ஆபத்துகளை அள்ளித் தரும் செல்போன் ‘கேம்ஸ்’
உதவி பேராசிரியர் டாக்டர் ஜனார்த்தனன்
வித, விதமான ஸ்மார்ட்போன்கள் வருகையால் உலகமே உள்ளங்கைக்குள் அடங்கிவிட்டது. தற்கால மனிதர்களின் சிறந்த நண்பனாக விளங்குவது செல்போன்தான். அதனுடன் மனிதன் செலவிடும் நேரம் முன்பை விட பன்மடங்கு அதிகரித்துவிட்டது.
படுக்கையில் கூட செல்போன் பக்கத்திலேயே இருக்கிறது. தூங்குவதும், துயில் எழுவதும் செல்போனை பார்த்துவிட்டு தான் நடக்கிறது. அந்த அளவுக்கு செல்போன்கள் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்குகின்றன.
அத்தியாவசிய தேவைக்காக மட்டுமின்றி பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவும் செல்போன்களை இன்றைக்கு அதிகமாக சார்ந்திருக்கிறோம். திரைப்படங்கள், நாடகங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை பார்க்க தொலைக்காட்சியை போல செல்போன்களை பயன்படுத்த தொடங்கிவிட்டோம்.
அந்த வகையில், நம்மில் பலரும் செல்போன் கேம்ஸ் விளையாட நீண்ட நேரத்தை செலவிடுகிறார்கள். தூங்கும் நேரம், பணியில் இருக்கும் நேரத்தை கூட செல்போன் கேம்ஸ் களவாடிவிடுகிறது. இதனால் ஏற்படும் விபரீதத்தை பலரும் உணர்வதில்லை.
காரணம், ஸ்மார்ட்போன் கேம்ஸ் விளையாடுவது இயல்பான செயல் என்று நம்புகிறோம். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்னவென்றால் நீண்ட நேரம் கேம்ஸ் விளையாடுவதால் மன அழுத்தம் ஏற்படுவதோடு, சோம்பலும் அதிகமாகிறதாம்.
நம் எண்ணத்தை வெளிப்படுத்துவது என்பது மனிதன் நிம்மதிக்கு அடிப்படையான விஷயம். நீண்ட நேரம் கேம்ஸ் விளையாடுவதால் நமது எண்ண வெளிப்பாடுகள் மற்றும் உரையாடல்கள் குறைகின்றன. இது நம்மை ஆழ்ந்த அழுத்தத்துக்கு கொண்டு செல்கிறது.
அதுமட்டுமின்றி, இந்த பழக்கம் ஒருவித போதை என்பது பல ஆராய்ச்சியாளர்களின் கண்டு பிடிப்பு. அதாவது, ஒரு நாளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கேம்ஸ் விளையாடுபவர்கள் அந்த போதைக்கு அடிமையானவர்களாக கருதப்படுகிறார்கள்.
‘கூகுள் பிளே ஸ்டோர்’ நமக்கு ஆயிரத்துக்கும் அதிகமான இலவச விளையாட்டுகளை தருகிறது. குழந்தைகளில் இருந்து முதியவர்கள் வரை தங்களுக்கு பிடித்தமான கேம்சை தேர்வு செய்து விளையாடுகின்றனர். நீண்ட நேர செல்போன் விளையாட்டுக்கு அடிமையானவர்கள் மீண்டு வருவது எளிதான காரியமல்ல.
நீண்ட நேரம் கேம்ஸ் விளையாடுவதால் உடல் ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். கேம்ஸ் விளையாடும்போது வெவ்வேறு உடல் தோரணைகள் கொண்டு விளையாடுவது வழக்கம். இது நமது கண், காது, கை போன்ற உறுப்புகளையும், மனித உடல் செயல்பாட்டின் தூண்களாக விளங்கும் முதுகு எலும்பையும், நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது.
அதாவது, செல்போன் கேம்ஸ் விளையாடும்போது, இருக்கையில் அமர்ந்து, முதுகெலும்பை 90 டிகிரி நேரான கோட்டில் வைத்து, தலையை மிகவும் குனியாமல், கைகளை ஒரே கோணத்தில் வைத்து, 10 முதல் 20 நிமிடங்கள் விளையாடினால் அது விளையாட்டாக அமையும். அதே சமயம், படுக்கையில் படுத்துக்கொண்டு அல்லது ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து விளையாடினால் அது கண்டிப்பாக உடலுக்கு பல பாதிப்புகளை கொண்டுவந்து சேர்க்கும்.
விளையாடுபவர்கள் பெரும்பாலும் தன்னையும், தன் சூழலையும் மறக்கின்றனர். இது அவர்களின் சுற்றுச்சூழலை மாற்றியமைக்கிறது. ஒரு மனிதன் நீண்ட நேரம் ஓரிடத்தில் அல்லது ஒரு அறையில் சுவாசித்துக் கொண்டு இருப்பதால், சுற்றுச்சூழல் தரும் மாசற்ற மற்றும் சுகாதார சூழல் அவருக்கு அங்கு கிடைக்காமல் போகிறது.
மனிதன் சுத்தமான நீர் மற்றும் உணவை உட்கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதைவிட மிக முக்கியம் நாம் சுவாசிக்கும் காற்று. நாம் ஒரே இடத்தில் நீண்ட நேரம் இருப்பதால், நமக்கு ஆக்சிஜன் குறைவாகவும், மாசடைந்தும் கிடைக்க நேர்கிறது.
ஏற்கனவே மனிதன் 6-ல் இருந்து 8 மணி நேரம் உறங்குவதால் அவனுக்கு நல்ல ஆக்சிஜன் கிடைப்பதில்லை. அதுமட்டுமின்றி பள்ளிக்கூடங்கள் மற்றும் அலுவலகங்களும் தங்கள் பங்குக்கு மனிதனை சிறைபிடிக்கின்றன.
மீதமுள்ள நேரத்திலாவது நாம் இயற்கையான சுற்றுச்சூழலுக்கு மதிப்பளிக்க வேண்டும். இதை மறந்து ஸ்மார்ட்போன் கேம்ஸ் போன்றவற்றில் மூழ்கிவிடுகிறோம். இது நமக்கு மட்டுமின்றி நம் சூழலுக்கும் கேடு விளைவிக்கிறது.
தூக்கமின்மைை-யும் முக்கிய பிரச்சினையாக உருவெடுக்கிறது. ஆரோக்கியமான வாழ்வுக்கு நல்ல தூக்கம் இன்றியமையாதது. நீண்ட நேரம் கண் விழித்து கேம்ஸ் விளையாடுவதால், நம் மூளை இயல்பான செயல்பாட்டுக்கு திரும்ப சில மணி நேரம் ஆகிறது. இரவில் கேம்ஸ் விளையாடுவது, நமது தூக்கத்தின் இயல்பை பெரிதும் பாதிக்கிறது.
கேம்ஸ் விளையாடுவதை நிறுத்திய பிறகும், நாம் அதன் ஒலி ஓட்டத்திலே உறங்குகிறோம். இது நமக்கு சிறப்பான தூக்கத்தை அளிப்பதில்லை. இந்த நிலை நீடித்தால் ‘இன்சோம்னியா’ போன்ற தூக்கமின்மை பிரச்சினைகளுக்கு நாம் தள்ளப்படுவோம்.
கேம்ஸ் விளையாடும் சிலர் தங்களது தூக்கத்தில் கூட விளையாடுவது போல் கனவு காண நேரிடும். எனவே, இரவில் உறங்க செல்லும் முன்பு கேம்ஸ் விளையாடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
ஒரு பக்கம் பலவகையான கதிர்வீச்சுக்களை எதிர்கொள்ளும் நாம், நமது ஸ்மார்ட்போன் தரும் ஆபத்தான கதிர்வீச்சை உணர மறுக்கிறோம். பெரிதளவில் ஆய்வுகள் இல்லாத போதிலும், பல தன்னலமற்ற அமைப்புகள், ஸ்மார்ட்போன் மூலம் வரும் எலக்ட்ரோ மேக்னடிக் கதிர்வீச்சை குறைக்க பரிந்துரைத்து வருகின்றன.
ஸ்மார்ட்போன் விளையாட்டுகளுக்கு அடிமையாவதால், அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்புகளை உணராமலேயே, அவற்றை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். மனம், உடல், சமுதாயம், படிப்பு, வேலை, வருமானம் போன்ற மனிதனின் அனைத்து செயல்பாடுகளுக்கும் இது ஒரு முட்டுக்கட்டையாக இருக்கிறது.
எனவே, நாம் அளவறிந்து செல்போன் கேம்சை விளையாடினால், அது பொழுதுபோக்குக்கானதாக இருக்கும். மாறாக, ஆபத்துகளை அள்ளித் தரும் செல்போன் கேம்சுக்கு அடிமையானால் நம்மை அறியாமல் நாமே நம் நிம்மதியை தொலைக்க நேரிடும்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment