Tuesday 27 December 2016

வேர்ட்டில் டாகுமெண்ட் டேட்டாவை வகைப்படுத்துவது எப்படி


டாகுமெண்ட் டேட்டா வகைப்படுத்தல் : வேர்ட் புரோகிராம் பயன்படுத்தியவர்கள் அனைவருமே, வேர்ட் தகவல்களை பிரித்து வகைப்படுத்தும் (sorting) வேலை செய்வதனை உணர்ந்திருப்பீர்கள். இதனை தொடக்கத்திலிருந்து இறுதிவரையாகவோ (ascending or descending), அல்லது இறுதியிலிருந்து தொடக்க வரையோ (descending) இருக்கலாம். வரிசையாகப் பட்டியலாகத் தரப்பட்ட தகவல்களை இந்த வகையில் பிரித்து அமைக்கலாம். ஆங்கில மொழியில் அமைந்த தகவல்கள் எனில், தொடக்கம் முதல் மிகுதிவரை எனில் அது 0-9, A-Z ஆகும். மிகுதியிலிருந்து தொடக்க வரை எனில், அதற்கு நேர்மாறான வகையில் அமைவது ஆகும். மற்ற மொழிகளுக்கு, அந்த மொழிகளின் தன்மையைப் பொறுத்தது ஆகும். இதில் எந்த வகைப் பிரித்தல் வேண்டும் என்பதனைப் பயனாளர் தான் Sort டயலாக் பாக்ஸில் அமைக்க வேண்டும்.

இதில் இன்னொரு சிறிய வழியையும் பின்பற்றலாம். இந்த பிரித்தலை, வேர்ட் டெக்ஸ்ட்டில் உள்ள எழுத்து வகையிலும் (case sensitive) அமைக்க வேண்டுமா, அதாவது பிரிப்பது A-Z ஆக இருக்க வேண்டுமா அல்லது a-z ஆக இருக்க வேண்டுமா என்பதனை முடிவு செய்திடலாம். இந்த வகைப் பிரித்தலை நாம் அமைக்கவில்லை எனில், பெரிய எழுத்து மற்றும் சிறிய எழுத்து (uppercase and lowercase letters) டெக்ஸ்ட்டை, வேர்ட், பிரித்தலின் போது ஒரே மாதிரியாகத்தான் எடுத்துக் கொள்ளும்.

வேர்ட் சிறிய, பெரிய எழுத்துக்களையும் தன் கவனத்தில் எடுத்துப் பிரிக்க வேண்டும் என எண்ணினால், நாம் கீழே தந்துள்ளபடி, செட்டிங்ஸ் அமைக்க வேண்டும்.

முதலில் எந்த டெக்ஸ்ட்டைப் வகை பிரிக்க வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும்.

(நீங்கள் ஒரு அட்டவணையை (table) வகைப் பிரிப்பதாக இருந்தால், அதனுள், எங்கேனும் கர்சரைக் கொண்டு சென்று அமைத்தால் போதும். ஆனால் டெக்ஸ்ட்டை பிரித்து அமைப்பதாக இருந்தால், பிரிக்க வேண்டிய டெக்ஸ்ட் முழுவதையும் முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்து ரிப்பனில் Home டேப் தேர்ந்தெடுக்கவும்.

தொடர்ந்து Paragraph குரூப்பில், Sort டூல் தேர்ந்தெடுக்கவும். இது A-Z எழுத்துக்களுடன் தலைகீழ் அம்புக் குறி கொண்ட ஐகானாகக் காட்சி அளிக்கும். (டேபிள் பிரிப்பதாக இருந்தால், ரிப்பனில் உள்ள table's Layout டேப்பினைத் தேர்ந்தெடுத்து, Data groupல் உள்ள Sort டூல் மீது கிளிக் செய்திடவும்.) இப்போது வேர்ட் Sort Text டயலாக் பாக்ஸினைக் காட்டும்.

இந்த டயலாக் பாக்ஸில், மேலிருந்து கீழாகவா, அல்லது கீழிருந்து மேலாகவா என்பதற்கும், எந்த வகையில் டெக்ஸ்ட்டை பிரித்துக் காட்ட வேண்டும் என்பதற்கும் ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். அவற்றைப் பயன்படுத்தவும்.

தொடர்ந்து Options பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட் Sort Options டயலாக் பாக்ஸைக் காட்டும். இதில் தரப்படும் Case Sensitive செக் பாக்ஸினை நீங்கள் எப்படி வேர்ட் எழுத்துக்களைக் கையாள வேண்டும் என எண்ணுகிறீர்களோ, அதற்கேற்றபடி அமைக்கவும். இதனைத் தேர்ந்தெடுத்தால், பிரிக்கும் வகை எழுத்து வகையில் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். இல்லை எனில், பெரிய எழுத்து, சிறிய எழுத்து என்ற வேறுபாடு இன்றி பிரித்தல் மேற்கொள்ளப்படும். அடுத்தடுத்து கிடைக்கும் ஓகே பட்டனில் கிளிக் செய்து வெளியேறவும்.

