டாம்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts