Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’

மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ வி.கே.டி.பாலன், தலைவர், தமிழ்நாடு சுற்றுலா பயணம் மற்றும் விருந்தோம்பல் சங்கம் உலகின் மிகத் தொன்மையான மொழி தமிழ். மக்கள் பிறந்தவுடன் பேசிய மொழி தமிழ் என்றும் கூறலாம். மக்கள் பேசிய முதல் மொழி தமிழ் என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. இத்தகைய தமிழகத்தில் எதற்கும் குறைச்சல் இல்லை. தமிழகத்தில் கிடைக்காதது உலகில் வேறு எங்குமே கிடைக்காது. 12 வருடங்களுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சி மலர் கூட நமது மாநிலத்தில் உள்ள கொடைக்கானலிலும், நீலகிரியிலும் பூத்துக் குலுங்குகின்றன. உலகில் பல நாடுகளில் வாழ்கின்ற மக்கள் பார்த்து ரசிக்க விரும்பும் இந்த மலர், மேற்கண்ட மலைப்பிரதேசங்களில் ஏக்கர் கணக்கில் பரந்து விரிந்த போர்வையென இதழ் விரித்து மலர்ந்து பார்ப்போரை கவர்ந்திழுக்கின்றன; வியக்க வைக்கின்றன என்றால் அது மிகை இல்லை. உலகம் போற்றும் தமிழ் இலக்கியங்களில் மலர்களுக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. இதனால் தான் நம் இலக்கியங்கள் வண்ணம் பெற்றன. குறிப்பாக தமிழகத்தில் காணக்கிடைக்கும் மலர்களில் முதன்மையானதாகவும், அரிய மலராகவும் கருதப்படுவது குறிஞ்சி மலர் தான். இம்மலர் தமிழ் இலக்கியதுடன் பின்னிப் பிணைந்துள்ளது என்பதற்கு பல்வேறு எடுத்துக்காட்டுகளை கூறமுடியும். அகநானூறு, குறிஞ்சிபாட்டு, குறுந்தொகை, திருமுருகாற்றுப்படை, நற்றிணை, பரிபாடல் என பல்வேறு இடங்களில் குறிஞ்சிப்பூ அல்லது குறிஞ்சித் திணை பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது. பழந்தமிழர்களின் நிலவகை பகுப்பில் மலையும் மலை சார்ந்த நிலமும் ‘குறிஞ்சி’ திணையாகக் குறிக்கப்படுகின்றது. இது தமிழரின் மலை நிலத்துக்கும் இந்தச் செடிகளுக்கும் இடையேயான பிணைப்பை காட்டும். அரிய குறிஞ்சி மலரின் மகிமை அறிந்து பழந்தமிழர்கள் அதை கொண்டாடினார்கள். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. இந்த குறிஞ்சிப்பூ 12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் மலர் என்பது கூட நம்மில் பலருக்கும் தெரியவில்லை என்பதுதான் வருத்தமான விஷயம். இந்த அரிய, அபூர்வப்பூவை நாம் அறிந்துகொண்டால்தான் அதை அழிவில் இருந்து மீட்க முடியும். குறிஞ்சிச் செடிகள் புதர்வகையைச் சேர்ந்தவை. ‘ஸ்ட்ரோபைலைன்தீஸ் குந்தியானா’ என்பது இதன் தாவரவியல் பெயர். இதன் மலர்கள் மணிப்போன்ற வடிவம் கொண்டவை. பல வண்ணங்களில் குறிஞ்சி மலர்கள் பூக்கும் என்று சொல்லப்பட்டாலும், பெரும்பாலும் நீல நிறம், கருநீல நிறத்தில்தான் குறிஞ்சி மலர்கள் காணப்படுகின்றன. குறிஞ்சி பூக்கள், பச்சை நிறத்தில் காட்சி அளிக்கும் மலைகளை நீல நிறத்தில் மாற்றி விடுகின்றன. தூரத்தில் இருந்து பார்க்கும்போது, நீல கம்பளம் விரித்தது போன்று காட்சி தரும். இவை உண்மையிலேயே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் பூக்கின்றனவா? என்ற சந்தேகத்தையும் சிலர் கிளப்புகிறார்கள். பொதுவாக, குறிஞ்சிச் செடிகளில் 3 மாதங்கள், ஒரு ஆண்டு, 3 ஆண்டு, 6 ஆண்டு, 12 ஆண்டு, 30 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் வகைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இவற்றில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி தான் புகழ் பெற்றது. நீலக்குறிஞ்சி என்றொரு வகை உண்டு. இந்த குறிஞ்சி மலர் இதழ்விரித்து பூத்துக்குலுங்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகத்தான் இருக்கும். இதை வைத்தே நீலகிரி என்றும் நீலமலை என்ற பெயர் உருவானது என்ற கூற்றும் நிலவுகிறது. இந்த குறிஞ்சிக் குடும்பத்தில் ஏறக்குறைய 200 வகைச் செடிகள் காணக்கிடைக்கின்றன. அவை அத்தனையும் ஆசிய நாடுகளில் மட்டுமே காணப்படுகின்றன. அவற்றில் கிட்டத்தட்ட 150 வகைகள் வரையில் இந்தியாவில் மட்டுமே பார்க்க முடியும். குறிப்பாக, 30-க்கும் மேற்பட்ட வகைகள் தமிழகத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சிமலைப் பகுதியான நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைகளில் மட்டுமே வளர்கின்றன. குறிஞ்சி மலர்கள், ஆகஸ்டு மாதம் பூக்கத் தொடங்கும். டிசம்பர் வரை இந்த மலர்கள் பூத்துக்குலுங்கும். குறிப்பாக, இம்மலர்கள் பூக்கும் பகுதிக்கு நவம்பர், டிசம்பர் மாதங்களில் சென்றால், கண்ணுக்கு விருந்தளிக்கும் குறிஞ்சிப்பூக்களின் ராஜ்ஜியத்தை பார்த்து வியக்க முடியும். மலைவாழ் மக்கள் இந்த பூக்கள் பூக்கும் காலத்தை வசந்த காலமாக கருதுகிறார்கள். இக்காலத்தில் தான் அவர்கள் தங்களின் இல்ல விழாக்களை நடத்துவதை வழக்கத்தில் வைத்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி, குறிஞ்சிப்பூ பூப்பதை வைத்துதான் அவர்கள் தங்களின் ஆயுளையும் கணக்கிடுகிறார்களாம். குறிப்பாக நீலகிரியில் உள்ள ‘தோடர்’ இன ஆதிவாசி மக்கள் எத்தனை முறை குறிஞ்சி பூத்ததைப் பார்த்திருக்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து தங்களின் ஆயுட்காலத்தை கணிக்கிறார்கள். தமிழகம் மற்றும் கேரளாவில் கடந்த 1994-ம் ஆண்டில் குறிஞ்சி மலர்கள் பூத்தன. அதன்பிறகு, 2006-ம் ஆண்டில் பூத்து குலுங்கின. அந்த வகையில் இந்த ஆண்டு குறிஞ்சி மலர்கள் இதழ் விரிக்க வேண்டும். தற்போது ஆகஸ்டு மாதம் பிறந்திருப்பதால், பல இடங்களில் குறிஞ்சி மலர்கள் பூக்கத் தொடங்கி இருக்கும். கேரளாவை விட தமிழகத்தில் தான் அதிகம் குறிஞ்சி பூக்கள் பூக்கின்றன. ஆனால் அம்மாநில அரசு குறிஞ்சி மலர்கள் பற்றி மக்களுக்கு அதிகம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. இதனால் அம்மாநில மக்கள் குறிஞ்சி மலரை அதிகம் கொண்டாடுகிறார்கள். ஆனால் நம் மாநிலத்தில் இக்கால இணைய தலைமுறைக்கு அபூர்வ குறிஞ்சி மலர் பற்றி எடுத்துரைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இருக்கிறது. மலர்களின் அரசியைப்போல திகழும் அபூர்வ குறிஞ்சியை அழியவிடாமல் பாதுகாக்க வேண்டியதும், அதை கொண்டாட வேண்டியதும் தமிழர்களின் கடமை. கோடை விழாக்கள் நடத்துவது போல குறிஞ்சி மலருக்கென தனி விழா எடுக்க வேண்டும். தமிழகம் தாங்கி நிற்கும் அரிய பல பொக்கிஷங்களை அழியவிடாமல் காப்பாற்ற வேண்டும் என்பதே எமது விருப்பம்.

கல்விச்சோலை - kalvisolai Articles

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement