Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

பாட்டுக்கும் பண்பாட்டுக்கும் சிகரம் எம்.எஸ்.விஸ்வநாதன்

பாட்டுக்கும் பண்பாட்டுக்கும் சிகரம் எம்.எஸ்.விஸ்வநாதன் நாளை (ஜூன் 24-ந்தேதி) எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்த நாள். நல் இசை தருவதற்காகவே நம் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்நாதன், மென்மையும், மேன்மையும், உண்மையும் கொண்டவர். சங்கீதமும், இங்கிதமும் அவருக்கு இரண்டு கண்கள். 1,700 படங்களுக்கு மேல் இசையமைத்தும் கூட அன்றாடம் தன்னை மாணவனாகவே அடையாளம் காட்டியவர். எளிமை, வலிமை, திறமை இவை மூன்றின் கலவைதான் எம்.எஸ்.விஸ்வநாதன். ராகங்களிலும், தாளங்களிலும் ஏதாவது ஒரு உதாரணம் தேடுவதற்கு அன்றாடம் நாங்கள் புரட்டும் இசை அகராதிதான் மெல்லிசை மன்னர். வாய்ப்புகளையும், வசதிகளையும் காலம் தான் ஒருவருக்கு கொடுக்கிறது. ஆனால் அந்தக் காலத்தையே கடந்து நிற்கும் இசையை கொடுத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இன்னொரு இசையமைப்பாளர் இசையமைத்து வெற்றி பெறும் பாடலை குழந்தை மனதோடு குதூகலித்து கொண்டாடுபவர், இசையின் இலக்கணம் அனைத்தையும் அறிந்திருந்தும், தலைக்கனமே இல்லாத தனிப்பிறவி. அவரைப் பார்த்தவுடன் கும்பிடத் தோன்றும். பரவசமாய் அவர் பாடலைக் கேட்டிடத் தோன்றும். அன்பில் அவரைப் போல வாழ்ந்திட தோன்றும். கரையில் நின்று கொண்டு ஒரு மகா சமுத்திரத்தைப் பார்க்கும்போது, இதை எங்கிருந்து பார்ப்பது என்ற மலைப்பு ஏற்படும். எந்த பக்கத்திலிருந்து பார்த்தாலும் அதே திகைப்பு இருக்கும். எம்.எஸ்.விஸ்வநாதன் என்கிற அந்த மகா கலைஞனை பார்க்கும்போதும், சமுத்திரத்தை கண்ட அதே பிரமிப்புதான் ஏற்படும். இந்த உன்னத கலைஞனை எங்கிருந்து பார்ப்பது? ராமமூர்த்தியுடன் இணைந்து ஒரு இசை சாம்ராஜ்யம் நடத்தினாரே அந்த காலத்தில் இருந்து பார்ப்பதா? அதன் பிறகு தனிக்காட்டு ராஜ்யம் நடத்தினாரே அங்கிருந்து பார்ப்பதா? எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் தகுந்தபடி மெட்டுக்களை அமைத்தாரே அங்கிருந்து பார்ப்பதா? ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே, எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே’ என்று ஏராளமான பக்தி பாடல்களுக்கு இசையமைத்தாரே அங்கிருந்து பார்ப்பதா...? திரும்ப திரும்ப அந்த வியப்பே ஏற்படுகிறது. தான் ஒரு மகாமேதை என்ற நினைப்பே இல்லாமல் வாழ்ந்து மறைந்துவிட்ட அற்புத இசை ஆத்மா. அவருடைய கற்கண்டு பாடல்களை எழுத ஆரம்பித்தால் எதைச் சொல்வது? எதை விடுவது? ‘காதல் சிறகை காற்றினில் விரித்து’, ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’, ‘மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்’, ‘எங்கே நிம்மதி..’, ‘தாழையாம் பூ முடிச்சி, பூ முடித்தாள் இந்த பூங்குழலி’ என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அதற்கு ஒரு தனிப் புத்தகமே போட வேண்டும். கி.மு., கி.பி. என்பது போல அவருக்கு பிறகு வந்த அத்தனை இசையமைப்பாளர்களுக்கும் அந்த இசை மேதையின் பாதிப்பு நிச்சயம் இருக்கும். அந்த அளவுக்கு ஒரு நாற்பது ஆண்டு காலம் இசை ஆட்சி நடத்தியவர். எம்.எஸ்.வி.யின் இன்னொரு சிறப்பு ஏராளமான கர்நாடக சங்கீத ராகங்கள் மட்டுமல்லாமல், சந்திர கவுன்ஸ், மால் கவுன்ஸ், தர்பாரி கானடா போன்ற அற்புதமான இந்துஸ்தானி ராகங்களையும் மிகப் பொருத்தமாக கையாண்டவர். இசையமைப்பது மட்டுமல்லாமல், டி.எம்.சவுந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், சிதம்பரம் ஜெயராமன் போன்ற உன்னத கலைஞர்கள் பாடிக்கொண்டிருந்த காலத்தில் தனக்கே உரித்தான வித்தியாசமான குரலால் மிரட்டியவர். அலட்சியமாக மேல் பஞ்சமத்தை தொட்டுவிட்டு அடுத்த நிமிடமே மந்திரஸ்தாயிக்கு வரும் அளவுக்கு குரல் வளம் மிக்கவர். இவ்வளவு திறமைகளை பொக்கிஷமாக வைத்திருந்தவர் விருதுகளை பற்றியும் அங்கீகாரங்களைப் பற்றியும் என்றுமே கலைப்பட்டதில்லை. அவர் இசையோடு மட்டும் இறுதி மூச்சு வரை வாழ்ந்தார். இந்த பிரபஞ்சத்தில் விதையாகி, விருட்சமாகி, விழுதாகி, பழுதின்றி இசை உலகில் பரிமளித்த பாட்டுக்கும் பண்பாட்டுக்கும் சிகரமாக திகழ்ந்த அந்த இசை மாமேதையின் புகழைப் பாட இந்த ஒரு ஜென்மம் போதாது. எம்.எஸ்.விஸ்வநாதன் ஒரு தீர்க்கதரிசி. நான் 1984-ம் ஆண்டு கால கட்டத்தில் 200 கேசட்டுகள் (பக்தி பாடல்கள் அடங்கியது) இசையமைத்து முடித்த தருணம். அப்போது எனது குருநாதர் அம்மாப்பேட்டை கிருஷ்ணமூர்த்தி, தெய்வீக நாடக இயக்குனர் காஞ்சி ரங்கமணி ஆகியோர் எனக்கு ஒரு பாராட்டு விழா நடத்தி ஒரு பட்டமும் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று நடத்த வந்திருந்த எம்.எஸ்.விஸ்வநாதன் தமது அருள்வாக்கால், “தேவாவிற்கு எதற்கு பட்டம்? யாராவது படம் கொடுங்கள். நன்றாக இசையமைப்பார்” என்று சொல்லி வாழ்த்தினார். “தேவாவின் பாடல்களை சென்னை தொலைக்காட்சியில் கேட்டிருக்கிறேன். இசையமைக்க வாய்ப்பு கிடைத்தால் சினிமாவை ஒரு வலம் வருவார்” என்று உளமார பாராட்டினார். அவர் அடிவயிற்றில் இருந்து எனக்கு ஆசிவழங்கியதால் அவர் சொன்ன மூன்று மாதத்திற்குள் எனக்கு முதல் பட வாய்ப்புக் கிட்டியது. நான் சினிமாவில் அடியெடுத்து வைப்பதற்கு முன்னதாகவே அவர் கொடுத்த அந்த பட்டம் தான் ‘தேனிசைத் தென்றல்’. அவர் அளித்த அந்த பட்டத்தை தான் என் பெயருடன் அருட் பிரசாதமாக வைத்திருக்கிறேன். அவர் சூட்டிய அந்த பட்டம் அட்சய பாத்திரமாய் இன்றும் எனக்கு வாய்ப்பினை வழங்கிக் கொண்டிருக்கிறது. புதியவராக இருந்தாலும் அவர்களின் திறமையை மனதார பாராட்டுபவர். என் பாடல்களை கேட்டு உடனே தொலைபேசி மூலமாக எனக்கு வாழ்த்து சொல்லுவார். நலம் நலமறிய ஆவல், காதலா காதலா, என் உதட்டோர சிவப்பே, கொஞ்ச நாள் பொறு தலைவா, அண்ணாமலை அண்ணாமலை; மெலொடி பாடல்கள் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ரொம்ப பிடிக்கும். அதே போல நான் பாடிய பாடல்களையும் ரொம்ப ரசிப்பார். சில நேரங்களில் நேரடியாகவே பாராட்டியிருக்கிறார். அப்படியொரு அற்புதமான குணத்தை நான் இதுவரை எந்த இசையமைப்பாளர்களிடமும் கண்டதில்லை. இசையில் மாமேதை, குணத்தில் குழந்தை. எம்.எஸ்.வி. என் மூத்த மகள் சங்கீதா பார்த்திபாஸ்கர் திருமணத்தை, மேல்மருவத்தூர் அம்மாவின் ஆசியோடு முன் நின்று நடத்தி தந்தது, என் பூர்வ ஜென்ம பலனாக கருதுகிறேன். 2012-ம் ஆண்டு நேரு ஸ்டேடியத்தில் நடந்த விழா ஒன்றில் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ‘திரை இசை சக்கரவர்த்தி’ என்ற பட்டத்தை ஜெயலலிதா வழங்கி கவுரவப்படுத்தியபோது, சினிமா உலகமே அவருக்கு நன்றி தெரிவித்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் என்னுடைய மூன்றாவது படமான ‘வைதேகி வந்தாச்சி’ படத்தில் ஒரு பாடலும், ‘காதலுக்கு கண் இல்லை’ என்ற படத்தில் ஒரு பாடலும் பாடி அருளியது பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.

கல்விச்சோலை - kalvisolai Articles

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement