Sunday 5 August 2018

உழவு தொழில் வளர்ச்சிக்கு உன்னத திட்டங்கள்

உழவு தொழில் வளர்ச்சிக்கு உன்னத திட்டங்கள் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக விவசாயக் குடும்பங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், விவசாயம் ஆதாயம் தரும் தொழிலாக மாறுவதற்கும், இளைய தலைமுறையினரை விவசாயத்தில் ஈர்ப்பதற்கும் யோசனைகளை தெரிவிப்பதற்காக இந்திய அரசு தேசிய விவசாயிகள் ஆணையத்தை அமைத்தது. அப்போதைய வேளாண் துறை மந்திரியான ராஜ்நாத்சிங் இந்த ஆணையத்தை அமைத்தார். சரத்பவார் என்னை இந்த ஆணையத்திற்கு தலைமையேற்குமாறு அழைத்தார். இந்த ஆணையம் வேளாண்மையை மேம்படுத்துவதற்கான யோசனைகளைத் தெரிவிக்கும் அறிக்கையை தயாரித்தது மட்டுமின்றி வேளாண் குடும்பங்களின் பொருளாதார நலன்களை பேணிக்காப்பதற்கான பரிந்துரைகளையும் தெரிவித்தது. தேசிய வேளாண் கொள்கையையும் இந்த ஆணையம் சமர்ப்பித்தது. விவசாயிகளின் நலனுக்காக தேசிய விவசாயிகள் ஆணையம் முக்கியமான யோசனைகளைத் தெரிவித்துள்ளது. அதன்படி, வேளாண் தொழிலின் மூலம் விவசாயிகள் நிறைந்த வருவாயை பெறுவதற்கு நடவடிக்கைகளை எடுப்பதோடு, வேளாண் வருவாயை மேம்படுத்தி அதன் மூலம் வேளாண் துறையின் வளர்ச்சியை மதிப்பிட வேண்டும். அனைத்து வேளாண் கொள்கைகளிலும், திட்டங்களிலும் நிலையான ஊரக வாழ்க்கையை உறுதி செய்வதற்குரிய வெளிப்படையான திட்டங்களை வடிவமைக்க வேண்டும். நிலச் சீர்திருத்தத்தில் முடிக்கப்படாமல் உள்ள திட்டங்களை முடிப்பதோடு, ஒருங்கிணைந்த சொத்து மற்றும் நீர் வள சீர்திருத்தங்கள் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பது, விவசாயிகளுக்கு சமூக பாதுகாப்பு மற்றும் ஆதரவு சேவைகளை உருவாக்கி செயல்படுத்துவது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். வேளாண் நிலம், நீர், உயிரி பன்முகத்தன்மை போன்றவற்றை பாதுகாத்து மேம்படுத்துவதோடு வேளாண் உற்பத்தி, ஆதாயம் மற்றும் நிலைத்து நிற்கும் வகையிலான பெரிய வேளாண் முறைகளை உறுதிப்படுத்துவது அவசியம். கிராமப்புற இந்தியாவில் சமுதாயத்தை மையமாகக் கொண்ட உணவு, நீர் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு அமைப்புகளை துரிதப்படுத்தி குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்களின் ஊட்டச்சத்து பாதுகாப்புத் தேவையை உறுதிப்படுத்திட வேண்டும். வேளாண் உற்பத்தி மற்றும் அறுவடைக் காலத்திற்கு பிந்தைய கால நடவடிக்கைகள் லாபகரமாக இருக்கும் வகையில் சிறு மற்றும் குறு விவசாயிகள், வேளாண்மையை மேற்கொண்டு, இளைஞர்களை வேளாண் தொழிலுக்கு ஈர்ப்பதோடு அவர்களை அந்த தொழிலில் நிலைத்திருக்க செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகும். வேளாண் பயிர்கள், கால்நடைகள், மீன் வளம் மற்றும் காடுகளில் உள்ள மரங்களின் உயிரி பாதுகாப்புத் தன்மையை வலுப்படுத்துவதன் மூலம் வேளாண் குடும்பங்களின் வருமானத்தை மேம்படுத்தி நாட்டின் சுகாதாரம் மற்றும் வர்த்தக பாதுகாப்பையும் பலப்படுத்த முடியும். வேளாண் கல்வியை வலுப்படுத்தி வேளாண்மை மற்றும் மனையியல் அறிவியல் பட்டதாரிகளை தொழில்முனைவோராக்க வேண்டும். தேசிய விவசாயிகள் ஆணைய அறிக்கை கடந்த 2006-ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் விவசாயத்தை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பிட தகுந்த பல முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது. அதன்படி, ஏற்கனவே இருந்த வேளாண் அமைச்சகத்தை இப்போதைய அரசு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் என்று மாற்றியமைத்துள்ளது. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு வேளாண்மை வளர்ச்சியை மதிப்பிடுவதற்கு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வேளாண் நிலத்தின் சமன்பாடான சத்துக்களை நிலை நிறுத்த மண் வள அட்டைகளை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தாவரங்கள் ஆரோக்கியமாக வளர்வதற்கு நில வளம் அடிப்படையாகும். அதே போல் ஆரோக்கியமான தாவரங்களே மனித ஆரோக்கியத்திற்கு அடிப்படை என்பதை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் மண் வள அட்டைகளை வழங்கும் திட்டத்தை அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. நாட்டில் உள்ள பல்வேறு வேளாண் சந்தைகளை ஆன்லைன் வர்த்தகத்தில் இணைப்பதற்காக மின்னணு தேசிய வேளாண் சந்தை உருவாக்கப்பட்டுள்ளது. கிராம வேளாண் சந்தைகள் மூலம் வேளாண் பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு சில்லரையாகவும், மொத்தமாகவும் விற்பனை செய்வதற்கு இதன் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தேசிய விவசாயிகள் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படுகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலையில், மேலும் அதிக பயிர்களுக்கான கொள்முதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்துக்கும் மேலாக தேசிய விவசாயிகள் ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் அண்மையில் அறிவிக்கப்பட்ட விலை உயர்வு, விவசாயத்தின் மீதான ஈர்ப்பையும், பொருளாதார நம்பகத்தன்மையையும், உறுதிப்படுத்தும் மிக முக்கியமான நடவடிக்கையாகும். இந்த அனைத்துத் திட்டங்களையும் சிறப்பாகவும், முறையாகவும் செயல்படுத்தினால், விவசாயிகள் மற்றும் விவசாயத்தின் எதிர்காலம் மேம்படுத்தப்பட்டு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பில் இந்தியா முதலிடத்தை எட்ட முடியும். விவசாயிகளின் போராட்டங்கள் இன்னும் தொடர்ந்து வருகின்றன. அவர்களது முக்கிய கோரிக்கைகள், கடன்களை ரத்து செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்பதாகும். இந்த இரண்டு பிரச்சினைகளும் தற்போது தேவையான நடவடிக்கைகள் எடுப்பதற்கான கவனத்தை ஈர்த்துள்ளன. சுருக்கமாக சொல்வதானால், கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதிலும், விவசாயத்தில் தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஏற்படுத்துவதிலும், பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து சிறப்பாக செயல்படுத்தினால் விவசாயிகளின் முன்னேற்றமும், விவசாயத்தின் பொருளாதார நம்பகத்தன்மையும் உறுதிச் செய்யப்படலாம். விவசாயத்தை இந்திய கிராமப்பகுதியின் முக்கிய தொழிலாக உறுதிப்படுத்தியுள்ள பிரதமருக்கு பெரும் நன்றியை தெரிவிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். விவசாயத்தை வருமானம் தரும் தொழிலாகவும், நாட்டிற்கு பெருமை அளிக்கும் வகையிலும் மாற்ற இயன்றவரை அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும். மேலும் 3 ஆண்டுகளுக்கான ரூ.9 ஆயிரம் கோடி பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டுடன் பிரதமர் தேசிய ஊட்டச்சத்து இயக்கத்தை தொடங்கி வைத்துள்ளார். நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்களுக்கு சமன்பாடான ஊட்டச்சத்து மிக்க உணவு, தூய்மையான குடிநீர் ஆகியவை கிடைக்கும் வகையிலான உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புக்கு இது பெரிதும் உதவும்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts