Sunday 5 August 2018

தொலைந்து போன கனவு இல்லம்

தொலைந்து போன கனவு இல்லம் முனைவர் மா.ராமச்சந்திரன் அசையாச் சொத்து கையகப்படுத்துதல் அறிவிப்பு,அசையாச் சொத்து ஏலவிற்பனை அறிவிப்பு என்று பத்திரிகையில் நாள்தோறும் வங்கிகள்,நிதி நிறுவனங்கள் சார்பில் விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வங்கி, இந்த வங்கி என்றில்லாமல் எல்லா வங்கிகளும் இப்படிப்பட்ட அறிவிப்புகளை வெளியிடுகின்றன. இவை, கடன் வாங்குவதற்காக வங்கிகளில் அடமானமாக வைத்துள்ள நிலம்,வீடு, போன்றவற்றை இழப்பவர் பலர் இருப்பதைக் காட்டுகின்றன. எவ்வளவுதான் உழைத்து, சிக்கனமாக வாழ்ந்தாலும் வீடுகட்டத் தொடங்கிவிட்டால் கடன் வாங்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடுகிறது. கையிருப்பில் உள்ள பணத்தால் வீடுகட்டி முடிப்போர் ஒருசிலர்தான் உள்ளனர். கடன்வாங்கி வீடு கட்டுவோர்தான் இப்போது அதிகம். அரசுப்பணி, மென்பொருள் நிறுவனப்பணி போன்ற கூடுதல் வருமானமுள்ள அலுவலகப் பணியாளர்கள் வருமானவரியிலிருந்து விலக்குப் பெற வீட்டுக் கடன் ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. இதனால் வீட்டுக்கடன் வாங்கி வீடு கட்டுவது லாபம் என்று அவர்கள் நினைக்கின்றனர். முன்பெல்லாம் கடன் பெறுவதில் நிறைய கஷ்டங்கள் இருந்தன .இப்போது அப்படியில்லை. வங்கி, நிதி நிறுவனங்கள் உடனடியாகக் கடன் கொடுக்கத் தயாராக உள்ளன. அப்படி வீட்டுக்கடன் வாங்குவோர் தம் பணிக்காலம் முழுவதும் கடனாளியாகவே இருந்து அதனை அடைக்கவேண்டிய கட்டாயம் உருவாகிவிடுகிறது. இவர்களில் பலருக்குக் கடனை அடைக்க முடியாத சூழல் உருவாகி விடுகிறது. அப்படிப்பட்ட இடங்களை வங்கிகள் ஏலம் விடுகின்றன என்பதைத்தான் மேலேயுள்ள அறிவிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால் பெற்றதை இழக்க வேண்டிய அவலநிலை உடையதாருக்கு ஏற்பட்டுவிடுகிறது. இந்தத் துயரநிலை எப்படி உண்டாகிறது? என்பதைக் கவனிக்க வேண்டும்.சொந்த வீடு வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கிறது. இந்த ஆசையைச் சாதகமாக்கிக் கொண்டு கோடிக்கணக்கில் சம்பாதிக்க நினைக்கிற வீடு,மனை விற்போர் கூட்டம் பெருகியதுதான் இதற்கு முதல்காரணம். இக்கூட்டம் நகரங்கள் தொடங்கி குக்கிராமங்கள் வரை காலி இடங்களையும் விவசாய நிலங்களையும் குறைந்த விலைக்கு வளைத்துப் போட்டு, வீட்டு மனைகளாகப் பிரித்து, விலையை ஏற்றி, அப்பாவி மக்கள் தலையில் கட்டத்தொடங்கியது. கையில் காசில்லாவிட்டாலும் பரவாயில்லை கடன் ஏற்பாடு செய்து தரப்படும்என்று ஆசையைத் தூண்டி வங்கிகளையும் நிதிநிறுவனங்களையும் அறிமுகம் செய்தது. இதனால் பலர் விளக்கில் விழுந்த விட்டில் பூச்சிகளானார்கள். வீடு, மனை விற்பனை செய்வோரையும் நிதி நிறுவனங்களையும் மட்டும் காரணமாகக் கூறுவது சரியில்லை. வாங்குவோரையும் காரணமாகக் கூறவேண்டும்.இவர்கள் இரண்டாவது காரணம் என்றாலும் மிக முக்கியமான காரணம். ஆம்!வீடு, நிலம் ஏலம் போவதற்கு அதன் உரிமையாளர்களும் காரணமாக அமைகின்றனர். இப்படி அல்லலுக்குள்ளாகும் உரிமையாளர்களை இருவகையாகப் பிரிக்கலாம்.சூழ்நிலையால் இத்தகு அவதிக்கு ஆளாவோர் ஒரு வகையினர். தகுதிக்கு மீறிய ஆசையினால் அவதியை வரவழைத்துக் கொண்டோர் இன்னொரு வகையினர். நல்ல வேலையில் நல்ல சம்பளத்தில் இருந்து திடீரென்று ஏதேனும் ஒரு வகையில் நலிவடைந்து வாங்கிய கடனை அடைக்கமுடியாமல் போனவர்கள் சிலர் இருப்பர். இவர்கள் பரிதாபத்துக்குரியோர்.பணி நீக்கம், விபத்து,மரணம், திடீர் மருத்துவச் செலவு, பெரிய இழப்பு போன்ற ஏதேனும் ஒரு காரணத்தால் இவர்களுடைய தவணைத்தொகை செலுத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். வேறு வழி இல்லாததால் இத்தகைய அவல நிலைக்கு அவர்களோ அவர்களின் குடும்பமோ தள்ளப்பட்டிருக்கும். அடுத்து, ஆசையினால் அவதியை வரவழைத்துக் கொண்டோர், இவர்கள் தங்கள் தகுதியை எண்ணிப் பார்ப்பதில்லை. தகுதிக்கு மீறி அகலக்கால் வைத்தவர்கள்அடுத்தவர்கள் நிலம் வாங்கிவிட்டார்களே, வீடுவாங்கி விட்டார்களே, நாம் வாங்கக் கூடாதா?என்ற ஆசை மேலெழுபவர்கள். மற்றவர் சொல்வதை மந்திரமாக ஏற்றுக்கொண்டு தம் உண்மை நிலையை உணரத்தவறியவர்கள். இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ வேண்டும் என்பதை மறந்து போனவர்கள்.கிடைக்கிற கடனை விட்டுவிடக் கூடாது என்று நினைப்பவர்கள். தவணை முறைதானே எளிதாகக் கட்டிவிடலாம் என்று தப்புக் கணக்குப் போடுபவர்கள். வாழ்க்கையில் அவசரச்செலவுகள் ஏற்படும் என்பதைக் கணக்கில் கொள்ளாதவர்கள். இரண்டு, மூன்று முறை தெரிந்தவர் நண்பர் என கைமாற்று வாங்கி தவணை செலுத்துவர். பின் முடியாமல் தத்தளிப்பர். இப்படிப் பட்டவர்கள் வாங்கிய நிலமும் கட்டிய வீடும்தான் அதிகமாக ஏலத்திற்கு வருகின்றன எனலாம். அப்படியானால் கடன் வாங்கக் கூடாதா? கடன் வாங்காமல் வாழ முடியுமா? என்று கேள்விகள் எழலாம்.கடன் வாங்கலாம்.கடன் வாங்குவதில் தவறில்லை. அதை அடைக்க நினைக்காததுதான் தவறு. கடன் வாங்காமலும் முடியாது. வாங்கியதைக் கொடுக்காமலும் இருக்கக் கூடாது. தம் வருமானம், செலவு இவற்றை அறிந்து அதற்கேற்றவாறு கடன் வாங்குபவர்களுக்கு. எவ்வளவு வருமானம் வருகிறது என்பதில் சிறப்பில்லை.எப்படிச் செலவு செய்கிறோம் என்பதில்தான் சிறப்பு. குறைந்த சம்பளம் வாங்குபவன் கடனை ஒழுங்காக அடைக்கிறான்.நிறைந்த சம்பளம் வாங்குபவன் கடனை அடைக்கத் தடுமாறுகிறான். வரும்படியில் அல்ல சிறப்பு; வாழும்படி வாழ்வதில்தான் சிறப்பு. குறைந்த வருமானம் கேடில்லை. கூடுதல் செலவுதான் கேடு. இது வள்ளுவர் கருத்து. தம் வருமானத்தை அறிந்து, அதற்குட்பட்டுச் செலவு செய்து அளவோடு கடன் வாங்கினால் எந்தக் கடனும் எளிதில் அடைபட்டுப் போகும். வீட்டுக் கடன் பெறுவோர் இதனை மனத்தில் கொண்டால் எதிர்காலத்தில் தங்கள் கனவு இல்லம் ஏலம் போகாமல் காப்பாற்றலாம்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts