Thursday 13 September 2018

வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்!

வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்! பேராசிரியை ஆர்.காயத்ரி சுரேஷ் நாளை (செப்டம்பர் 14-ந்தேதி) சர்வதேச கலாசார ஒற்றுமை தினம். ஆயிரம் உண்டிங்கு சாதி அதில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி? என்று ஒரு தாய் மக்களான நமக்குள் ஆயிரம் வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் ஒன்று என்று நாம் உணர்ந்துகொள்ள உதவும் நாள் இது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மொழி பேசும் மக்கள் உள்ளனர். வேறுபட்ட பழக்க வழக்கங்களை கொண்டிருக்கிறார்கள். ஆனால் மனிதம், மனித நேயம் என்ற புள்ளியில் அனைவரும் ஒன்றுபடவே இது போன்ற தினங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. மற்ற நாடுகளுக்கும் நமக்கும் மிகப் பெரிய வேறுபாடு ஒன்று உண்டு. இங்கு ஒரே நாட்டில் 22 பெரும்பான்மை மொழிகளும், 13 வகையான எழுத்து வடிவங்களும், 720 வட்டார பேச்சு வழக்கும் உள்ளது. இது உலகில் வேறு எங்கும் காண கிடைக்காத விந்தை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு சிறப்பு தன்மை உண்டு. செல்லும் இடமெல்லாம் சீர்திருத்தி பேர் பெறுவது தமிழர் கலாசாரம் விருந்தோம்பலில் சிறந்து விளங்குவது நம் பண்பாடு. தொழில் முயற்சிக்கு குஜராத், போர் பயிற்சிக்கு பஞ்சாப், கடும் உழைப்புக்கு கிழக்குமாநிலங்கள் என ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு பெருமை கொண்டுள்ளது. பல்வேறு வேற்றுமையிலும் ஒற்றுமை கண்டது நமது தேசம். அந்த காலத்திலேயே உலகம் முழுவதுக்கும் முன்னோடியாக அனைத்து துறைகளிலும் மிளிர்ந்தது நம் தேசம். நாளந்தா, தட்சசீலா பல்கலைக்கழகங்கள் மூலம் உலகுக்கு அறிவூட்டியது இந்தியா. உலக அறுவை சிகிச்சைகளின் தலைவர், மருத்துவதுறையில் விந்தை புரிந்த சுஷ்ருதர், வான சாஸ்திரத்தில் சிறந்த ஆரியபட்டா. உலகுக்கு எண்கணிதம் போதித்த கணித மேதை ராமானுஜர் போன்றோரை பிரசவித்து நம்மையெல்லாம் பெருமை அடையச் செய்தது நம் தேசம். இமயம் முதல் குமரி வரை மட்டுமல்லாமல் கடல் கடந்த பல நாடுகளையும் வென்ற தமிழ் மன்னர்களை கொண்ட நாடு நம் நாடு. கட்டிடக்கலை முதல் திட்டமிட்ட நகர அமைப்புகளிலும், கோவில்களின் நிர்மானங்களிலும் நாம் சிறந்து விளங்கியதற்கு தஞ்சை பெரிய கோவிலும், சாரநாத் ஸ்தூபியுமே சான்றாகும். இப்படி நம் பழம்பெருமைகளைப் பேசியே நம் கடமையை, பொறுப்பை தட்டிக்கழிக்க நமக்கு உரிமையில்லை. நமது கடமையை இந்த நாளில் உணர்வோம். நம் தற்போதைய நிலைக்கு காரணமான தனிமனித தவறுகளை ஆராய்வோம். மாடு கட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானை கட்டி போரடித்த சமூகம் இன்று கஞ்சிக்கு கையேந்தும் நிலையில் உள்ளது. அசோகர் மரம் நட்டார், குளம் வெட்டினார் என்று படித்துவிட்டு இன்று ஏரிகளையும், குளங்களையும் மண்ணுக்குள் புதைய செய்து, கட்டிடங்களாக்கிவிட்டு தண்ணீருக்கு அண்டை மாநிலத்தவருடன் அயராமல் போரிடுகிறோம். ஆயிரம் வருடங்கள் உள்ள கட்டிடங்கள் அப்படியே இருக் கின்றன. புதிதாய் கட்டிய கட்டிடங்கள் புயலுக்கும், சிறு வெள்ளத்துக்கும் சின்னாப்பின்னமாவதை கண் கூடாக காண்கிறோம். குருபக்தியை உலகுக்கு கற்றுத்தந்த நாட்டில் கல்வியின் தரமும், மாணவர்களின் நன்நடத்தையும் கேள்விக்குறியாகிவிட்டது. ஏகலைவர்களை கொண்ட சமூகம் கத்தியுடனும் அரிவாளுடனும் உலா வருகிறது. கோவலனுக்கு தவறான நீதி சொன்ன பிறகு உண்மையை உணர்ந்து ‘யானோ அரசன், யானே கள்வன்’ என்று கூறி உயிரை மாய்த்த பாண்டிய மன்னன் ஆட்சிபுரிந்த தமிழகம் இன்று எடுப்பார் கைப்பிள்ளையாகிப் போயிற்று. உடையில் உன்னதம் படைத்த மக்களின் மனம் இன்று மேற்கத்திய பாணியை கடைப் பிடித்து கலாசார சீரழிவிற்கு சென்று கொண்டிருக்கிறது. இதுவா நம் முன்னோர் கண்ட கலாசாரம்? பண்பாடு? ஒற்றுமை? இந்த நாளிலே நாம் நம் வேர்களைத் தேடுவோம். நம் குறைகளுக்கு காரணமானவற்றை கண்டறிவோம். அதனைக் களைய நம்மால் இயன்றதைச் செய்வோம். நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் நம் பின்னே வர ஆயிரம் பேர் உள்ள போது அந்த முதல் அடி நம்முடையதாக இருக்கட்டும். தேசம் கடந்த நேசம் உருவாக்குவோம். ஆண்டான் ஒருவன் அடிமை பலர் என்று சாதியினாலும் மதத்தினாலும் உள்ள வேற்றுமை களைவோம். புத்தம் புதிய கலைகளை நாம் பயில்வோம். உயர்வோம். இன் நன்னாளிலே ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே என்று எண்ணி ஒன்றுபடுவோம். இழந்த கலாசார, பண்பாட்டு ஒற்றுமையை மீட்டெடுப்போம்!

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts