Sunday 16 December 2018

நாவல் மன்னர் “கல்கி” கிருஷ்ணமூர்த்தி

நாவல் மன்னர் “கல்கி” கிருஷ்ணமூர்த்தி ரா.கிருஷ்ணமூர்த்தி நா ளை(டிசம்பர் 5-ந்தேதி) நாவலாசிரியர் கல்கியின் நினைவு தினம். இருபதாம் நூற்றாண்டில் தமிழ் எழுத்தாளர்களில் முடி சூடா மன்னராய் விளங்கியவர் “கல்கி” தமிழில் சரித்திரக் கதைகள் தோன்றுவதற்கு முன்னோடி. கல்கியின் இயற் பெயர் ரா.கிருஷ்ணமூர்த்தி. தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள புத்தமங்கலத்தில் 1899-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந்தேதி பிறந்தார். பெற்றோர்: ராமசாமி அய்யர்- தையல்நாயகி. புத்தமங்கலத்தில் ஆரம்பக் கல்வி பயின்றபின், திருச்சி ஈ.ஆர்.உயர்நிலைப்பள்ளியிலும், தேசியக் கல்லூரியிலும் படிப்பைத் தொடர்ந்தார். 1921-ம் ஆண்டில், காந்திஜி ஒத்துழையாமை இயக்கம் தொடங்கினார். நாட்டு விடுதலைப் போரில் பங்கு கொள்ள வேண்டுமென்று விரும்பிய கல்கி, படிப்பை விட்டு விட்டு, கரூரில் நாமக்கல் கவிஞர் தலைமையில் நடந்த கூட்டத்தில் தடையை மீறிப் பேசினார். போலீசார்அவரைக் கைது செய்தனர்.அவருக்கு 3 மாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. விடுதலையான பிறகு, திருச்சியில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்தார். அப்போது, காங்கிரசுக்காக அவர் எழுதிய துண்டுப்பிரசுரங்களில் அவருடைய எழுத்துத் திறமை வெளியாகியது. கல்கியின் திறமையைத் தெரிந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் திருச்சி டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன், திரு.வி.க.விடம் நவசக்தி பத்திரிகையில் சேரும்படி ஆலோசனை கூறி, சிபாரிசுக் கடிதமும் கொடுத்தார். கல்கியின் எளிய இனிய தமிழ் நடை திரு.வி.க.வுக்குப் பிடித்துப்போக, உடனே துணை ஆசிரியர் பதவி கொடுத்தார். நவசக்தியில் பணிபுரிந்தபோது, கல்கியின் எழுத்துக்களில் மேலும் மேலும் மெருகேறியது தேனீ என்ற பெயரில் உலகச்செய்திகளைத் திரட்டிக்கொடுத்தார். முக்கிய மாநாடுகளுக்கு நவசக்தியின் சிறப்பு நிருபராகச்சென்று, நிகழ்ச்சிகளைத்தொகுத்து எழுதினார். இவை எல்லாம் திரு.வி.க.வின் பாராட்டைப் பெற்றன. இந்தச் சமயத்தில் கல்கிக்குத் திருமணம் நடை பெற்றது. மனைவி பெயர் ருக்மணி. 1928 பிப்ரவரியில் “ஆனந்த விகடன்” பத்திரிகை எஸ்.எஸ்.வாசன் நிர்வாகத்தில் வெளிவரத் தொடங்கியது. பாரதியாரின் நண்பரான பரலி.சு.நெல்லையப்பர், கல்கியை வாசனிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி இவர் நவசக்தியில் பணிபுரிகிறார் எழுத்தாற்றல் மிக்கவர்என்றார். கல்கியை, ஒரு கட்டுரை எழுதி அனுப்பும்படி வாசன் கேட்டுக்கொண்டார். ஏட்டிக்குப் போட்டி என்ற நகைச்சுவைக் கட்டுரையை கல்கி எழுதி அனுப்பினார். கல்கி என்ற புனைபெயரில் கிருஷ்ணமூர்த்தி எழுதிய முதல் கட்டுரை இதுதான். தொடர்ந்து விகடனில் நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதலானார். இந்தச் சமயத்தில், திருச்செங்கோட்டில் “காந்தி ஆசிரமம்” நடத்திக் கொண்டிருந்த ராஜா, “விமோசனம்” என்ற பெயரில் மது விலக்குப் பிரசாரத்துக்காக ஒரு பத்திரிகை நடத்தப் போவதாகத் தெரிவித்தார் நவசக்தியில் பெரும்பாலும் மொழிபெயர்ப்பு வேலைகளையே கல்கி செய்ய வேண்டியிருந்தது. பல்சுவை கதை-கட்டுரைகளை எழுத விரும்பிய கல்கி, திரு.வி.க.விடம் பிரியாவிடை பெற்று, திருச்செங்கோடு சென்று, “விமோசனம்” பத்திரிகையின் துணை ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். 1930-ல் மகாத்மா காந்தி உப்பு சத்தியாக்கிரகம் தொடங்கினார். அதில் பங்கு கொண்ட ராஜாஜி, வேதாரண்யத்தில் உப்பு காய்ச்சி சிறை சென்றார். ராஜாஜியின் அனுமதிடன், விமோசனத்தை நிறுத்தி விட்டு, கோபிச்செட்டிப்பாளை யத்தில் தடையை மீறி பேசி ‘கல்கி’ கைதானார். அவருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை முடிந்து வெளியே வந்த கல்கி, ஆனந்த விகடனின் துணை ஆசிரியரானார். கல்கியின் எழுத்தாற்றலும், வாசனின் நிர்வாகத் திறமையும் சேர்ந்ததால், விகடனின் விற்பனை பல்லாயிரக்கணக்கில் உயர்ந்தது. விகடனில் “கல்கி” எழுதிய முதல் தொடர்கதை “கள்வனின் காதலி”, தமிழ் நாடெங்கும் கல்கியின் புகழைப் பரப்பியது. பிறகு, திரைப்படத்திற்கென்றே கல்கி எழுதிய “தியாகபூமி” கதையைக் கே.சுப்பிரமணியம் படமாகத் தயாரிக்க, அந்தப் படத்தின் ஸ்டில்களுடன் விகடனில்“தியாகபூமி” தொடராக வெளிவந்தது. இந்த நேரத்தில் கல்கி வாழ்க்கையிலும், விகடன் வரலாற்றிலும் எதிர்பாராத ஒரு திருப்பம். 1940-ம் ஆண்டின் இறுதியில் தனி நபர் சத்தியாக்கிரகத்தைக் காந்தி தொடங்கினார். அதில் கலந்து கொள்ள விரும்புவதாக மகாத்மா காந்திக்குக் கல்கி கடிதம் எழுதி, அதற்கு அனுமதியும் பெற்றார். இதை வாசனிடம் கல்கி தெரிவித்தபோது “காந்திஜியிடம் உங்கள் பெயரைக் கொடுத்த போது, அதை என்னிடம் தெரிவித்திருக்க வேண்டும்” என்றார். போராட்டத்தில் பங்கு கொள்வோர் சம்பந்தப்பட்ட பத்திரிகைகள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுத்த காலம் அது. எனவே, போராட்டத்தில் இருந்து கல்கி விலகியிருக்க வேண்டும் அல்லது ராஜினாமா செய்து விட்டுப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று வாசன் தெரிவித்தார். அதன் விளைவாகப் பதவியை ராஜினாமா செய்து விட்டு, கல்கி போராட்டத்தில் பங்கு கொண்டார். 3 மாதம் கடுங்காவல் தண்டனை அடைந்தார். சிறையில் இருந்துவிடுதலையான கல்கி நண்பர் டி.சதாசிவத்துடன் சேர்ந்து, சொந்தப் பத்திரிகை நடத்தத் தீர்மானித்தார். காங்கிரஸ் போராட்டங்களில் கலந்து கொண்ட போதே கல்கியும் சதாசிவமும் நண்பர்கள். சொந்தப் பத்திரிகை ஆரம்பிப்பதால் கல்கிக்குக் கஷ்டங்கள் ஏற்படலாம் என்று ராஜாஜியும், ரசிகமணி டி.கே.சி.யும் கவலை அடைந்தனர். ஆனால், பத்திரிகை வெற்றிகரமாக அமைந்தது. கல்கியின் எழுத்துத் திறமையும், டி.சதாசிவத்தின் நிர்வாகத்திறனும் சேர்ந்து “கல்கி”யின் விற்பனையை வெகு விரைவில் பல்லாயிரக்கணக்கில் உயரச் செய்தன. தமிழின் முதல் சரித்திர நாவலான “பார்த்திபன் கனவு” கல்கியில் தொடராக வெளியாயிற்று. அதனை அடுத்து “சிவகாமியின் சபதம்” கல்கிக்கு இணையற்ற புகழைத் தேடித் தந்தது. சுதந்திரப் போராட்டத்தைப் பின்னணியாக கொாண்டு “கல்கி” தீட்டிய “அலை ஓசை” அவருடைய சமூக நாவல்களில் புகழ் பெற்றது. தமது படைப்புகளில் இதுவே தலைசிறந்தது என்பது கல்கியின் கருத்து. 1952-53-ல் கல்கி எழுதத் தொடங்கிய “பொன்னியின் செல்வன்” மூன்றாண்டுகள் தொடராக வெளிவந்தது. கிட்டத்தட்ட 30 ஆண்டு காலம் தன் பேனா மூலம் தமிழ்நாடு இலக்கிய உலகத்தை அரசாண்ட கல்கி, 1954 டிசம்பர் 5-ந்தேதி, தமது 55-வது வயதில் காலமானார். கல்கியின் மனைவி பெயர் ருக்மணி. மகள் ஆனந்தி. மகன் ராஜேந்திரன். -நாதன்

No comments:

Popular Posts