Thursday 24 January 2019

தொட்டில் தேவதைகளை கொண்டாடுவோம்...!

தொட்டில் தேவதைகளை கொண்டாடுவோம்...! வே.வனிதா, டி.ஐ.ஜி, வேலூர் சரகம். இ ன்று (ஜனவரி 24-ந் தேதி) தேசிய பெண் குழந்தைகள் தினம். மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா என்றார் கவிமணி. ஆண்டுதோறும் அடுக்கடுக்காக பல ‘தினங்கள்’ கொண்டாடப்பட்டு வந்தாலும், இதில் கவனிக்கத் தகுந்த தினமாக ஜனவரி 24-ந் தேதி தேசிய பெண்குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. பெண்களைத் தாயாக, சகோதரியாக, அதற்கும் ஒருபடி மேலே போய்த் தெய்வமாகப் பார்க்கப் பண்படுத்தப்பட்ட சமூகம் நம்முடையது. ஆனால் இன்று பெண் குழந்தை என்றாலே முகம் சுழிக்கும் நிலை.கருவிலேயே பெண் குழந்தை என்று தெரிய வந்தால் அந்த பச்சிளம் கருவை கலைக்கும் படு பாதக சம்பவங்களும் அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன. இந்த இழி நிலையை மாற்ற வேண்டும் என்று சட்டங்கள் மூலம் தடுக்கப்பட்டு வந்தாலும் மூடத்தனமும், மூர்க்க குணமும் மாறியதாக தெரியவில்லை. எங்கே தடம் புரண்டோம்? எதனால் தடம் புரண்டோம் என்பதை ஒவ்வொரு மனிதனும் சிந்தித்துப்பார்க்க வேண்டிய நேரம் இது.தமிழ்நாட்டில், மூட நம்பிக்கைகளைக் களைந்த தந்தை பெரியார் போட்ட பாதையில் பீடுநடைபோடுகிற பெண்கள் ஆண்களோடு ஒப்பிடுகையில் (ஆண்கள் 86.81 சதவீதம்) 73.86 சதவீதமெனில் ஏனைய மாநிலங்களைப்பற்றிக் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளில் பெண்களுக்காக இயற்றப்பட்ட சட்டங்கள்தான் எத்தனை? குழந்தை திருமண தடைச்சட்டம், சிறப்பு திருமண சட்டம், மண கொடை அல்லது வரதட்சணை தடைச்சட்டம், இந்திய விவாகரத்து சட்டம்-மகப்பேறு நன்மைகள் சட்டம், கருவுற்றிருத்தலை மருத்துவ முறையில் கலைப்பதற்கான தடுப்பு சட்டம், பணியிடங்களில் பெண்களை பாலியல் வன்கொடுமையில் இருந்து காக்கும் சட்டம், மகளிர் தம்மை இழிவுபடுத்தி காட்டுவதை (தடையுறுத்தும்) சட்டம், தேசிய பெண்கள் ஆணைய சட்டம், சமமான பணி ஊதிய சட்டம்-இத்தனை சட்டங்களுக்குமான தேவை இருப்பதே பெண் குழந்தைகளின் மீதான மக்களின் கவனத்தை அதிகரிக்கச் செய்கிறது இல்லையா? பெண் இன்றளவும் மண்ணோடும் பொன்னோடும் சேர்ந்த போகப் பொருளாகப் பார்க்கப்படுகிறாள் எனில் நம் சமூகம் கல்வியறிவு பெற்றதனால் பயன் என்ன? ஒரு வீட்டில் ஆணும் பெண்ணும் வளர்க்கப்படுகையில் ஆணுக்கான முக்கியத்துவம் இன்றும் அதே அளவுதான் உள்ளது. தரமான கல்வி உள்பட எவ்வளவுதான் பெண்கள் படித்து முன்னேறினாலும் கூட மிக எளிதாக அவளது வளர்ச்சியைக் கொச்சைப்படுத்த முடிகிற சமூகம் இன்னும் தேவையா? என்று ஒவ்வொருவரும் உணர வேண்டும். பாரதி சொல்வான், “கற்பு நெறியென்று சொல்லவந்தால் இருகட்சிக்கும் அது பொதுவில் வைப்போம்” என்று. ஒழுக்க நெறிஎன்பது ஆண்,பெண் இருபாலருக்கும் முக்கியம். பெண்ணைத் தெய்வமாக்க வேண்டியதில்லை. சக மனுஷியாகப் பார்க்கும் பார்வையை ஆண்கள் பெற வேண்டும். குழந்தைத் திருமணங்கள் இன்றளவும் கூட நடை பெறுவதைச் சட்டம் போட்டே தடுத்துக் கொண்டிருக்கிறோம். மாற்றம் மனதில் வர வேண்டும். பெண் மீதான பாலியல் வன் கொடுமைகள் கட்டவிழ்க்கப்படுவதில் ஊடகங்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆக்கப் பூர்வமான செயல்களுக்கு உதவுவதைவிட பெண்ணை நுகர்வுப் பண்டமாக மாற்றுவதற்கே அதிகம் பயன்படுத்தப்படுவது வேதனையான உண்மை. எதற்காக இத்தினம் 2008 ஜனவரி 24-ல் இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா? பெண் குழந்தைகளுக்கு சம வாய்ப்பும், அங்கீகாரமும் கிடைக்கப்பெறுவதற்கு. அப்படியென்றால் இதுவரை அப்படி இல்லையா? என்று கேட்டால் “இல்லை” என்பதே பதிலாக இருக்கும். இது வருந்தத்தக்க உண்மை. எட்டும் அறிவினில் ஆணுக்கு பெண்கள் இளைப்பில்லை என்று அனைத்து துறையிலும் கொடிகட்டி பறக்கின்றனர். பெண் குழந்தைகள் உறவுகளின் மூல உற்று. இல்லறத் தேரின் அச்சாணி. தொட்டில் தேவதைகள். அவர்களை போற்றி கொண்டாடவேண்டும். பெண் நுகர்வுப் பண்டமாக மட்டுமே பார்க்கப்பட்டால் அது எந்தக் காலத்திலும் மாறாது என்பதைக் கருத்தில் கொண்டு அவளைத் தோழியாக, மனைவியாகத், தாயாக, சுருங்கச் சொல்வதெனில் சக மனுஷியாக பார்க்கக் கற்றுக்கொள்வோம். கற்றுக் கொடுப்போம். பெண் ஓர் ஆணிடம் வேண்டுவது வேறெதையும் அல்ல. மரியாதையை மட்டுமே.

No comments:

Popular Posts