Thursday 30 August 2018

பன்முக ஆற்றல் கொண்ட நடிப்பின் சிகரம்

பன்முக ஆற்றல் கொண்ட நடிப்பின் சிகரம் டி.எஸ்.பாலையா நடிகர் ஜூனியர் பாலையா தமிழ் சினிமா வானில் துருவ நட்சத்திரமாக ஒளிர்ந்தவர், டி.எஸ்.பாலையா. பன்முக ஆற்றல் கொண்ட அவர் கதாநாயகன், வில்லன், குணச்சித்திர வேடங்களில் தனது தனித்துவமான நடிப்பாற்றலால் முத்திரை பதித்தவர். எம்.கே.தியாகராஜபாகவதர், பி.யூ.சின்னப்பா, எம்.கே.ராதா, எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், எம்.ஆர்.ராதா போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். காலத்தால் அழிக்க முடியாத காவியமான திருவிளையாடல் படத்தில் ஹேமநாதபாகவதராக வந்து ஒரு நாள் போதுமா? என்ற பாடலைப்பாடி தன் வித்தை கர்வத்தை வெளிப்படுத்தி அமர்க்களப்படுத்தினார். காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் கதை சொல்லும் காட்சியில் உடம்பு அசையாமல் முகப்பாவத்திலேயே அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியவர். தில்லானா மோகனாம்பாள் படத்தில் தவில் வித்வானாகவே வாழ்ந்திருப்பார். பாகப்பிரிவினை, பாமாவிஜயம் போன்ற படங்கள் டி.எஸ்.பாலையாவுக்கு நல்ல பெயரையும், புகழையும் பெற்றுத் தந்த படங்கள். 36 வருடங்களில் 146 படங்களில் நடித்து சினிமா ரசிகர்களின் இதயங்களில் நீங்காத இடத்தை பிடித்தவர். டி.எஸ்.பாலையாவின் மகன் ஜூனியர் பாலையா தன் தந்தையுடனான நினைவுகள் பற்றி மனம் திறந்து கூறியதாவது:- என் தந்தை 1914-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23-ந்தேதி, தூத்துக்குடி மாவட்டம் சுண்டங்கோட்டையில் பிறந்தார். சிறுவனாக இருந்தபோதே அவருக்கு கலை ஆர்வம் அதிகம். சற்றே முரட்டு சுபாவம் உடையவர். என் தந்தையின் கலை ஆர்வம் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. இதனால் தன்னுடைய 10-வது வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறினார். நாடார் சமூகத்தில் பிறந்து, நெல்லையில் ஓட்டல் நடத்தி வந்த ஒரு பிள்ளைமார் வீட்டில் வளர்ந்தார். பின்னர் வெளியூருக்கு சென்று ஏதாவது ஒரு நாடக கம்பெனியில் சேர முடிவு செய்தார். மெல்ல மெல்ல நாடகத்துறையில் வளரத் தொடங்கினார். பாய்ஸ் கம்பெனியில் நடித்துக்கொண்டு இருந்தபோது, அவரது நடிப்பை கண்டு வியந்த, என்.கே.ராதாவின் தந்தை, ஏ.என்.மருதாசலம் செட்டியாரிடம் அறிமுகம் செய்துவைத்தார். அவர் ‘சதிலீலாவதி’ படத்தில் நடிக்க என் தந்தைக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்த படத்தை எல்லீஸ் ஆர்.டங்கன் என்ற வெள்ளைக்கார டைரக்டர் இயக்கினார். அந்த படத்தில் தான் எம்.ஜி.ஆரும் நடித்தார். எம்.ஜி.ஆர். என் தந்தையை விட 3 வயது இளையவர். அந்த படம் சிறப்பாக ஓடியது. என் தந்தையின் நடிப்பு பேசப்பட்டது. தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்தார். நல்ல குரல் வளம் இருந்ததால், சொந்த குரலில் பாடல்களும் பாடி இருக்கிறார். என் தந்தையின் பல கதாபாத்திரங்கள் பெரிதும் பேசப்பட்டன. அதில், இன்றைக்கும் மக்கள் மனதில் நிற்கும் கதாபாத்திரங்களில் ஒன்று, தில்லானாமோகனாம்பாள் படத்தில் தவில்காரராக அவர் நடித்து இருப்பது. இதற்காக அவர் ஒரு தவில் வித்வானை வீட்டுக்கு அழைத்து வந்து பயிற்சி பெற்றார். ஒருமுறை சிவாஜி கணேசன் இதுபற்றி என்னிடம் பேசும்போது, ‘உன் தந்தை போல ஒரு நடிகரை பார்க்கவே முடியாது. தில்லானா மோகனாம்பாளில் தவில் வித்வானாக அவரின் நடிப்பை கண்டு வியந்தேன்’ என்றார். ஏ.பி.நாகராஜனின் திருவிளையாடல் படத்தில் ஹேமநாதபாகவதராக நடித்தார். அந்த படத்தில் ஒருநாள் போதுமா என்ற பாடல் பிரபலம். அந்த பாடலை பாடிய பாலமுரளி கிருஷ்ணா, தானே ஹேமநாதபாகவதராக நடிக்க விரும்பினார். ஆனால், ஏ.பி.நாகராஜன், இந்த கதாபாத்திரத்தை நான் பாலையா அண்ணனுக்குதான் கொடுக்கப்போகிறேன் என்றார். அந்த பாடலில் என் தந்தை அருமையாக நடித்திருப்பார். பாடல் வெகுவாக ரசிகர்களை கவர்ந்தது. திரைப்படம் வெளியான பிறகு பேசிய பாலமுரளிகிருஷ்ணா, ‘நல்லவேளை பாலையாவே நடித்தார். என் பாடலுக்கு உயிர் கொடுத்தது அவர்தான்’ என்று புகழ்ந்தார். என் தந்தை மீது அத்தனை நடிகர்களும் நல்ல மரியாதை வைத்திருந்தனர். அதில் நாகேசும் ஒருவர். காதலிக்க நேரமில்லை படத்தில், நாகேஷ் என் தந்தையிடம் கதை சொல்லும் காட்சி படமாக்கப்பட்டது. இந்த காட்சி குறித்து பின்நாட்களில் என்னிடம் பேசிய நாகேஷ், ‘கதை சொல்லும் காட்சி படமாக்கி முடித்தபோது, சுற்றி இருந்த அத்தனை பேரும் கைத்தட்டினார்கள். ஆனால், உங்க அப்பா மட்டும் கைதட்டவில்லை. நான் கதைசொல்லும்போது, அவர் இரண்டு புருவங்களை மேலே உயர்த்தினார். அவர் பயந்துவிட்டார். நான் நன்றாக நடித்து இருக்கிறேன் என்று எண்ணினேன். ஆனால் அவரோ, நீ இன்னமும் ஜாக்கிரதையாக நடித்து இருக்க வேண்டும் என்றார். அவர் பொறாமையில் இப்படி சொல்கிறார் என்று நான் எண்ணினேன். அந்த படம் வெளியானதும், தியேட்டருக்கு பார்க்க சென்றோம். அப்போது, கதை சொல்லும் காட்சி முடிந்ததும், கைத்தட்டல்கள் பலமாக வந்தன. ரசிகர் கூட்டத்தில் ஒருவர், ‘ஆயிரம் சொல்லுங்க பாலையா பாலையாதான்டா’ என்று குரல் எழுப்பினார். அப்போதுதான் உங்க அப்பா நீ இன்னும் ஜாக்கிரதையா பண்ணி இருக்கனும் என்று சொன்னது புரிந்தது. படம் பார்த்துவிட்டு, நான் எப்படி நடித்தேன்? என்று கேட்டேன். உடனே என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். நான் எத்தனையோ அவார்டு வாங்கி இருப்பேன். அதையெல்லாம் விட மேலானது உங்க அப்பா கட்டி தழுவி முத்தம் கொடுத்ததுதான்’ என்றார். என் தந்தையின் நடிப்பை பார்த்து வியந்த எல்லீஸ் ஆர்.டங்கன் அவரை ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்த விரும்பினார். ஆனால் என் தந்தை மறுத்துவிட்டார். ‘எனக்கு பிடித்த ஒரே ஒரு நடிகர் பாலையா மட்டும்தான். அவரை ஹாலிவுட்டுக்கு அழைத்தேன். ஆனால் அவர் வர மறுத்துவிட்டார். அதற்கு அவர் தமிழ் மீது வைத்திருந்த பற்றுதான் காரணம்’ என்று எல்லீஸ் ஆர்.டங்கன் குறிப்பிட்டு உள்ளார். என் தந்தை காமராஜரின் சிஷ்யன் மாதிரி இருந்தார். தி.மு.க.வின் தொடக்க காலகட்டத்தில், அந்த கட்சிக்காக பல நாடகங்களில் நடித்தார். அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோரிடம் நல்ல நட்பு இருந்தது. ஜெயலலிதா மீதும் பாசம் வைத்து இருந்தார். இப்படி தமிழகத்தை ஆட்சி செய்த முதல்-அமைச்சர்களிடம் அவர் நட்பாக பழகி இருந்தார் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. பிற்காலத்தில், கந்தர்அலங்காரம் என்ற படத்தில் நடித்தபோது, எம்.ஆர்.ராதாவை சந்தித்தேன். ‘நான் யார் கூட வேண்டுமானாலும் தயக்கமின்றி நடிப்பேன். ஆனால், உங்க அப்பாக் கூட நடிக்கும்போதுதான் மிகவும் ஜாக்கிரதையாக நடிப்பேன். ஏனென்றால் அவர் மிகவும் திறமையானவர்’ என்றார். என்னுடைய தந்தையின் கடைசி காலத்தில் மருத்துவமனையில் இருந்தார். அப்போது, அவர் சினிமாவில் என்னுடைய பெயர் எப்போதும் நிலைத்து இருக்க வேண்டும். நீ எனக்கு ஜூனியர். எனவே ஜூனியர் பாலையா என்று உன் பெயரை மாற்றிக்கொள். இதுதான் என் ஆசை என்றார். அதன்படி நானும் மாற்றிக்கொண்டேன். என்னுடைய நிஜ பெயர் ரகு. இது பலருக்கும் தெரியாது. என் பிள்ளைகளின் பெயரோடும் பாலையா என்ற தந்தை பெயரை சேர்த்து இருக்கிறேன். தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக என் தந்தை விளங்கினார். ஆனால் என் தந்தையின் நூற்றாண்டு விழாவை திரைத்துறையினர் யாரும் நினைவுகூராதது மன வருத்தத்தை ஏற்படுத்தியது. இன்று (ஆகஸ்டு 23-ந்தேதி) டி.எஸ்.பாலையா பிறந்த நாள்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts