Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

நன்றிக்கு நன்றி...!

நன்றிக்கு நன்றி...! பட்டுக்கோட்டை பிரபாகர் | ‘ம னிதாபிமானம் குறைந்து விட்டது’ என்கிற புலம்பலை அடிக்கடி கேட்கிறோம். நாமும் புலம்புகிறோம். ஏன் குறைந்தது என்பதற்கான நூறு காரணங்களை வடிகட்டினால் அன்பின்மை, இரக்கமின்மை, பொதுநலமின்மை என்று பல இன்மைகள் தென்படும். உலகின் அத்தனை மதத் தலைவர்களும், சிந்தனையாளர்களும் சக மனிதனை நேசிக்கத்தானே கற்றுத்தந்தார்கள். நம்மிடம் கற்றல் குறைபாடா? அல்லது பாடத் திட்டத்திலா? வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார் வாழ்ந்த பூமி எறும்புக்குத் தீனியாக அரிசி மாவு கோலமிடச் சொன்ன பண்பாட்டு பூமி காக்கையும், குருவியும் எங்கள் சாதியென்று முண்டாசுக் கவிஞன் முழங்கிய பூமி. இன்றைக்கு பயிரைப் பற்றி பேசினால் உயிரைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்.

கொசு ஒழிக்கும் எந்திரம் பல்லாயிரம் கோடிகள் கொழிக்கும் வர்த்தகம். செல்போன் டவர்கள் நட்டு குருவிகளைத் துரத்திவிட்டோம். நாய், பூனை, கிளி, மீன் போன்றவற்றை வீட்டுக்குள் வளர்த்து, வீட்டுக்குள் வணங்க வேண்டிய பெற்றோரை முதியோர் இல்லம் அனுப்பிவிட்டோம். பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் போதிக்கப்படும் ஒரே மந்திரம் ‘அதிக மதிப்பெண்கள் எடு’ என்பது மட்டுமே. ஏன் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும்? அப்போதுதான் புரொபெஷனல் படிப்புகள் படிக்க நல்ல கல்லூரிகளில் அதிக பணம் செலவில்லாமல் இடம் கிடைக்கும்.

என்ன படிப்புகள்? ‘புரொபெஷனல்’ அதாவது தொழில் செய்ய வழி செய்யும் படிப்புகள் ஆக படிப்பென்பது அறிவை வளர்த்துக்கொள்ள அல்ல என்றாகி விட்டது. வேலை நோக்கத்தில் பிராய்லர் கோழி முட்டைகள் போல எந்திரத்தனமாக உருவாக்கப்படும் மாணவர்கள் படித்த பிறகு எந்திரத்தனமாகத்தானே இயங்குவார்கள். படிப்புக்கு செலவழித்த தொகையை திரும்ப எடுப்பதுதானே முதல் நோக்கமாக இருக்கும்.

சுய மரியாதை போதிக்கப்பட்ட நாட்டில், சுய முன்னேற்றமே பிரதான லட்சியமாகிப் போய் விட்டது. புத்தகத் திருவிழாக்களில் அதிகம் விற்பவையும் சுயமுன்னேற்ற நூல்கள்தானாம். பொது முன்னேற்ற சிந்தனை காணாமல் போய் சுய முன்னேற்ற சிந்தனையே பேயாட்டம் ஆடுகிறது. சுயம் ஆளும் போது மனிதம் தீவிர சிகிச்சைப் பிரிவில் படுத்துக்கிடக்கும் நிலையென்பது கசக்கும் உண்மையே.

இதற்கு நடுவில் இன்றும் நம் சமூகத்தில் மனிதத்தை விடவும் கெட்டியான ஆயுளுடன் அதிகம் மாசு படாமலிருப்பது ‘நன்றி’ உணர்வாக நான் பார்க்கிறேன். பல உதாரணங்கள் சொல்ல முடியும்.

உலகின் மிகப் பெரிய பணக்காரரான பில் கேட்ஸ் பதவி விலகி முழு நேரமும் தன் அறக் கட்டளை பணிகளில் தான் ஈடுபடுகிறார். இந்தியாவில் மிகப் பெரிய தொழிலதிபர்களும், தமது சொத்துகள் முழுவதையும் சமூகத்திற்காக அர்ப்பணித்த தயாள சிந்தனை கொண்ட பணக்காரர்களும் ஏற்படுத்திய ஆயிரக்கணக்கான அறக் கட்டளைகளும், பல்கலைக்கழகங்களும், இலவச மருத்துவமனைகளும் நம்மில் வாழும் ‘நன்றி’யை அடையாளம் காட்டுகின்றன.

30 வருடங்களுக்கு முன் தாம் படித்த பள்ளிக்கு பழைய மாணவர்கள் சேர்ந்து வகுப்பறை கட்டித்தருவதை எதில் சேர்ப்பது, தனக்கு ஒன்றாம் வகுப்பில் தமிழ் கற்றுத்தந்த ஆசிரியை படத்தை வீட்டில் பூஜிக்கும் நபரை அறிவேன். தன் வாழ்வில் ஒவ்வொரு திருப்பு முனையையும் ஏற்படுத்திய பிரமுகர்களின் புகைப்படங்களுக்கு நன்றி சொல்லி ஒவ்வொரு நாளையும் தொடங்கும் நபரை அறிவேன்.

மூலதனம் கடனாகக் கொடுத்தவருக்கு கடனைத் திருப்பித் தந்த பிறகும் வருடம் தோறும் லாபத்தில் பங்கு தரும் தொழிலதிபரை அறிவேன். தனக்கு உதவியவர் வாழ்வில் நொடித்துப் போனதறிந்து அவருக்கே தெரியாமல் ரகசியமாக உதவி செய்து நன்றி காட்டிய நபரின் உண்மைக் கதையை நானே சிறுகதையாக்கியிருக்கிறேன். நமக்கு உதவியவர்களுக்கு, நாம் நன்றிக் கடன் பட்டவர்களுக்கு பதிலுக்கு உதவுவதைப் போல அறிமுகமே இல்லாதவர்களுக்கு அதே அளவு நன்றி காட்டுவதில்லை. ஒருவருக்கு வங்கி டெபாசிட் பணத்திற்கு வரும் வட்டியே வருமானம். அதைத் தருவது மேலோட்டமாகப் பார்த்தால் வங்கி. ஆழமாகப் பார்த்தால் அந்த வங்கியில் கடன் பெற்றவர்கள்தானே? அவர்கள் செலுத்தும் வட்டிதானே இவரின் டெபாசிட்டுக்கான வட்டி. அவர்கள் இவருக்கு அறிமுகமானவர்களா?

ஒரு சோப்பு கம்பெனியின் அதிபருக்கு தன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை புள்ளி விவரமாக இத்தனை கோடி என்று தெரியலாம். ஆனால் அத்தனை கோடி முகங்களும், முகவரிகளும் தெரியுமா? டெபாசிட்டுக்கு வட்டி வாங்குபவர் கடனுக்கு வட்டி செலுத்தியவருக்கும், சோப்பு அதிபர் தன் முகம் தெரியாத வாடிக்கையாளருக்கும் நன்றிக் கடன் பட்டவர்தானே? இப்படி ஆழமாக யோசித்தால் நாமெல்லோருமே ஒருவருக்கொருவர் நெருங்கிய தொடர்புடையவர்களே. நமக்கு அறிமுகம் இல்லாத கோடி மனிதர்களே நம் தினசரி வாழ்வைத் தீர்மானிக்கிறார்கள். ருத்ரதாண்டவம் என்னும் படத்தில் பரமசிவனாக வி.கே. ராமசாமியும், பூசாரியாக நாகேசும் ஒரு மசால் வடை செய்யவே எத்தனை மாநிலங்கள் இணைய வேண்டுமென்று நகைச்சுவையுடன் சொல்லியிருப்பார்கள்.

சக மனிதனை நாம் நன்றி காட்ட வேண்டிய ஒரு நபராக இந்தக் கோணத்தில் பார்க்கத் தொடங்கினால் அவருக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் தானாக மனதில் மலரும். சமூகத்தில் நன்றி உணர்ச்சி அதிகரித்தால் மனிதம் வளரும். நன்றி உணர்ச்சியை நன்றியுடன் வளர்ப்போம்!

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement