பொதுவாக ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது கல்வியை அடிப்படையாக கொண்டே அமைகிறது. ஒரு நல்ல அரசின் கடமையும், தரமான கல்வியை அளிப்பது தான். குழந்தைகளுக்கு சொத்து சேர்த்து வைப்பதை விட நல்ல கல்வியை கொடுக்க வேண்டும் என்பது தான் பெற்றோரின் கனவாக இருக்கிறது.
கல்வியா? செல்வமா? வீரமா? என்று பல நெடுங்காலம் விவாதம் நடைபெற்று வந்தாலும் எல்லாவற்றிலும் மிஞ்சி நிற்பது கல்வி மட்டும் தான். ஏனென்றால் கல்வி இருந்தால் செல்வம் தானாக வந்துவிடும். கல்வி இருந்தால் வீரம் வேண்டும் என்ற அவசியமில்லை. அதற்கு மாற்றாக சாதுரியம் கிடைத்துவிடும். அதனால் தான் கல்வி மற்ற இரண்டை விடவும் சிறந்ததாக இருக்கிறது.
இந்த உன்னதமான கல்வி அனைவருக்கும் கிடைத்திட வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான் அனைவரும் தேர்ச்சி என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி 1-ம் வகுப்பு முதல் 8-வகுப்பு வரை மாணவர்கள், எந்த வித நிறுத்தமும் இன்றி, அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி செய்யப்படுவர். இந்த திட்டத்தால் மாணவர்களின் இடைநிற்றல் பெருமளவு குறைந்தது.
ஆனால் சமீப காலமாக இந்த திட்டத்தால், கல்வித்தரம் குறைந்துள்ளதாக, மத்திய அரசின் ஆய்வு குழு தெரிவித்து வந்தது. ‘ஆல் பாஸ்’ செய்யும் திட்டத்தை ரத்து செய்யவும் கடந்த 2016-ம் ஆண்டு முதலே திட்டமிடப்பட்டது. இதற்காக அனைத்து மாநில அரசுகளிடமும் கருத்து கேட்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அனைவரும் தேர்ச்சி திட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு மட்டும் அனைவரும் தேர்ச்சி என்ற முறையை ரத்து செய்யும் முடிவை மத்திய அரசு எடுத்தது. இதற்கான சட்ட மசோதா கடந்த சில நாட்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கலாகி, ஒருமனதாக நிறைவேறியது.
இந்த சட்ட மசோதாவில் அனைவரும் தேர்ச்சி திட்டத்தை தொடர்வதா, வேண்டாமா என்பது குறித்து மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதனாலோ என்னவோ இந்த திட்டத்தை மாநில அரசுகள் நாடாளுமன்றத்தில் எதிர்க்கவில்லை.
இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் 5 மற்றும் 8-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்கள் கல்வியை இடையில் நிறுத்தும் நிலை ஏற்படலாம். அதிலும் குறிப்பாக 5-ம் வகுப்பில் ‘பெயில்’ ஆக்குவது என்பது மாணவர்களின் மனநிலையை கட்டாயமாக பாதிக்கும். சக நண்பர்களின் கேலியால், மாணவர்கள் தங்கள் படிப்பை பாதியில் நிறுத்துவதற்கும் காரணமாக அமையும். அதாவது முன்பை போல இடைநிற்றல் அதிகரிக்கும். பெற்றோருக்கும் மாணவர்களின் எதிர்காலம் குறித்த கவலையை ஏற்படுத்திவிடும்.
கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் போன்ற மாநிலங்கள் அனைவரும் தேர்ச்சி என்ற முறையே தொடர வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றன. எனவே இந்த மாநிலங்கள் வழக்கம்போல் உள்ள நிலையை பின்பற்றும் என்று தெரிகிறது.
அதேநேரத்தில் மத்திய அரசின் முடிவுக்கு கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் முழு ஆதரவு தெரிவித்து இருக்கின்றன. இந்த திட்டத்தின் மூலம் தரமான மாணவர்களை உருவாக்க முடியும் என அந்த மாநிலங்கள் நம்புகின்றன. இதில் நம் தமிழக அரசு எத்தகைய நிலைப்பாட்டில் இருக்கிறது என்பதை இன்னும் தெளிவுபடுத்தவில்லை.
சமீபகாலமாக கல்வி என்பது அரசியலாகி வருகிறது. மாநில பாடத்திட்டங்களுக்கு வேட்டு வைக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வின் பாதிப்பை தமிழகம் முழுமையாக உணர்ந்தே இருக்கிறது. எந்தவொரு விஷயத்தையும் செய்வதற்கு முன் மாணவர்களை தயார்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இழப்புகளை சந்தித்தே ஆக வேண்டிய நிலை வரும்.
5 மற்றும் 8-ம் வகுப்புகளில் அனைவரும் தேர்ச்சி என்ற முறை ரத்து செய்யப்படுவதால் எந்தவகையில் கல்வி வளர்ச்சிக்கு புதிய மசோதா கை கொடுக்கும் என்பது ஆராயப்பட வேண்டியது. அதே வேளையில், 5 மற்றும் 8-ம் வகுப்பு ஆண்டு இறுதி தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு 2 மாதங்கள் கழித்து மீண்டும் மறுதேர்வு நடத்தப்படும் என்றும் சட்ட மசோதாவை தாக்கல் செய்த மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியிருக்கிறார். இது தலையை சுற்றி மூக்கை தொடுவது போன்றது.
இதற்கு பதில் மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்கும் முறையை கொண்டு வரலாம். பாடங்களை எளிமைப்படுத்தி, முழு தேர்ச்சி என்ற நிலையை அடைவதற்கு வழிவகை செய்யலாம். இதையெல்லாம் விட்டு விட்டு புதிய சட்ட மசோதாவால் மட்டும் கல்வி வளர்ச்சியை எட்ட முடியுமா? என்பது சந்தேகத்திற்குரியது தான்.
கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டியது அவசியம்தான். இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இதற்காக அரசு நல்ல திட்டங்களை கொண்டுவர வேண்டியதும் காலத்தின் தேவைதான். ஆனால், இதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை பள்ளி மாணவர்களை இடையிலேயே கல்வியை நிறுத்துவதற்கு தூண்டக்கூடாது. கல்வியின் தரம் உயர தரமான திட்டங்களை அரசு கொண்டுவர வேண்டும்.
பள்ளி படிப்பை முடித்த பின்னும் பிரச்சினை, பள்ளி படிப்பை தொடங்கும் முன்பும் பிரச்சினை என்றால் மாணவர்களால் என்ன தான் செய்வார்கள்? பெற்றோரை பொறுத்தவரையில் இந்த சட்டம் தேவையில்லாத ஒன்று என்றே கருதுகிறார்கள். இது தலைகீழான மாற்றத்தை கொண்டு வந்துவிடும் என்று கல்வியாளர்களும் அச்சப்படுகிறார்கள். அதாவது இடைநிற்றல் அதிகரித்து, கல்வி கற்போரின் சதவீதம் குறையத் தொடங்கும் ஆபத்து இருப்பதாக அவர்கள் எண்ணுகிறார்கள்.
மத்திய அரசின் மசோதா, கல்வி வளர்ச்சிக்கான ஊக்கமாக இருந்தால் வரவேற்கலாம். அது தளர்ச்சிக்கான தேக்கமாக இருப்பதாகவே தோன்றுகிறது. எனவே, தமிழகத்தில் தற்போது உள்ளபடியே 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்ற முறையே தொடர வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக இருக்கிறது.
-தனிஷ்
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment