Saturday 7 July 2018

கை கோக்கும் காங்கிரசும் பா.ஜ.க.வும்

கை கோக்கும் காங்கிரசும் பா.ஜ.க.வும் By பழ. நெடுமாறன் | மகாவீரரும், கௌதம புத்தரும், காந்தியடிகளும் மனித நேயத்தின் அடிப்படையில் மானுடம் உய்வதற்கான உயர்ந்த நெறிமுறைகளை வகுத்தும் தங்களின் வாழ்வில் கடைப்பிடித்தும் வழிகாட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். மானுட சமுதாயத்தை உய்விக்க வழிகாட்டிய இந்தியா, இன்று மனித உரிமைகளை அப்பட்டமாக மீறிய நாடாக குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் காஷ்மீர் பிரச்சனையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் ஆயுதப் படைகள் தொடர்ந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளது. 2016ஆம் ஆண்டு சூலை 8ஆம் தேதி அன்று பர்கான் வானி என்னும் தீவிரவாதத் தலைவர் இந்திய பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் பகுதியிலும் போராட்டங்கள் வெடித்தன. இப்போராட்டங்களை ஒடுக்குவதற்கு இரு நாடுகளைச் சேர்ந்த ஆயுதப்படைகள் களமிறங்கி மக்களைக் கொன்று குவித்தன. 2016 சூலை 16-ஆம் தேதி, ஐ.நா. மனித உரிமை ஆணையம் இந்திய-பாகிஸ்தான் அரசுகளின் பிரதிநிதிகளை அழைத்து காஷ்மீரில் உள்ள நிலைமையை ஆராய்வதற்கு அனுமதிக்கவேண்டும் என வேண்டிக்கொண்டபோது இந்திய அரசு இவ்வேண்டுகோளை ஏற்க மறுத்துவிட்டது. இந்தியா அனுமதித்தால் தானும் அனுமதிப்பதாக பாகிஸ்தான் அரசு கூறியது. எனவே வேறு வழியின்றி தான் கண்டறிந்த உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு ஐ.நா. மனித உரிமை ஆணையம் 2018 சூன் 14-ஆம் நாள் அளித்த விசாரணை அறிக்கையில் இந்திய ஆயுதப்படைகள் அளவுக்கதிகமான அடக்குமுறைகளையும், சட்டத்திற்குப் புறம்பான முறையிலும் செயல்பட்டு பலரின் படுகொலைக்குக் காரணமாக இருந்தது எனக் கூறி அதற்கான ஆதாரங்களையும் கொடுத்துள்ளது. இந்தியப் பாதுகாப்புப் படை பெல்லட் தோட்டாக்களைப் பயன்படுத்தி மக்களைச் சுட்டுள்ளது. ஒவ்வொரு தோட்டாவிலும் 500 முதல் 600 வரை பெல்லட் என்னும் வகை சிறு ஈய குண்டுகள் இருக்கும். தோட்டாக்களிலிருந்து சிதறும் இந்த சிறு குண்டுகள் வேகமாகப் பாய்ந்து மக்களை படுகாயத்திற்குள்ளாக்கும். முகம், கண், தலை போன்ற பகுதிகளில் இக்குண்டுகள் பாய்ந்தால் அவர்கள் உயிரிழப்பது உறுதி. ஆனால், கூட்டத்தைக் கலைப்பதற்காகவே பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்துவதாக மத்திய காவல்படை கூறுகிறது. காஷ்மீர் மாநில மனித உரிமை ஆணையம் 2016-ஆம் ஆண்டில் மட்டும் 1726 பேர் இக்குண்டுகளால் படுகாயமடைந்துள்ளனர் என்று கூறியுள்ளது. 2018 ஜனவரியில் காஷ்மீர் சட்டமன்றத்தில் முதல்வர் மெகபூபா முப்தி 6121பேர் இக்குண்டுகளால் படுகாயமடைந்ததாகவும், அதில் 728பேருக்கு கண்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவித்தார். இவர்களில் ஏராளமானவர்கள் கண் பார்வையை இழந்துவிட்டனர். இக்குண்டுகளால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் மனநிலை இழப்புக்கு ஆளாகி உள்ளனர். காவல்துறை ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு மக்கள் கிளர்ச்சிகளை ஒடுக்குவதற்குக் கடைப்பிடிக்கப்படவேண்டிய விதிமுறைகளை வகுத்துள்ளது. அந்த விதிமுறைகளில் பெல்லட் குண்டுகளும், அதைச் சுடும் ஷாட் துப்பாக்கியும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சமின்றி இந்திய ஆயுதப்படைகள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செயல்படுகின்றன. இதற்கு அம்மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகாரச் சட்டமே காரணமாகும் (1990). இச்சட்டம் குறித்து மறு ஆய்வு செய்வதற்காக குழு ஒன்றை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இக்குழு "இந்தச் சட்டம் ஒடுக்குமுறையின் சின்னமாகும். வெறுப்பு, பாகுபாடு காட்டுதல் மற்றும் அத்துமீறல் ஆகியவற்றின் அடையாளமாகும்' எனக் கடுமையாகச் சாடியது. சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இச்சட்டத்தை ரத்து செய்யவேண்டுதன் மூலம் மக்களுக்கு நீதி வழங்க முன்வருமாறு ஐ.நா. மனித உரிமை ஆணையம் வேண்டிக்கொண்டது. ஆனாலும், அதன்படி நடக்க இரு அரசுகளும் முன்வரவில்லை. ஜம்மு-காஷ்மீர் மாநிலப் பொதுப் பாதுகாப்புச் சட்டம் (1978) கொடூரமான சட்டமாகும். எத்தகைய காரணமும் கூறாமல், யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் கைது செய்யலாம். காவலில் வைத்து சித்ரவதை செய்யலாம். சிறையில் அடைக்கலாம். 2016ஆம் ஆண்டு மார்ச் முதல் 2017 ஆகஸ்ட் வரை 1000 பேருக்கும் மேலானவர்கள் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள். அவர்களில் பலர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காணாமல் போனவர்கள் பட்டியல் இன்னும் நீளமானது. பல இடங்களில் பலர் ஒன்றாகப் புதைக்கப்பட்ட குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2011-ஆம் ஆண்டில் காஷ்மீர் மாநில மனித உரிமை ஆணையம் வடக்கு காஷ்மீர் பகுதியில் இத்தகைய புதைக்குழிகளில் ஒன்றில் 574 உடல்களையும் மற்றொன்றில் 2156 உடல்களையும் கண்டுபிடித்தது. இவை குறித்து எத்தகைய நியாயமான விசாரணையும் நடத்தப்படவில்லை. இந்தியாவில் உள்ள காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமைகள் அடியோடு பறிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய ஐ.நா. மனித உரிமை ஆணையம் பாகிஸ்தான் வசமுள்ள ஆசாத் காஷ்மீரிலும் மனித உரிமைகள் மீறப்படுவதைச் சுட்டிக்காட்டிக் கண்டித்துள்ளது. ஆசாத் காஷ்மீரில் மக்பூன் தாஸ் பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் முன்னறிவிப்பு எதுவும் கொடுக்காமல் வலுக்கட்டாமாக வெளியேற்றப்பட்டு அந்தப் பகுதியின் நிலம் முழுவதும் சீன-பாகிஸ்தான் பொருளாதார வழித் தடத்திற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் படையினரின் மனித உரிமை மீறல்களுக்கும், அட்டூழியங்களுக்கும், படுகொலைகளுக்கும், பாலியல் வன்முறைகளுக்கும் ஆசாத் காஷ்மீர் மக்களும் ஆளாக்கப்படுகின்றனர் என ஐ.நா. மனித உரிமை ஆணையம் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது. இந்த அறிக்கை இந்திய அரசுக்குக் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, "காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும்' என்பதே இந்த ஆத்திரத்திற்கு காரணமாகும். இந்திய வெளியுறவுத்துறை இந்த அறிக்கையை முழுவதுமாக ஏற்கமறுப்பதாகக் கூறியதோடு "பொய்மை நிறைந்தது. உள்நோக்கம் கொண்டது. முற்றிலும் தவறானது. இந்தியாவின் இறையாண்மை, தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றை மீறும் வகையில் அமைந்துள்ளது. இத்தகைய அறிக்கைகள் ஐ.நா.நிறுவனத்தின் மீதுள்ள நம்பிக்கையை தகர்த்துவிடும். இத்தகைய நச்சுத்தன்மை வாய்ந்த அறிக்கையின் மூலம் இந்திய அரசு மற்றும் மக்களின் மன உறுதியை அழித்துவிட முடியாது' என்று கூறியுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரசுக் கட்சியும் இந்த அறிக்கையைக் கண்டித்துள்ளது. "இந்தியாவின் இறையாண்மையையும், தேசிய நலன்களையும் இந்த அறிக்கைப் புண்படுத்தியுள்ளது. காஷ்மீரின் உண்மை நிலவரத்தை தெரிந்துகொள்ளாமலும், பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த அறிக்கை அமைந்துள்ளது. எனவே இந்த அறிக்கையை காங்கிரசுக் கட்சி ஏற்க மறுக்கிறது. இந்திய அரசின் நிலைப்பாட்டிற்கு காங்கிரஸ் முழுமையான ஆதரவு தெரிவிக்கிறது' எனக் கூறியுள்ளது. 2009-ஆம் ஆண்டில் மிகக் கொடூரமான போர்க் குற்றங்களையும், மனிதகுலத்திற்கு எதிரான அட்டூழியங்களையும் சிங்கள இராணுவம் புரிந்தது. ஜெனீவா உடன்பாட்டின்படி தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தித் தமிழர்களைக் கொன்றுகுவித்தது. டப்ளின் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் என்ற அமைப்பு 2010-ஆம் ஆண்டில் விசாரணை நடத்தி மேலே கண்ட குற்றச்சாட்டுகளை உறுதி செய்தது. இதன் விளைவாக ஐ.நா. செயலாளர் - நாயகமான பான்கீ மூன் விசாரணைக் குழு ஒன்றை அமைத்தார். அக்குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க அதிபர் இராசபக்சே மறுத்த போதிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கிடையே ஐ.நா. விசாரணைக் குழு தனது கடமையை நிறைவேற்றியது. சிங்கள இராணுவத்தின் மீது ஆதாரபூர்வமான பல்வேறு போர்க் குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும், தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியது. மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என ஐ.நா. மனித உரிமை ஆணையம் கூறியபோது அதை இலங்கை அரசு ஏற்க மறுத்தது. அதைபோலவே இப்போதும் காஷ்மீர் பிரச்னையில் சர்வதேச விசாரணையை ஏற்க பா.ஜ.க. அரசு மறுத்துள்ளது. அதற்கு எதிர்க்கட்சியான காங்கிரசும் ஆதரவுத் தெரிவித்துள்ளது வியப்புக்குரியதல்ல. ஏனெனில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 64% மக்கள் முஸ்லிம்களாக இருந்தபோதிலும் அவர்கள் பாகிஸ்தானுடன் இணைய மறுத்து இந்தியாவுடன் இணைந்தார்கள். அப்போது காஷ்மீர் மக்களுக்கு காங்கிரஸ் அரசு அளித்த வாக்குறுதிகள் காலப்போக்கில் காற்றில் பறக்கவிடப்பட்டன. அதன் விளைவாகவே காஷ்மீரில் கொந்தளிப்பு உருவாயிற்று. காஷ்மீர் பிரச்னை முற்றியதற்கு காங்கிரசுக் கட்சி முக்கிய காரணமாகும். பா.ஜ.க. அரசு அதே பாதையைப் பின்பற்றுவதால் காங்கிரஸ் அதற்கு ஆதரவு தருகிறது. ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து அரசுக்கு அளித்த ஆதரவை பா.ஜ.க. திரும்பப் பெற்றதும், அங்கு ஆளுநர் ஆட்சி கொண்டுவரப்பட்டுள்ளதும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை எனக் கூற முடியாது. காஷ்மீரில் சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என ஐ.நா. மனித உரிமை ஆணையம் கூறியதற்கு பதிலடியாக காஷ்மீரின் ஜனநாயகத்தை இந்திய அரசு படுகொலை செய்துள்ளது. இது பொருள் பொதிந்தது மட்டுமல்ல; கடும் எதிர்விளைவுகளை உருவாக்கக் கூடியதும் ஆகும்!

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts