Tuesday 5 November 2019

தமிழர் வாழ்வோடு இணைந்த இசை

தமிழர் வாழ்வோடு இணைந்த இசை

முனைவர் தி.சுரேஷ்சிவன், ஜனாதிபதி விருது பெற்ற செம்மொழி இசைத்தமிழ் அறிஞர், மதுரை.

த மிழ்நாட்டில் மக்களால் அதிகமாக கேட்கப்படும் ஒரு இசைக்கருவி குழு என்பது நாதசுரம்-தவில் இணைந்த ‘மங்கல வாத்தியம்’ என்று அழைக்கப்படுகிற ஒரு இசைக்குழு. ‘மேளம்’ எனப் பொதுவாக மக்களால் சொல்லப்பட்டு வரும் ஒரு சொல் இசை வரலாற்றை உடையது.

இசை உலகில் தமிழகத்தில் தனிப்பெரும் இசையாக நாதசுர இசை நிலவி வருகிறது. தமிழகத்தின் இசைச் சின்னமாக இது விளங்கி வருகிறது. தவில் தாளம் ஒத்து என்ற கருவிகளுடன் கூடி ‘மேளம்’ என்ற சிறப்புப் பெயருக்கு உரியதாக விளங்குகிறது. இதனை வாசிப்பவர்களை ‘மேளக்காரர்’ என்றும் அழைக்கின்றனர். தமிழர் வாழ்வில் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பயின்று வருகிற இசை கருவிகளை எழும் இசையை தமிழகத்தின் நாகரிகம் பண்பாடு இவற்றை வெளிப்படுத்துவதாக அமைகின்றன. நாதசுர தவில் இசைக்கே ஒரு தனித்த தன்மை இருக்கிறது. கோவில் வழிபாட்டில் இதை கேட்கும் மனம் உன்னத நிலைக்கு செல்கிறது. நாதசுரக் கருவியில் எழுப்பப்படும் ஒவ்வொரு ராகமும் ஒவ்வொரு உணர்வை தரவல்லது. இசை அறிவு இல்லாத பலரும் மங்கல இசையை பெரிதும் விரும்பி ரசிக்க நமது பண்பாடே காரணம். இறைவழிபாட்டோடு நெருங்கிய தொடர்பு உடையதாகவும், ஆலய வழிபாட்டில் ஓர் அங்கமாகவும் நாதசுர இசை விளங்குகிறது. கோவில்களிலே நாதசுரம் வாசிப்பதைப் பற்றி பல மரபுகள் உள்ளன. பண்பாட்டைக் காத்து வருகின்ற பல அம்சங்களில் நாதசுர இசையும் ஒன்றாகும்.

நாதசுர கருவிக்கும் இதன் பக்க இசைக்கருவிகளான தவில் ஒத்து தாளம் போன்றவற்றிற்குக் காவியினாலேயே உறையைத் தைத்துப் போடுவர். துறவியின் ஆடை காவி இறைவழிபாட்டோடு தொடர்புடைய கருவிகள் என்பதனை உணர்த்த காவி உடைகள் அணிவிக்கப்படுகின்றன. இது ஆலய வழிபாட்டில் முக்கிய இடம் பெறும் கருவியாகவும் இறைவனுக்குச் செய்யப்படும் பதினாறு வகையான சோடசோபசாரம் வழிபாட்டில் கீதம்; வாய்ப்பாட்டு வாத்தியம், நாதசுரம், நாட்டியம் பெண்களால் செய்யப்படும் அபிநய நிகழ்ச்சியாகவும்; அமையும். மேலும் ஆலய வழிபாட்டில் விடியற்காலையில் அமையும் திருப்பள்ளிஎழுச்சி முதல் இரவில் இறைவனைத் திருப்பள்ளிக்கு அனுப்புதல் வரை இக்கருவி முக்கிய இடம் பெறுவதால் இக்கருவிகளுக்குக் காவி உறை அணிவிக்கப்பட்டது. காலப்போக்கில் பிற நிகழ்ச்சிகளுக்கும் நாதசுர கருவி பயன்படுத்தப்பட்டாலும் பழைய மரபில் ஆலயத்தில் வாத்திய மண்டபத்தில் கருவிகள் இன்றும் வைக்கப்பட்டுள்ளதை அறியலாம்.

நாதசுர இசை உலகில் இன்று இரட்டை நாயனம் வாசிக்கும் மரபு உள்ளது. ஆனால் முற்காலத்தில் மேளக் குழுவில் ஒரு நாயனம் ஒரு தவில்தான் நிலவியது. இரண்டு பேர் சேர்ந்து வாசிக்கும் மரபை முதன் முதலில் திருப்பாம்பரம் சாமிநாதப்பிள்ளை குமாரர்கள் நடராசசுந்தரம், சிவசுப்பிரமணியம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இவர்களைத் தொடர்ந்து திருவீழிமிழலை பத்மஸ்ரீ சுப்பிரமணிய பிள்ளையும், அவர்தம் தம்பி நடராச சுந்தரமும் தொடர்ந்தனர். இன்றும் இம்மரபு பின்பற்றப்படுகிறது. இரண்டு நாதசுரம் மரபு தோன்றியவுடன் இருவர் சேர்ந்து தவில் வாசிக்கும் முறையும் தோன்றியது. பிறகு தனித்தவில் என்ற முறையும் தோன்றியது.

மதுரை நாதசுர இரட்டையர்கள் ‘தில்லானா மோகனாம்பாள்’ புகழ் மதுரை எம்.பி.என். சேதுராமன் பொன்னுசாமி ஆகியோரின் நாயன இசை உலகம் முழுதும் நாள்தோறும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நாதசுர இரட்டையர்கள் தமிழகத்தில் இஞ்சிக்குடி சகோதரர்கள் பின்னைமாநகர் சகோதரர்கள், கருப்பட்டி பிரதர்ஸ், தற்போது சின்னமனூர் கார்த்திகேயன் இளையராஜா குழுவினர் மற்றும் திருப்பரங்குன்றம் அம்மையப்பன் வேல்முருகன் புகழ்பெற்றவர்கள் ஆவர்.

நாதசுர இசைக்கென்று தோன்றிய இசைஉருப்படி மல்லாரியாகும். இதற்கு சாகித்தியம் கிடையாது. தத்தகாரமாக லயக் கட்டுக்கோப்புடன் இருக்கும். ஆலய வழிபாட்டில் இறைவன் உலாப்புறப்படும் பொழுது நட்டபாடைப் பண்ணாகிய கம்பீர நாட்டையில் அமையும். இம்மல்லாரிகளில் பெரிய மல்லாரி, தீர்த்த மல்லாரி, தளிகை மல்லாரி, திரிபுடைதாள மல்லாரி, சின்ன மல்லாரி, தேர் மல்லாரி, பஞ்சராக மல்லாரி, பஞ்சதாள மல்லாரி என்ற வகைகள் உள்ளன.

மல்லாரி என்பதனை மல்லர் ஆரவாரித்து எழுவதுபோல், போர்வீரர்கள் படைக்களத்திற்குச் செல்வதுபோல் கம்பீரத்துடன் சுவாமி புறப்பாட்டின் பொழுது இசைக்கப்படும் ஒரு இசை வகையாகும். இறைவனையும் பக்தனையும் இணைக்கும் ஒரு இசையாக இது அமைகிறது. சுவாமியை தூக்குவோருக்கு ஓர் உத்வேகத்தை அளிப்பதற்காக அமையும் என்றும், சுவாமியின் திரு வீதி உலாவை மக்கள் அறிந்துணரப் பயன்படும் இசை என்றும் கூறுவர். தவில்காரர் தொடங்க, தாளம் நடை அமைக்க நாகசுரம் தத்தகாரமாக இதனை லயபிடிப்போடு அமைக்கும். பல நாதசுரங்கள் சேர்ந்து ஒரேதொனியில் வாசிக்க பல தவில்காரர்கள் ஒரே மாதிரியான கதி அமைப்பில் வாசிப்பர். இன்றும் மதுரை ஆடி முளைக்கொட்டு ஆராதனை விழா நாள் இரவில் நாதசுரக்காரர், தவில்காரர் சேர்ந்து மல்லாரி வாசிப்பதனைக் கேட்டு மகிழலாம்.

இவ்வாறு மல்லாரி வகைகள் பல உள்ளன. இவை இன்றும் இம்மரபுகளின் அடிப்படையில் வாசிக்கப்படுகின்றன.

ஆலயக்கதவு திறக்கப்படும் பொழுது பூபாளம் வாசிக்க வேண்டும். இதற்குக் கொலுமேளம் என்று பெயர். இந்நிலையில் நாதசுரம் மட்டும் வாசிக்கவேண்டும். தவில் அடக்கமாக வாசிக்கப்படும். காலை சந்தி பூசையில் தன்யாசி, சாவேரி, மலயமாருதமும் உச்சிக்கால பூசையின் பொழுது தேவமனோகரி ஸ்ரீராகமும், மாலை பூசையான சாயரட்சையின் பொழுது மாலை 5 மணிக்கு பூர்வி கல்யாணியும், மாலை 5 மணிக்கு வாசஸ்பதியும், மாலை 6 மணிக்கு கல்யாணியும் வாசிக்கும் மரபு இரண்டாவது காலத்தில் தேவமனோகரியம், அர்த்த ஜாம பூசையின் பொழுது நீலாம்பரி ராகம் வாசிக்கும் மரபு இருந்துள்ளது.

கிராம தேவதைகள் வழிபாட்டிலும் நாதசுரம் முக்கிய இடம்பெறுகிறது. கோவில் திருவிழாக்களில் மங்கல இசை இடம்பெறுகின்றது. சுவாமி வரவைத்தல், சுவாமி புறப்பாடு, தீ மிதித்தல், காவடி எடுத்தல், பாற்குடம் எடுத்தல் போன்ற கிராமிய நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறுகிறது. நிகழ்ச்சிகளுக்கு தனித்தனி இசையமைப்புகள் வேறுபடுகின்றன. இவ்விசையின் ஆற்றலில் தன்னை மறந்து சாமி வந்து மேலேறி ஆடும் சாமியாட்டம் நடைபெறும். பாற்குடம் எடுத்தல், காவடி ஆட்டம் போன்ற நிகழ்ச்சிகளுக்குத் தனித்தனி இசை வகைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

திருமண நிகழ்ச்சிகளுக்கு வாசிக்கும் மரபு மக்களின் இனத்திற்கு இனம் சற்று வேறுபடுகிறது. முகூர்த்த காலத்தில் தவறாது மங்கல இசை இடம்பெறும். மங்கல இசை தொடர்ந்த பின்பு தான் திருமணச் சடங்குகள் தொடங்கும். திருமண விழாக்களில் சவுராஷ்டிர ராகத்தில் அமையும் திருமணச் சடங்கின் போது ஊஞ்சலும் மாலைமாற்றுப் பாடலையும் முறையே ஆனந்தபைரவி சங்கராபரனத்தில் இசைக்கின்றனர். திருமாங்கல்யம் பூட்டுச்சடங்கு நடைபெறும் போது நாட்டக்குறிஞ்சி ராகமும், திருமாங்கல்யதாரணம் முடிவுற்றதும் ஆனந்தமும் வாசிப்பர். பிறகு மாப்பிள்ளை பெண்ணுக்கு நலுங்கு வைக்கும் போது குறிஞ்சி ராகம் வாசிப்பர். இவ்வாறு இசை தமிழக வாழ்வோடு இணைந்த ஒரு அம்சமாகவே உள்ளது.

No comments:

Popular Posts