என்றென்றும் நிலைத்திருக்கும் அழியாத ரசாயனங்கள் (PFAS): ஒரு சவாலும் அதன் தாக்கமும்
பயன்பாடு மற்றும் பரவல்
பாத்திரங்கள் கழுவுவதை எளிமைப்படுத்திய டெப்ளான் பூச்சில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட பெர்ஃப்ளூரோஅல்கைல் மற்றும் பாலிஃப்ளூரோஅல்கைல் (PFAS) போன்ற என்றென்றும் நிலைத்திருக்கும் அழியாத ரசாயனங்கள், இன்று நீர்ப் புகாத சட்டைகள், கறை படியாத தரைவிரிப்புகள், உணவுப் பொட்டலங்கள், தீயணைப்பு நுரை என மனிதனின் அன்றாட செயல்பாடுகள் அனைத்திலும் பரவலாகப் பயன்படுகின்றன.
இந்த அழியாத ரசாயனங்கள் உலகம் முழுவதும் மண், தூசு மற்றும் குடிநீரில் காணப்படுகின்றன. தற்போது 9,000-க்கும் மேற்பட்ட PFAS ரசாயனங்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில், அமெரிக்காவில் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகளில் 98 சதவீதத்துக்கும் அதிகமானவற்றில் இவை கண்டறியப்பட்டுள்ளன.
சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள்
PFAS ரசாயனங்கள் தைராய்டு, கல்லீரல், சிறுநீரகப் பாதிப்புகள் மற்றும் சில வகையான புற்றுநோய்களுக்குக் காரணமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குடிநீர் மற்றும் உணவு மூலமாக இவை கால்நடைகள் மற்றும் மனித உடலுக்குள் செல்கின்றன. கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து வெளியேற்றப்படும் உயிரிய திண்மங்கள் (பயோ சாலிட்) கொண்ட சேற்றினை வயல்களில் உரமாகப் பயன்படுத்துவதால், அந்தப் பகுதியில் உள்ள நீர்நிலைகள் வழியாகப் பயிர்கள் மற்றும் காய்கறிகளிலும் PFAS உருவாகக்கூடும். அமெரிக்காவின் மிச்சிகன், மைனே, நியூ மெக்ஸிகோ பகுதிகளில் மாட்டிறைச்சி மற்றும் பாலில் இதன் அளவு அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
சர்வதேச சட்ட நடவடிக்கை மற்றும் கட்டுப்பாடு
PFAS மாசுபாட்டிற்காக, இத்தாலிய நீதிமன்றம் ஒரு நிறுவனத்தின் அதிகாரிகளை சிறைக்கு அனுப்பியதுடன், இதை சுற்றுச்சூழல் குற்றம் என அறிவித்து, கோடிக்கணக்கான யூரோ இழப்பீட்டுடன் 140 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனையும் வழங்கியது.
ஸ்வீடன் நாட்டு நீதிமன்றம், PFAS ஏற்படுத்தும் பாதிப்பை 'உடல் சேதம்' எனத் தீர்ப்பளித்தது, இது நோய் பாதிப்பு ஏற்படும் முன்பே இழப்பீடு பெற வழிவகுத்தது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் PFAS ரசாயனங்களுக்கான சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் கடுமையாக உள்ள நிலையில், இந்தியாவில் இதன் உற்பத்தி மற்றும் பயன்பாடுகள் குறித்த சட்டங்களும் கட்டுப்பாடுகளும் இல்லை.
இந்தியாவில் நிலைமை
பெர்ஃப்ளூரோஅல்கைல், பாலிஃப்ளூரோஅல்கைல் ரசாயனப் பொருள்கள் தயாரித்த இத்தாலியில் உள்ள மிடேனி தொழிற்சாலை 2018-ஆம் ஆண்டு மூடப்பட்டது. 3,50,000 இத்தாலியர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திய இந்தத் தொழிற்சாலை, சிறுநீரகப் புற்றுநோய், இதய நோய்கள், ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைந்தது. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்திய இந்த நிறுவனத்தின் இயந்திரங்கள், கப்பல் மூலம் இந்தியா கொண்டுவரப்பட்டு, மும்பை அருகில் உள்ள தொழிற்பேட்டையில் 2025-ஆம் ஆண்டு நிறுவப்பட்டு செயல்படத் தொடங்கியது.
இந்திய குடிநீர் தர நிலைகளில் இவ்வகை ரசாயனங்கள் குறித்த அளவீடுகளே இல்லாததால், PFAS கலந்த நீர் கூட சட்டப்படி பாதுகாப்பான குடிநீர் என கருதக்கூடிய நிலை உள்ளது. ப்ளூரோ ரசாயனங்கள் பயன்படுத்தப்படும் தொழிற்சாலைகளில்கூட, மாசு கட்டுப்பாட்டு வாரியங்களின் பொதுவான கழிவுநீர் வெளியேற்ற விதிமுறைகளே பின்பற்றப்படுகின்றன. கழிவு நீரில் ரசாயனங்களின் அளவு பரிசோதிக்கப்படுவதில்லை. மேலும், இந்தியாவில் செயல்படும் பெரும்பாலான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களால் PFAS ரசாயனங்களை நீக்க இயலாது.
உலக அளவில் PFAS மாசுபாட்டின் மிகப் பெரிய மூலங்களாகக் கருதப்படும் தீயணைப்பு நுரைகளுக்கு இந்தியாவில் தடை இல்லை. விமான நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவற்றில் இவை இன்றும் பயன்படுத்தப்படுகின்றன.
நீக்குதல் மற்றும் கட்டுப்படுத்துதல்
நீக்குதல் முறைகள்:
- திறன்மிகு கரியுடன் ஒட்டுதல் (Activated Carbon Adsorption): PFAS திறன்மிகு கரியுடன் ஒட்டிக் கொள்ளும் நுட்பத்தைப் பயன்படுத்தி, அமெரிக்காவில் ஒரு பெரிய திறன்மிகு கரித் தொட்டி அமைக்கப்பட்டது. இது நிமிஷத்துக்கு சுமார் 1500 கேலன் மாசுபட்ட நிலத்தடி நீரை வடிகட்டி, ரசாயனப் பாதிப்பிலிருந்து நிலத்தைப் பாதுகாக்கிறது. இந்தத் திட்டத்துக்கு 30 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது.
- எரித்தல் (Incineration): PFAS ரசாயனங்களை அழிக்க எரித்தல் ஒரு பொதுவான முறையாகும். பெரும்பாலான PFAS ரசாயனங்களில் உள்ள வலிமையான ஃப்ளோரின்-கார்பன் பிணைப்பு 1,500 டிகிரி செல்சியஸ் (2,730 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலையில் முழுமையாக உடையும். இந்த வெப்பநிலையை உருவாக்க அதிக ஆற்றல் மிகுந்த எரியூட்டிகள் அதிக அளவில் தேவைப்படுகின்றன.
இந்தியாவில் பாதிப்பு ஏற்பட்ட பிறகு நடவடிக்கை எடுக்கும் வகையிலேயே சட்டங்கள் இருக்கும் நிலையில், என்றென்றும் நிலைத்திருக்கும் அழியாத ரசாயனங்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள், தரநிலைகள், தேசிய கண்காணிப்பு திட்டங்கள் விரைவில் வகுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

0 Comments