Monday 1 October 2018

காந்தி கண்ட கனவை நனவாக்குவோம்!

காந்தி கண்ட கனவை நனவாக்குவோம்! மகாத்மா காந்தியுடன் வி.கல்யாணம் (பழைய படம்) வி.கல்யாணம், காந்தியடிகளின் தனிச் செயலாளர் நாளை (அக்டோபர் 2-ந்தேதி) மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள். காந்தி அடிகளின் 150-வது ஜெயந்தியை கொண்டாட மத்திய, மாநில அரசுகள் தயாராகி வருகின்றன. அது வரவேற்க வேண்டிய ஒன்று தான். ஆனால் இந்தியாவை பற்றிய அவரது கனவு நனவாகியதா? என்பது தான் மிகப் பெரிய கேள்வி. ஒரு பெண் கழுத்தில் நகை அணிந்து கொண்டு நள்ளிரவில் தன்னந்தனியாக, நிம்மதியாக நடந்து செல்லும் நிலை எப்போது வருகிறதோ அப்போது தான் இந்த நாட்டுக்கு உண்மையான விடுதலை என்றார், காந்திஅடிகள். மது அருந்துதல், புகைபிடித்தல், தீண்டாமை, லாட்டரி, சூதாட்டம், மனித உரிமை மீறல், அரிஜன பாகுபாடு ஆகிய பழக்க, வழக்கங்களை மக்களிடமிருந்து அகற்ற வேண்டும் என்றார். ஒருமுறை ஆங்கிலேயே பெண் போர்க்ஒயிட், காந்தியிடம், ‘நீங்கள் 120 வயது வரை வாழ்வேன் என்றீர்களே. அது எப்படி என்று கேட்டதற்கு ஆமாம் அது உண்மைதான். ஆனால் அதை தற்போது மாற்றிக் கொண்டேன். நடக்கிற நிகழ்வுகளை எல்லாம் பார்க்கும் போது மரணிப்பதே மேல் என்றே கருதுகிறேன்’ என்று அப்போதே அவரின் அதிருப்தியை வெளிப் படுத்தினார். அதுதான் அவருடைய கடைசி பேட்டி. நான்கு வகையான பிரசித்தி பெற்ற போராட்டங்களை காந்தி நடத்தினார். 1919-ல் ரவுலட் சட்டத்துக்கு எதிராக நடத்தியது தான் முதல் போராட்டம். 1921-ல் ஒத்துழையாமை இயக்கம். 1930-ல் தண்டியாத்திரை, 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய போராட்டங்கள் காந்தியின் பின் இந்திய மக்கள் அணிதிரள வழிவகுத்தது. இந்திய பிரிவினையின் போது என் சடலத்தின் மீது தான் இந்த தேசம் பிளவுபடும் என்றார். காங்கிரசை கலைத்து விட்டு, ‘லோக் சேவக் சங்க்’ என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதில் அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து புதிய தேசத்தை கட்டமைக்க வேண்டும் என்று முழங்கினார். ஆங்கிலேய ஆட்சியில் அதிக சம்பளம் தருகிறார்கள். இனி நாம் அமைக்கும் ஆட்சியில் எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு சம்பளத்தை குறைக்க வேண்டும். நம் நாடு ஏழை மக்களை அதிகம் கொண்ட நாடு. இதை கட்டமைக்க மக்கள் சேவகர்கள் அதிக சம்பளம் பெறலாகாது என்றார். சேவை மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு, தங்கள் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்குத் தான் மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்த வேண்டும். அதிக சம்பளம் வாங்கும் பேராசை மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தினார். இந்தியா கிராமங்களில் தான் வாழ்கிறது. நகர்புறங்களில் உள்ள அனைத்து வசதிகளும் கிராம மக்களுக்கும் கிடைக்க வேண்டும். அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரும் மக்களுக்கு முன்னோடிகளாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்றார். நாட்டின் பிரதமராக ஒரு விவசாய குடிமகனை அமர வைக்க வேண்டும். அவருக்கு செயலாளராக நேரு போன்றவர்களை அமர்த்த வேண்டும். உலக மக்கள் அமைதியோடும், அன்போடும் வாழ வாழ்வியல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார். காந்தி காங்கிரசில் சேர்ந்தார் என்பதை விட காங்கிரஸ் காந்தியுடன் சேர்ந்துகொண்டது என்பதுதான் சரியானது. நாடு விடுதலை அடைந்த அன்று நவகாளியில் நாங்கள் காந்தியுடன் தான் இருந்தோம். இந்து, முஸ்லிம் கலவரம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தார். ராட்டை நூற்றார். நேரு, பட்டேல் அழைத்தும் சுதந்திரதின விழாவில் பங்கேற்க மறுத்து, இந்து-முஸ்லிம் ஒற்றுமை தான் எனக்கு முக்கியம். சுதந்திரம் எனக்கு முக்கியமல்ல என்று வரமறுத்து விட்டார். 1947-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந்தேதி தான் நாங்கள் டெல்லி வந்தோம். ஒரு முறை நோபல் பரிசு பெற்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் டெல்லியில் காந்தியை சந்தித்த பின் ரத்தமும், சதையும் கொண்ட இப்படி ஒரு மனிதர் நம்மிடையே வாழ்ந்தார் என வரும் தலைமுறை நிச்சயம் நம்ப மறுக்கும் என்றார். காந்தி தன் வாழ்நாளில் ஒரு முறை கூட விமானத்தில் சென்றதில்லை. ஏன் விமானத்தை பார்த்ததேயில்லை. அவரிடம் ஒருமுறை லேடி மவுன்ட் பேட்டன், நீங்கள் நீண்டதூரம் செல்லும்போது விமானத்தை ஏன் பயன்படுத்தக் கூடாது? என்று கேட்டதற்கு, ‘நான் விமானத்தில் பறந்து கொண்டிருந்தால் மக்களை பார்க்க முடியாது’ என்று காந்தி கூறினார். காந்தி படுகொலை செய்யப்பட்டதை அறிந்த உடன் நேரு அதிர்ந்து போனார். தழுதழுத்த குரலில் வானொலியில் பேசினார். நமது வாழ்வின் ஒளி விளக்கு அணைந்து விட்டது. தேசத் தந்தை மறைந்து விட்டார். ஆறுதல் அடைவதற்கோ, ஆலோசனைகள் பெறுவதற்கோ இனி அவரிடம் போக முடியாது என்றார். உலகம் முழுவதும் செய்தி பரவியது. நடந்து கொண்டிருந்த ஐ.நா. சபை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. உலகின் பல நாட்டு கொடிகள் அரைக்கம்பத்தில் பரந்தன. அளவுக்கு மீறி நல்லவராக இருப்பதும் கூட ஒரு வகையில் கொடியது தானோ? என எண்ணத் தோன்றுகிறது என்றார் பேரறிஞர் ஜார்ஜ் பெர்னாட்ஷா. காந்தியை நான் பார்த்ததில்லை. இந்தியாவுக்கு நான் சென்றதில்லை. காந்தியை பற்றி நான் படித்திருந்தேன். அவரது மரணத்தால் என் வீட்டில் யாரோ மரணித்ததை போல் உணர்கிறேன் என்றார், பிரெஞ்சு பிரதமர் லியோன் பிளம். இனியாவது காந்தி கண்ட கனவை நனவாக்க முயல வேண்டும். காந்தியடிகளோடு பணியாற் றிய வாய்ப்பை பெற்ற நான் பெரும் பாக்கிய சாலியாகவே கருதுகிறேன். 5 ஆண்டுகள் அவ ருக்கு தொண்டு செய்து பணியாற்றிய நினைவுகள் அவரை பிரிந்து 70 ஆண்டுகள் கடந்த பின்பும் என் நினைவில் அப்படியே உள்ளது. 97 வயது ஆகிய எனக்கு தற்போதைய நிகழ்வுகள் மறந்து விடுகின்றன. ஆனால் பழைய நினைவுகள் எதுவும் மறக்கவில்லை. எப்படி இருப்பினும் அவரது 150-வது ஜெயந்தி விழாவை மிக விமரிசையாக கொண்டாடுகின்ற மத்திய, மாநில அரசுகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts