Thursday 27 December 2018

பருவநிலை மாற்றமும், பொருளாதார வளர்ச்சியும்...!

பருவநிலை மாற்றமும், பொருளாதார வளர்ச்சியும்...! முனைவர் மா. திருநீலகண்டன், காரைக்குடி இ ன்றைய காலக்கட்டத்தில் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பருவநிலை மாற்றம் பெரும் சவாலாக உள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாகவும், மக்களின் தேவையை பூர்த்தி செய்ய கூடிய தொழில் துறையினால் சுற்றுச்சூழல் மாசுபாடு உருவாகின்றது என்பது இயற்கை ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. மக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யக்கூடிய வேளாண்துறை சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்தினால் பெரும் பாதிப்பு அடைகிறது, அதே வேளையில் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தொழில் துறையின் பங்கு மிக அவசியமாகும். மக்களின் தேவை மற்றும் பயன்பாடு கருதியே தொழிற்சாலைகள் உருவாக்கப்படுகின்றன. உதாரணமாக, இந்த நவீன உலகில் மின்சாரம் கார் மற்றும் மோட்டார் போக்குவரத்து அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஆகவே நாம் மின்சாரம் மற்றும் மோட்டார் உற்பத்திச் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என கருதி அதன் உற்பத்தியை நிறுத்திவிட முடியாது. ஏனென்றால் நவீன உலகில் மக்களின் தேவை மின்சாரம் மற்றும் போக்குவரத்து அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. நவீன பொருளாதார வல்லுனர்களின் கருத்துப்படி எந்த ஒரு நாடு அந்த நாட்டு மக்களின் தேவைகளுக்கேற்ப வளங்களை ஒதுக்கீடு செய்கிறதோ அங்குதான் பொருளாதார நலன் உருவாகும் என நம்புகின்றன. மக்களின் பொருட்களின் தேவை மற்றும் பயன்பாடு அனைத்தும் ஏதோ ஒரு வகையில் சுற்றுச்சூழலைப் பாதிக்கிறது. அதை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளினாலும் சுற்றுச்சூழல் பாதிப்பு உண்டாகிறது. தொழிற்சாலைகளின் உற்பத்தி மக்களின் தேவை மற்றும் பயன்பாட்டினை பூர்த்திசெய்வதற்கு மட்டுமே. ஆகவே நாட்டு மக்களின் தேவை மற்றும் பயன்பாட்டில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே தொழிசாலைகள் தங்கள் உற்பத்தியினை நிறுத்த முடியும். சுற்றுச்சூழல் பாதிப்புக்கு மிகவும் ஆபத்தாக உள்ளது மனிதனின் தேவைகள் மற்றும் பயன்பாடுகள் மட்டுமே. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பினை உண்டாக்கும் பொருட்களின் மீது அதிக வரி விதிப்பதன் மூலமாக நாம் அதன் உற்பத்தியை நிறுத்திவிட முடியாது என்பதனை நவம்பர் 2018-ல் பிரான்ஸில் பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக நடைபெற்ற போராட்டங்கள் அறிவுறுத்துகின்றன. நாம் அதிக வரி விதித்தாலும் மக்களின் தேவை மற்றும் பயன்பாட்டில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே தொழிற்சாலை உற்பத்தியினைக் குறைத்துச் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் அல்லது தொழில்நுட்பத்தின் வாயிலாக மாற்று தேவையினை உருவாக்குவதன் மூலம் சரிசெய்ய முடியும். பருவநிலை மாற்றத்தினால் இயற்கை மற்றும் கனிம வளங்கள் பாதிப்பு ஏற்பட்டு அது வேளாண் மற்றும் தொழிற்துறையில் பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது. மேலும் பேரிடர் காலங்களில் மின்சாரம், உற்பத்தி காரணிகள் அடிப்படைக் கட்டமைப்பு போன்றவை அழிந்து மூலதன சிதைவு ஏற்படுகிறது. மேலும் அக்காலக் கட்டத்தில் மக்களின் சேமிப்பு முழுவதும் செலவுகளாகவும் அத்தகைய செலவுகள் அனைத்தும் மறு கட்டமைப்புகளுக்கு அவசியப்படுகிறது. இதனால் பெரும் மூலதனத்தை மக்களும், அரசாங்கமும் இழக்க நேரிடுகிறது. இதன் காரணமாக உற்பத்தி மற்றும் லாபம் குறைந்து, விலைவாசி உயர்ந்து, பொருளாதார வளர்ச்சி பின்னோக்கி செல்கிறது. ஆகவே பேரிடர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரவு செலவு திட்ட அறிக்கையில் அதிக தொகை ஒதுக்கீடு செய்வது அவசியமான ஒன்றாகும். வேளாண்துறையில் புயல், வெள்ளம், வறட்சி போன்ற காரணங்களால் வேளாண் உற்பத்தி பாதிப்பு விவசாயத் தற்கொலை போன்றவை நிகழ்கின்றன. பருவ நிலை மாற்றத்தினால் நிலத்தடிநீர்மட்டம் குறைந்து கடல் நீமட்டம் அதிகரிக்கிறது என்பது அதிர்ச்சியூட்டக்கூடிய செய்தியாகும். அதி நவீன பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் உரங்கள் ஆகியவற்றினால் மண் தன்மை மக்கி போவதும், சிறுகுறு விவசாயிகள் வேளாண் தொழிலை மட்டும் செய்வதால் அதிக கடன் மற்றும் நஷ்டம் உருவாகி தற்கொலை செய்துகொள்கின்றனர். ஆகவே பருவநிலை மாற்றத்தினால் வேளாண் துறை பாதிப்பினை சமாளிக்க நதிநீர் இணைப்பு, வட்டியில்லா அரசு அமைப்புகளின் கடன், இடுபொருட்களுக்கு முழு அளவு மானியம், சந்தை உருவாக்கம், உயர் ரக விதைகள் மற்றும் நவீன தொழில் நுட்பம் கிடைக்குமாறு செய்வது மிக அவசியமான ஒன்றாகும்.

No comments:

Popular Posts