டாகுமெண்ட் பாதுகாப்பினை நீக்கல்திருத்துதல்களைப் பாதுகாப்பாக வைத்திட, கமெண்ட் எனப்படும் குறிப்புகளை நீக்காமல் வைத்திட, மற்றும் பிற பார்மட் வகைகளை மாற்றாமல் கொண்டிட நாம் நம் டாகுமெண்ட்களை, திருத்தம் செய்திடாத வகையில், Protected ஆக மாற்றி வைத்திருப்போம். ஒரு நிலையில், இந்த பாதுகாப்பினை நீக்கி, டாகுமெண்ட்டினை வைத்துக் கொள்ள விரும்புவோம். அதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம்.

டாகுமெண்ட்டினைத் திறந்து கொள்ளவும்.

தொடர்ந்து, ரிப்பனில் உள்ள Review டேப் தேர்ந்தெடுக்கவும்.

ரிப்பனின் வலது பக்கட்தில் Click the Protect Document என்ற டூலில் கிளிக் செய்திடவும்.

இப்போது டாஸ்க் பேன் கிடைக்கும். இதில் கீழாக உள்ள Stop Protection என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் இப்போது Unprotect Document என்ற டயலாக் பாக்ஸைக் காட்டும்.

இந்த டயலாக் பாக்ஸில், நீங்கள் இந்த டாகுமெண்ட்டினைப் பாதுகாப்பாக வைக்கும் பொருட்டு தரப்பட்ட பாஸ்வேர்டைத் தரவும்.தொடர்ந்து ஓகே கிளிக் செய்தால், டாகுமெண்ட்டிற்கு அதுவரை அளிக்கப்பட்ட பாதுகாப்பு கவசம் நீக்கப்படும்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வாழ்வோடு பிணைந்த கணிதம் | ராமானுஜன் பிறந்த தினம் டிசம்பர் 22

வாழ்வோடு பிணைந்த கணிதம் | இரா. சிவராமன் | இந்தியாவின் தலைசிறந்த கணித மேதையான சீனிவாச ராமானுஜன் கிட்டத்தட்ட நாலாயிரம் தேற்றங்கைளையும், சூத்திரங்கைளையும் உருவாக்கியுள்ளார். அவர் வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்கள் இன்று காட்சி ஊடகம் மூலமாக வெகுஜன மக்களையும் அடைந்திருக்கின்றன. அதே போல அவர் படைத்த கணித சிந்தனைகளின் தாக்கம் இன்றைய நவீன உலகத்தில் வெகுவாக உணரப்படுகிறது. ஆனால் கணிதம் நம் அன்றாட வாழ்வில் எவ்வளவு தூரம் நேரடியான தொடர்புடையது என்கிற கேள்வியும் சந்தேகமும் பலருக்கு இருக்கும். நோய் சிகிச்சைக்கும் கணினி செயல்பாட்டுக்கும் சில எரிபொருட்களின் ஆற்றலைக் கண்டறிய ராமானுஜன் வழங்கிய 'பகிர்வு சூத்திர ஆராய்ச்சி' பயன்படுத்தப்படுகிறது. நைலான் போன்ற துணி வகையின் பண்புகளைத் தெரிந்துகொள்ளவும் அது உதவுகிறது. நெகிழி, தொலைபேசி கம்பிவடம் பொருத்துதல், குறிப்பிட்ட புற்றுநோய் சிகிச்சை போன்றவற்றுக்கும் இந்தச் சூத்திரம் பயன்படுத்தப்படுகிறது. 'Modular Equations and Approximations to' என்ற ஆய்வுக் கட்டுரையில் அவர் வழங்கிய சூத்திரங்கள்ன் உண்மை மதிப்பை பதினேழு மில்லியன் தசம இலக்கங்களுக்கு மேல் முதன் முதலில் வழங்கியது. இன்று வழங்கப்படும் மதிப்பிகிற்காண சூத்திரங்களில் ராமானுஜன் வழங்கிய சூத்திரமே முன்னோடியாகத் திகழ்ந்தது. கணினியின் செயல்பாடுகளைச் சரிபார்க்க இச்சூத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அணுத் துகள் இயற்பியலில் அவருடைய கணிதம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக அவருடைய பகிர்வு சூத்திரம் ஹீலியம் அணு போன்ற சில அணுக்களைத் துகள்களாகப் பிரிக்கும் தன்மையைப் பற்றி ஆராயப் பயன்படுத்தப்படுகிறது. 'pyrometry' எனப்படும் உலையின் வெப்பத்தைக் கண்டறியும் முறைக்கு ராமானுஜனின் 'ரீமான் ஜீட்டா சார்பு' என்ற சார்புகளின் ஆராய்ச்சி முடிவு பயன்படுகிறது. போன்ற அரிய வகை தொடர் சூத்திரங்கள் இன்று கருந்துளை ஆய்வுகளில் (Black Holes Research) பயன்படுவதாகக் கூறப்படுகிறது. நவீன உலகின் மீது தாக்கம் கடந்த நூற்றாண்டுவரை தீர்வே காண முடியாது என நம்பப்பட்ட சில கணிதச் சிக்கல்களுக்குத் தீர்வு காணக்கூடிய கணித முறைகளை வழங்கியவர் ராமானுஜன். அவற்றில் குறிப்பிட தகுந்த ஒன்று 'சர்க்கிள் மெத்தட்' (Circle Method). எண்களின் பகிர்வுக்கு ராமானுஜனும் ஹார்டியும் இணைந்து ஏற்படுத்திய தோராய சூத்திர நிரூபணம்தான் இன்று சர்க்கிள் மெத்தட் என்றழைக்கப்படுகிறது. அந்த சூத்திரத்தில் மிக முக்கியமான பங்களிப்பை வழங்கியவர் ராமானுஜன்தான். ராமானுஜன் காலத்துக்குப் பிறகு மற்ற கணிதவியலாளர்களால் இது வெகுவாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது. ராமானுஜனின் கணிதக் குறிப்புகளால் ஈர்க்கப்பட்டுச் சில நபர்கள் பிற்காலத்தில் 'சிறந்த கணிதவியலாளர்' என்று மற்றவர் போற்றும் வகையில் முன்னேறியுள்ளனர். பால் ஏர்டிஷ், எட்மன்ட் லண்டு, சீகல், வாட்சன், வில்சன், ராபர்ட் ரேன்கின், ஜார்ஜ் ஆண்ட்ரியூஸ், ப்ரூஸ் பெர்ன்ட், ரிச்சர்ட் ஆஸ்கி, கிளிப்போர்ட் பிக்கோவர் இப்படி ஏராளமானோர் இந்தப் பட்டியலில் இடம்பெறுவார்கள். இராமானுஜன் கணிதத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளால் ஈர்க்கப்பட்டு கணிதம் படித்து பெரும் புகழ் பெற்ற இந்தியர்களில் ஆனந்த ராவ், வைத்தியநாத சுவாமி, S.S. பிள்ளை, T. விஜயராகவன், S. சௌலா, ஹரிஷ் சந்திரா, C.P. இராமானுஜம், நிவாச வரதன், V.K. பட்டோடி, K. சந்திரேசகரன், P.K. நிவாசன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். அழகும், அற்புத ஆற்றலும் பொருந்திய ராமானுஜனின் சூத்திரங்களும் குறிப்புகளும் இந்தியாவிலிருந்து கிடைத்த கணித பொக்கிஷமாக உலகெங்கும் கொண்டாடப்படுகின்றன. கட்டுரையாளர்: நிறுவனர், பை கணித மன்றம், சென்னை
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

புத்தாண்டில் வேலைக்குப் போகலாமா!

புத்தாண்டில் வேலைக்குப் போகலாமா! | ம. சுசித்ரா | இந்த ஆண்டு இந்தியா கண்ட அரசியல் பொருளாதார மாற்றங்களால் 2017-ம் ஆண்டு எப்படி இருக்கப் போகிறது என்கிற ஆவலும் பதற்றமும் அதிகரித்துள்ளது. பண மதிப்பு நீக்க விவகாரமும் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் இந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது. அதிலும் இந்தியாவில் 80 கோடிக்கும் அதிகமானோர் வேலைக்குச் செல்லும் வயது வரம்பைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்திய வேலைச் சந்தை எத்தகைய மாற்றங்களைச் சந்திக்கவிருக்கிறது என்பதை அலச வேண்டிய நேரம் இது! பெண்களுக்கு முதல் இடம் 'இந்தியாவின் வேலைவாய்ப்பு எதிர்காலம்' தொடர்பாகக் கிட்டத்தட்ட 2000 நிறுவனத் தலைவர்களிடம் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, சுற்றுலா, சுகாதாரம், உள்கட்டமைப்பு, உற்பத்தி ஆகிய துறைகள் 2017-ல் அதிகப்படி யான வேலை வாய்ப்பை அளிக்கப் போகின்றன எனத் தெரியவந்துள்ளது. தொழில்முனைவோருக்கும் பிரகாசமான வாய்ப்புகள் காத்திருப்பதாக அதில் சொல்லப்பட்டுள்ளது. அதிலும் 70 சதவீத நிறுவனங்கள் பெண்களை நியமிக்க உள்ளன. அமைப்புசாராத் தொழில்களில் மட்டுமல்லாமல் பெரிய நிறுவனங்களிலும் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரிக்கவிருக்கிறது. வழக்கம்போல டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வாய்ப்புகள் கொழிக்கும் எனவும் தெரியவந்துள்ளது. வங்கி இல்லாமலா! அதேநேரத்தில் இந்த ஆய்வைத் தாண்டி சமீபத்திய நிகழ்வுகள் நமக்கு உணர்த்துவது, நிதித் தொழில்நுட்பம் (fin-tech), டிஜிட்டல் கட்டணம் செலுத்துதல் (digital payments), வங்கி உள்ளிட்ட துறைகளில் நிச்சயமாக வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதே. ஆனால், பண மதிப்பு நீக்கத்தால் மிகக் குறைவான சம்பள உயர்வைத்தான் எதிர்பார்க்க முடியும். சம்பளத்தில் பெரிய மாற்றம் இருக்க வாய்ப்பு இல்லை என்பதால் பதவி உயர்வு கிடைப்பதிலும் பின்னடைவு ஏற்படலாம். நம்பிக்கை இழக்க வேண்டாம் மறுபக்கம் அமெரிக்காவில் வேலை செய்யக் கனவு காணும் இந்திய இளைஞர்களுக்கு டிரம்ப் என்ன சொல்லப் போகிறார் என்பதும் கேள்விக்குறியே. அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதையும், வெளிநாட்டினருக்குத் தற்காலிகமாக ஊழியர் அனுமதி விசாவான ஹெச்-1பி வழங்குவதையும் தன்னுடைய அதிபர் தேர்தலுக்கான பரப்புரையிலேயே வன்மையாகக் கண்டித்தார் டிரம்ப். இதன் தாக்கம், வேலை தேடி அமெரிக்கா செல்பவர்களுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள ஐடி நிறுவனங்களிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. ஆனாலும் இந்தியாவில் உள்ள மனிதவளம், தொழில் திறமை நிறைந்த ஊழியர்கள் இங்கே அதிகமாக இருப்பது, குறைந்த சம்பளத்தில் அதிகத் திறமைசாலிகள் கிடைப்பதால் உலகப் பெரு நிறுவனங்கள் இந்தியச் சந்தையை விட்டு வெளியேற மாட்டார்கள். எப்படி இருந்தாலும் தொழில்நுட்பமயமாதலை நோக்கி அரசே நகர்வதால் எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தகவல்தொழில்நுட்பத்தில் தங்களைத் தகவமைத்துக்கொள்வது அவசியம். இத்தகைய பின்னணியில் புதிதாக வேலைக்குச் செல்ல முயற்சிப்பவர்கள் தங்களை எப்படித் தயார்படுத்திக் கொள்வது? மின்னஞ்சல் எழுதுதல் ஒரு நிறுவனத்துக்குள் அடி எடுத்து வைப்பதற்கு முன்பாக நாம் யார் என்பதைச் சொல்வது நம்முடைய விண்ணப்பக் கடிதம். இன்று பல நிறுவனங்கள் மின்னஞ்சல் மூலமாகத்தான் தங்களுடைய ஊழியர்களோடும் வேலைக்கு நியமிக்க இருப்பவர்களோடும் தொடர்புகொள்கின்றன. அவ்வாறு நாம் மின்னஞ்சல் எழுதும்போது 'chat lingo' எனப்படும் அரட்டை மொழியில் இல்லாமல் வேலைக்கு ஏற்றபடி நேர்த்தியாக எழுத வேண்டும். இல்லையேல் வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர் பொறுப்பற்றவர் என்கிற எண்ணம்தான் வேலை வழங்குபவர்களுக்கு ஏற்படும். தெளிவான மொழிநடையில் இலக்கணப் பிழைகள் இல்லாமல் சுருக்கமாக மின்னஞ்சலை எழுதப் பழகுவது அவசியம். எம்.எஸ். எக்ஸல் பயன்படுத்துதல் கணினியை அதிகம் பயன்படுத்துபவர்கள்கூட வெறும் தகவல்களைச் சேமிக்கவும் அட்டவணைகளை வரையவும்தான் எம்.எஸ். எக்ஸலை (MS Excel) பயன்படுத்துவதாக நினைக்கிறார்கள். ஆனால், விரைவில் இந்தப் புரோகிராமிங் முறை அலுவலக வேலைகள் பலவற்றுக்கு இன்றியமையாத ஒன்றாக ஆகிவிடும் எனப் பணிவாழ்க்கை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பட்ஜெட் தாக்கல், நிகழ்ச்சிகளைத் திட்டமிடுதல், சிறிய புராஜெக்ட்களுக்குக் கணிதத் தீர்வுகள் காணுதல் இப்படி வேலை தொடர்பான பல விஷயங்களுக்கு எக்ஸல் பயன்படுத்தப்படுகிறது. ஆகையால் அதைப் பயன்படுத்தப் பயிற்சி எடுப்பது நல்லது. பவர்பாய்ண்ட் பயன்படுத்தலாமே! ஒரு புதிய திட்டத்தை அனைவரையும் கவரும் விதமாகச் சிறப்பாகச் சமர்ப்பிக்கப் பவர்பாய்ண்ட் பிரசெண்ட்டேஷன் (PowerPoint Presentation) கைகொடுக்கும். கல்லூரி நாட்களிலேயே இதைப் பயன்படுத்தப் பழகுவது நல்லது. இணையத்தைத் துழாவுதல் இன்று பெரும்பாலான தகவல்கள் இணையம் மூலமாகவே சேகரிக்கப்படுகின்றன. தேடுபொறியில் எந்த வார்த்தையைத் தட்டச்சு செய்தாலும் கோடிக்கணக்கான தகவல்கள் வந்து குவியும். ஆனால் அவற்றில் எவையெல்லாம் நம்பத் தகுந்தவை, எந்தெந்த வலைத்தளங்களில் சரியான தரவுகள் கிடைக்கும் என்பதைக் கண்டறிய முக்கியச் சொற்களை (keywords) கண்டுப்பிடிக்கப் பயிற்சி அவசியம். பணிவாழ்க்கைத் தொடர்பாற்றல் எல்லாவற்றுக்கும் மேலாக தொடர்பாற்றல் இன்றியமையாதது. நேர்முகத் தேர்வின்போதும் அதன் பிறகு மற்ற பணிச் சூழல் சந்திப்புகளின் போதும் கார்ப்பரேட் நிறுவனங்களின் சூழலுக்கு ஏற்பப் பேசவும் நடந்துகொள்ளவும் கற்றுக்கொள்ள வேண்டும். எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் துணிச்சலையும் மாற்றத்துக்கேற்பத் தகவமைத்துக் கொள்வதற்கான தயார்நிலையும் இருந்தால் என்னாளும் வெற்றி நமதே.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday 26 December 2016

உங்க வைஃபை வேகத்தை அதிகரிக்க குட்டி குட்டி டிப்ஸ்!

வருடத்தில் 350 நாட்கள் பி.எஸ்.என்.எல் பிராட்பேண்டு சொதப்பும்.மற்ற நாட்களில் ஆச்சர்யப்படுத்தும். ஆனால், அந்த ஐந்து நச் நாட்கள் வர்தா புயல் சமயத்தில் வந்ததுதான் அதிசயம். மற்ற "ஸ்பீடு" பிராண்ட்பேண்டுகள் இன்னும் ' எம் பேக்' முழுமையாக சொல்ல முடியாமல் தவிக்கின்றன. எந்த சூழல் என்றாலும் வைஃபை சிக்னல் கிடைக்கவே மாட்டேங்குது என்பதுதான் இளசுகளின் எவர்க்ரீன் பிரச்னை. இந்த ட்ரிக்ஸை எல்லாம் ஃபாலோ பண்ணா, உங்க வைஃபை ஜெட்லீ வேகத்துல வேலை பார்க்கும்.
* அலுமினியம் சிக்னலை சூப்பராக கடத்தும். எனவே அலுமினியம் ஃபாயிலை (அதான் ஜி பீர் டின் கவர்) உங்கள் ஆன்டெனாவிற்கு பின்னால் நிறுத்தி வையுங்கள். சூப்பர் சிக்னல் கேரண்டி. அதேபோல் ரெளட்டரின் இரண்டு ஆன்டெனாக்களையும் செங்குத்தாக வையுங்கள்.
* ரெளட்டர் வாங்கும்போதே பார்த்து நல்ல ரெளட்டராக வாங்குங்கள். அதை முடிந்த வரை வீட்டின் நடுவில் உயரமான இடமாக பார்த்து வைத்தால் நலம். காரணம், நடுவில் நிறைய பொருட்கள் இருந்தால் சிக்னல் தடைபடும். எங்கிருந்து பார்த்தாலும், உங்கள் பார்வையில் ரெளட்டர் படும்படி இருந்தால் இன்னும் விசேஷம்.
* ரெளட்டருக்கு அருகில் மைக்ரோவேவ், கார்ட்லெஸ் மொபைல் போன்ற கருவிகள் இருந்தால் சிக்னல் தடைபடும். காரணம் உலோக பொருட்கள் சிக்னலை வெகுவாக பாதிக்கும். பக்கத்து வீட்டு ரெளட்டரிடம் இருந்து உங்கள் ரெளட்டரை முடிந்தவரை தள்ளி வையுங்கள். இரண்டு சிக்னல்களும் க்ராஸ் செய்தாலும் சிக்னல் பாதிக்கப்படும்.
* சில இணையதளங்கள் மற்றும் மொபைல் ஆப்ஸ் நீங்கள் உபயோகிக்காத சமயங்களிலும் இணையத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கும். அதையெல்லாம் முறையாக மூட வேண்டியது அவசியம். இல்லையேல், கணிசமான பேண்ட்விட்த்தை அவை எடுத்துக்கொண்டு வேகத்தை குறைத்துவிடும்
* அவ்வபோது மோடமை ரீசெட் செய்யுங்கள். கேட்க சிம்பிளான வேலையாக இருந்தாலும் அதிக பயன் தரக்கூடிய ட்ரிக் இது. ரீசெட் செய்யும்போது சில பிரச்னைகள் தன்னாலேயே சரியாகக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் அவ்வபோது சாஃப்ட்வேர் அப்டேட் செய்துகொண்டே இருங்கள்.
* உங்கள் வைஃபை செட்டிங் WEP-ல் இருந்தால் அதை WPA அல்லது WPA2 என்ற செட்டிங்கிற்கு மாற்றுங்கள். காரணம் WEP நெட்வொர்க்கை எளிதாக ஹேக் செய்ய இயலும். யாருக்குத் தெரியும்? பார்க்க பால்வாடி பையன் போல இருக்கும் உங்கள் பக்கத்துவீட்டுக்காரரே பெரிய ஹேக்கராக இருக்கலாம்
* இது ஏற்கெனவே தெரிந்த சங்கதிதான். அவ்வப்போது உங்கள் வைஃபை பாஸ்வேர்டை மாற்றிக்கொண்டே இருங்கள். மொக்கையாக உங்கள் பெயரையே பாஸ்வேர்டாக வைத்தால் பக்கத்து வீட்டுக்காரர் பொங்கல் கொண்டாடிவிடுவார்.
* இது எதுவுமே வேலைக்கு ஆகாவிட்டால் பேசாமல் ஒரு ரிப்பீட்டர் வாங்கி மாட்டிவிடுங்கள். ரெளட்டரின் ரேஞ்ச் 150 மீட்டர்கள். ரிப்பீட்டர் அந்த ரேஞ்சை அதிகரித்து சிக்னலை பல மடங்கு பூஸ்ட் செய்யும். நம்பி வாங்குங்க. கொடுத்த காசுக்கு நல்ல எஃபெக்ட் இருக்கும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

உங்க ஆண்ட்ராய்டு ஃபோனை ‘இப்படித்தான்’ பாத்துக்கணும்!

ஃபோன் வாங்குறப்ப எந்த ஃபோன் வாங்குறோன்றதை விட முக்கியம், வாங்கிய ஃபோனை நாம எப்படி பாத்துக்குறோம் என்பது. ஸ்மார்ட்ஃபோந்தான். ஆனா, அதுவே தன்னை பாத்துக்கிற அளவுக்கு ஸ்மார்ட் கிடையாது. நாமதான் இதமா, பதமா பாத்துக்கணும். அந்த 'இதமா...பதமா..." என்ன என்பதுதான் இந்தக் கட்டுரை.

1) எப்பவும் சார்ஜ் இருக்கட்டும்:
   மொபைல் சார்ஜ் அதிகமா இருந்தா ஃபோன் நல்லா வேலை செய்யும். கடைசி % சார்ஜ் தீரும் வரைக்கும் யூஸ் பண்ணா, மொபைலோட ஃபெர்ஃபார்மென்ஸும் குறையும். பேட்டரியோட ஆயுளும் குறையும். முழு சார்ஜும் தீர்ந்த பிறகே சார்ஜ் போடனும்னு நிச்சயம் நம்ம ஃப்ரெண்ட்ஸ்ல ஒருத்தவங்க சொல்லியிருப்பாங்க. அந்த ஐடியாவை ஓரம் தள்ளுங்க. அந்த ஃப்ரெண்டு சொன்னத ஷிஃப்ட் டெலீட் பண்ணிடுங்க.

2) ஃபோனையும், உங்களையும் கூலா வைங்க்:
   பல்லு டைப் அடிக்கிற அளவுக்கு நம்ம ஆஃபீஸ்ல ஏசி போடுறாங்களே...அது நமக்குன்னா நினைச்சீங்க? எல்லாம் கம்ப்யூட்டருக்கு. ஏடிஎம் செண்டர்ல மிஷுனுக்கு போட்டு வைக்கிற மாதிரிதான். அதே லாஜிக்தான் மொபைலுக்கும். நல்ல கூலான டெம்பரேச்சர்ல இருக்கிற ஃபோனு கோஹ்லி மாதிரி நிண்ணு விளையாடும்.

3) ஆப்ஸை மூடுங்க...
  4ஜிபி ரேம் இருக்கிற மொபைலே 12000த்து கிடைக்குது. அதனால, நாம யூஸ் பண்ர ஆப்ஸோட எண்ணிக்கை அஷ்வின் விக்கெட்டை விட வேகமா ஏறிட்டு இருக்கு. அதுல எந்த பிரச்னையும் இல்லை. ஆனா, ஓப்பன் பண்ண ஆப்ஸை ஒழுங்கா மூடுறோமா? இல்லை. நிறைய ஆப்ஸ் திறந்திருந்தா, சிஸ்டம் ஸ்லோ ஆகும். சார்ஜும் சீக்கிரம் தீரும். அதனால, தினமும் ஒரு தடவையாவது எல்லா ஆப்ஸையும் க்ளோஸ் பண்ணிடுங்க.

4) அந்த ஒரு ஒரே மாத்திரை...
  உடம்புல இருக்கிற எல்லா வியாதிக்கும் ஒரே மாத்திரைல தீர்வுன்ற மாதிரி, ஆண்ட்ராய்டுக்கும் ஒரு வழி இருக்கு. அது தான் ரீபூட். மொபைல்ல என்ன பிரச்னைனே தெரியாம தொல்லையா இருக்கா? ஒரு தடவை ஆஃப் பண்ணி ஆன் பண்ணிடுங்க. 99% பிரச்னைகள் சரியாகிடும். ரீஸ்டார்ட் பண்றப்ப பேக்கிரவுண்ட் ரன் ஆகுற எல்லா ஆப்ஸும் க்ளோஸ் ஆயிடும். பாதில நிக்குற புராஸஸ்களும் ஸ்டாப் ஆயிடும். கிட்டத்தட்ட நாம தூங்கி எழுந்திருக்கிற மாதிரிதான் ரீபூட். ஃபோன் ஃப்ரெஷ் ஆயிடும்.

5) டெம்பர்ட் கிளாஸ்:
  கீறல் விழாம பாத்துக்கிறது லட்சியம்; கீழ விழாம பாத்துக்கிறது நிச்சயம் என்பதுதான் பெரும்பாலான ஆண்ட்ராய்டு யூஸர்களின் புத்தாண்டு உறுதிமொழியா இருக்கும். அதையும் மீறி ஃபோன் விழுந்து ஸ்க்ரீன் உடையுன்றதாலதான் மேல டெம்பர்ட் கிளாஸு போட்டு வைக்கிறோம். அந்த கிளாஸு கண்ணாபின்னான்னு டேமேஜ் ஆகத்தான் செய்யும். அதுவே நமக்கு மொபைல் பிடிக்காம போக காரணம் ஆயிடும். புது ஃபோனு மாத்துறதுக்கு முன்னாடி டெம்பர்டு கிளாஸ ஒரு தடவை மாத்தி பாருங்க. ஃபோனே புதுசு மாதிரி தோணும்.

6) மெமரி க்ளியர்:
 உங்கள் மொபைலில் வாட்ஸப், ஃபேஸ்புக் ஆப்ஸ்கள் மட்டும் எத்தனை எம்.பிக்களை எடுத்துக் கொண்டிருக்கின்றன என்பதை பாருங்கள். ஆப் சைஸ் 80எம்.பி என்றால் அதில் நாம் சேமித்திருக்கும் டேட்டா 1 ஜிபியை கூட தாண்டலாம். மாதம் ஒருமுறை தேவையற்ற வாட்ஸப்களை மெசெஜ்களை டெலீட் செய்யுங்கள். ஃபேஸ்புக், பிரவுசர் போன்றவற்றில் cache clear செய்யுங்கள். ஐந்து நிமிடங்கள் எடுத்து நாம் செய்யும் இவை, நமக்கு மொபைல் ஹேங் ஆகாமல் வேலை செய்து பல நிமிடங்களை மிச்சப்படுத்தும் என்பது மட்டும் நிச்சயம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நடைபயிற்சி உடற்பயிற்சியாகுமா

உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் நடைப்பயிற்சி செய்யலாம். நடப்பதும் நல்ல உடற்பயிற்சிகளுள் ஒன்று.நடக்கும் போது இரத்த ஓட்டம் சீராக உடலில் எல்லா பாகங்களுக்கும் கிடைக்கிறது. இதனால் திசுக்களுக்குத் தேவையான சக்தி (கலோரிகள்) கிடைப்பதால் நமது உடல் நலம் நன்றாக இருக்கும்.நாம் ஒரே இடத்தில் வெகுநேரம் உட்கார்ந்து கொண்டோ, நின்று கொண்டோ வேலை செய்பவராக இருந்தால், நமது கால்களில் உள்ள இரத்தக் குழாய்களுக்கு அங்குள்ள இரத்தத்தை திரும்பவும் இதயத்துக்கு அனுப்ப போதுமான அளவு அழுத்தம் கிடைப்பதில்லை.இதனால் இரத்த ஓட்டம் உடலின் எல்லா பாகங்களுக்கும் சீராக இருப்பதில்லை. நடக்கும் போது நமது கால்களில் உள்ள தசைகள் இயங்கி, அருகிலுள்ள இரத்தக் குழாய்களை அழுத்தி இரத்தத்தை இதயத்துக்கு அனுப்பத் தேவையான சக்தியை அளிக்கின்றன.ஆகவே தினமும் 2 அல்லது 3 கி.மீட்டர் தூரம் நடப்பது மிகவும் சிறந்த உடற்பயிற்சி ஆகும். உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் கண்டிப்பாக வாரம் 5 நாட்கள் நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது.

உடலைப் பிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசையும். ஆனால், இன்றைய வாழ்க்கை சூழலில், உயரத்துக்கு ஏற்ற எடையை விட மிக அதிகமாக இருக்கின்றனர். உடல் எடையைக் குறைத்து, பிட்டாக இருக்க ஜிம்முக்குப் போய்க் கடினமாக வொர்க் அவுட்ஸ் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. எளிமையாக நடைபயிற்சி மற்றும் உணவுகட்டுபாடுகளைக் கடைபிடித்தாலே ஜிம்முக்குப் போகாமலேயே உடலை 'ஜம்' என்று வைத்துக் கொள்ளலாம்" என்கிறார் திருச்சியைச் சேர்ந்த உடற்பயிற்சியாளர் ஜேசு சவரிமுத்து.உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைக்க எளிமையான வழி டைபயிற்சி தான். அட்டவணை ஒன்றை தயார் செய்து கொண்டு அதற்கேற்பநடக்கத் தொடங்குங்கள். தினமும் 45 நிமிடம் நடைபயிற்சி போதுமானது. தொடர்ந்து 3 மாதம் நடைபயிற்சி செய்ய வேண்டும் என்பதை ஒரு கோர்ஸ் போல எடுத்துக் கொள்ளலாம். இதுவரை எந்தவித உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்யாதவர்களும் கூட முதல் நாள் மெதுவாக நடைபயிற்சியைத் தொடங்கலாம். ஆர்வக்கோளாறில் சிலர் திடீரென்று 4 கிலோமீட்டர் வரை கூட நடந்துவிட்டு அதன் பிறகு சோர்ந்து போய், நடைபயிற்சியை விட்டு விடுவார்கள். முதலில் மெல்லமாக நடக்கத் தொடங்க வேண்டும். டைப்பயிற்சி ஆரம்பித்த முதல் வாரம் வழக்கமாக எவ்வளவு சாப்பிடுவீர்களோ அனைத்தையும் சாப்பிடலாம். ஆனால், 45 நிமிடம் நடக்க வேண்டும். ஒரு வாரம் கழித்து உங்கள் நடையில் படிப்படியாக வேகம், தூரம் இரண்டையும் கூட்ட வேண்டும். அதே சமயம் உணவிலும் படிப்படியாகக் கவனம் செலுத்தி எண்ணெய் மற்றும் கொழுப்புச்சத்துள்ள உணவு பொருள்களைத் தவிர்க்க ஆரம்பிக்கவேண்டும். ஒரு வாரம் நடந்தவுடனேயே எனக்கு உடல் எடை குறையவில்லையே என்று சோர்வடைந்துவிடக்கூடாது. 3 மாதம் தொடர்ந்து நடக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும்.
நடைபயிற்சிக்கான அட்டவணை:
முதல் 15 நாட்கள் - நடக்க முடியும் தொலைவு மெதுவாக நடக்க வேண்டும். ஆனால் 45 நிமிடங்கள் கண்டிப்பாக நடக்க வேண்டும்.
16-30 வது நாள் வரை - ஏற்கனவே நடந்த தொலைவை விட அதிகமாக 45 நிமிடத்துக்குள் நடக்க வேண்டும்.
30 - 45 நாள் வரை- ஒரு நிமிடம் வேகமான நடை 2 நிமிடம் மெதுவான நடை. இதை 5 முறை தொடர்ந்து செய்த பிறகு ரெஸ்ட் எடுக்காமல் மிக மெதுவாக 5 நிமிடத்துக்கு நடக்கவேண்டும். பிறகு, மீண்டும் ஒரு நிமிடம் வேகமான நடை இரண்டு நிமிடம் மெதுவான நடை, 5 நிமிடம் மிக மெதுவான நடைபோட வேண்டும் இந்தச் சுழற்சியை 45 நிமிடங்கள் வரைக்கும் செய்ய வேண்டும்.
45 - 60 வது நாள் வரை - ஒரு நிமிடம் வேக நடை ஒரு நிமிடம் மெதுவான நடை இதே போல 45 நிமிடம் நடக்க வேண்டும்.
60 - 75 வது நாள் வரை - இரண்டு நிமிடம் வேகமான நடை ஒரு நிமிடம் மெதுவான நடை இதைத் தொடர்ச்சியாக 45 நிமிடம் செய்ய வேண்டும்.
75 வது நாள் முதல் 90 வது நாள் வரை - ஒரு நிமிடம் மிதமான ஜாக்கிங் மற்றும் ஒரு நிமிடம் மெதுவான நடை போட வேண்டும்.
இந்த 90 நாட்கள் முறையாகச் செய்த பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக மிதமான வேகத்தில் ஜாக்கிங் செய்வதை அதிகரித்து 20 நிமிடம் ஜாக்கிங் 25 நிமிடம் நடைபயிற்சி என்ற நடைமுறைக்குக் கொண்டு வந்து தொடர்ந்து தினமும் இதே வகையில் வாக்கிங், ஜாக்கிங் செய்வது உடலை கட்டுகோப்பாக வைத்திருக்க உதவும்.

கவனிக்க வேண்டியவை
* கண்டிப்பாகக் கைபேசி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். கைபேசியைச் சைலண்டில் போட்டுவிடலாம்.
* நடக்க ஆரம்பிப்பதற்கு முன் 3 நிமிடம் வார்ம் அப் உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். இதனால், தசைகளில் சுருக்கம், வலி ஏற்படாமல் எளிதில் நடக்க ஏதுவாக இருக்கும்.
* நடந்து கொண்டிருக்கும்போது, அடிக்கடி நாக்கு உலர்ந்து போகலாம். அந்தச் சமயத்தில், சிறிதளவு தண்ணீர் மட்டும் அருந்த வேண்டும். 45 நிமிடம் நடைபயிற்சி செய்தவுடன் தேவையான அளவு தண்ணீரை அருந்தலாம். 20 நிமிடம் கழித்து உணவு உண்ணலாம்.
* காலை, மதியம், மாலை, இரவு என எந்த நேரத்திலும் நடைபயிற்சி மேற்கொள்ளலாம். எனினும் காலை நேரத்தில் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும் என்பதால், அந்த நேரத்தில் நடைபயிற்சி செய்வது மிகவும் உற்சாகத்தைத் தரும்.
இனியும் தாமதிக்காமல், வீரு நடை போட்டுக் கொழுப்பை குறைங்கவெயிட் தன்னால இறங்கிடும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Popular Posts