மரபணு வரிசைப்படுத்தப்பட்ட இந்தியக் கரோனா நோயாளிகளில் சுமார் 41.2 சதவீதம் பேரில் புதிய A3i என்ற கிளையினம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உலக அளவில் பரவலாகக் காணப்படும் A2a கிளையினம் இந்தியாவிலும் முதலிடத்தில் இருந்தாலும், இந்த புதிய A3i கிளையினம் இரண்டாம் இடத்தில் இருப்பது ஆய்வாளர்களுக்கு வியப்பளித்துள்ளது. குறிப்பாக, தெலங்கானா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவில் இந்த A3i கிளையினம் தான் முதலிடத்தில் உள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள 'சென்டர் ஃபார் செல்லுலர் - மாலிகுலர் பயாலஜி' (CCMB) மற்றும் டெல்லியில் உள்ள 'இன்ஸ்டிடியூட் ஃபார் ஜீனோமிக்ஸ் அண்ட் இன்டகிரெடிவ் பயாலஜி' (IGIB) ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த ஆச்சரியமான தகவலை வெளியிட்டுள்ளன. ஃபைலோஜெனெடிக் எனப்படும் பரிணாம மரபு வரிசைப் பட ஆய்வு முறையின் மூலம் இந்த புதிய கிளையினத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஆய்வு முடிவுகள் வெளியானதும், இதுகுறித்து சிஎஸ்ஐஆர் (CSIR) நிறுவனம் தெளிவான விளக்கம் அளித்தது. ‘‘புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள இந்த கிளையின வைரஸ், கூடுதலாக பாதிப்பை ஏற்படுத்தும் என்றோ அல்லது குறைவாகத் தாக்கம் செலுத்தும் என்றோ கூற எந்த ஆதாரமும் இல்லை’’ என்று சிஎஸ்ஐஆர் தெளிவுபடுத்தியது. இதன் மூலம், போலி செய்திகள் பரவி தேவையற்ற பீதி ஏற்படக் கூடாது என்பதை உறுதி செய்தது.
ஃபைலோஜெனெடிக்ஸ் என்றால் என்ன?
ஒரு குடும்பத்தில் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, பிள்ளைகள் என வம்சவழிக் கிளைப்படத்தை உருவாக்குவது போல, திடீர் மரபணு மாற்றத்தின் தொடர்ச்சியாக உருவாகும் வெவ்வேறு கரோனா வைரஸ் வேற்றுருவங்களின் (Variants) பரிணாம மரபு வரிசையைத் தொகுத்துப் பார்ப்பதுதான் ஃபைலோஜெனெடிக் வரைபடம் அல்லது வைரஸ் வம்ச கிளைப்படம் எனப்படுகிறது.
உலகெங்கிலும் இதுவரை சுமார் 200 வேற்றுருவ வைரஸ்கள் உருவாகி உள்ளதாக மதிப்பிடப்படுகிறது. இந்த வேற்றுருவங்களின் மூதாதையர் யார் என்பதைக் கண்டறிந்து, அவற்றின் பரிணாம வளர்ச்சியைக் கண்டறிய இந்த வரைபடம் உதவுகிறது.
இந்தியாவில் A3i கிளையினம்
உலகெங்கிலும் 80 நாடுகளைச் சேர்ந்த வைரஸ் மாதிரிகளை மரபணு வரிசைப்படுத்திப் பார்த்ததில், இதுவரை A1a, A2, A2a, A3, A6, A7, B, B1, B2 மற்றும் B4 ஆகிய பத்து முக்கியக் கிளைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்தியாவில் கிருமித் தொற்று ஏற்பட்டவர்களிடம் இருந்து சேகரித்த 361 வைரஸ்களின் மரபணு வரிசையை ஆய்வு செய்தபோது, ஏற்கனவே அறியப்பட்ட 10 கிளைகளிலும் சேராத வைரஸ் வகையினங்கள் கண்டறியப்பட்டன. இந்த வேற்றுருவங்களுக்குள் ஒற்றுமை புலப்பட்டதால், இவை ஒரு புதிய கிளையினம் (A3i) என உறுதிசெய்யப்பட்டது. இதன் மூலம், உலக அளவில் இனம் காணப்பட்ட கிளையினங்களின் எண்ணிக்கை பதினொன்றாக உயர்ந்தது.
- இந்த A3i கிளையினம் உலகெங்கிலும் உள்ள மரபணு வரிசை செய்யப்பட்ட வைரஸ்களில் சுமார் 3.5% ஆகும்.
- இந்தியா தவிர சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் குறிப்பிடத்தகுந்த அளவில் இது காணப்படுகிறது.
- உலக அளவில் பரவலான A2a கிளையினம் ஜனவரி 2-ம் தேதி தோன்றியிருக்க, இந்த A3i கிளையினம் கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி பிறந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் பிறப்பிடம் சிங்கப்பூர் அல்லது இந்தோனேசியாவாக இருக்கலாம் என்றும் மதிப்பிடப்படுகிறது.
பரவல் மற்றும் தாக்கம்
ஃபைலோஜெனெடிக் வரைபடத்தின் மூலம், ஒரே ஒரு கிருமி தொற்று உடையவர் மூலமே இந்த A3i கிளையினம் இந்தியாவுக்குள் வந்து, அவரிடம் இருந்து பலருக்கும் பரவி இருக்கலாம் என அறிய முடிகிறது.
இந்த கிளையினத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மற்ற கிளையினங்களால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்ததில், நோய் தன்மையில் எந்தவித மாற்றமும் புலப்படவில்லை. மற்ற கிளையினங்களை விட கூடுதல் பரவும் தன்மை உள்ளது என்பதற்கும் சான்றுகள் இல்லை.
இந்த கிளையின கிருமி தொற்றுடன் கண்டறியப்பட்ட முதல் நோயாளி, ஊரடங்குக்கு முன்பே சிங்கப்பூரில் இருந்து மார்ச் மாதம் 11-ம் தேதியே ஹைதராபாத் வந்துள்ளார். இவர் அல்லது இவருக்கு முன்பே வந்தவர்கள் வழியே, இந்தக் கிருமி ஹைதராபாத்தில் இருந்து தமிழ்நாடு, தெலங்கானா, மகாராஷ்டிரா போன்ற பகுதிகளில் கூடுதல் அளவில் பரவிவிட்டது. இந்த கிளையினத்துக்கு என்று எந்தவித தனித்தன்மையும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.


1 Comments