Saturday 7 July 2018

கவலையளிக்கும் கலப்படம்

கவலையளிக்கும் கலப்படம் By அ. அப்பர்சுந்தரம் | தற்காலத்தில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏதோவொரு நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம், நாம் உண்ணும் உணவில் கலப்படம் அதிகரித்துள்ளதே ஆகும். எந்த ஒரு பறவையோ விலங்கோ, தான் உண்ணும் உணவு குறித்து சந்தேகத்துடனோ, பயத்துடனோ இருந்ததே இல்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் தற்காலத்தில் எதை உண்ணவேண்டும் என்பதுகூட தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறோம். உணவுகளின் இயல்பான பண்புகளைக் குறைக்கும் அல்லது சிதைக்கும் எந்தவொரு நடவடிக்கையும் சட்டப்படி தண்டனைக்கு உரியதாகும் . இது தெரிந்தும் சில சமூகவிரோதிகள் பணத்திற்காக கலப்படம் செய்கிறார்கள். உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் தரமற்ற பொருள்களை உணவுப்பொருள்களுடன் கலந்து விற்பனைக்கு அனுப்புகிறார்கள். எடுத்துக்காட்டாக, காபித்தூளில் புளியவிதைத் தூள் சேர்கிறார்கள். இதனால் இரைப்பைக் கோளாறு மற்றும் மூட்டுவலி ஏற்படுகிறது. தேயிலைத் தூளோடு பயன்படுத்திய தேயிலைத்தூளோ மரத்தூளோ சேர்க்கிறார்கள். இதனால் கல்லீரல் பிரச்னை மற்றும் உண்ட உணவை செரிப்பதில் சிக்கல் உண்டாகிறது. பால், பாலாடை யுடன் மாவு அல்லது நீர் மற்றும் சில வேதிப் பொருள்களை சேர்க்கிறார்கள். இதனால் செரிமானத் தொல்லை ஏற்படுகிறது. கருமிளகுடன் பப்பாளி விதை மற்றும் சொத்தையான மிளகுகளை சேர்கிறார்கள். இதனால் இரைப்பை, கல்லீரல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. வெல்லம் தயாரிக்கும் போது சலவை சோடா மற்றும் மரத்தூள் சேர்க்கிறார்கள். இதனால் வயிற்றுப்போக்கு வாந்தி ஏற்படுகிறது. தூள் உப்புடன் சாக்பீஸ் பவுடர், வெள்ளை கல்நார் சேர்க்கிறார்கள். இதனால் செரிமானத் தொல்லை ஏற்படுகிறது. கடுகு எண்ணெய்யுடன் ஆர்ஜிமோன் என்னும் தரம் குறைந்த எண்ணெய் சேர்கிறார்கள். இதனால் பார்வை இழப்பு, இதய நோய் மற்றும் புற்று நோய் கூட வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தேங்காய் எண்ணெய்யுடன் கனிம எண்ணெய்யை சேர்கிறார்கள். இதனால் இதய பாதிப்பும் புற்று நோயும் ஏற்படுகிறது. மிளகாய்த் தூளுடன் மரத்தூள், செங்கல் தூள் சேர்கிறார்கள். இதனால் இரைப்பை கோளாறு ஏற்படுகிறது. குளிர்பானங்கள் தயாரிக்கும் போது செயற்கை நிறமூட்ட வேதிப்பொருள்களை சேர்கிறார்கள். இதனால் கண், எலும்பு, தோல், நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது. பருப்பு வகைகளில் கேசரிப் பருப்பு சேர்க்கிறார்கள. இதனால் உடல் ஊனம் மற்றும் பக்கவாதம் ஏற்படுகிறது. தானிய வகைகளிலும் நறுமண உணவுப் பொருட்களிலும் செயற்கை பளிங்குக் கல் துகள்கள் சேர்கிறார்கள். இதனால் பற்கள், ஈறுகள், இரைப்பை, கல்லீரல் , குடல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இனிப்பு, இறைச்சி, ஐஸ்கிரீம் இவற்றில் சாக்கரின் என்னும் வேதிப் பொருள் சேர்க்கிறார்கள். இதனால் ஜீரண மண்டல கோளாறு ஏற்படுகிறது. இப்படியாக நாம் உண்ணும் அனைத்து உணவுப் பொருள்களும் கலப்பட மயமாகவே இருக்கின்றன. உணவுப்பொருள் கலப்படம் இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் அதிகரித்துகொண்டே வருகிறது என்று உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டுத் துறை (FSSAI- Food safety and standard authority of India) அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிக்கையின்படி, 2011-2012-இல் 64,593 உணவுப் பொருள் மாதிரிகளை சோதித்தபோது, அவற்றில் 8,247 மாதிரிகளில் கலப்படம் இருந்திருக்கிறது. இது 12.8 சதவிகிதம். இது 2012-13-இல் 14.8 சதவிகிதமாக உயர்ந்தது. 2013-14-இல் இது 18.8 சதவிகிதமானது. தற்போது உணவுப்பொருள்களில் 25.8 சதவிகிதத்துக்கும் மேல் கலப்படம் உள்ளதாகக் கூறப்படுகிறது. அண்மையில், தமிழகத்தில் கலப்பட எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்தையும், கலப்பட தேயிலைத் தூள் தயாரிக்கும் நிறுவனத்தையும் கண்டறிந்து அவற்றுக்குப் பூட்டு போட்டுள்ளனர். கலப்பட பொருள்கள் பெரும்பாலும் ரசாயனம் சார்ந்தே இருப்பதால் நோய் வருவதைத் தடுக்கவே முடியாது. ஆகவே உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள், கலப்படம் செய்வோரை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கலப்படப் பொருள்களைக் கண்டறிவது எப்படி என்பதை பொதுமக்களுக்கு விளக்கி அவர்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். மக்கள் விழித்தால் மட்டுமே கலப்படம் களையப்படும். இவற்றைவிட முக்கியமானது, நாமாக நமது உணவைத் தேர்வு செய்து உண்ண வேண்டும். இயற்கையை நம்பும் நாம் கடைகளையும் நிறுவனங்களையும் நம்ப வேண்டாம். பால்காரரிடம் பால் வாங்கிய வரை கலப்படத்தை பற்றிய கவலை இல்லாமல் இருந்தோம். விவசாயிகளிடம் விளைபொருட்களை வாங்கிய வரை பிளாஸ்டிக் அரிசி குறித்த பயம் நம்மிடம் இல்லை. நாம் கடைகளில் வண்ண வண்ண மின்னும் பாக்கெட்களில் விளம்பரங்களை நம்பி எப்போது பொருட்களை வாங்க முற்பட்டோமோ அப்போதே சிக்கல் ஆரம்பித்துவிட்டது. இனியாவது நாம் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். எந்த பொருட்களைக் கடையில் வாங்க வேண்டும், எந்த பொருட்களை உற்பத்தி செய்வோரிடம் வாங்க வேண்டும் என்று தீர்மானித்து,. பாலைப் பால்காரர்களிடம் தான் வாங்க வேண்டும். உணவுப் பொருட்களை இயன்ற அளவிற்கு விவசாயிகளிடம் தான் வாங்க வேண்டும் என்று முடிவெடுத்தால் நிச்சயமாக நம் சமூகத்தில் நல்ல மாற்றங்களை உருவாக்கலாம். உணவில் கலப்படம் என்பது இல்லை என்னும் நிலையை அடையலாம். நோயற்ற வாழ்வு வாழலாம்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts