Sunday 6 January 2019

யார் பொறுப்பு?

யார் பொறுப்பு? அ.அருள்மொழி, திராவிட கழக பிரசார செயலாளர். பொதுவாக நம் நாட்டில் இன்று நாம் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறோம் என்பதை நாம் ஒத்துக்கொள்வது இல்லை. அதற்கு காரணம் பாரம்பரியம் பற்றிய பெருமைகளும், நமக்கு நாமே பெருமை பேசி கொள்கிற சாதி வண்ணங்களும் தான். உலகத்தில் எல்லா நாடுகளிலும் அவர்களுக்குரிய கலாசாரம், பண்பாடு இருக்கிறது. வெளிநாட்டில் உள்ளவர் களுக்கு ஒழுக்கம், பண்பாடு இல்லை என்பது போலவும் நாம் மட்டுமே ஒழுக்க சீலர் என்று பேசி கொள்கிற பழக்கம் இந்தியாவில் பழமைவாதிகளுக்கு அதிகம். பெரும்பான்மையான மக்களும் இதே போன்று பழக்கங்களுக்கு ஆளானவர்கள்தான். இதன் மறுபக்கம் என்னவென்றால் நம்முடைய நடவடிக்கைகள் ஒழுக்கம் சார்ந்ததாக, அறம் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்ற அக்கறை நமக்கு இல்லை. சுருக்கமாக சொன்னால் பண்பாடு பற்றியும், ஒழுக்கம் பற்றியும் அடுத்தவரை விமர்சனம் செய்து எந்த அளவுக்கு அதிகமாக பேசுகிறோமோ அது அந்த அளவுக்கு நம்மிடம் குறைவாக இருக்கிறது என்று பொருள். ஒழுக்க கேடாக நடந்து கொள்ளும் ஆண்களுக்கும், அவர்களுக்கு நிகராக பெண்களும் இருக்கிறார்கள் என்பதற்கு இத்தகைய வழக்குகள்( கடலூரில் பள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபட்ட வழக்கில் மதபோதகர் உள்ளிட்ட 16 பேரை குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது) எடுத்துக்காட்டாக உள்ளன. இதற்கு மதமோ, கடவுள் நம்பிக்கையோ, அவர்கள் மதம் சார்பாக வகிக்கிற பதவியோ, இவர்கள் பேசுகிற ஆன்மிகமோ, எதுவுமே அவர்களுடைய ஒழுக்கத்தின்பால் செலுத்தவில்லை என்கிற அதிர்ச்சிகரமான உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தந்தை பெரியார் “பக்தி என்பது தனி சொத்து; ஒழுக்கம் என்பது பொதுசொத்து. பக்தி இல்லாவிட்டால் நஷ்டம் இல்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழாகிவிடும்” என்று கூறுவார். இது பக்திவாதிக்காக மட்டுமே என்று கேட்டால் பகுத்தறிவாதிகளுக்கும் பொருந்தும். பக்தி சார்ந்த பக்தியும், பகுத்தறிவும் அறிவு சார்ந்த விஷயங்கள்தான். அதை ஒத்துக்கொள்வதும், ஏற்க மறுப்பதும் அவரவர் விருப்பம். ஒழுக்கம் என்பது இருவருக்கும் பொதுவானது. அந்த அடிப்படையில் தந்தை பெரியார் சொன்னதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பக்கத்து வீட்டுக்காரர் ஒழுக்கமானவரா? என்று பார்க்க வேண்டும். பொதுவாக இதுபோன்ற விவகாரங்களில் மதபோதகர்கள் சம்பந்தப்படும்போது, அது எந்த மதபோதகராக இருந்தாலும் அந்தளவுக்கு அதிகமாக பேசப்படும். மக்களிடம் பரபரப்பை உண்டாக்கி விடும். ஏனென்றால் சாதாரண மனிதர்களுக்கு வழிகாட்டிகளான தங்களை காட்டி கொள்வதற்காக ஒரு பதவியிலும் இருப்பார்கள் இந்த மதபோதகர்கள். ஆன்மிகம் பற்றியும், புலனடக்கம் பற்றியும் மக்களுக்கு எடுத்து செல்ல வேண்டிய அதிகாரம் பெற்ற இடங்களில் இருப்பவர்கள். அத்தகைய நற்குணங்களை கொண்டவர்களாக இருப்பார்கள் என்று நம்பக்கூடாது. எந்த நாட்டில் எந்த மதம் அல்லது நம்பிக்கை அதிகமாக பின்பற்றப்படுகிறதோ அந்த மதத்தை சேர்ந்த மதபோதகர்கள் அல்லது மடாதிபதிகள் அதிகமாக வழக்குகளிலும், குற்றங்களிலும் ஈடுபடுகிறார்கள். மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப சிறுபான்மை மதங்களின் மதபோதகர்களும் அதற்கேற்ப எண்ணிக்கையில் குற்ற வழக்குகளில் ஈடுபடுகிறார்கள் என்பது உண்மை. இதற்கு எந்த மதமும் விதிவிலக்கல்ல. அதேபோல ஆண்களைப்போலவே எல்லா உரிமைகளுக்காகவும் வாழக்கூடிய பெண்கள், ஆண்களின் காம இச்சைக்காகவும் விற்கப்படும் பண்டங்களை போல சந்தைக்கு அனுப்பப்படுகிறார்கள். இந்த தொழிலில் ஈடுபடுகிற பெண்கள் பரிதாப படக்கூடியவர்கள்தான். ஆனால் இந்த தொழிலில் மற்ற பெண்களை ஈடுபடுத்துகிற பெண்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஒரு பெண்ணின் சூழ்நிலையை கருதி இந்த பாலியல் சந்தைக்கு அனுப்பும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் மனித குலத்துக்கு எதிரானவர்கள். எந்தவித தயவுதாட்சண்யமின்றி தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இவர்களை எல்லாம் உருவாக்குகிற பணக்காரர்களின் உலகம் சட்டத்திற்கு எல்லாம் அப்பாற்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கு துணையாகவும், பங்காளியாகவும் அரசியல் அதிகாரங்களை பெற்றவர்கள்தான் இந்த குற்றங்களை தண்டிக்க வேண்டிய காவல், நீதித்துறையின் பொறுப்புகளை வகிக்கிறார்கள். இதையும் தாண்டி ஒரு குழந்தைக்கோ, சிசுவுக்கோ, பெண்களுக்கோ ஏன் ஆண் குழந்தைகளுக்கோ, சிறுவர்களுக்கும் கூட பாதுகாப்பும், நீதியும் கிடைக்க செய்வது நம் ஒவ்வொருவருக்கும் கடமை, கூட்டுப்பொறுப்பு உள்ளது என்பதை நாம் உணருகிறோமா? ஒவ்வொரு பெண்ணுக்கு எதிராகவோ அல்லது ஒரு குழுவுக்கு(ஆண், பெண்) எதிராகவோ இத்தகைய பாலிய குற்றங்கள் நடைபெறுகிறபோது பாதிக்கப்பட்டவர்கள் யார்? குற்றம் சாட்டப்பட்டவர்கள் யார்? என்பதை பொறுத்து நம்முடைய கருத்து மாறுபடுமானால் நாமும் அந்த குற்றத்தின் பங்காளிகளே! இத்தகைய வழக்குகள் நடைபெறும்போதெல்லாம் அதிகபட்ச தண்டனை பற்றி குரல்வளை அதிரும்படி முழங்குகிறோம். ஆனால் அடுத்த குழந்தைக்கு இந்த கொடுமை நடக்காமல் இருக்க வேண்டுமானால் நமது ஆண்களுக்கு(அனைத்து வயதிலும்) ஒழுக்கமும், கட்டுப்பாடும் தேவை என்பதை பேசுவது இல்லை. நமது ஆண் குழந்தைகளை ஆரோக்கியமான மனநிலையோடு ஒரு பெண்ணை பார்க்கக்கூடிய அறிவுடன் வளர்க்க வேண்டும் என்று யாரும் அறிவுரை கூறுவது இல்லை. இந்த தவறுகளை மாற்றி ஆணும், பெண்ணும் மனித உயிர்கள் வீட்டிலும், பொது வெளியிலும் அவர்கள் ஆசைப்பட்டபடி சுதந்திரமாக நடக்கவும், ஓடவும் உரிமை பெற்றவர்கள். பகல் என்பது பெண்கள் பாதுகாப்பாக உலாவும் நேரம். இரவு என்பது ஆண்கள் மிருகங்களாக திரியும் நேரம் என்று கற்பிக்கப்பட்டு இருக்கும் தவறான கருத்துகளில் இருந்து மீண்டு வருகிற ஆண்கள்தான் பெண்களுக்கு நல்ல நண்பர்களாகவும், மகன்களாகவும், சகோதரர்களாகவும் வாழ்கிறார்கள். அத்தகைய சிலரால்தான் இந்த நாட்டில் பெண் கற்பிப்பதற்கும், வாழ்வதற்கும் இன்னும் கொஞ்சம் நம்பிக்கை மிச்சம் இருக்கிறது. அத்தகைய ஆண்களின் எண்ணிக்கை விரிவடைந்தால் தான் நமது சமூகம் பெண்கள் நிம்மதியாக வாழத்தகுந்த நாகரிகம் உள்ள சமூகமாக மாறும். அதற்கு மாறாக நம் ஊரில் வாழும் பெண்கள் மட்டும் அல்ல. வெளிநாட்டில் இருந்து இந்தியாவின் பெருமையை பார்க்க ஆசையுடன் வருகிற பெண் சுற்றுலா பயணிகள் கூட பத்திரமாக அவர்களது நாட்டுக்கு திரும்பி செல்ல நமது அரசுகளால் உத்தரவாதம் கொடுக்க முடியவில்லை என்பதற்காக இந்தியாவில் ஆளுகிறவர்களும் சரி, இங்கு வாழ்கிறவர்களும் சரி வெட்கப்பட வேண்டும். இந்த நிலையை மாற்றுவது பிற மாதர் சங்கங்கள், பெண் அமைப்பு, சமுதாய இயக்கங்கள் ஆகியோரின் கடமை மட்டும் அல்ல. நம் ஒவ்வொருவருக்கும் அதில் பங்கு உண்டு என்பதை நம் மக்கள் உணர்ந்தால் இத்தகைய வழக்குகளுக்கு இடமே இருக்காது. பெண் குழந்தையை பெற்று வளர்ப்பவர்களுக்கு பயமே இருக்காது. அந்த நல்ல மாற்றத்தை நோக்கி நம் சமூகத்தை நகர்த்துவோம்.

No comments:

Popular Posts