Friday 20 December 2019

இந்தியன் நெ.1- விண்ணை அளந்த ராகேஷ் ஷர்மா!

அனைத்துத் துறைகளிலும் சாதித்த இந்தியர்கள் ஏராளம் இருக்கிறார்கள். அப்படி அனைத்திலும் முதலாவதாக சாதனை புரிந்த நெ.1 சரித்திர நாயகர்களைப் பற்றி பேசும் தொடர் இது.

இந்தியாவுக்குப் பல சோதனைகளைக் கொடுத்த ஆண்டு என்று 1984-ம் ஆண்டைச் சொல்லலாம். காலிஸ்தான் பிரச்சினை, போபால் விஷவாயு மரணங்கள், இந்திரா காந்தியின் படுகொலை, சீக்கியர்கள் மீதான தாக்குதல், ஒலிம்பிக் போட்டியில் பி.டி.உஷா நூலிழையில் பதக்கத்தை நழுவ விட்டது என்று இந்தியாவை சோகத்தில் ஆழ்த்திய பல சம்பவங்கள் இந்த ஆண்டில்தான் நடந்தன. ஆனால், அதே ஆண்டுதான் விண்வெளித் துறையில் இந்தியாவுக்கு சாதனை ஆண்டாக அமைந்தது. இந்த ஆண்டில்தான் ரஷ்ய ராக்கெட்டின் உதவியுடன் இந்திய விண்வெளி வீரரான ராகேஷ் ஷர்மா, விண்வெளியில் தடம் பதித்த முதல் இந்தியன் என்ற சாதனையைப் படைத்தார்.

தனது ஆட்சிக் காலத்துக்குள் இந்தியர் ஒருவரை எப்படியாவது விண்வெளிக்கு அனுப்பியாக வேண்டும் என்பது மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நீண்ட நாள் ஆசை. ஒரு கட்டத்தில் இந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ள இந்தியாவின் நீண்ட நாள் தோழர்களான சோவியத் யூனியனின் உதவியை நாடினார்.

இந்தியாவுக்கு உதவ முன்வந்த சோவியத் யூனியன் அரசு, இந்தியாவின் சார்பில் விண்வெளிக்கு அனுப்ப விரும்பும் வீரரைத் தேர்ந்தெடுக்குமாறு அறிவுறுத்தியது. விண்வெளிக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கலாம். ஆனால், அதற்கான தகுதிகள் எல்லோருக்கும் இருக்காது அல்லவா? அதனால் இந்தியாவின் சார்பில் முதன்முதலாக விண்வெளிக்குச் செல்லும் மனிதரைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் இந்திய அரசு இறங்கியது. முதல் கட்டமாக, அதிவேகமாகச் செல்லும் போர் விமானங்களை ஓட்டக்கூடிய 50 விமானப்படை வீரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பயிற்சி அளித்தது. இந்தப் பயிற்சி 1982-ம் ஆண்டில் தொடங்கியது.

பெங்களூருவில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் வைத்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் 50 வீரர்களுக்கும் பலவிதமான சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் முக்கியமானதாக 24 மணி நேரமும் செயற்கை வெளிச்சம் இருந்துகொண்டே இருக்கும் அறைக்குள் 3 நாட்கள் ஒவ்வொரு வீரரும் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டனர். இந்தக் காலகட்டத்தில் அவர்கள் மனவலிமை மிக்கவர்களாக இருக்கிறார்களா என்று பரிசோதித்துப் பார்க்கப்பட்டது. இப்படிப் பல்வேறு கட்ட சோதனைக்குப் பிறகு அந்த 50 வீரர்களில் இருந்து ராகேஷ் ஷர்மா, ரவிஷ் மல்ஹோத்ரா ஆகிய 2 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் இருவரில் ஒருவரை விண்வெளிக்கு அனுப்பலாம் என்று சிபாரிசு செய்து அடுத்தகட்ட பயிற்சிக்காக ரஷ்யாவுக்கு அனுப்பிவைத்தது இந்திய அரசு.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 70 கிலோமீட்டர் தள்ளியுள்ள பயிற்சி மையத்தில் இந்தியாவின் இரு வீரர்களுக்கும் அடுத்தகட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன. குறிப்பாக, இந்த விண்வெளிப் பயணத்தில் உடன் செல்லும் மற்ற ரஷ்ய வீரர்களுடன் பேசுவதற்காக அந்நாட்டு மொழி கற்றுக்கொடுக்கப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் ரஷ்ய மொழியைக் கற்றுக்கொள்வதற்காக மட்டும் ராகேஷ் ஷர்மாவும், அவரது நண்பரும் ஒவ்வொரு நாளும் 7 மணி நேரத்தை செலவழிக்க வேண்டியிருந்தது. இந்தப் பயிற்சிக்குப் பிறகு, உணவுக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்தப் பயிற்சிகளின் இறுதியில் இருவரில் சிறப்பாகச் செயல்பட்ட ராகேஷ் ஷர்மா, இந்தியாவின் சார்பில் விண்வெளிக்குச் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1984-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி விண்ணில் பாய்ந்து சென்ற சோயுஸ் டி-11 (Soyuz T-11) ராக்கெட்டில் யூரி மலிஷே, கென்னடி ஸ்டிரெகாலோவ் ஆகிய 2 சோவியத் விண்வெளி வீரர்களுடன் இணைந்து விண்வெளிக்குப் பறந்து சென்றார் ராகேஷ் ஷர்மா. ஏப்ரல் 2-ம் தேதியில் இருந்து 7 நாட்கள் 21 மணி நேரம் மற்றும் 40 நிமிடங்கள் விண்வெளியில் தங்கினார் ராகேஷ் சர்மா. அவர் விண்வெளியில் தங்கியிருந்த அத்தனை மணித்துளிகளும், இந்தியர்களுக்குப் பெரும் கொண்டாட்டமாய் அமைந்ததை மறக்க முடியாது.

இந்த விண்வெளிப் பயணத்தைப் பற்றி நினைவுகூரும் ராகேஷ் ஷர்மா, “விண்வெளிக்குச் செல்வதற்கான பயிற்சியின்போது, அது சவால் மிகுந்ததாக இருக்கும் என்று என்னிடம் பலரும் கூறியிருந்தனர். ஆனால், எனக்கு அத்தனை கடினமாக இருக்கவில்லை” என்கிறார்.

இந்த விண்வெளிப் பயணத்தின்போது தனது குடும்பத்தினருடனும், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியுடனும் காணொலியில் பேசினார் ராகேஷ் ஷர்மா. அப்போது இந்திரா காந்தி, “விண்ணில் இருந்து பார்க்கும்போது இந்தியா எப்படி இருக்கிறது?” என்று ராகேஷ் ஷர்மாவிடம் கேட்டார். அதற்கு ராகேஷ் ஷர்மா “மற்ற நாடுகளை விட மிகவும் அழகாக இருக்கிறது” என்று கூறியது பற்றித்தான் இந்தியாவில் அப்போது பலரும் பேசிக்கொண்டனர்.

இதுபற்றி கூறும் ராகேஷ் ஷர்மா, “நான் அன்றைய தினம் பிரதமரிடம் இந்த வார்த்தைகளை அலங்காரத்துக்காகச் சொல்லவில்லை. நிஜமாகவே இந்தியாவின் புவியியல் அமைப்பானது மற்ற நாடுகளை விடவும் மிக அழகாக இருந்தது. மூன்று புறமும் கடல்கள், பசுமையான வயல்வெளிகள், நீண்ட ஆற்றுப்படுகைகள், பனிமலைகள் என்று இந்தியாவில் இல்லாத விஷயங்களே இல்லை” என்கிறார்.

முதல் இந்தியனாக விண்வெளிக்குச் சென்ற ராகேஷ் ஷர்மாவுக்கு மீண்டும் ஒருமுறை விண்வெளிக்குச் செல்லும் கனவு இருக்கிறது. இதுபற்றி கூறும் அவர், “முதல் முறை சென்றபோது பல்வேறு பணிகளைச் செய்யவேண்டி இருந்ததால் விண்வெளியை முழுமையாக ரசிக்க முடியவில்லை. அதனால் அடுத்த முறை ஒரு சுற்றுலா பயணியாக நிலவுக்குச் செல்ல விரும்புகிறேன்” என்கிறார்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலாவில் 1949-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதி ராகேஷ் ஷர்மா பிறந்தார். பின்னர் இவரது குடும்பம் ஹைதராபாத்துக்குக் குடிபெயர, அங்குள்ள புனித ஜார்ஜ் பள்ளியில் படித்தார். அதன்பின் தேசிய ராணுவப் பள்ளியில் சேர்ந்து படித்த இவர், 1970-ல் இந்திய விமானப் படையில் பயிற்சி விமானியாகப் பணியாற்றினார். 1984-ம் ஆண்டில் விமானப் படைப்பிரிவின் ஒரு குழுவுக்குத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். விண்வெளிக்குச் சென்ற இந்தியாவின் முதல் நபர், உலகின் 128-வது நபர் என்ற பெருமைகளைக் கொண்ட ராகேஷ் ஷர்மா. அசோக் சக்ரா, ஹீரோ ஆஃப் சோவியத் யூனியன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளார்.

No comments:

Popular Posts