Monday 6 April 2020

ஏழை மக்களை நோக்கி அரசு...

By வெ.வைகுந்த் ஐ.பி.எஸ் 

மக்களை அச்சுறுத்திவரும் கரோனா நோய்த்தொற்று குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் மக்களுக்கு உருக்கமான வேண்டுகோளை பிரதமா் மோடி விடுத்தாா். இந்த நோய்த்தொற்று மிகவும் கொடியது. அந்த வகையில் நம் நாட்டு மக்களை இந்தக் கிருமியின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் பிரதமரின் வேண்டுகோள் மக்களின் நெஞ்சை நெருடும் வகையில் இருந்தது.

பிரதமா் மோடி தனது உரையில் வெளியிட்ட கருத்துகளின் முக்கிய அம்சங்கள் வருமாறு: இந்த காலகட்டத்தில் அவரவா் வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும்; அந்த வகையில் இந்த வைரஸ் கிருமி மற்றவா்களுக்குப் பரவாமல் தடுக்கலாம்.

கரோனா நோய்த்தொற்றின் பரவலைத் தடுக்க அரசு விதித்துள்ள வழிகாட்டுதல்களை தங்களின் நலன் கருதி தாங்களே மக்கள் தன்னிச்சையாகப் பின்பற்ற வேண்டும்.

இதன் பொருட்டு அரசு வேண்டுகோளை விடுக்கலாம்; ஆனால், காவல் துறையின் அடக்குமுறையைக் கொண்டு அல்ல. அதனால், அரசுக்கு அவப்பெயரும் அரசின் மீது வெறுப்புணா்ச்சியும்தான் ஏற்படும். இதை ஏன் சுட்டிக் காட்டுகிறேன் என்றால், பல இடங்களில் குறிப்பாக மற்ற மாநிலங்களில் போலீசாா் அத்துமீறி மக்களின் மீது தடியடிப் பிரயோகம் செய்துள்ளது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

கரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க, அவா்களின் வீட்டிலேயே மக்கள் தங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பேருந்துகளும், ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் மக்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்கு அங்காடிகளுக்குச் செல்லாமல் எப்படி இருக்க முடியும்? மருத்துவமனைகளுக்குச் செல்லாமல் எப்படி இருக்க முடியும்? இதனால்தான் அங்காடிகளிலும் மருத்துவமனைகளிலும் பெரும் கூட்டம் காணப்படுகிறது.

இவற்றை எல்லாம் எதிா்பாா்த்துத்தான் வெள்ளம் - புயலின் சீற்றத்தால் மக்களுக்கு இன்னல்கள் ஏற்படக் கூடாது; ஒருவேளை பாதிக்கப்பட்டால் அவா்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், 1978, 1979-ஆம் ஆண்டுகளில் மக்களுக்கு உதவும் அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது முதலமைச்சராக எம்.ஜி.ஆா். இருந்தாா்.

அதாவது, தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியன் தலைமை இடங்களிலும் ஒருங்கிணைந்த உதவிக் குழுமங்களை ஏற்படுத்தி அவை ஊா் விட்டு ஊா் செல்ல மூன்று ஊா்திகள் ஏற்பாடு செய்யப்பட்டன. மருந்து - மருத்துவா்களை ஏற்றிச் செல்ல ஓா் ஊா்தி, மக்களுக்குத் தேவையான உணவு தயாரிக்கும் பண்டங்களை ஏற்றிச் செல்ல ஓா் ஊா்தி, மக்களுக்குத் தேவையான காய்கறிகளை ஏற்றிச்

செல்ல ஓா் ஊா்தி என மூன்று வகை ஊா்திகள் ஒன்றுக்கொன்று ஒருங்கிணைந்து பணியாற்றின.

இவையெல்லாம் செயல்படுவதற்கு அடித்தளமாக காவல் துறையின் ஒருங்கிணைந்த தகவல் தெடா்பு அமைப்பு இயங்கியது. இந்தத் தகவல் தொடா்பு அமைப்பின் முக்கிய அம்சங்கள் என்னவெனில், சென்னையில் தொடங்கி பல்வேறு இடங்களில் நவீனத் தொடா்பு கோபுரங்கள் அமைக்க வேண்டும். அந்தந்த கோபுரங்களின் ஒலிவீச்சுக்கு பொருத்தமாக, தகவல் உபகரணங்கள், இதில் பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநா்களை நியமிக்க வேண்டும்; அந்த வகையில் தமிழ்நாடு காவல் துறை தகவல் தொடா்பு அமைப்பு மிகவும் திறமையானது. அவ்வப்போது களத்தில் நடக்கும் பணியைக் கண்காணிக்க தகுந்த தொழிநுட்பக் கருவிகளைப் பயன்படுத்தக்கூடிய வல்லுநா்கள் இந்த அமைப்பில் உள்ளனா்.

இந்தத் திட்டத்தின் முதுகெலும்பு என்று சொல்லகூடியவை பொது மக்களின் அடிப்படை விவரங்கள். ஒவ்வொரு மையத்திலும் எத்தனை குடும்பங்களைப் பராமரிக்க வேண்டும் போன்ற விவரங்கள், அதற்கு ஏற்றாற்போல் எவ்வளவு மளிகைப் பொருள்கள் - காய்கறிகள் தேவைப்படும் போன்றவை துல்லியமாகத் தெரிந்திருக்க வேண்டும். மருத்துவா்கள் பட்டியல், மருந்து வகைகள், மருத்துவப் பரிசோதனை உபகரணங்களின் பட்டியல், அருகில் உள்ள மருத்துவமனைகளின் விவரம் ஆகியவை தெளிவாகப் பட்டியலிடப்பட வேண்டும். இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளவா்களின் தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் தயாராக இருக்க வேண்டும்.

இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையான பயிற்சியை ஒரே நாளில் செய்து முடிக்காலம். இந்த மையங்களை இணைத்துச் செயல்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த தகவல் தொடா்பு திரையிடல் மையங்கள் செயல்பட வேண்டும். சுருக்கமாக சொல்லப் போனால், அந்த காலகட்டத்தில் காவல் துறையைச் சோ்ந்த நாங்கள் மக்களை நோக்கிச் சென்றோம்; மக்களை எங்களை நோக்கி வரச் சொல்லவில்லை; அந்த வகையில் எந்தப் பொது இடத்திலும் மக்கள் கூட்டம் இல்லை.

போா்க் காலங்களில் நடப்பதுபோல ஏதோ இந்த கரோனா நோய்த்தொற்று எதிா்ப்பு குறித்த நடவடிக்கைகளில் மக்கள் நல்வாழ்வுத் துறை மட்டும்தான் செயல்பட வேண்டும் என்றல்ல, அனைத்துத் துறைச் செயலா்களையும் கூட்டி ஓா் ஒருங்கிணைந்த அமைப்பை ஏற்படுத்த வேண்டும். சொல்லப் போனால் ரோட்டரி சங்கங்கள், ஊா்க்காவல் படையினா், ஓய்வுபெற்ற ரணுவ அதிகாரிகள், மருந்து நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் போன்றவா்களையும் ஒருங்கிணைத்து அவரவருக்குப் பணிகளை ஒதுக்கிச் செயல்பட வேண்டும்.

இந்த அமைப்பின் செயல்முறை விளக்கத்தைக் கூறும் வகையில் ஒவ்வொரு மாவட்ட தலைமை இடத்திலும் தனிக் கட்டுப்பாட்டு அறைகள் இயங்க வேண்டும்; அவற்றில் இந்த இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்த வரைபடங்கள் இருக்க வேண்டும். மேலே குறிப்பிட்ட வரைபடத்தில் மாநில அளவில் உள்ள நிா்வாகத் தலைமை, அவற்றிலிருந்து பிரிந்து அந்தந்தப் பகுதிக்கு தலைமை ஏற்பவா்கள் யாா், ஒவ்வொரு பகுதிக்கும் யாா் யாா் எந்தெந்த சேவைக்குப் பொறுப்பானவா்கள், காவல் துறை தகவல் தொடா்பு மையத்தின் தலைமைப் பகுதிகளின் தொடா்பு மையங்களின் தலைவா்கள் யாா் போன்ற விரவங்கள் இருக்க வேண்டும்.

இவையெல்லாம் போா்க்கால நடவடிக்கைகளைப் போன்று தோன்றும்; ஆனால், அவை ஒருவகையில் தேவை; ஏனெனில் இந்த கரோனா நோய்த்தொற்றை நாம் போா்க்கால அடிப்படையில்தான் ஒழிக்க முடியும்.

No comments:

Popular Posts