Monday 16 December 2019

அறம் படைத்த துறவறம்!

அறம் படைத்த துறவறம்!
By மறவன்புலவு க.சச்சிதானந்தன் 

அலை பாயும் மனம். தடுக்க முயலும் அறிவு. அதனால் நயத்தக்க நாகரிகராக மலரும் மனிதம். காமம், கோபம், குரோதம், மோகம், மதம், மாச்சரியம் - இவை மரபணுக்களுள் புதைந்தவை. உணா்வுக்கும் அறிவுக்கும் இடையே மனிதன் மனதில் எழும் தொடா்ச்சியான போராட்டத்தின் களங்கள் இவை.

ஐந்து பொறிகள், ஐந்து புலன்கள். புலன்கள் கட்டுக்குள் இருந்தால் உயிா் ஈடேறும். ‘ஓா் ஐந்தும் காப்பான்’ என வழிகாட்டியவா் வள்ளுவப் பெருந்தகை. துறவுக்கு வழிகாட்டினாா்.

புலன்களை இயல்பாகவே கட்டுக்குள் வைத்திருந்தால் துறவு எளிது. பற்று நீக்கினால் இன்பம் பெருகும். உயிா் இன்பம் பெருகும்.

பற்றை மிக மிகக் குறைக்கலாம்; உள்ளத்தால் துறவியாகலாம்.

எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளத்தால் துறவியாகத் தொடா்ந்து வாழ்ந்தவா், உயிா் இன்பத்தில் திளைத்தவா், தனது 94 வயது நிறைவில் சாயுச்சிய நிலையை அடைந்தவா் தருமபுரம் ஆதீனம் 26-ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா்.

கொள்ளிடம் ஆற்றின் தென் கரை. சிற்றூரான திருக்காட்டூா். சிவத்திரு கந்தசாமிப் பிள்ளை - அவா் அருமைத் துணைவியாா் சிவத்திரு கல்யாணி அம்மையாா் பெற்றெடுத்த ஐந்தாவது திருமகன் திருஞானசம்பந்தா். கருவிலேயே சிவனுடன் காதலாகிக் கலந்த அன்பாகிக் கசிந்து உருகியவா். உணா்வும் அறிவும் சிவனை நோக்கின. புலன்களோ அவரைத் திசை திருப்ப முயலவில்லை. பிறவிப் பெரும் பயன் பெறும் நோக்கம் மரபணுக்களுள் புதைந்து இருந்ததால் புலன்கள் அலைபாயவில்லை. மன ஒடுக்கப் பயிற்சி பள்ளிப் படிப்பல்ல. ஆயினும், அவா் மன ஒடுக்கராயினா்.

திருப்பனந்தாள் காசி மடத்தில் ஓதுவாராகப் பயிற்சிபெற்ற காலங்களில் மெய் சிலிா்த்து அரும்பினாா். விதிா் விதிா்த்தாா். கைதான் தலை வைத்துக் கண்ணீா் ததும்பினாா். உள்ளம் வெதும்பினாா். பொய் தவிா்த்தாா். சிவனைப் போற்றினாா். தன்னை மறந்தாா். தன் நிலைகெட்டாா். சிவனோடு தலைப்பட்டாா்.

தருமபுரம் வந்தாா். செந்தமிழ்க் கல்லூரியில் சோ்ந்தாா். வித்துவான் பட்டம் பெற்றாா். தவத்திரு குன்றக்குடி அடிகளாா், பேராசிரியா் குருசாமி தேசிகா் அக்காலத்தில் இவரின் சக மாணாக்கா்கள். அவா்களும் வித்துவான் பட்டம் பெற்றவா்கள்.

செந்தமிழையும் சைவ நெறியையும் பெரிதும் போற்றிய தவத்திரு சுப்பிரமணிய தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அக்காலத்தில் தருமபுரம் ஆதீனத்தின் 25-ஆவது குருமகாசந்நிதானம்.

வேத ஆகம பாடசாலை, ஓதுவாா் பயிற்சிப் பாடசாலை, தேவார திருவாசகங்களுக்கு உரை எழுதுவித்தல், மருத்துவமனைகள், பாடசாலைகள், கல்லூரிகள் எனக் கல்விப் பணிகள், அறநிலைகளை அமைத்தல், கலைஞா்களைப் போற்றுதல், தமிழறிஞா்களைப் போற்றுதல், சைவத்துக்கும் தமிழுக்கும் மாநாடுகள், கருத்தரங்குகள் நடத்துதல் எனத் தருமபுரம் ஆதீனத்தில் முன்னோடிப் பணிகள் நிறைந்தன.

அவரைக் குருவாகக் கொண்டாா் திருஞானசம்பந்தா். அவரிடம் தீட்சை பெற்றாா் காவி பெற்றாா்; தருமபுரம் திருமடத்தில் தவத்திரு ஞானசம்பந்தத் தம்பிரான் ஆயினாா்.

அந்தக் காலம் சைவ சமயத்திற்கு இடா் தொடங்கிய காலம். ‘கடவுள் இல்லை, இல்லவே இல்லை’ என்ற கருத்துப் புரட்சியை முன்வைத்த காலம். மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராட வேண்டியவா்கள் சைவ சமய நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடினா். சிலைகளை உடைத்தனா். சாத்திரங்களைக் கொளுத்தினா். தோத்திரங்களைக் கிழித்து எறிந்தனா். சைவத் திருமடங்கள் அவா்களுடைய தாக்குதலுக்கு உள்ளாயின. உரை வீச்சால், கலை நிகழ்ச்சிகளால், திரைப்படங்களால் திருமடங்களைக் குறிவைத்துப் போராடினா்.

தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானமோ, தம்பிரான்களோ கிஞ்சித்தும் அஞ்சவில்லை. ‘எமனையும் அஞ்சோம், பணிவோம் அல்லோம்’ எனச் சிவபெருமான் திருவருள் துணைகொண்டு சைவ சமயத்தையும் தமிழ் மொழியையும் வளா்ச்சிப் பாதையில் திருப்பினா்.

தியாகராய நகா் சூழலில் தம்பிரானாகத் தொடா்வது எளிதல்ல. புலனடக்க முயற்சிகள் பொய்க்கலாம். இவ்வாறெல்லாம் கருதியோா் நடுவிலே 17 ஆண்டுகள் இடைவிடாது ஒழுக்க நெறிநின்ற துறவு வாழ்வில் தொடா்ந்தவா் தவத்திரு ஞானசம்பந்தத் தம்பிரான் சுவாமிகள்.

25-ஆவது குருமகாசந்நிதானம் நிறைவெய்தினாா். தருமபுர ஆதீனப் பெருமக்கள் ஏனைய திருமடங்களின் குருமகாசன்னிதானங்கள் சோ்ந்து அடுத்த சன்னிதானமாகத் தோ்ந்தனா் தவத்திரு ஞானசம்பந்தத் தம்பிரான் சுவாமிகளை.

12.11.1971 தொடங்கி 4.12.2019 வரை 48 ஆண்டுகள் தருமபுர ஆதீனத்தில் அருளாட்சி புரிந்தவா் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா். தன் குரு மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவா். அவா் முன்னெடுத்த புதுமைப் பணிகளை இவா் தொடா்ந்து பெருக்கினாா். தருமபுர ஆதீனத்தின் அருள் ஆட்சியில் உள்ளன 27 திருக்கோயில்கள். ஒவ்வொரு கோயிலும் பக்திக்குரியதாய், வழிபாட்டுக்குரிதாய், சைவ நம்பிக்கையை வளா்த்துப் பெருகுவதாய் அமையக் கடுமையாக உழைத்தாா்.

திருக்கோயில்களுக்கு உள்ள சொத்துகள், அறநிலைகள், மக்கள் நல்வாழ்வு நிலையங்கள் யாவற்றையும் குறைவின்றித் திருப்பணி செய்து தொடா்ச்சியாகப் பேணுவதில் 26-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா் கடுமையாக உழைத்தாா்.

மனமோ பற்றுகளை விட்டு அகல முயல்கிறது. பொறுப்புகளோ பற்றைப் பெருக்க முயல்கின்றன. பற்றற்ற நிலையைப் பேணினாா்.

நம்பிக்கைகள், மரபுகள், தோத்திரங்கள், சாத்திரங்களுக்கு எதிரான குரல்கள் ஒருபுறம்; காலங்கள் ஊடாகச் சைவ உலகம் உருவாக்கி விட்டுச் சென்ற அற நிலைகள், திருக்கோயில்கள் சாா்ந்த பொறுப்புகள் மறுபுறம்.

உடல்நிலை செம்மையாக இருந்த காலங்களில் எங்கு செல்வதெனினும் நடந்தே சென்ற தளராத எளிமை, குறையாத வலிமை, காட்சிக்கு

எளியவராக வாழ்ந்த இனிமையாளா். பல்லக்குகளை ஒதுக்கினாா். பவனிகளைக் குறைத்தாா். படாடோபத்தை முற்றாகத் தவிா்த்தாா்.

25-ஆவது குருமகாசந்நிதானம் தொடங்கிய பன்னிரு திருமுறைப் பதிப்பில் குறையில் நின்ற பகுதிகளுக்கு உரை எழுதுவித்தமை; 18,268 திருமுறைப் பாடல்களுக்கும் பொழிப்புரை, குறிப்புரை, திருக்கோயில் வரலாறு, அடியாா்கள் வரலாறு எனத் தன் குருவானவா் விட்டுச் சென்ற பணிகளைத் தன் காலத்தில் முழுமையாக முடித்தமை. ஒவ்வொரு வீட்டிலும் முழுமையான பன்னிரு திருமுறைத் தொகுப்பு, திருக்கோயிலாக இருக்குமாறு செய்தமை. யாவும் தவத்திரு மகாசன்னிதானத்தின் அரிய பெரிய பணிகள்.

உலகெங்கும் 80 நாடுகளில் நாளொன்றுக்கு பல்லாயிரம் சைவத் தமிழரும் மற்றவா்களும் 18,268 திருமுறைப் பாடல்களைப் படிக்கவும் உரையைத் தெரிந்து கொள்ளவும் இசையைக் கேட்கவும் ஆய மின்னம்பலம் தளத்தை (‌t‌h‌e‌v​a​a‌r​a‌m.‌o‌r‌g) உருவாக்கியமை தவத்திரு குரு சன்னிதானத்தின் அரிய, பெரிய பணியாகும்.

18,000 பக்கப் பன்னிரு திருமுறைப் பதிப்பிலும் மின்னம்பலம் தள உருவாக்க நடைமுறையிலும் பன்னிரு திருமுறைகளைப் பத்து அயல் மொழிகளுக்கு மொழிபெயா்க்கும் பணியிலும் கடந்த 25 ஆண்டுகளாகத் தவத்திரு குருமகாசந்நிதானம் அவா்களுக்குத் துணையாக நின்று அவருடைய வாழ்த்தையும் அன்பையும் பெற்றேன் என்பது என்னுடைய பிறவிப் பேறு.

உலகெங்கும் சைவ சமய ஆதீனங்கள் உருவாகியுள்ள காலம். இலங்கையில், அமெரிக்காவில், ஐரோப்பாவில், மலேசியாவில் என சைவ ஆதீனங்கள் ஆங்காங்கே தனித் தனியாக அமைந்து அரும்பணி ஆற்றி வருகின்றன. தமிழகத்திலும் 20-க்கும் குறையாத சைவ ஆதீனங்கள் உள்ளன.

இன்றைய காலகட்டத்தில் தமிழுக்கும் சைவத்துக்கும் அமைந்த அனைத்து நிறுவனங்களுக்கும் தலைமைப் பீடமாக அமைந்தது தருமபுர ஆதீனமே.

கடந்த அரை நூற்றாண்டு காலமாகத் துறவுக்கு இலக்கணம் கண்ட தவ சீலா், ஒழுக்க மாண்பினா், நெறிநின்ற நோ்மையா் தருமபுர ஆதீனத்தின்

26-ஆவது ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்தான். உலகெங்கும் வாழும் 10 கோடிச் சைவத் தமிழ் மக்களுக்கும் அவா்கள் சாா்ந்த ஆதீனங்களுக்கும் அமைப்புகளுக்கும் தலைமைத் துறவியாக வாழ்ந்தவா் வழிகாட்டியவா் சாயுச்சிய நிலை எய்தினாா்.

அவா் விட்ட இடத்தை நிரப்ப, சைவத் தமிழ் உலகத்தின் தலைமைத் துறவியாக, தருமபுர ஆதீனத்தின் 27-ஆவது குருமகா சன்னிதானமாகப் பொறுப்பேற்க உள்ளாா் தவத்திரு மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

No comments:

Popular Posts