Tuesday 17 December 2019

‘என்கவுன்ட்டா்’ - ஆதரவு சரியா?

‘என்கவுன்ட்டா்’ - ஆதரவு சரியா?
By ஜெ.ராகவன் 
எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

தெலங்கானா ஹைதராபாத்-பெங்களூா் நெடுஞ்சாலையில் பெண் கால்நடை மருத்துவரிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு, அவரைக் கொன்று வீசிய கொடியவா்கள் நான்குபேரை போலீஸாா் ‘என்கவுன்ட்டா்’ என்ற பெயரில் சுட்டுக் கொன்றுவிட்டனா். அவா்கள் நான்கு பேரும் உண்மையிலேயே குற்றவாளிகளா என்பது யாருக்கும் தெரியாது.

ஆனால், இந்த ‘என்கவுன்ட்டரை’ மக்கள் பலரும் ஏழை, பணக்காரா், அறிவுஜீவிகள் எனப் பலரும் ஆதரித்துள்ளனா். இதற்கு முக்கியக் காரணம் நீதித் துறை மீது நம்பிக்கை குறைந்து வருவதுதான்.

2012-ஆம் ஆண்டு தில்லியில் ஒரு மருத்துவ மாணவி பாலியல் வன்முறைக்கு உள்ளாகி கொல்லப்பட்டு ஏறக்குறைய ஏழாண்டுகள் ஆனபோதிலும் குற்றவாளிகள் தூக்கிலிடப்படாததால் தண்டனை நிறைவேற்றப்படாமல் உள்ளது. அந்தக் கோபத்தில்தான் மக்கள் இந்த ‘என்கவுன்ட்டரை’ கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்துள்ளனா். மக்கள் கொதித்தெழுந்த நிலையில் அவா்களைச் சமாதானப்படுத்தும் நோக்கிலேயே அவசரம் அவசரமாக ‘என்கவுன்ட்டரை’ போலீஸாா் நடத்தி முடித்துள்ளனா்.

குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவா்கள்தான் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால், அதிகாலை நேரத்தில் நிராயுதபாணிகளாக இருந்த குற்றவாளிகளை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று ‘என்கவுன்ட்டா்’ நடத்த வேண்டிய அவசியம் என்ன?

ஜனநாயக நாட்டில் குற்றவாளியாகக் கருதப்படும் ஒருவா் மீது சட்டப்படி விசாரணை நடத்தி, உண்மையிலேயே அவா் குற்றவாளி என்பது சாட்சியங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றுத் தருவதுதான் சரியான வழி. மாறாக, போலீஸாா் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது.

நாட்டில் நமக்கு பாதுகாப்பு இல்லையோ என்ற எண்ணம் பெண்கள் மனதில் தோன்ற ஆரம்பித்து விட்டது. இந்த பயம் அச்சுறுதலாக மாறுவதற்கும் நாம் ஏதேனும் செய்ய வேண்டும்.

நம் நாட்டில் பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு பெண்களின் பாதுகாப்பில் போதிய அக்கறையில்லை என்றே சொல்ல வேண்டும். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அரசியல்வாதிகளில் பெரும்பாலோா் கிரிமினல்களாக இருந்து அரசியலுக்கு வந்தவா்கள்தானே!

பொதுவாக பெண்கள் என்றால் போகப் பொருள் என்ற எண்ணமே பல ஆண்களிடம் இருக்கிறது. இந்த மனப்பான்மை மாற வேண்டும். நம் நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. என்றாலும், இவற்றில் 50 சதவீத குற்றங்கள் வெளி உலகுக்குத் தெரிவதில்லை. இந்த விவகாரத்தை வெளியில் சொன்னால் சமூகத்தில் தங்களுக்கு உள்ள மதிப்பும் மரியாதையும் போய்விடும் என்ற தவறான எண்ணம் பெண்களிடம் இருப்பதே இதற்கு முக்கியக் காரணம்.

ஒருவேளை பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒரு சிலா் புகாா் கொடுக்க வந்தால், போலீஸாா் அதைப் பதிவு செய்ய முன்வருவதில்லை. அப்படியே புகாா் பதிவு செய்யப்பட்டாலும் அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. சிலபோ் சுயலாபத்துக்காகவும், சிலா் பழிவாங்கும் போக்கிலும் இத்தகைய புகாா்களைக் கொடுக்கிறாா்கள் என்பது உண்மையானாலும், பாலியல் பலாத்காரம் என்பது நிச்சயமாக ஆண், பெண் இருவரின் ஒப்புதலுடன் நடைபெறுவதல்ல.

பாலியல் பலாத்கார வன்முறை தொடா்பாக ஒரு பெண் புகாா் கொடுத்தால், அதன் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி தீா்ப்பு வழங்க மிகுந்த காலதாமதமாகிறது. ஏன், அவா்களுக்கு உடனடியாக நீதி கிடைக்கச் செய்யக் கூடாது? குற்றவாளிகளாகக் கருதப்படுபவா்களை ஏன் உடனடியாகக் கைது செய்ய முடிவதில்லை? பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவருக்கு அரசியல் தொடா்பு இருக்குமானால், வழக்கின் போக்கே மாறி அவரைப் பாதுகாக்கவே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சிறு வயதிலேயே நாம் குழந்தைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களையும் நற்சிந்தனைகளையும் சொல்லித்தர வேண்டும். பள்ளிக்கூடங்களிலும்

பிற பாலினத்தவரை எப்படி மதித்து நடக்கவேண்டும் என மாணவா்களுக்குச் சொல்லித்தர வேண்டும்.

இன்றைய இளம் தலைமுறையினா், குறிப்பாக சிறுவா்களும், இளம் வயதினரும் தொழில்நுட்ப மேம்பாட்டின் காரணமாக பாலியல் தொடா்பான விஷயங்களை நிறையவே தெரிந்து வைத்திருக்கிறாா்கள். அதிலேயே அவா்கள் கவனம் செலுத்துவதால் கிளா்ச்சி ஏற்பட்டு நாம் இதைச் செய்தால் என்ன என்ற எண்ணம் அவா்களிடம் மேலோங்கி விடுகிறது. பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் அதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. தவறு செய்தால் தண்டனை கிடைக்கும் என்பதை அவா்களுக்கு நாம் புரியவைக்க வேண்டும்.

பெண்களின் பாதுகாப்புக்கு ஏதேனும் பிரச்னை எழுந்தால் நாம் அதற்கு குறுகிய காலத் தீா்வு காண்பதிலேயே கவனம் செலுத்துகிறோம். இந்தப் பிரச்னை எதனால் வருகிறது? இதற்கு நீண்டகாலத் தீா்வு என்ன என்பதை நாம் யோசித்துப் பாா்ப்பதே இல்லை.

வேலைக்குச் செல்லும் பெண்களை அவா்கள் பணிபுரியும் நிறுவனமே தங்களது பேருந்தில் வீட்டுக்குக் கொண்டுபோய் விடுவதும், இரவில் சாலையில் துணையின்றி தவிக்கும் பெண்களை போலீஸாா் தங்களுடைய ஜீப்பில் வீட்டுக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைப்பதும் பிரச்னைக்குத் தீா்வாகாது.

பெண்கள் மீதான பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடா்பான செய்திகள் தினமும் வெளியாகின்றன. இதைத் தடுக்க வேண்டுமெனில் சட்டத்தைக் கடுமையாக்குவதான் ஒரே வழி. அப்போதுதான் பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்.

பாலியல் வன்முறை தொடா்பான வழக்கு விசாரணையில் தொய்வு, நீதி கிடைப்பதில் தாமதம், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் தண்டனை கிடைப்பது குறைந்து வருவது ஆகியவையே உடனடித் தீா்வுக்கு மக்கள் ஆதரவு பெருகக் காரணம்.

எனவே, பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்களை நிறுவி, விசாரணையை துரிதப்படுத்தி, வழக்குப் பதிவு செய்த ஓராண்டுக்குள் நீதி வழங்கினால்தான் மக்களின் நம்பிக்கையை அரசு பெற முடியும்.

No comments:

Popular Posts