Monday 30 December 2019

இயற்கை விவசாயத்தின் அடையாளம்!

ஆபத்தான ரசாயன உரங்களை எதிர்த்து ஆரோக்கியம் தரும் இயற்கை விவசாயத்தை நடைமுறை சாத்தியமாக்கி, தமிழகத்தில் இயற்கை வழி விவசாய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் நம்மாழ்வார்!

அடிமைப்பட்டும், சிதறுண்டும் கிடந்த இந்தியாவை ஒன்றுபடுத்தி, விடுதலைக்கு வித்திட்ட ஒரு காந்தியைப் போல, மடமை போர்த்தியிருந்த தமிழ்ச்சமூகத்திற்கு பகுத்தறிவு பாய்ச்ச வந்த பெரியாரைப் போல விஷமாகிப் போன வேளாண் சமூகத்தை மீட்டெடுக்க வந்த இயற்கை வேளாண்மை வித்தகர் தான் நம்மாழ்வார்!

1938-ல் தஞ்சை திருக்காட்டுப் பள்ளி அருகே இளங்காடு கிராமத்தில் பிறந்து 2013 டிசம்பர் 30 வரை நம்மாழ்வார் வாழ்ந்த அந்த இடைப்பட்ட 75 ஆண்டுகாலம் தான் இந்தியாவின் விவசாயத் துறையில் வரலாறு காணாத விபத்துகள் அரங்கேறிய காலகட்டம்!

அதாவது பாரம்பரிய விவசாயம் ‘பாய்சன்’ விவசாயமான காலகட்டம்!

பசுமைபுரட்சி ஏற்படுத்திய எதிர்வினைகளால் இந்தியாவில் சுமார் ஐந்து லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட காலகட்டம்!

ஆண்டாண்டுகாலமாக அரசுகளுக்கே அட்சயபாத்திரமாக வரி கொடுத்து வாழவைத்த வேளாண் சமூகம், பிச்சைப்பாத்திரம் ஏந்தி கடன் என்றும், மானியம் என்றும் கதறிய காலகட்டம்!

இந்த இழிவான சூழலை வெறுமனே வேடிக்கை பார்க்கும் பார்வையாளனாக இருக்க நான் பிறக்கவில்லை என்று தனக்குத் தானே சூளுரைத்துக் கொண்ட நம்மாழ்வார், கோவில்பட்டி மண்டல வேளாண் ஆராய்ச்சி மையத்தின் மேலாளர் பதவியைத் துறந்து விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு காண களம் கண்ட ஆண்டு 1969 ! அன்று தொடங்கி ஒரு தேசாந்திரியாக நாடெங்கும் பயணப்பட்டு இயற்கை வேளாண்மை பற்றிய களப்பயிற்சி, கருத்தரங்கம், போராட்டங்கள்...என்று சுற்றிச்சுழண்டவர் நம்மாழ்வார்.

தமிழ்நாட்டில் அவர் கால்படாத கிராமங்கள் அரிதினும் அரிது! அவருக்கு தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டத்தில் என்னென்ன பயிர்கள் விளையும், எந்தெந்த இடத்தில் ஏரி, குளங்கள் அணைக்கட்டுகள் உள்ளன..என எல்லாம் அத்துபடி!

நம்பிக்கையை விதைத்தார்

‘’இயற்கை விவசாயம் என்பது சாத்தியமே இல்லை, அதில் விளைச்சல் கிடைக்காது, நஷ்டம் தான் ஏற்படும்...’’ என்று விவசாயிகளின் பொது புத்தியில் படிந்திருந்த நம்பிக்கையை பொடிப்பொடியாகத் தகர்த்ததில் தான் நம்மாழ்வார் அனைவராலும் வியந்து பார்க்கப்பட்டார். ‘’இயற்கை விவசாயம் செலவில்லாதது, பாரம்பரிய விதைகளே பாதுகாப்பானது, அதில் கிடைக்கும் உணவே சத்தானது, இயற்கை தரும் கொடைக்கு மேலாக வேறுயாரும், எவரும் நமக்கு ஒரு போதும் தந்துவிட முடியாது! இயற்கையை அழித்துப் பெறும் எதுவுமே ஆரோக்கியமற்றது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட..!’’ என இடைவிடாது பிரசாரம் செய்து வந்தார் நம்மாழ்வார்!

‘இந்தியாவில் ஆண்டுக்கு 500 லட்சம் டன் ரசாயன உரங்கள் நிலத்தில் கொட்டப்படுகிறது...! இதனால், கடந்த ஐம்பது ஆண்டுகளில் நமது நிலத்தின் மூன்றில் ஒரு பங்கு மலடாகிவிட்டது. அது போல பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி என கொடிய நச்சுமருந்துகள் லட்சக்கணக்கான டன்கள் பயிர்களில் தெளிக்கப்படுகின்றன..! இதனால் நாம் உண்ணும் உணவே நஞ்சாகிவிடுகிறது..! இதை சாப்பிடுவதால் நாம் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம்... இந்த நச்சு சூழலில் இருந்து நாம் விடுபட வழியே இல்லையா...?’ என்று தவியாய் தவித்த விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்தன நம்மாழ்வாரின் பயிற்சி வகுப்புகள்!

பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கு அவர் பயிற்சியளித்தார்.பயிற்சி பெற்றவர்கள் வெற்றிகரமான விவசாயிகளாக வலம் வந்து, நஷ்டத்திலிருந்தும், கஷ்டத்தில் இருந்தும் விடுபட்டு, மிக லாபகரமான தொழிலாக விவசாயத்தை மாற்றிக் காட்டினார்கள். கேளம்பாக்கம் ரங்கநாதன், அறச்சலூர் செல்வம், மதுராந்தகம் ஜெயச்சந்திரன், திருக்கழுக்குன்றம் தெய்வசிகாமணி, பசுமை நாயகன் உமாநாத்..என்று பட்டியல் போட்டால் பக்கங்கள் போதாது! நம்மாழ்வாரின் பயிற்சியில் பங்கெடுத்த ஏராளமான இளைஞர்கள், குறிப்பாக தகவல் தொழில்நுட்ப துறையில் லட்சக்கணக்கில் சம்பாதித்த இளைஞர்கள் தங்கள் வேலையைத் துறந்து இயற்கை விவசாயத்தில் களம் கண்டு சாதித்துக்காட்டினார்கள்! தமிழகம் முழுமையும் ஆயிரக்கணக்கில் ‘ஆர்கானிக் ஷாப்’ என்ற இயற்கை அங்காடிகள் தொடங்கப்பட்டு இன்று வெற்றிகரமாக இயங்குவதற்கு நம்மாழ்வாரே மூலகாரணம்!

‘‘சத்து மிகுந்த பாரம்பரிய நெல் ரகங்களை நாம் தொலைத்துவிட்டோம். அதை தேடி சேகரித்து மீண்டும் பாரம்பரிய விவசாயத்தை தழைக்க செய்ய வேண்டும்..’’ என்று திருத்துறைப்பூண்டி ஜெயராமனுக்கு பயிற்சியளித்தார். அவருக்கு ஒரு நல்ல குழுவையும் உருவாக்கித் தந்து ஆண்டுக்காண்டு நெல் திருவிழாவை சிறப்பாக நடத்த ஊக்கப்படுத்தினார்! இதனால் தொலைந்து போன 168 பாரம்பரிய நெல்ரகங்கள் கிடைத்தது. இதனால் திருத்துறைப்பூண்டி ஜெயராமனுக்கு ‘நெல்’ ஜெயராமன் என்ற பெயர் வந்தது.

நம்மாழ்வார் கரூர் மாவட்டம் வானகம் என்ற இடத்தில் ஒரு மாதிரி பயிற்சி பண்ணையை உருவாக்கி பயிற்சி தந்ததோடு நிற்கவில்லை.சுமார் 250-க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களோடு தன்னை இணைத்துக் கொண்டு இடையுறாது களப்பணிகள் செய்தார்.

சிறுதானியங்கள் குறித்த சிறப்பான விழிப்புணர்வு இன்று கிடைத்திருக்கிறது என்றால், அதற்கு வித்திட்டவர் நம்மாழ்வார் தான்! பஞ்சகவ்யா, அமிர்த கரைசல், தேமோர் கரைசல்..போன்ற இயற்கை உரங்கள் குறித்த புரிதலை தமிழகம் முழுமையும் உருவாக்கியதில் ஆழ்வாருக்கு முக்கிய பங்குண்டு! இயற்கை வேளாண்மை குறித்து 15 புத்தகங்கள் எழுதியுள்ளார். நம்மாழ்வாரின் தொண்டை பாராட்டி திண்டுக்கல் காந்தி கிராமிய பல்கலைக்கழகம் அவருக்கு 2007-ல் கவுரவ டாக்டர் பட்டம் தந்தது!

இயற்கை விவசாயத்தை பரப்ப, பாரம்பரிய பயிர்களின் சிறப்பை குறிப்பாக பனை விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்த நம்மாழ்வார் அவ்வப்போது நீண்ட பாதயாத்திரை பயணங்கள் மேற்கொண்டார். மரபணு மாற்றப்பட்ட விதைகள் ஆபத்தானவை, அதில் விளையும் உணவுப்பொருட்கள் ஆபத்தானவை என்று இடையுறாது பிரசாரம் செய்தார்.விவசாய நிலத்தை சூழலை கெடுக்கும் தொழிற்சாலைகளுக்கு கொடுக்க கூடாது என்று அவர் போராடினார்.

பன்னாட்டு நிறுவனம் ஒன்று நமது நாட்டு வேப்பமரத்திற்கு காப்புரிமை பெற்றுவிட்ட செய்தி அறிந்து கொந்தளித்துப் போன நம்மாழ்வார் அதற்காக ஜெர்மன் நீதிமன்றம் சென்று வாதாடி வேம்பின் உரிமையை (மே-9, 2000) இந்தியாவிற்கு பெற்றுத் தந்தார். சுனாமி பாதித்த நாகப்பட்டினம் மாவட்டம் மீண்டும் புத்துயிர் பெற அரும்பாடுபட்டு உழைத்தார். தமிழகம் மட்டுமின்றி மற்ற இந்திய மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் செய்து பேசியும், களப்பணிகள், பயிற்சிகள் தந்துள்ளார்.

கேரளா இன்று இயற்கை வேளாண்மையில் சிறந்தோங்க வித்திட்டது கேரளாவில் 2007-ம் ஆண்டு அப்போதைய கேரள முதல்-மந்திரி அச்சுதானந்தன் கலந்து கொண்ட விழாவில் நம்மாழ்வார் பேசிய பேச்சு தான். கர்நாடகா, ஆந்திரா விவசாயிகளுக்கும் அங்கு சென்று பயிற்சி தந்துள்ளார். இந்தோனேசிய விவசாயிகளுக்கு பயிற்சி தந்து அங்கு 30 மாதிரி பயிற்சி பண்ணைகள் உருவாக வித்திட்டார்.

தனது ஐம்பதாண்டுக்கும் மேலான விவசாய தொண்டின் மூலமாக நம்மாழ்வார் தற்போது தமிழக இயற்கை விவசாயத்தின் ஒரு அடையாளச் சின்னமாகவே நிலைத்துவிட்டார்!

No comments:

Popular Posts