Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

கண்ணகி அன்றும், இன்றும்...!

கண்ணகி அன்றும், இன்றும்...! கண்ணகி சிலை. கவிமுனைவர் இளவரசு அமிழ்தன், அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம் சிலப்பதிகாரம், தமிழில் வழி நூலாகவோ, மொழி பெயர்ப்பு நூலாகவோ இல்லாமல், முதல் நூலாக வந்த முதல் காப்பியம். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுக்கும் உரிய காப்பியம். மன்னர்களையும் கடவுளர்களையும் கருவாகக் கொண்டு புலவர்கள் இலக்கியம் படைத்த காலத்தில், சிலப்பதிகாரம் குடிமக்களைக் கதைமாந்தர்களாகக் கொண்டு படைக்கப்பட்ட காப்பியம். இக்காப்பியத்தை இயற்றிய இளங்கோவடிகள், சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு என்று பிரிந்து கிடந்த தமிழகத்தைத் ‘தமிழ்நாடு’ என்று ஒரே நாடாக ஆக்க எண்ணியவர். இளங்கோவடிகளைச் ‘சமணர்’ என்றும், ‘சைவர்’ என்றும் கூறுவர். ஆனால் அவர் எழுதிய சிலப்பதிகாரத்தில், அந்தக் காலத்தில் மக்கள் வழிபட்ட அனைத்துக் கடவுளர்களையும் வாழ்த்துகிறார். தமிழ் மக்கள் மதம் சார்ந்து பிரிந்து நிற்கக் கூடாது என்று கருதியவர் இளங்கோவடிகள். “தமிழ்நாட்டிற்கு என்று ஒரு வரலாறு இல்லை; தமிழ் மக்களுக்கு என்று ஒரு வரலாறு இல்லை என்ற குறையைப் போக்க இந்நூல் ஒரு வரலாற்றுக் காப்பியமாகத் திகழ்வதோடு, தமிழின், தமிழரின், தமிழகத்தின் கலைக்களஞ்சியமாகவும் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது” என்பார் முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம். “பாரதியார் தமிழ்நாட்டைக் குறிப்பிடும்பொழுது “கம்பன் பிறந்த தமிழ்நாடு” என்று மட்டுமே கூறினார். வள்ளுவனைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது அவனைப் பெற்று வளர்த்து உலகுக்கு வழங்கிய நாடு என்று கூறினார். சிலப்பதிகாரத்தைப் பற்றிக் கூறும்பொழுது அதைத் தனக்கென்றே படைத்துக் கொண்ட நாடு என்று கூறுகின்றார்” என்பார். இத்தகைய சிறப்பிற்குரிய காவியம், கம்பராமாயணம் போல் மக்கள் மத்தியில் பரப்பப்படவில்லை. கம்பன் கழகம் போல் இளங்கோ கழகம் இல்லை. இளங்கோ கழகம் இருந்தாலும் அங்கே சிலப்பதிகாரம் மட்டும் பேசப்படுவதில்லை. சிலம்புச் செம்மல் ம.பொ.சி சிலம்பு யாத்திரையைத் தொடர்ந்து நடத்திச் சிலம்பைப் பலர் அறியச் செய்தார். அவரைத் தொடர்ந்து சிலம்பொலி செல்லப்பனார் சிலம்பை உலகறியச் செய்தார். இன்றும் ‘சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை’ என்ற அமைப்பைத் தொடங்கி ஆண்டுதோறும் பெருவிழா நடத்தி, இளங்கோ புகழ் போற்றி இன்பத்தமிழ் வளர்த்துக் கொண்டிருக்கிறார். இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம், பழங்கதையா? கற்பனைக் கதையா? உண்மையான வரலாறா? என்று ஆராய்வதைவிட, தமிழில் எழுந்த முதல் காப்பியம்; தமிழர்களை, தமிழ் நாட்டைச் சுற்றி வலம் வரும் காப்பியம்; பிறமொழி இலக்கியங்களைத் தழுவி எழுதாத காப்பியம் என்று கொண்டு, ஒரு மிகச்சிறந்த இலக்கியம் என்ற முறையில் கொண்டாடப்பட வேண்டும். சிலப்பதிகாரம், தன் மனைவியை மறந்து வேறு ஒரு பெண்ணுடன் வாழ்பவனின் வாழ்க்கை எவ்வாறு சீரழியும் என்பதை எடுத்துக் காட்டும் இலக்கியம். பெண்கள் கற்புடன் வாழ்வதாலேயே வீட்டிற்கும் நாட்டிற்கும் நன்மை பெருகும் என்கிறார். கற்பு ஒரு பெண்ணுக்குத் தெய்வத் தன்மையைத் தருகிறது என்பதைச் சிலப்பதிகாரம் வலியுறுத்துகிறது. அந்தக் கற்பின் ஆற்றலால் கண்ணகி தன் கணவன் செய்த தீவினைகளை நீக்கி அவனையும் உயர்வடையச் செய்தாள். கற்புடைய பெண்ணால் எதையும் சாதிக்க முடியும் என்பதைக் கூறும் இலக்கியம் சிலப்பதிகாரம். கண்ணகியின் பெருமை உலகறிந்தது. இலங்கையில் ‘கண்ணகை’என்னும் பெயரால் சிங்கள மொழியில் நாட்டுப்புறப்பாடல்கள் அமைந்துள்ளன. அரசனை எதிர்த்து நீதி கேட்ட கண்ணகி கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தெய்வமாகப் போற்றப்படுகிறாள்.சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு எடுத்த கோவில் பற்றிச் சிலப்பதிகாரம் கூறுகிறது.இந்தக் கோவில் மேற்குத் தொடர்ச்சிமலையில் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. கண்ணகியை மங்களாதேவி கண்ணகி என மலையாளிகள் குறிப்பிடுகிறார்கள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தஞ்சையைச் சேர்ந்த புலவர் சி.கோவிந்தராசன் இக்கோயில் சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்ட கண்ணகி கோவில்தான் என்னும் உண்மையை உலகுக்கு அறிவித்தார். அந்தக் கோவிலுக்கு ஆவலோடு சென்ற தமிழர்களுக்குக் கேரள அரசு அனுமதி மறுத்துவிட்டது. வருடந்தோறும் சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமியன்று ஐம்பது பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. தமிழர் பண்பாட்டுச் சின்னங்களுள் ஒன்றாகிய கண்ணகியை வழிபடும் வகையில் சென்னை தாம்பரம் அருகில் மணிமங்கலம் என்னுமிடத்தில் கண்ணகிக்குக் கோவில் கட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அன்று, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சேரன் செங்குட்டுவன் கட்டிய கண்ணகி கோவில் இன்று தமிழ்நாட்டின் எல்லைக்குள் இல்லை. தாம்பரம் மணிமங்கலத்தில் கட்டப்பட்டுவரும் கண்ணகி கோவில் தமிழர்களைச் சாதி, சமய வேறுபாடின்றித் தமிழால் இணைக்கும் என எதிர்பார்க்கலாம்.

கல்விச்சோலை - kalvisolai Articles

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement