Thursday 30 August 2018

காவிரி டெல்டாவின் கடைமடை பாசன பாதுகாப்பு

காவிரி டெல்டாவின் கடைமடை பாசன பாதுகாப்பு சி.மகேந்திரன், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தொன்மை வாய்ந்த காவிரி வடிநிலத்தை பாதுகாக்க வேண்டிய காட்டாய தேவை இன்று எழுந்துள்ளது. பெரும் வெள்ளநீர் பெருகெடுத்து ஓடி வரும் நேரத்தில் கூட, ஒரு துளி நீருக்காக அதே ஆற்றுப் பாசனத்தின் கடைமடை விவசாயிகள் ஏக்கத்துடன் காத்து நிற்கிறார்கள் என்ற உண்மை நம் மனசாட்சியை சுட்டு சாம்பலாக்கிக் கொண்டிருக்கிறது. இன்றைய விஞ்ஞான யுகத்தில் இந்த முரண்பாட்டை எவ்வாறு புரிந்து கொள்வது? டெல்டா என்று புகழ் பெற்ற காவிரி வடிநிலப்பகுதியை அறிய வேண்டுமென்றால் தமிழகத்தின் 3 ஆயிரம் ஆண்டுகால வரலாற்றை கவனத்துடன் திரும்பி பார்க்க வேண்டும். நமது நீர் மேலாண்மையின் தொன்மை சிறப்புக்கு கல்லணையை தவிர வேறு ஆதாரங்கள் தேவையில்லை. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியில் நீரியல் துறையில் புதிய சாதனையை படைத்த அறிஞர் ஆர்தர் காட்டன், 1835-ம் ஆண்டில் காவிரியும் கொள்ளிடம் பிரியும் முக்கொம்பில், மேலணையை உருவாக்கினார். அதன் பின்னர் 1837-ம் ஆண்டில் கல்லணையை ஒட்டி, மணல் போக்கிகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு ஒரு பேரார்வம் ஏற்பட்டது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதாக சொல்லப்படும் கல்லணையின் அடித்தளம் பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் அந்த ஆர்வம். ஆவலுடன் ஒரு கோடை காலத்தில் அணையைப் பிரித்து பார்க்கத் தொடங்கினார். 12 அடி ஆழத்துக்கு அணையை தோண்டிப் பார்த்தார். கற்கள் ஒன்றின் மீது, மற்றொன்று அடுக்கப்பட்டிருப்பதைக் கண்டார். கற்களை உறுதியோடு இணைத்து வைக்கும் மரபிசின் அல்லது வேறு கலவைகள் எதுவுமே பயன்படுத்தபடவில்லை. ஆனாலும் அவை உறுதியுடன் இரண்டாயிரம் ஆண்டுகளாக இருப்பது உலகின் அதிசயமாக தெரிந்தது அவருக்கு. இதன் காரணத்தை ஆராய்ந்தபோதுதான், ஆர்தன் காட்டனுக்கு தெளிவு கிடைத்தது. அதிக எடையுள்ள கற்களை முதலில் போட்டு இருக்கிறார்கள். எடை காரணமாக அடிமட்டத்திற்கு பறாங்கற்கள் சென்று, அதன் மேல் மணல் மூடி அடித்தளமாக அமைந்து இருக்கிறது. அதன் மீது காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக அதைவிடவும் எடைக் குறைந்த கற்களைப் போட்டு அணையை உருவாக்கியிருக்கிறார்கள் என்பது அவருக்கு புலப்பட்டது. பின்னாளில், ‘ஓடும் நீரில் அணையைக் கட்டிய இந்த ஆதி தொழில்நுட்பம் உலகில் வேறு எங்கும் இல்லை. தமிழ் மக்களிடம் தான் இருந்திருக்கிறது’ என்று ஆர்தர் காட்டன் குறிப்பிட்டுள்ளார். டெல்டாவின் ஆறுகள் வாய்க்கால்கள் பற்றிய தகவல்கள் பெரும் வியப்பைத் தரக்கூடியவை. பசுமை கொஞ்சும் இந்த சமவெளியில், 36 ஆறுகள் ஓடுகின்றன. இந்த ஆறுகள் ஒவ்வொன்றின் நீளத்தையும் மொத்தமாக கூட்டி பார்த்தால், இவை 999 மைல் நீளம் கொண்டுள்ளன. இதிலிருந்து பிரிந்து நீர் சுமந்து செல்லும் வாய்க்கால்களின் மொத்த எண்ணிக்கை 29 ஆயிரத்து 881. ஆறுகள் வாய்கால்கள் ஆகியவற்றின் மொத்த நீளத்தை கூட்டிப் பார்த்தால், 24 ஆயிரத்து 98 மைல்கள் ஆகும். இது ஆங்கிலேயர் காலத்தில் எடுக்கப்பட்ட கணக்கு. காவிரி டெல்டாவின் இந்த தொன்மையான கட்டமைப்பை நம்மால் ஏன் இன்று காப்பாற்ற முடியவில்லை? கடைமடைக்கும் தண்ணீர் போய் சேரும் வலிமை கொண்ட பாசன கட்டமை முறைக்கு ஏன் இந்த புதிய நெருக்கடி? இரக்கமற்று ஆற்று மணலை கொள்ளையடித்ததில் ஆறு பள்ளமாகி மதகுகளில் தண்ணீர் ஏறி செல்ல மறுக்கிறது. மணலற்ற ஆறுகளில் சாக்கடை தேங்கி ஆகாய தாமரை முதல் அத்தனை தீங்கு செய்யும் தாவரங்களும் முளைத்து விடுகின்றன. காவிரி டெல்டா நீர் பாசன மேம்பாட்டுக்கு என்று பெரும் தொகை செலவிடப்பட்டுள்ளது. உலக வங்கி, ஆசியன் வங்கி, தமிழ்நாடு அரசு வரவு-செலவு திட்டத்தின் மூலம் ஒதுக்கிய தொகை என்று சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் கடந்த சில ஆண்டுகளில் செலவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பெருந்தொகை செலவிடப்பட்ட பின்னரும் ஏன் கடைமடைப் பகுதிக்கு நீர் போய் சேரவில்லை? எந்த பொறுப்பும் இல்லாமல் திட்டங்களை வகுத்து பணச் செலவு செய்து கொண்டிருக்கும் அரசு எந்திரம் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். எந்த ஒரு திட்டமும் கடைக்கோடி மனிதனுக்கும் சென்றடைந்தால் தான், அது வெற்றி திட்டமாக கருதப்படும். கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் கொண்டு சேர்க்க முடியாத அரசின் முழக்கங்கள் வெறும் பொய் முழக்கங்களாகத்தான் இருக்க முடியும். காவிரி வடிநில பகுதிக்கு ஒருங்கிணைக்கப்பட்ட சீரமைப்பு திட்டம் இன்று தேவைப்படுகிறது. இது மக்கள் பங்கேற்று, கண்காணித்து சீரமைக்கும் இயக்கமாக இருக்க வேண்டும்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts