Tuesday 24 December 2019

அற்புத சக்தி படைத்த நாமக்கல் ஆஞ்சநேயர்

அற்புத சக்தி படைத்த நாமக்கல் ஆஞ்சநேயர்

அறந்தாங்கி சங்கர்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில். புராண காலத்தில் இந்த ஊருக்கு ‘ஸ்ரீசைலஷேத்ரம்’ என பெயர். 1500 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் நாமக்கல் கோட்டைக்கு கீழே உள்ளது. மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரே உள்ளது இந்த கோவில்.

இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைக்கூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். ஆஞ்சநேயர் சிலை, பீடத்தில் இருந்து 22 அடியும், பாதத்தில் இருந்து 18 அடியும் உயரம் கொண்டதாக உள்ளது. 18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. திறந்தவெளியில் பக்தர் களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

ஆஞ்சநேயருக்கு கோபுரம் இல்லாமல் இருப்பதற்கு காரணம், லோகநாயகனான ஸ்ரீ நரசிம்மரே கிரி உருவில் மேல் விதானம் இல்லாமல் இருப்பதால், தாசனான எனக்கும் விதானம் தேவையில்லை என்று ஸ்ரீ ஆஞ்ச நேயர் கூறியதாகவும், அதனால் திறந்த வெளியில் கோபுரம் இல்லாமல் இருப்பதாகவும் கூறப் படுகிறது.

ராமாயண காலத்தில் சஞ்சீவி மூலிகையைப் பெறு வதற்காக, இமயத்தில் இருந்து சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்து வந்தார் ஆஞ்சநேயர். பணி முடிந்ததும் மலையை அதே இடத்திலேயே வைத்துவிட்டு திரும்பினார். அவ்வாறு வருகையில், அங்கிருந்து ஒரு பெரிய சாளக்கிராமத்தைப் பெயர்த்து எடுத்து வந்தார்.

அந்த நேரத்தில் சூரியன் உதயமானதால் வான்வழியாக வந்து கொண்டிருந்த ஆஞ்சநேயர், தமது கையில் இருந்த சாளக்கிராமத்தை கீழே வைத்து விட்டு சூரிய நமஸ்காரம் செய்தார். மீண்டும் வந்து சாளக்கிராமத்தைத் தூக்க முயற்சித்தார். ஆனால் அதைத் தூக்க முடியவில்லை.

அப்போது ஒரு அசரீரி “ராமனுக்குச் செய்ய வேண்டிய உதவிகளைச் செய்து முடித்துவிட்டு, பிறகு வந்து என்னை எடுத்துச் செல்” என்றது. ஆஞ்சநேயரும் சாளக்கிராமத்தை அங்கேயே விட்டு விட்டு கிளம்பினார். ராமன் போரில் வென்று சீதையை மீட்டபிறகு ஆஞ்சநேயர் மீண்டும் இங்கே வந்தார். ஆஞ்சநேயர் விட்டுப் போன சாளக்கிராமம் நரசிம்மமூர்த்தியாக வளர்ந்து நிற்க ஆஞ்சநேயர் நரசிம்மரை வணங்கியவாறு நின்று நமக்கெல்லாம் அருள்பாலிக்கிறார் என்று தல வரலாறு சொல்கிறது.

அனுமனின் தனிச்சிறப்பினாலும், நாமக்கல் ஒரு புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலமாக விளங்குகின்றது. மார்கழி மாதம் அமாவாசையன்று அனைத்து பக்தர்களாலும் அனுமன் ஜெயந்தி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு வெளியூர் மற்றும் உள்ளூர் பக்தர்கள் என ஏராளமானோர் வருகின்றனர்.

No comments:

Popular Posts