Tuesday 31 January 2017

யோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.

வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.
விதிமுறை 1
முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனை
வாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.
விதிமுறை 2
மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையாக எழுதியுள்ளேன்.
6-8-10-11-16-17-20-21-22-26-27-28-29-30-32-33-35-36-37-39-41-42-45-50-52-54-56-59-60-64-66-68-71-72-73-74-75-77-79-80-84-85-88-89-90-91-92-94-95-97-99-100 இவை அனைத்தும் அறைகளின் உள் அளவுகளாக அமைக்க வேண்டும்.இருந்தாலும் நம்மிடம் உள்ள இடத்திற்கு சரியாக இந்த அளவு வராத நிலையில் மூன்று அங்குலம் கூட்டவோ குறைக்கவோ செய்து கொள்ளலாம்.
விதி முறை 3
அறைகளின் நீளம் அதிகமாகவும் அகலம் குறைவாகவும் அமைக்க வேண்டும். அதில் யோகம் தரும் சில நீள அகல முறைகள் , 6 அடி அகலம் 8 அடி நீளமும் , 8அடி அகலம் 10 அடி நீளமும், 10 அடி அகலம் 16 அடி நீளமும் , 16 அடி அகலம் 21 அடி நீளமும் , 21 அடி அகலம் 30 அடி நீளமும் , 30 அடி அகலம் 37 அடி நீளமும் , 37 அடி அகலம் 50 அடி நீளமும் , 39 அடி அகலம் 59அடி நீளமும் , 42 அடி அகலம் 59 அடி நீளமும் , 50 அடி அகலம் 73 அடி நீளமும் , 60 அடி அகலம் 80 அடி நீளமும் , இதில் காட்டியது போல் சரியான அளவில் அறைகள் அமைத்தால் மிகவும் யோகம் தரும். இந்த அளவுகள் தவீர விதிமுறை 1 ல் கூறிய மற்ற மனையடி அளவுகள் கொண்டும் அறைகள் அமைக்கலாம். அது சுமாரான பலங்களைத் தரும்.
விதிமுறை 4
6 அடிக்கு குறைவாக கழிவறை குளியலறை மட்டும் அமைத்துக் கொள்ளலாம் மற்ற அறைகள் அமைக்கக் கூடாது. கட்டிடத்திற்கும் காம்பவுண்ட் சுவருக்கும் இடைவெளி விடும் போது குறைந்த பட்சம் 3 அடியும் அதற்குமேல் போகும்போது விதிமுறை 1 ல் கூறியுள்ள படி யோகம் தரும் அடிகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் .
விதிமுறை 5
போர் அல்லது கிணறு வடக்கு ஈசான்யம் அல்லது கிழக்கு ஈசான்யத்தில் மட்டும் தான் அமைக்க வேண்டும் மற்ற திசைகள் ஆகாது.நாம் கட்டிடம் கட்டும் இடத்தில் எட்டு திசையில் எந்த பாகத்தில் நீரோட்டம் இருந்தாலும் வடக்கு ஈசான்யம் அல்லது கிழக்கு ஈசான்யத்தில் போர் அல்லது கிணறு அமைக்கும் போது நீரோட்டம் பள்ளத்தை நோக்கி பாய ஆரம்பித்துவிடும். அதனால் கண்டிப்பாக வடக்கு ஈசான்யம் அல்லது கிழக்கு ஈசான்யத்தில் மட்டும் போர் அல்லது கிணறு அமைக்கவும்.எல்லாவிதமான கட்டிடத்திற்கும் இது பொதுவானது.ஆனால் விவசாய நிலத்திற்கு இது பொருந்தாது.விவசாய நிலத்தில் போர் அல்லது கிணறு அமைக்கும் போது அருகில் உள்ள மனையடி சாஸ்திரம் வாஸ்து அறிந்தவரின் ஆலோசனைப்படி அமைத்துக் கொள்ளுங்கள்.
விதிமுறை 6
கழிவு அறை படுக்கை அறையில் வாயு பாகத்தில் அமைத்துக்கொள்ள வேண்டும். அதன் கழிவுத் தொட்டி மொத்த கட்டிடத்தின் வாயு பகுதியில் மட்டுமே அமைக்க வேண்டும். மற்ற திசைகள் ஆகாது. கழிவுத் தொட்டிக்கு மேலையும் கழிவறை அமைத்துக் கொள்ளலாம்.
விதிமுறை 7
எந்த திசை தலவாசல் வீடாக இருந்தாலும் சமையலறை மொத்த வீட்டின் அக்னிப் பாகத்தில் மட்டும் அமைக்க வேண்டும் . மற்ற திசைகள் ஆகாது.சமையல் செய்பவர் கிழக்கு பார்த்து நின்று சமையல் செய்யுமாறு சமையல் மேடை அமைத்துக் கொள்ளவும்.மற்ற திசைகள் பார்த்து நின்று சமையல் செய்யக் கூடாது.
விதிமுறை 8
மாடிப்படிகள் மேற்குப் பாகம் அல்லது தெற்குப்பாகம் அல்லது கன்னி பாகத்தில் மட்டுமே அமைக்க வேண்டும் . மற்ற திசைகளில் அமைக்கக் கூடாது . படியில் ஏறும் பொழுது மேற்கு பார்த்து அல்லது தெற்கு பார்த்து ஏறும் வண்ணம் முதல் படியை அமைத்துக் கொள்ள வேண்டும்.
விதிமுறை 9
எந்த திசை தலவாசல் கொண்ட வீடாக இருந்தாலும் ஈசான்ய அறை பெரிய சன்னல்கள் பயன்படுத்தி கட்ட வேண்டும்.அந்த அறையில் கனம் கொண்ட பொருட்கள் வைத்து அடைத்து வைக்கக் கூடாது. படுக்கை அறையாகவும் பயன்படுத்தக் கூடாது. குழந்தைகள் பெரியவர்கள் படிக்கும் அறையாக பயன்படுத்தலாம்.நல்ல கல்வி வளம் பெருகும்.அந்த அறை கோவிலைப்போல் எப்பவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.அந்த அறையில் கிழக்குப் பார்த்து சாமிப் படங்கள் வைத்து பூஜை அறையாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
விதிமுறை 10
படுக்கை அறை மேற்குப் பாகம் அல்லது தெற்குப் பாகத்தில் மட்டும் அமைக்க வேண்டும் . சிறிய வீடு என்றால் கன்னி பாகம் அல்லது வாயுப்பாகத்தில் அமைத்துக்கொள்ளலாம்.தெற்கு அல்லது மேற்கு மட்டுமே தலை வைத்து படுக்கும் வண்ணம் படுக்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
விதிமுறை 11
பலமாடிகள் கட்ட வேண்டும் என்றால் கீழ் தளத்தின் உயரத்தைவிட மேல் தள உயரம் குறைந்தப்பட்சம் ஒரு அடியாவது குறைவாக உள்ளவாறு அமைக்க வேண்டும்.
விதிமுறை 12
தண்ணீர்த் தொட்டி தரையில் அல்லது தரைக்குக் கீழ் அமைக்க வேண்டும் என்றால் வடக்கு பாகம் ஈசான்ய பாகம் கிழக்கு பாகம் ஆகியவற்றில் மட்டுமே அமைக்க வேண்டும். மற்ற பாகங்களில் அமைக்கக் கூடாது. வீட்டின் மேல் அமைக்க வேண்டும் என்றால் மேற்குப்பாகம் அல்லது தெற்குப்பாகத்தில் மட்டுமே அமைக்க வேண்டும் . மற்ற பாகங்களில் அமைக்க கூடாது . கண்டிப்பாக கன்னி பாகத்தில் அமைக்கக் கூடாது.
விமுறை 13
எந்த திசையில் தல வாசல் அமைந்தாலும் தல வாசல் அமைக்கும் அறையில் சரியாக நடுப்பாகத்தில் வாசல் நிலை அமையுமாறு அமைக்க வேண்டும். நிலைக்கு இரு புறமும் சன்னல்கள் கண்டிப்பாக அமைக்க வேண்டும்.வீட்டின் உள்ளே உள்ள அறைகளில் வசதிக்கு தகுந்தவாறு வாசல் அமைத்துக் கொள்ளலாம். கதவு நிலை இல்லாமல் எந்த அறையும் அமைக்கக் கூடாது.
விதிமுறை 14
வீட்டின் நிலை ,சன்னல், கதவுகள் ஒரே ஜாதி மரத்தில் அமைத்துக் கொள்வது மிகவும் யோகம் தரும்.இரு ஜாதி மரங்களில் அமைத்துக் கொள்வதும் மிகவும் யோகம் தரும்.கண்டிப்பாக இரு ஜாதி மரங்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. அது மிகப்பெரிய கெடுதல் செய்யும் . கவனம் தேவை.
விதிமுறை 15
வீட்டிற்கு எந்த பாகத்திலும் பொதுச்சுவர் வரக்கூடாது . காம்பவுண்ட் சுவராக இருந்தால் தெற்கு அல்லது மேற்குப் பாகத்தில் மட்டும் பொதுச் சுவர் வரலாம். கண்டிப்பாக வடக்கு அல்லது கிழக்கு பாகத்தில் பொதுச்சுவர் அமையக்கூடாது. தொழிற்கூடம் , வியாபார இடங்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது.
விதிமுறை 16
வியாபார ஸ்தலம் தொழிற்கூடத்திற்கு தலவாசல் மேற்கு அல்லது தெற்கு பார்த்து அமைத்தல் மிகவும் யோகம் தரும். மற்ற திசைகள் சுமாரான யோகம் தரும்.வீடு என்றால் வடக்கு அல்லது தெற்கு பார்த்து தலவாசல் அமைத்தால் மிகவும் யோகம் தரும். கிழக்குப் பார்த்து தலவாசல் அமைத்தால் சுமாரான யோகம் தரும் . மேற்குப் பார்த்து வீடுகளுக்கு தலவாசல் அமைக்கக் கூடாது.
விதிமுறை 17
கிழக்கு பார்த்த கோவிலும், மேற்கு பார்த்த அன்னதானக் கூடமும், வடக்கு பார்த்த பொது சத்திரங்களும் , மேற்கு தெற்கு பார்த்த வியாபார தொழிற்கூடங்களும் , வடக்கு தெற்கு பார்த்த வீடுகளும் அமைத்துக்கொள்வது மிகவும் யோகம் தரும்.
விதிமுறை 18
வீடு வியாபார ஸ்தலம் தொழிற்கூடம் இவை அனைத்திலும் எல்லா பாகத்து அறையிலும் பூஜை அறைகள் அமைத்துக் கொள்ளலாம். சுவாமிகள் படம் கிழக்குப் பார்த்து அமைக்க வேண்டும். சுவாமியின் படத்திற்கு இடது பாகத்தில் விளக்கு வைக்க வேண்டும். வீடாக இருந்தாலும் வியாபார ஸ்தலமாக இருந்தாலும் தொழிற்கூடமாக இருந்தாலும் மாலை 5.45 க்கு மேல் சுத்தமான பசு நெய் தீபம் ஏற்றி 45 நிமிடங்கள் பாதுகாப்பாக தீபம் எரியும் வண்ணம் தினசரி வழிபட மஹாலட்சுமி யோகம் அமையும்.எந்த் கட்டிடமாக இருந்தாலும் புதுமனை புகும் போது கண்டிப்பாக கணபதி ஹோமம் செய்ய வேண்டும். பின்பு அதே மாதத்தில் ஆண்டுக்கொருமுறை கணபதி ஹோமம் செய்து வர பலவித யோகங்களை பெறலாம்.

புதிய வீடு கட்டுபவர்கள் மேலே உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்தி 100% வாஸ்து பலமுள்ள வீட்டை அமைத்துக்கொள்ளவும்.பழைய வீட்டில் உள்ளவர்கள் இதில் உள்ள படி மாற்றம் செய்து கொள்ளவும்

No comments:

Popular Posts