குழந்தைகளின் அசுர இயக்கமும், கவன குறைபாடும்...!
கலையரசி, சிறப்பு பயிற்சியாளர்.
ஒ ரு மனிதனின் வாழ்வை அழகுறச் செய்வது குழந்தைகள்தான். வீட்டில் சுட்டித்தனத்துடன் ஓடிவரும் குழந்தைகளை பார்க்கும்போது நமது மனதில் உள்ள துன்பங்கள் அனைத்தும் சிதறி ஓடிவிடும். குழந்தைகளிடையே கவனப்பற்றாக்குறை மற்றும் மிகை இயக்க செயல்பாடு பொதுவாக காணப்பட்டு வருகிறது. இது நரம்பியலில் ஏற்படும் ஒருவித வளர்ச்சி குறைபாடு ஆகும்.
இந்த வகையுடைய ஒரு சில குழந்தைகள் வயதுக்கு மீறிய துறுதுறுப்புடனும், உத்வேகத்துடனும் இருப்பார்கள். மிகுதியான இயக்கமும், உணர்ச்சி வேகமும் இவர்களிடம் அதிகமாக காணப்படும். சில குழந்தைகள் எதிலும் ஆர்வம் இல்லாமல் மந்தமாகவே செயல்படுவார்கள். இந்த வகை குழந்தைகளை சமாளிப்பது பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மிகுந்த சவால் மிக்க ஒன்றாகும்.
நமது நாட்டில் தற்போதைய நிலவரப்படி 11.32 சதவீத தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இந்த குறைபாடு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிலும் பெண் குழந்தைகளைவிட, ஆண் குழந்தைகள் 3 மடங்கு அதிகம் இந்த குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இக்குறைபாட்டிற்கான அறிகுறிகள் ஏழு வயதிற்குள் தென்படத் தொடங்குகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் கென்னடி, மைக்கேல் ஜார்டான், அறிவியல் அறிஞர் ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் போன்ற பிரபலமானவர்கள் இந்த வகை குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள். குழந்தைகளுக்கு பின்வரும் அறிகுறிகள் தென்படும். இந்த வகை குழந்தைகள் படிப்பிலோ அல்லது வேறு எந்த வேலையிலோ ஈடுபடும்போது கவனத்தை தக்க வைத்துக்கொள்ள சிரமப்படுவார்கள். ஆசிரியர்கள், பெற்றோர்கள் நேரடியாகப் பேசும்போது காது கொடுத்து கேட்க மாட்டார்கள், படிப்பில் ஈடுபாடு இல்லாமல் இருப்பார்கள், தனது உடைமைகளை பத்திரப்படுத்தாமல் மறந்து எங்கேயாவது விட்டுவிடுவார்கள், ஒரு வேலையை செய்து கொண்டிருக்கும்போதே, மற்றொரு வேலையின் மேல் இவர்கள் எண்ணம் செல்லும், ஒரு இடத்தில் அமைதியாய் உட்காரமாட்டார்கள், திடீரென்று எழுந்து ஓடுவார்கள், மேசை, நாற்காலி மீது ஏறிக்கொண்டு இருப்பார்கள்.
இவர்களை வகுப்பறையில் ஒரு இடத்தில் உட்கார வைக்க முடியாது. அப்படி உட்கார வைக்கும்போது நெளிந்து கொண்டும், இருக்கையை விட்டு எழுந்தும், பிற ஒலிகளை எழுப்பிக் கொண்டும் இருப்பார்கள். இவர்களின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதும் மிகக் கடினம்.
ஒரு கேள்வியைக் கேட்டு முடிப்பதற்குள் அது சரியோ, தவறோ, உடனடியாக பதிலைக் கூறிவிடுவார்கள். சுயகட்டுப்பாடு இல்லாமல் எளிதில் தூண்டப்பட்டு சிந்திக்காமல் செயல்படுவார்கள்.
மரபணுக் கூறுகள், சுற்றுச்சூழல், மூளையின் செயல்பாடுகள் போன்றவை இந்த குறைபாட்டுக்கு காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. இந்த குறைபாடு உடைய குழந்தைகளை நாம் கவனிக்காமல் விட்டால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். இவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாததால் சமூகத்தில் பின்தங்க நேரிடும்.
இந்த குறைபாடு உடைய குழந்தைகளை எப்படி கையாள்வது? இதனை எப்படி சரிசெய்வது? என்பதை பார்ப்போம்.
இக்குறைபாடு உள்ள குழந்தைகளை பெற்றோர்கள் அடிக்காமல், கோபப்படாமல் நல்லப் பழக்கங்களைச் சொல்லிக் கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். இனிப்பு அவர்களின் துறுதுறுத்தன்மையை அதிகரிக்கும் என்பதால் பெரும்பாலும் இனிப்பு பலகாரங்களை தவிர்க்கவேண்டும். செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்பட்ட உணவு வகைகள், குளிர் பானங்கள் ஆகியவற்றையும் தவிர்த்தல் வேண்டும்.
இந்த வகை குழந்தைகளை கையாள்வதற்கு ஆசிரியருக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. ஆசிரியர்கள், பாதிக்கப்பட்ட குழந்தைகளை தங்களது அருகிலேயே அமர வைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் நற்செயல்களை பாராட்டி, பரிசு அளித்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அவர்கள் தவறு செய்தாலும் கோபப்படாமல் பக்குவமாய் எடுத்து சொல்ல வேண்டும்.
ஒரு வேலையை, செயலை அவர்களிடம் ஒப்படைக்கும்போது அவை குறித்த தகவல்களை, விதிமுறைகளை தெளிவாக எடுத்து சொல்ல வேண்டும், எந்த ஒரு வேலையையும் சிறு, சிறு செயல்களாகப் பிரித்தே இந்த வகை குழந்தைகளிடம் வழங்க வேண்டும். இந்த குழந்தைகளின் கவனத்தை திசை திருப்பும் செயல்களை செய்யக்கூடாது, இக்குறைப்பாடு உள்ள குழந்தையை, நன்றாக செயல்படும் குழந்தைகளின் அருகில் அமர வைப்பதன் மூலம் அவர்களின் தாழ்வு மனப்பான்மையை குறைக்கலாம்.
இந்த வகை குழந்தைகளுக்கு சிறு, சிறு பயிற்சிகள் கொடுக்கலாம். சிறு துவாரங்கள் இருக்கின்ற மணிகளை கோர்க்கும்படி செய்தல், வரைபடங்களில் உள்ள கோடுகளின் மீது வரையும் பயிற்சி, படங்களின் எல்லைக்குள் வர்ணம் தீட்ட செய்தல், ஊஞ்சலில் மெதுவாக ஆடும்படி கூறுதல், நீச்சல் பயிற்சி, காலில் சக்கரம் கட்டிக்கொண்டு செல்லும் பயிற்சி போன்ற பயிற்சிகளை இந்த குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கலாம்.
இந்த குறைபாட்டிற்கான அறிகுறிகள் தென்படும் குழந்தைகளை உளவியல் நிபுணர் அல்லது குழந்தைகள் நல மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்ய வேண்டும். அதன்பின்னரே அவர்கள் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
குழந்தைகள் தான் நமது உலகம். அவர்களின் எதிர்காலத்தை சிறந்த ஒளிமயமாக்க வேண்டிய பொறுப்பு நமது கையில்தான் உள்ளது. எனவே ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் அணுகுமுறையாலும், அரவணைப்பாலும் இத்தகைய குறைபாடு உள்ள குழந்தைகளின் வாழக்கையில் ஒளி ஏற்ற வேண்டும். இத்தகைய குறைபாட்டைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு பொதுமக்களிடம் வளர வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment