Saturday 10 November 2018

வீட்டு கடனுக்கு விண்ணப்பிக்கும் முன்பு கவனிக்க வேண்டியவை


நகர்ப்புறங்களில் அல்லது புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள சொந்த மனைகளில் வீடு கட்ட விரும்புபவர்கள் வீட்டு கடன் வசதி நிறுவனம் அல்லது வங்கிகளிடம் விண்ணப்பம் செய்வது நடைமுறை. அவ்வாறு கடன் பெற விரும்புபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி நிதி ஆலோசகர்கள் குறிப்பிடுவதை இங்கே காணலாம்.

1) வீட்டு கடன் பெற்று வீடு வாங்குவதற்கு முன்னரே சம்பந்தப்பட்ட வங்கிகள் அல்லது வீட்டு கடன் வசதி அளிக்கும் நிறுவனங்களிடம் தக்க கட்டணம் செலுத்தி கடனுக்கான முன் அனுமதி (PreApproval) பெற்று கொள்வது பாதுகாப்பானது.

2) அதாவது, வீட்டு கடனை நிச்சயம் பெற வேண்டிய நிலையில் மேற்கண்ட அனுமதி அவசியமானது. அதன் மூலம் அதிகபட்சம் கிடைக்கும் கடன் தொகை பற்றி முன்னதாகவே அறிந்து, செயல்பட வாய்ப்பாக உள்ளதோடு, கடன் விண்ணப்பம் நிராகரிப்பு என்ற சிக்கலும் ஏற்படுவதில்லை.

3) வீட்டுக்கான பிளான் வரையும் சமயத்தில் அதற்கு தோராயமாக செலவு எவ்வளவு ஆகலாம் என்பது பற்றி பொறியாளரிடம் கேட்டு, அதற்கேற்ப அறைகள் உள்ளிட்ட இதர பகுதிகளின் அளவுகளை தீர்மானித்துக்கொள்ளலாம்.

4) குறிப்பாக, வாடிக்கையாளர் வீடு வாங்க விரும்பும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கட்டுமான திட்டங்களுக்கு கடன் வழங்கிய வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களிடம் வீட்டுக்கடன் பெற விண்ணப்பிக்கலாம். அதனால், வங்கி நடைமுறைகள் எளிதாக முடிவதுடன் போலி ஆவணம் போன்ற சிக்கல்களையும் தவிர்க்க இயலும்.

5) சி.டி.எம்.ஏ அல்லது டி.டி.சி.பி ‘பிளான் அப்ரூவல்’ பெற்றுள்ள மனைகளுக்கே வீட்டு கடன் அளிக்கப்படுகிறது. அதற்கான நடைமுறைகள் முடிவடைய மூன்று அல்லது நான்கு மாதங்கள் கால அவகாசம் ஆகலாம். அதனால், வீட்டு கடன் விண்ணப்பம் அளிப்பதற்கு நான்கு மாதங்கள் முன்னதாகவே சி.டி.எம்.ஏ அல்லது டி.டி.சி.பி ‘பிளான் அப்ரூவல்’ விண்ணப்பம் செய்து கொள்ளவேண்டும்.

6) கட்டி முடித்து பல ஆண்டுகள் ஆன வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவதாக இருந்தால் வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனம் குறிப்பிடும் மதிப்பீட்டாளரின் அறிக்கையை பெற்று அளிக்கவேண்டும்.

7) ‘பிளான்’ பெரிதாக அமைந்து, கூடுதல் பட்ஜெட் அவசியம் என்ற நிலையில் பாண்டு பத்திரங்கள், பிக்ஸட் டெபாசிட் பத்திரங்கள், ஆயுள் காப்பீடு பாலிசிகள் ஆகியவற்றை சொத்து ஆவணங்களுடன் அளித்து கூடுதல் கடன் தொகை பெற வாய்ப்பு உண்டு.

8) கட்டுமான பொருட்களின் எதிர்பாராத திடீர் விலையேற்றத்தை சமாளிக்கும் வகையில் கூடுதல் நிதி முன்னேற்பாடுகள் பற்றி கவனத்தில் கொள்ளவேண்டும்.

9) வீட்டு கடன் பெறுவதற்கு வங்கி அல்லது நிதி நிறுவனங்களிடம் மனைக்கான பத்திரங்களை ஒப்படைப்பதற்கு முன்னர் தேவையான எண்ணிக்கைகளில் அவற்றை ஜெராக்ஸ் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts