தமிழ்ப் போராளி இலக்குவனார்
இலக்குவனார்
கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்
நாளை (செப்டம்பர் 3-ந்தேதி) இலக்குவனார் நினைவு தினம்.
பேராசிரியர் சி.இலக்குவனார் தமிழறிஞர்கள் வரிசையில் தனித்தன்மையானவர்.
தான் படித்த படிப்பு, சம்பாத்தியம் குடும்ப வளமைக்கு மட்டுமே என்னும் கண்ணோட்டம் அவருக்கு இருந்திருந்தால் அவர் வாழ்க்கை என்பது இவ்வளவுத் தொடர் தொல்லைகளுக்கும், அலைச்சலுக்கும் ஆளாகி இருக்காது.
இலக்குவனார், தஞ்சாவூர் மாவட்டம் வாய் மேடு என்னும் கிராமத்தில் சிங்காரவேலர்-ரத்தினம் அம்மையார் ஆகியோரை பெற்றோராக கொண்டு எளிய குடும்பத்தில் 17-11-1910 அன்று பிறந்தார். உள்ளூர் தொடக்கப்பள்ளியில் படித்த அவர் பி.ஓ.எல். மற்றும் முதுகலை பட்டங்களையும் பெற்றார்.
தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளையும் கற்றுத்தேர்ந்தவர். ‘தமிழர் தலைவர்’ நூலை எழுதிய சாமி.சிதம்பரனாரின் மாணவர் ஆவார். தொல்காப்பியத்தை அவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார் என்பது அசாதாரணமானது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா, போப் ஆண்டவரை சந்தித்த போதும், யேல் பல்கலைக்கழகத்துக்கு சென்ற போதும், அந்நூலை நினைவுப் பரிசாக அளித்தார்.
எழிலரசி உள்ளிட்ட கவிதை நூல்கள், தமிழ்க் கற்பிக்கும் முறை, அமைச்சர் யார், தொல்காப்பிய ஆராய்ச்சிகள், இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல், வள்ளுவர் வகுத்த அரசியல் உள்ளிட்ட ஆய்வு நூல்கள், என் வாழ்க்கைப்போர், கருமவீரர் காமராசர் எனும் வரலாற்று நூல்கள்.
திருக்குறள் எளிய பொழிப்புரை, தொல்காப்பிய விளக்கம், தொல்காப்பிய எழுத்ததிகாரம் உள்ளிட்ட உரை நூல்கள் மற்றும் தொல்காப்பியம் உள்ளிட்ட ஒன்பது ஆங்கில அரிய நூல்கள் வாழும்வரை, அவற்றை படைத்த பேராசிரியர் இலக்குவனாரும் நாட்டு மக்களின் இதயங்களில் கோலோச்சுவார்.
சங்க இலக்கியம், குறள் நெறி, திராவிடக் கூட்டரசு உள்ளிட்ட ஏடுகளின் ஆசிரியராக இருந்ததோடு, திராவிடன் பெடரேசன் என்ற ஆங்கில இதழையும் நடத்தியுள்ளார். இவற்றையெல்லாம் அவர் நடத்தினார் என்றாலும் பொருளாதாரக் கண்ணோட்டத்தில், தன் கையைச் சுட்டுக் கொண்டார் என்றே கூற வேண்டும்.
ஆனாலும் இனம், மொழி மேம்பாட்டுக்கான மேட்டிமை அவரை ஆட்கொண்டது. அவர் தமிழாசிரியராக, விரிவுரையாளராக, பேராசிரியராக, துறைத்தலைவராகப் பரிணமித்தவர். திருவாரூரில் தமிழாசிரியராக பணியாற்றிய போது அவரின் மாணவராக இருந்தவர்தான் மு.கருணாநிதி (பிற்காலத்தில் முதல்-அமைச்சர் கலைஞர்).
‘தமிழ் உணர்வுடன் சுயமரியாதைப் பண்பையும் எனக்கு ஊட்டியவர் இலக்குவனார்’ என்று ‘நெஞ்சுக்கு நீதி’ நூலில் கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.
திருவாரூரிலிருந்து தொடங்கி குலசேகரன்பட்டினம், நெல்லை ம.தி.தா. இந்துக்கல்லூரி, விருதுநகர் செந்தில்குமார் நாடார் கல்லூரி, ஈரோடு மகாஜனக் கல்லூரி, மதுரை தியாகராயர் கல்லூரி, நாகர்கோவில், சென்னை மாநிலக் கல்லூரி, ஆந்திராவின் உஸ்மானிய பல்கலைக்கழகம் வரை (1936-1968 இடைவெளியில்) பந்தாடப்பட்டவர்.
அந்த வகையில் தமிழ்நாட்டின் மண்ணை அளந்த மணவாளர் அவர்! என்ன காரணம்? பணியில் தொய்வா? திறமைக் குறைவா? அல்ல அல்ல. சென்ற இடங்களில் எல்லாம் அவர் வகித்த துறையில் முத்திரை பதித்தவர். தமிழ் உணர்வோடு மாணவர்களை வார்த்தெடுத்தவர். அவருடைய மாணவர்களுள் ஒருவர்தான் ஆர்.நல்லக்கண்ணு; பின் ஏனிந்தப் பந்தாட்டம்?
அவர் தமிழ் உணர்வாளர், இன உணர்வாளர், பெரியார் வழி சுயமரியாதைக்காரர். இவைதான் இவர் மீது ஏவப்பட்ட அம்புகள்.
ஒரு கல்லூரியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டதற்கு சொல்லப்பட்ட காரணம் தெரியுமா?
பெரியார் நடத்திய திருக்குறள் மாநாட்டிலும், இந்தி எதிர்ப்பு மாநாட்டிலும் பங்கு கொண்டார். இலக்குவனார் கருஞ்சட்டை இயக்கத்தில் தீவிர ஈடுபாடு காட்டி வருகிறார் என்று பொதுக்கல்வி இயக்குநர், ஆட்சிக்குழுவுக்கு தாக்கல் செய்தது. ஆட்சி மன்றக்குழுவின் கருத்து இதற்கு எதிராக இருந்தாலும் வேறு வழியின்றி இலக்குவனாரை வெளியேற்ற நேர்ந்தது.
அந்த கல்லூரியில் அவருக்கு இழைத்த அநீதி கண்டு ‘துரத்தப்பட்டேன்’ என்று கவிதை வரிகளில் குமுறினார்!
கல்லூரிப் பேராசிரியர்கள் சார்பாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் அகாடமிக் கவுன்சில் உறுப்பினராகவும், சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியர் குழுவின் துணைத் தலைவராகவும், தமிழகப் புலவர் குழு செயலாளராகவும் பொறுப்பேற்று செயப்பேரிகை கொட்டியவர்.
இந்தி எதிர்ப்புப் போராலும், தமிழ் உணர்வு பெரு நடைப் பயணத்தாலும் சிறைவாசமும் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தனிமைச் சிறையும் பதவி இழப்பும் தான் அவர் பெற்ற பரிசுகள்.
தமிழ்நாட்டில் கல்லூரி முதல்வர்கள் குறைந்த அளவேனும் தமிழ்ப்புலமை பெற்றிருக்க வேண்டும். கல்லூரிப் பாடத்திட்டத்தில் தமிழே முதற்பாட மொழியாகவும் ஏனைய மொழிகள் இரண்டாம் பொது மொழியாகவும் இருக்க வேண்டும். தமிழ்ப் பாடத்தேர்வில் திருக்குறளுக்கென்றே தனித்தேர்வுத்தாள் இருக்க வேண்டும் என்பது இலக்குவனாரின் கல்விக் கொள்கை.
பணியில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில் தி.மு.க. பிரிந்தபோது பெரியார் மேற்கொண்ட நீண்ட சுற்றுப்பயணம் முழுவதிலும் திராவிடர் கழக கூட்டங்களில் இலக்குவனாரும் அவருடன் பயணித்து உரையாற்றினார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் (9-4-1950) புலவர் இலக்குவனார் திருவள்ளுவர் படத்தை திறந்து வைத்து உரையாற்றினார். ‘ஆரியத்தை முதலாவது எதிர்த்த புரட்சிப் புலவர் திருவள்ளுவர். மக்களின் வாழ்வுக்கேற்ற அறம், பொருள், இல்லறம் பற்றித்தான் வள்ளுவர் எழுதினாரே ஒழிய, ஆரியக் கருத்துப்படி இருக்கும் வீட்டைப்பற்றி (மோட்சம்) பற்றி எழுதவில்லை’ என்று பேசினார்.
இலக்குவனார் பெயரில் அவர் பிறந்த வாய்மேடு உயர்நிலைப் பள்ளிக்கு அவர் பெயரே சூட்டப்பட்டுள்ளது. தன்மானப் புலவர் பேராசிரியர் இலக்குவனாருக்கு 6 மகன்களும், 5 மகள்களும் உண்டு. ‘தமிழகத்தின் உரிமை உணர்வுக்கும் தமிழ்மொழியின் உயர்வுக்கும் உழைப்பதே எனது உறு கடனாம் என்று உறுதி கொள்ளச்செய்தது; தமிழ்ப் போரே எனது வாழ்க்கைப் போர் என்னும் குறிக்கோளை வாழ்வின் உயிரென ஏற்றுக் கொண்டேன். புலவர் படிப்பால் பெற்ற பயன் இதுவேயாகும்’ என்பது இலக்குவனார் இலக்கு.
அந்தத் தமிழ்ச்சிங்கம் 3-9-1973 அன்று கண் மூடிற்று. என்றாலும் வரலாற்றில் வாழுகிறது!
Sunday, 2 September 2018
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment