Thursday 16 August 2018

ஜெர்மனியில் முழங்கும் தமிழ்

ஜெர்மனியில் முழங்கும் தமிழ் அ.ஞானசேகரன், ஓய்வுபெற்ற விஞ்ஞானி மற்றும் ஜெர்மனி ஆசிரியர் தேன்மொழியாம் நம் தமிழ்மொழி, ஜெர்மனி நாட்டில் கோலோச்சும் பெருமையைப் பார்ப்போம்.அன்றைய நாட்களில் தமிழ் மொழியை ‘மலபார் மொழி’ என்று அழைத்தார்கள். 1706-ம் ஆண்டு மலபாருக்கு டேனிஷ் அரசரால் அனுப்பப்பட்ட ஜெர்மானிய மதபோதகர் பார்த்தலோமியுஸ் சீகன்பல்க் என்பவராவார். இவர் கடற்கரை மணலில் தமிழ் மொழியை எழுதிப்படித்தார். சீகன்பல்க் படித்து முடித்த தமிழ் புத்தகங்கள் 161 ஆகும். சீகன்பல்க் தம்மை அனுப்பி வைத்த மன்னருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், ‘தமிழ்நாட்டவர்கள் பகுத்தறிவு அற்றவர்கள் என நாம் நினைக்கிறோம். ஆனால் இவர்கள் தத்துவக் கருத்துக்களில் கிரேக்கர்களையும், ரோமானியர்களையும் மிஞ்சியவர்கள். தமிழ்மொழியை முறையாகக் கற்றால் ஐரோப்பியர்களும் இவர்களைப் போல் ஆக முடியும். எனவே, ஐரோப்பிய பல்கலைக்கழங்களில் தமிழை பாடமாக கற்க ஏற்பாடு செய்ய முடியுமா?’ என எழுதினார் சீகன்பல்க் ஒரு பெண்கள் பள்ளியை தரங்கம்பாடியில் நிறுவினார். இது இந்தியாவின் முதலாவது பெண்கள் பள்ளியாக இருக்கலாம். தரங்கம்பாடியில் சீகன்பல்க் கட்டிய தேவாலயத்தில் இன்றும் வழிபாடு நடக்கிறது. இந்தியாவின் பழமையான கலாசாரம், பண்பாடு, சமஸ்கிருத மொழி, சமஸ்கிருத இலக்கியங்கள், தமிழ் மொழி மற்றும் அதன் இலக்கியங்கள் ஆகியவை ஜெர்மானியர்களை இங்கு மிகவும் கவர்ந்தது. இந்தியா வரும் முன்னே தமிழைப் படித்துவிட்டு வந்த ஜெர்மானியர் அநேகமாக, டாக்டர் ஆர்னோ லேமனாகத்தான் இருக்க வேண்டும்.இவருக்கு தமிழைச் சொல்லிக் கொடுத்தவர் கார்ல் கிரவுல் என்பவர். இவர் முன்பே தமிழ்நாட்டிற்கு வந்து திருக்குறளைப் படித்து அதை ஜெர்மன் மொழியில் வெளியிட்டவர். இவர் திருக்குறளை முத்தான முத்து என்று புகழ்கிறார். இவர் தமிழ் மொழியைக் கற்றதனால் ஜெர்மனியில் உள்ள லெய்ப்சிக் பல்கலைக்கழகத்தில் ஒரு சிறிய தமிழ் நூலகத்தை நிறுவினார். அங்குத் தமிழ் பயின்றவர்தான் ஆர்னோ லேமன். ஆர்னோ லேமன் 1926 முதல் 1934-ம் ஆண்டு முடிய தென் இந்தியாவில், சீர்காழி நகரில் உள்ள லுதிரன் கிறிஸ்தவ ஆலயத்தில் மதகுருவாக பணியாற்றினார். இவர் தமிழ்மொழியில் உள்ள மூவர் தேவாரப் பாடல்களில், சுமார் 20 பாடல்களைத் தேர்வு செய்து, அவற்றை ஜெர்மானிய மொழிக்கு மொழிப்பெயர்த்தார். மேலும் பேராசிரியர் கப் எனும் ஜெர்மானியர் நீலகிரியில் வாழும் மலைமக்கள் பேசும் மொழிகளைப் படித்தார். அவற்றை ஜெர்மன் மொழிக்கு மொழிப்பெயர்த்தார். ஒரு அகராதியும் தயாரித்தார். அந்த மொழிகளைப் பற்றித் தற்போதும் ஆராய்ச்சி நடந்து வருகிறது.மன்னர் சரபோஜி தஞ்சையை ஆண்டபோது, அவருக்கு ஷ்வார்ட்ஸ் என்ற ஜெர்மானிய பாதிரியார் நண்பராக இருந்தார். ஷ்வார்ட்ஸ் தஞ்சையில் ஒரு தேவாலயம் எழுப்பினார். தஞ்சை சரபோஜி மன்னருக்கு அரச உரிமை கிடைப்பதில் சிறிது சிக்கல்கள் ஏற்பட்டன. சரபோஜி மன்னருக்காக வாதாடியது, ஷ்வார்ட்ஸ் தான். சரபோஜி மன்னருக்கு ஆசிரியரும் இவர்தான். தஞ்சை சரஸ்வதி மஹாலில் இன்றும் மன்னர் சரபோஜி பயன்படுத்திய புத்தகங்கள் இருக்கின்றன. அவைகளில் மன்னரின் பெயர்கள் மன்னராலயே எழுதப்பட்டிருக்கும். ஷ்வார்ட்ஸ் மரணமடையும் போது சரபோஜி மன்னர்தான் அவரின் கைகளை பிடித்திருந்தார். தற்போது ஜெர்மானியர்கள் எடுத்துக்கொண்டிருக்கும் மிகப்பெரிய திட்டம், ஜெர்மனியிலுள்ள புத்தகங்கள், அறிக்கைகள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றை தொகுப்பதாகும். இதன் முடிவில் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும். உதாரணமாக, தமிழ் ஓலைச் சுவடிகள் எங்கெல்லாம் இருக்கின்றன என்பது தெரியவரும். சமஸ்கிருத மொழியில் எத்தனை ஓலைச் சுவடிகள் ஜெர்மனியில் இருக்கின்றன? என்பதற்கும் விடை கிடைக்கும். ஜெர்மனியில் உள்ள 399 பல்கலைக்கழகங்களில், 23 பல்கலைக் கழகங்கள் இந்திய மக்கள் மற்றும் மொழிப்பற்றிய ஆய்வுப்பாடத்தை நடத்துகின்றன. தற்போது உள்ள பல்கலைக்கழகங்களில் முக்கியமானவை ஹெய்டல்பர்க் பல்கலைக் கழகம் மற்றும் கொலோன் பல்கலைக்கழகம். இந்த இரு பல்கலைக்கழகங்களிலும் தமிழ்த்துறையில் பி.ஏ., எம்.ஏ. ஆகியப் பட்டங்களுக்கு படிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. கொலோன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கே.எல்.யானர்ட் இருந்த காலத்திலே தன்னுடைய துறைக்காக தமிழ் நூலகம் ஒன்றை அமைத்தார். அதற்கு சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்களை சேகரித்தார். பேராசிரியர் கே.எல்.யானர்ட்டின் மாணவி உல்ரிகா நிக்லஸ் என்பவர், தமிழ் மொழியை ஜெர்மானிய மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். பேராசிரியர். ‘கப்’ என்பவரது முழு விவரங்கள் அடங்கிய ‘கையால் எழுதப்பட்ட தமிழ்நூல்கள்’ எனும் நூல்பட்டியல் ஜெர்மானிய நூலகங்களில் இருக்கின்றன. இந்தப் பட்டியல் மேலும் ஆராய்ச்சிகளுக்கு உதவும். கையால் எழுதப்பட்ட தமிழ்நூல்கள் நவீன முறையில் கணினிமயமாக்கப்பட்டு ஜெர்மானிய நூலகங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவை 19 மற்றும் 20-ம் நூற்றாண்டை சேர்ந்தவை. கடந்த 300 ஆண்டுகளில், ஜெர்மானியர்கள் இந்தியாவைப் பற்றிய ஆய்வுகளை எல்லாம் ஒன்று திரட்டி நவீனமயமாக்க வேண்டும் எனும் நோக்கத்தில் இரு மொழி அகராதிகளை ஒன்று திரட்டி அவற்றை நவீனமாக்கும் முயற்சியை மேற்கொண்டனர். இந்த முயற்சியில் சென்னை லயோலா கல்லூரியின் தே நோபிலி ஆராய்ச்சித்துறையினரும் தங்களை இணைத்துக் கொண்டனர். தெற்காசிய மொழிகள் மற்றும் இலக்கியங்கள் எனும் பாடப்பிரிவு தற்போது ‘தெற்காசிய நவீன மொழியியல் என கற்பிக்கப்படுகிறது. இதன் மூலம் நம் தமிழ் மொழி; இனிமை ததும்பும் இனியமொழி பழமையோடு கூடிய பாரம்பரியம் மிக்க மொழி என்பதை அயல்நாட்டினரும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதை அறிந்துகொள்ள முடிகிறது.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts