Sunday 19 August 2018

கடைமடையை அடையாத காவிரி நீர் - காரணம் யார்?

ஜூன் மாதம் தொடக்கத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்தியில் இருந்து எழுந்த குரல், “சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும்” என்பது. ஆனால், தமிழக அரசோ, “90 அடி அளவுக்கு தண்ணீர் இருந்தால் மட்டுமே மேட்டூர் அணையை திறக்க முடியும். 30 அடி தண்ணீரை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது” என்று கைவிரித்தது. அதே நேரத்தில், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு பெற வேண்டிய தண்ணீருக்காகவும் போராடிக் கொண்டிருந்தது. செய்வதறியாது திகைத்து நின்ற டெல்டா மாவட்ட விவசாயிகளோ, வருண பகவான் கருணை காட்டுவாரா? என்று வானத்தையும், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வருமா? என்று வறண்டு கிடந்த கால்வாயையும் பார்த்தபடி தவம் இருந்தனர். இறுதியில், மனம் இறங்கி வருண பகவானே கருணை கண்களை திறந்தார். கர்நாடகாவில் பெய்த கனமழையால், அங்குள்ள அணைகள் எல்லாம் நிரம்பி, அங்கிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் வெள்ளமாக மேட்டூர் அணையை நோக்கி பாயத்தொடங்கியது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. விவசாயிகளின் கவலையை போக்கும் வகையில், கடந்த மாதம் (ஜூலை) 19-ந் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது. கர்நாடகாவில் பெய்யும் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அணை நிரம்பி உபரிநீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு உள்ளது. ஒருபுறம் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்துகொண்டு இருக்கிறது. ஆனால், தண்ணீர் திறக்கப்பட்டு ஒரு மாத காலமாகியும் இன்னும் திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ள கடைமடை பாசன பகுதிகளை தண்ணீர் சென்றடையவில்லை. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட 10-வது நாளில் கடைமடையை தொட்டு விடும் என்பது வரலாறு. தற்போது அந்த வரலாறு மாறியது ஏன்? இதுவரை தண்ணீர் இல்லாமல் காத்திருந்த விவசாயிகள், இன்றைக்கு தண்ணீர் இருந்தும் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது ஏன்? இதுதான் தமிழக மக்கள் மனதை துளைத்தெடுக்கும் கேள்விகள். இந்த கேள்விகளுக்கான உண்மையான விடை வெளிவருவதே மர்மமாக இருந்து வருகிறது. ஒரு காலத்தில் இந்தியாவின் 40 சதவீத அரிசி தேவையை பூர்த்தி செய்தது, தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் தான். அந்த அளவுக்கு நெல் உற்பத்தி மிகுதியாக இருந்திருக்கிறது. ஆனால், இன்றைய நிலை கவலையளிக்கும் வகையில் இருக்கிறது. கடந்த 7 ஆண்டுகளாக குறுவை சாகுபடி நடைபெறவில்லை. இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு வருண பகவானே ஆசி வழங்கிவிட்ட நிலையில், அது கைகூடுமா? என்று விவசாயிகள் ஏங்கி தவித்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு என்ன காரணம்? காவிரியின் கிளை கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படவில்லை என்பது முதல் குற்றச்சாட்டு. கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரும்பாலான கால்வாய்களில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியதால், ஆற்றின் போக்கு மாற்றம் கண்டு இருக்கிறது. கட்டவிழ்த்துவிடப்பட்ட மணல் கொள்ளையே இதற்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது. இதனால் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீருக்காக ஏங்கிக் தவித்துக்கொண்டிருக்கின்றன. இந்த அவல நிலைக்கு யாரை குற்றம் சொல்வது? ஆளும் அரசைத்தான் குற்றம் சொல்ல வேண்டும். ஏரி, கால்வாய்களை தூர்வார இதுவரை அரசு ஒதுக்கிய நிதி என்னவானது? குடிமராமத்து திட்டம் மூலம் குளங்கள் தூர்வார ஒதுக்கப்பட்ட நிதியும் எங்கே போனது? இதற்கு அரசுதானே விளக்கம் தர வேண்டும். ஏரி, கால்வாய், குளங்களை முறையாக தூர்வாரினோம் என்று அரசு இனியும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அந்தப் பணிகள் சரியாக நடந்திருந்தால், இன்றைக்கு காவிரி நீர் கடைமடையை ஆறத்தழுவி முத்தமிட்டு கொஞ்சி இருக்குமே. பயிர்களும் துளிர்த்திருக்கும், விவசாயிகளின் வாழ்விலும் ஏற்றத்திற்கான வழி பிறந்திருக்கும். ஆனால், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு வலியும், வேதனையும் தான் மிஞ்சி இருக்கிறது. தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள், ‘வைத்தால் குடுமி. அடித்தால் மொட்டை’ என்று. அதுபோலத்தான் தூர்வாரும் விஷயத்தில் அரசும் நடந்து கொண்டிருக்கிறது. ஒன்று குளம், ஏரி, கால்வாய்களை தூர்வாராமல் விட்டுவிடுவது. அல்லது தூர்வாருதல் என்ற பெயரில் தேவைக்கு அதிகமாக பள்ளத்தை ஏற்படுத்தி அதிக அளவு மணலை அள்ள அனுமதிப்பது. இந்த 2 நடைமுறையும் தான் விவசாயத்துக்கு வேட்டு வைக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்தது முதலே விவசாயிகள் மத்தியில் ஒலிக்கும் குரல், ‘நதிகளை இணைக்க வேண்டும்’ என்பது தான். நீண்ட காலத்திற்கு பிறகு அதற்கான முயற்சி மேற்கொண்ட மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயாலும் அதை நிறைவேற்ற முடியவில்லை. அவருடைய கனவும் காற்றில் கலந்த கீதமாகிவிட்டது. இன்றைக்கு அவர் மறைந்தே விட்டார். 72 ஆண்டுகளாக எந்தவொரு அரசும் இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடாதது, நதிகளை வைத்து அரசியல் செய்யும் முயற்சியோ? என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. காவிரி, முல்லைப்பெரியாறு பிரச்சினைகளும் இதே சந்தேகத்தை கிளப்புகின்றன. மழைக்கு முன்பு, கர்நாடகத்திடம் தண்ணீர் கேட்டு தமிழகம் போராடியது. இன்றைக்கு தேவைக்கு அதிகமாக தண்ணீர் கிடைத்தும் அதை சேமித்துவைக்க வழியில்லாமல் திண்டாடுகிறது. டெல்டா மாவட்டங்களில் கடைமடைக்கு இன்னும் தண்ணீர் சென்று சேராத நிலையில், காவிரி தண்ணீர் வெள்ளமென கடலில் சென்று கலந்துகொண்டிருக்கிறது. இதற்கான உண்மை நமக்கெல்லாம் தெரிந்தாக வேண்டும். அதற்கு ஏற்ற வகையில், விவசாயிகளும், விவசாய சங்கங்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். -ஆர்.கே.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts